இரண்டுடல் ஒன்றாய்க் கரைந்து கண்படாமல் அளவியல் மணநிலை பரப்பும் காலம் தளைகரை கடந்த காமக் கடலுள் புல்நுனிப் பனியென மன்னுதல் இன்றி பீரம் மலர்ந்த வயாவுநோய் நிலையாது (5)
வளைகாய் விட்ட புளிஅருந் தாது செவ்வாய் திரிந்து வெள்வாய் பயவாது மனைபுகை யுண்ட கருமண் இடந்து பவள வாயில் சுவைகா ணாது பொற்குட முகட்டுக் கருமணி அமைத்தெனக் (10)
குங்குமக் கொங்கையும் தலைக்கண் கறாது மலர அவிழ்ந்த தாமரைக் கயல்என வரிகொடு மதர்த்த கண்குழி யாது குறிபடு திங்கள் ஒருபதும் புகாது பொன்பெயர் உடையோன் தன்பெயர் கெடுப்ப (15)
தூணம் பயந்த மாண்அமர் குழவிக்கு அரக்கர் கூட்டத்து அமர்விளை யாட நெருப்புமிழ் ஆழி ஈந்தருள் நிமலன் கூடல் மாநகர் ஆட எடுத்த விரித்த தாமரை குவித்த தாளோன் (20)
பேரருள் விளையாச் சீரிலர் போல துலங்கிய அமுதம் கலங்கிய தென்ன இதழ்குவித்துப் பணித்த குதலை தெரியாது முருந்து நிரைத்த திருந்துபல் தோன்றாது தெய்வம் கொள்ளார் திணிமனம் என்ன, (25)
விரிதரு கூழையும் திருமுடி கூடாது துணைமீன் காட்சியின் விளைகரு என்ன பார்வையின் தொழில்கள் கூர்வழி கொள்ளாது மறுபுலத்து இடுபகை வேந்துஅடக் கியதென வடுத்தெழு கொலைமுலை பொடித்தில் அன்றே (30)
செம்மகள் மாலை இம்முறை என்றால் வழுத்தலும் வருதலும் தவிர்தி மொழிக்குறி கூடாச் செவ்வே லோயே! (33)
|