கறுப்பு பணம் கைக்கு எட்டுமா?
-சூர்யா சரவணன்
இந்தியா வல்லரசாக வேண்டும் என்று நாம் அனைவருமே கனவு காண்கிறோம். ஆனால், அதற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் முக்கிய எதிரி கறுப்பு பணம்... ஐடி, மருத்துவம், பொறியியல் என அனைத்து துறையிலும் இந்தியர்கள் வல்லவர்களாக இருந்தும், நம்மால் சீனாவைப் போலவோ, அமெரிக்காவுக்கோ சவால் விட முடியாத நிலை இன்னும் தொடர்கிறது. நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையாததற்கு கறுப்பு பணம்தான் முக்கிய காரணமாக இருக்கிறது.
கறுப்பு பணத்தால் வந்த விபரீதம் தான் வரலாறு காணாத விலைவாசி உயர்வு. தேவைகளை பூர்த்தி செய்ய பொருட்கள் கிடைக்கின்றன. ஆனால், அவற்றின் விலை வானத்தை எட்டும் அளவுக்கு அல்லவா சென்று விட்டது. தங்கம் முதல் தகரம் வரை எட்டிப் பிடிக்க முடியாத விலைக்கு சென்று விட்டது... சென்று கொண்டிருக்கிறது.
நாம் அனைவரும் சம்பாதிக்கும் பணத்துக்கு சரியான வரி செலுத்தினால் தான் எந்த ஒரு அரசாங்கமும் திறம்பட செயல்பட முடியும். வரி பணத்தை வைத்து தான் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல முடியும். ஆனால், எத்தனை பேர் ஒழுங்காக வரி செலுத்துகிறார்கள். நமக்கு கிடைக்கும் சம்பளம் அல்லது தொழில் லாபத்தில் குறிப்பிட்ட அளவு வரி செலுத்த வேண்டும் என்பது அரசாங்க விதி. அதாவது, ஆண்டுக்கு 10 லட்சம் சம்பாதித்தால் 3 லட்சம் வரி செலுத்த வேண்டும். சாதாரணமாக தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களின் சம்பளம் ஆண்டுக்கு 10 லட்சத்துக்குள் அல்லது அதை விட சற்று அதிகமாக இருக்கும். வரி விலக்கு போக மீதம் 1 லட்சம் அல்லது 1.5 லட்சம் மட்டும் வரியாக செலுத்த வேண்டியிருக்கும். அதில் எந்த கஷ்டமும் தெரிவதில்லை.
இதே தொழில் நிறுவனங்களை எடுத்துக் கொண்டால், ஓராண்டுக்கு 1 கோடி முதல் 100 கோடி வரை சம்பாதிப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். 1 கோடி என்றால் வரி மட்டுமே 30 லட்சத்துக்கு செலுத்த வேண்டியிருக்கும். 100 கோடி என்றால் 30 கோடி வரி எட்டும். தொழிலில் அதிக ரிஸ்க் எடுத்து சம்பாதிக்கும் லாபத்தில் எதற்காக அரசுக்கு இவ்வளவு வரி செலுத்த வேண்டும் என்பதே பெரும்பான்மையானவர்களின் எண்ணம்.
இதன் பிரதிபலிப்புதான் வரி ஏய்ப்பு. உற்பத்தியை குறைத்து காட்டுவது, நஷ்ட கணக்கை காட்டுவது போன்ற ஏமாற்று வேலை செய்து வரியை குறைத்து கட்டுகிறார்கள். அது போக மீதமுள்ள லாபப்பணம் அனைத்தும் கணக்கு இல்லாத கறுப்பு பணமாக மாறி விடுகிறது. அதை வைத்து ஏமாற்று பேர்வழிகள் என்னவோ சுபபோகமாக வாழ்வது உண்மைதான். ஆனால், சாதாரண அடித்தட்டு மக்கள் தலையில் அல்லவா விலைவாசி என்ற சுமை வந்து விழுகிறது.
அவ்வாறு கறுப்பு பணம் சம்பாதிப்பவர்கள், அதை லஞ்சம் தருவதற்கும், கான்ட்ராக்ட் பிடிப்பதற்கு ‘அன்பளிப்பு’ பணமாகவும் தருகிறார்கள். ஊழல் இந்த தேசத்தின் தீராத நோயாக உள்ளது. சகல இடங்களிலும், மட்டங்களிலும் ஊடுருவி நிற்கிறது. எதைத் தொட்டாலும் லஞ்சம்.
அரசு அலுவலங்களில் லஞ்சம் இல்லாத இடமே இல்லை. கீழ்மட்டத்தில் இருந்து மேல் மட்டம் வரை லஞ்சம். ஒரு டிரைவிங் லைசனஸ் வாங்க கூட லஞ்சம் தர வேண்டியுள்ளது. மற்ற நாடுகளில் லஞ்சம் இருக்கிறது. ஆனால் அங்கெல்லாம் கடமையை மீறத்தான் லஞ்சம் வாங்குவார்கள். இந்தியாவில் கடமையை செய்வதற்கே லஞ்சம் வாங்குகிறீர்களே என்ற சினிமா காட்சிகளை பொய் என்று ஒதுக்கிவிட முடியாது. இதுதான் இன்றைய அரசு அலுவலங்களின் நிலையாக உள்ளது.
அரசு அலுவலர்களும், தொழிலதிபர்களும்தான் இப்படி என்றால், அரசியல்வாதிகளைப் பற்றி சொல்லவே வேண்டாம். அதிசயமாக காமன்வெல்த் என்ற விளையாட்டு போட்டியை நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்தது. மகத்தான இந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி, சிறப்பாக போட்டியை நடத்தி, உலக அளவில் இந்தியாவின் பெருமையை நிலைநாட்டுவதை விட்டுவிட்டு, அதிலும் ஊழல்.
குண்டூசி முதல் ஸ்டேடியங்களை கட்டியது வரை அனைத்து மட்டத்திலும் ஊழல் நடந்தது. அந்த விளையாட்டை, இந்தியா நடத்தியைப் பற்றி இப்போது யாரும் பேசுவதில்லை. அதில் நடந்த ஊழலை தான் பேசுகிறார்கள். இதற்கு காரணம் அரசியல்வாதிகள் தான். தேர்தலில் செலவு செய்யவும், இலவசங்களை அள்ளிக் கொடுக்கவும் அவர்களுக்கு எக்கச்சக்க பணம் தேவைப்படுகிறது.
இதனால் கட்சிப் பொறுப்பில் இருக்கும் போதே, தங்களால் முடிந்த அளவுக்கு ஊழல் செய்து கறுப்பு பணத்தை சேர்த்து விடுகிறார்கள்... மீண்டும் அடுத்த முறை ஆட்சியை பிடிக்க. இதற்கு எந்த அரசியல்வாதியையும் விதிவிலக்காக கூற முடியாத அளவுக்கு நம் நாட்டின் நிலைமை உள்ளது. இப்படி சம்பாதிக்கும் கறுப்பு பணத்தை என்ன செய்கிறார்கள். வீட்டிலும் பாதுகாக்க முடியாது, வங்கியில் போட்டால் அதற்கும் கணக்கு கேட்பார்கள். இந்திய வங்கிகளைப் பொறுத்த வரை, 10 லட்சம் ரூபாய்க்கு மேல் பணத்தை முதலீடு செய்தால் அதற்குரிய கணக்கு காட்ட வேண்டும். அப்படியே கணக்கு காட்டினாலும் வருமான வரித்துறை தொடர்ந்து கண்காணிக்கும்.
இந்த கட்டுப்பாடுகள் எல்லாம் இந்தியாவில்தான். சுவிட்சர்லாந்துக்கு பொருந்தாது. கறுப்பு பணம் பதுக்குபவர்களின் சொர்க்க பூமியாக சுவிட்சர்லாந்து உள்ளது. 1815ம் ஆண்டு முதல் எவ்விதமான போர் மற்றும் சண்டை சச்சரவுகளை சந்திக்காத நாடு... தனிமனித வருமானத்தில் உலகத்தில் 10வது இடத்தை பிடித்த நாடு... என்ற பெருமைகளை பெற்றிருந்த போதிலும், சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகள்தான் உலக பிரபலம்.
அங்கு 200க்கும் மேற்பட்ட வங்கிகள் உள்ளன. அவற்றில் 180க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த மக்கள் கணக்கு வைத்துள்ளனர். அதற்கு காரணம் அதிக வட்டியோ, வரி விலக்கோ அல்ல. சுவிஸ் வங்கியில் டெபாசிட் செய்யும் பணத்துக்கு கணக்கு காட்ட வேண்டிய அவசியம் இல்லை. எப்போது வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் பணம் போடலாம், எடுக்கலாம். யாரும் கேள்வி கேட்க முடியாது.
கணக்கு வைத்திருப்பவர்களின் விபரமும் பாதுகாக்கப்படும். யாரும் அவ்வளவு எளிதில் கணக்கு வைத்திருப்பவர்களின் விபரம், எவ்வளவு பணம் உள்ளது என்பதைப் பற்றி எல்லாம் அறிந்து கொள்ள முடியாது. உலகின் எந்த மூலையில் இருந்தும் வங்கி கணக்கை இயக்கலாம். இந்த வங்கிகளுக்காக ரகசிய பாதுகாப்பு சட்டங்கள் உள்ளன. இங்கு, கறுப்பு பணத்தை பதுக்க ரூ.4 கோடி இருந்தால் போதும். கணக்கை தொடங்கி 1000 கோடி, லட்சம் கோடி என எவ்வளவு வேண்டுமானாலும் பதுக்கி விடலாம்.
இந்த வங்கிகள் தான் இந்தியாவில் கறுப்பு பணம் பதுக்குபவர்களின் அடைக்கலமாக உள்ளது. சுவிஸ் வங்கியில் மட்டும் இந்தியர்களின் கறுப்பு பணம் ரூ.280 லட்சம் கோடிக்கும் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதுவும் நிச்சயமில்லாத கணக்குதான். இதை விட பல மடங்கு அதிகமாக கூட இருக்கலாமே தவிர குறையாது.
சுவிஸ் வங்கிகளில் உள்ள கறுப்பு பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வந்தால் என்னென்ன செய்யலாம் என்பதற்கு ஒரு சிறு உதாரணம்... 30 ஆண்டுகளுக்கு வரி இல்லாத பட்ஜெட் போடலாம். 60 கோடி வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தலாம். அனைத்து கிராமங்களில் இருந்து, தலைநகரான டெல்லிக்கு உலக தரத்திலான 4 வழிச்சாலை போடலாம். ஒவ்வொரு குடிமகனுக்கும் மாதம் ரூ.2,000 என்ற வீதம் 60 ஆண்டுகளுக்கு இலவசமாகவே வழங்கலாம். உலக வங்கியில் இந்தியா கடன் வாங்கவே தேவையிருக்காது. இதுவரை வாங்கிய கடனையும் அடைத்து விடலாம்.
இவையெல்லாம் சிறிய உதாரணங்கள். இதை விட பல நல்ல விஷயங்களை செய்து முடிக்கலாம். இதற்காகத்தான் இந்திய அரசும் கறுப்பு பணத்தை மீட்க போராடுகிறது. சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கறுப்பு பணத்தை மீட்க முன்னாள் நீதிபதி தலைமையில் எஸ்ஐடி என்ற சிறப்பு புலனாய்வு குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது. இக்குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. 2010, 2011 இரண்டாண்டுகளில் வருமான வரித்துறையினர் நாடு முழுவதும் அதிரடி சோதனைகள் நடத்தி ரூ.30,000 கோடி கறுப்பு பணத்தை மீட்டனர். ஆனாலும், முழுமையாக கறுப்பு பணத்தை ஒழிக்க முடியவில்லை. இந்த கருப்புப் பணத்தை மீட்க இந்திய அரசு கட்சி, பெரிய மனிதர்கள் என எவ்வித பாரமட்சமுமின்றி செயல்பட்டு, நாட்டு நலனைக் கருத்த்தில் கொண்டு விரைவாக மீட்கவேண்டும் என்பதே ஒவ்வொரு குடிமகனின் எதிர்பார்ப்பாக உள்ளது
|