பத்தாயிரம் கி.மீ., தூரம் சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட ஏவுகணைகள் தயாரிக்க, இந்தியா தயாராக உள்ளதாக, ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழக தலைவர், அவினாஷ் சந்தர் தெரிவித்தார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடையே பேசியதாவது, எதிரி இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் தயாரிப்பில் இந்தியா, முன்னணி நாடுகளில் ஒன்றாக விளங்குகிறது. அதிக தூரம் தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகள் தயாரிப்பு வரிசையில், 10 ஆயிரம் கி.மீ., தூரம் சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட ஏவுகணைகள் தயாரிக்கும் நிலையில் இந்தியா தற்போது உள்ளது. இதற்கு அரசு அனுமதியளித்தால், இதை தயாரிக்க தயாராக இருக்கிறோம். அக்னி - 5 ஏவுகணையின் இலக்கு, சீனா முழுமைக்கும், ஐரோப்பாவையும் எட்டும் அளவுக்கு உள்ளது. இது, இன்னும் இரண்டு ஆண்டுகளில் ராணுவத்தில் சேர்க்கப்படும். என அவினாஷ் தெரிவித்தார்.
|