புதுடெல்லி : நிலக்கரி சுரங்க ஊழலை கண்டித்து, பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வீடுகளை முற்றுகையிட்ட அன்னா ஹசாரே குழுவினர் நேற்று கைது செய்யப்பட்டார். பிரதமர் வீட்டை நோக்கி முன்னேறிய கூட்டத்தினர் மீது போலீசார் தடியடி நடத்தியும் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தை கலைத்தனர். நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கை சமர்ப்பித்தார். இந்த முறைகேட்டுக்கு பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என பாஜ உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதனால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் முற்றிலுமாக முடங்கியுள்ளன.
|