சென்னை : நியூசிலாந்து அணியுடன் மோதிய 2-வது டி20 போட்டியில், இந்திய அணி 1 ரன் வித்தியாசத்தில் போராடி தோற்றது. விசாகப்பட்டினத்தில் நடக்கவிருந்த முதல் டி-20 போட்டி மழையால் பாதிக்கப்பட்டதையடுத்து, இரண்டாவது போட்டி நேற்று சென்னையில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசியது. தொடக்கத்திலேயே நியூசிலாந்து அணி 2 ரன்னுக்கு 2 விக்கெட்டை இழந்து திணறியது. இந்த நிலையில், மெக்கல்லம் , வில்லியம்சன் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 90 ரன் சேர்த்தது அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றனர். நியூசிலாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன் குவித்தது. டெய்லர் 25, ஜேக்கப் ஓரம் 18 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். அடுத்து 20 ஓவரில் 168 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. கம்பீர் 3 ரன் எடுத்து வெளியேறினார். கோஹ்லி, ரெய்னா 2-வது விக்கெட்டுக்கு 60 ரன் சேர்த்தனர். கோஹ்லி 30 பந்தில் அரை சதம் அடித்தார். ரெய்னா 27 ரன், கோஹ்லி 70 ரன் (41 பந்து, 10 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தனர். ஆட்டம் பரபரப்பாக சென்ற நிலையில் யுவராஜ், டோனி ஜோடி நிதானமாக விளையாடியது. கடைசி பந்தில் 4 ரன் தேவைப்பட்ட நிலையில் ரோகித் 2 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன் எடுத்து தோற்றது.
|