புதுடெல்லி : வடகிழக்கு மாநில மக்களிடம் வீண் வதந்தியை கிளப்பியவர்கள் பாகிஸ்தானில் தான் உள்ளனர். வதந்தியை கிளப்பியது பாகிஸ்தானில் உள்ள தீயசக்திகள் தான் என்று மத்திய உள்துறை அமைச்சகம் ஆதாரங்களுடன் கண்டுபிடித்துள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டிப்புடன் கூறியுள்ளது. அசாமில் போடோ பழங்குடியினருக்கும், வங்கதேசத்தில் இருந்து குடியேறிய முஸ்லிம்களுக்கும் இடையே கடந்த மாதம் இனக்கலவரம் ஏற்பட்டது. இதில் 78 பேர் பலியாயினர். முஸ்லிம்கள் தாக்கப்படுவதை கண்டித்து மும்பையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 2 பேர் பலியாயினர். இதையடுத்து வெளிமாநிலங்களில் வசிக்கும் வடகிழக்கு மாநிலத்தவர் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக எஸ்.எம்.எஸ் மற்றும் சமூக இணையதளங்கள் மூலம் வதந்தி பரப்பப்பட்டது. இது, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் வசிக்கும் வடகிழக்கு மாநிலத்தவர் இடையே பீதியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக கூட்டம் கூட்டமாக இவர்கள் சொந்த ஊர் திரும்பினர். நேற்று தான் ஓரளவு இவர்கள் வெளியேறுவது குறைந்தது.
|