பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு மசோதா நேற்று மக்களவையில் சில திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.இம்மசோதாவின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு,
பாலியல் வன்கொடுமைகளில் தொடர்ந்து ஈடுபடுவோருக்கு ஆயுள் சிறை அல்லது மரண தண்டனை விதிக்க வழிவகை செய்யப்படும்.
பெண்களை பின்தொடர்வது, பாலியல் தொந்தரவு தருவது, பாலியல் நோக்கத்துடன் பார்ப்பது, அமிலம் வீசுவது உள்ளிட்ட குற்றங்களுக்கான தண்டனைகள் கடுமையாக்கப்படும்.
இருவரும் சம்மதத்துடன் பாலியல் உறவு கொள்வதற்கான வயது வரம்பு 18 ஆக நீடிக்கிறது.
இந்த மசோதா மூலம் இந்திய தண்டனைச் சட்டம், குற்ற நடவடிக்கை சட்டம், சாட்சி, ஆதாரங்கள் சட்டம், குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து காக்கும் சட்டம் ஆகியவற்றில் திருத்தம் கொண்டு வரப்படுகிறது.
பெண்கள் மீது அமில வீசுபவர்களுக்கு சுமார் பத்து ஆண்டுவரை தண்டனை வழங்கப்படும். மேலும் இதில் பாதிக்கப்படுபவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள எதிர் நடவடிக்கை எடுக்க உரிமை உண்டு என மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
பாலியல் பலாத்காரம், குழுவாக பலாத்காரத்தில் ஈடுபடுவோருக்கு 20 ஆண்டுகளுக்குக் குறையாமல் தண்டனை கிடைக்கவும், ஆயுள் தண்டனையாக நீட்டிக்கவும் மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அனைத்து காவல் நிலையங்களிலும் ஒரு பெண் காவலராவது பணியில் நியமிக்கப்படுவார்.
பாலியல் பலாத்காரத்துக்கு உள்பட்டவர்கள், அமில தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு மருத்துவமனைகள் முதல் உதவி மற்றும் சிகிச்சையை இலவசமாக மேற்கொள்ளபடும். சிகிச்சை அளிக்காத மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
|