‘‘ஐ.நாவின் ஒருங்கிணைந்த வளர்ச்சி இலக்கில் இந்தியா பெறும் வெற்றி, உலகின் அடையாளத்தை மாற்றும்’’ என ஐ.நா பொதுச் சபை தலைவர் மரியா பெர்னாண்டோ எஸ்பினோசா கூறியுள்ளார்.
ஐ.நா பொதுச் சபையில் அதன் தலைவர் மரியா பெர்னாண்டோ எஸ்பினோசா பேசியதாவது: எனது தலைமையில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவதை பெரிதும் எதிர்பார்க்கிறேன். ஐ.நா.வின் பல்வேறு திட்டங்களில் இந்தியா முக்கிய பங்காற்றுகிறது. ஐ.நா.வின் இணக்கமான நாடாக இந்தியா விளங்குகிறது.
2030ம் ஆண்டில் ஐ.நா.வின் ஒருங்கிணைந்த வளர்ச்சி இலக்கை அடைவதில் இந்தியா பெறும் வெற்றி, உலகின் அடையாளத்தையே மாற்றும். இது 130 கோடி மக்கள் சம்பந்தப்பட்டது.
ஐ.நா.வின் அமைதிப் படை பணியில் இந்தியாவின் பங்கு மிக முக்கியமானது. அமைதிப் பணியில் பெண்களை ஈடுபடுத்தும் விஷயத்திலும் இந்தியா சிறந்த முறையை பின்பற்றுகிறது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி பணிக்காக இந்திய பிரதமர் மோடிக்கு விருது அளிக்கப்பட்டு உள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
பருவநிலை மாற்றத்திலும் இந்தியா முக்கியப் பங்காற்றி வருகிறது. இருந்தாலும், துப்புரவு மற்றும் நகரமயமாக்கல் போன்றவற்றில் இந்தியா பல சவால்களை சந்திக்கிறது.
இந்தியா அதிக மக்கள் தொகை கொண்ட நாடு. இங்கு கிராமங்கள் அதிகமாக உள்ளன. மக்களுக்குத் தேவையான சேவைகளை அளிப்பது சவாலான பணி. சரியாக திட்டமிட்டால்தான், சவால்களை எதிர்கொள்ள முடியும்.
இந்தியாவில் ஆரம்பம் முதலே தீவிரமான சிவில் சொசைட்டி, வலுவான ஜனநாயகம், மக்களின் தீவிர பங்களிப்பு இருந்து வருகிறது. அதனால் பல விஷயங்கள் சாதகமாக நடக்கின்றன. எனது 7 முன்னுரிமைத் திட்டப் பணிகளில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றவே விரும்புகிறேன். இந்தியாவை ஆக்கப்பூர்வமான, நம்பிக்கையான நாடாக நான் பார்க்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
|