செல்போன் பிரீபெய்ட் மற்றும் போஸ்ட் பெய்டு சிம் கார்டு கேட்டு விண்ணப்பிக்கும், வாடிக்கையாளர்களின் முகவரி உள்ளிட்ட அனைத்து அடையாள சான்றுகளையும் சிம் விற்பனையாளரே சரிபார்க்க வேண்டும் எனவும் தவறுதலான தகவல்களுக்கு விற்பனையாளரே பொறுப்பேற்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. போலி ஆவணங்களை கொடுத்து சிம் கார்டுகளை பெறுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அதை தடுக்கும் வகையில், மத்திய தொலை தொடர்புத்துறை கடுமையான புதிய வரைமுறைகளை விதித்துள்ளது.
மத்திய அரசின் புதிய விதியின்படி, சிம் கார்டை விற்கும் அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர் வாடிக்கையாளர் விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தில் ஒட்டப்பட்டுள்ள புகைப்படத்தை சரி பார்த்து சரியான ஆவணம் சமர்ப்பித்தவருக்கு மட்டுமே சிம் வழங்க வேண்டும் மேலும் ஆவணங்களை அசலுடன் ஒப்பிட்டுப் பார்த்து அவையும் சரியானவை என்பதையும் உறுதி செய்து கையெழுத்து இட வேண்டும். அந்த ஆவணங்கள் போலியானவை எனத் தெரிந்தால் விற்பனையாளரே போலீஸில் புகார் செய்து நடவடிக்கை எடுக்கச் செய்யலாம். இந்த புதிய விதிமுறை வரும் நவம்பர் 9ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
|