சமகாலத்தின் உண்மை நிலவரங்களைப் பிரதிபலிப்பதாகவே சட்டங்கள் இருக்க வேண்டும். ஏதோ ஒரு வழக்கினை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு சட்டங்களை உருவாக்கிக் கொள்ள முடியாது. பல ஆண்டுகளுக்கு, ஒவ்வொரு வழக்குக்கும் பொருந்தக் கூடியதாக சட்டங்கள் இருக்க வேண்டும். சட்டங்கள் நாடு முன்னேறுவதற்கு உதவ வேண்டுமே தவிர, பின்தங்குவதற்கு வழிவகுத்துவிடக் கூடாது.
தற்போது பாலியல் குற்றங்கள் தொடர்பான அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மனைவியின் விருப்பமின்றி கணவன் உறவு கொள்வதை இதில் பல்வேறு காரணங்களுக்காகச் சேர்க்கவில்லை. அதில் ஒரு காரணம், மற்ற ஜனநாயக நாடுகளைப் போல, திருமணம் என்பது இந்தியாவில் ஒரு ஒப்பந்தமாகக் கருதப்படவில்லை என்பதுதான். இருப்பினும் கணவரை விட்டுப் பிரிந்த ஒரு பெண் மீது பாலியல் தாக்குதல் நடத்தினால் அந்தக் கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்.
அமைச்சரவையின் முன்பாக இந்த அவசரச் சட்டம் அடுத்த வாரம் வைக்கப்படவிருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிகழ்ந்த தில்லி பாலியல் சம்பவத்துக்குப் பின், மிகக் குறைந்த நேரத்தில் பாலியல் குற்றம் தொடர்பான மசோதாவைத் தயாரித்தது. அரசின் ஒரு சாதனைதான்.
சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். சட்டத்தில் ஓட்டைகள் இருந்தால், அது அப்பட்டமான மீறல்களுக்கே வழிவகுக்கும். இந்திய தண்டனைச் சட்டம் 498(ஏ) பிரிவின்படி வரதட்சணைக் கொடுமைக்கு தண்டனை அளிக்கலாம். ஆனால் இந்த சட்டப் பிரிவானது இப்போது பெரிய அளவில் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. இது குறித்து நான் எதுவும் செய்ய இயலாது. நான் ஏதாவது செய்தால், சில மகளிர் அமைப்புகள் அதை எதிர்த்துப் போர்க்கொடி தூக்கிவிடுவார்கள் என்றார் ஒரு கருத்தரங்கில் பேசிய மத்திய சட்டத்துறை அமைச்சர் அஸ்வினி குமார்.
|