அமெரிக்காவை சேர்ந்த தமிழ் விஞ்ஞானி ஜகன்னாதன் சாரங்கபாணி, ரோபாட்டுக்கு மனிதனை போல தன்னிச்சையாக செயல்பட மூளையை கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளார்.
ஜகன்னாதன் சாரங்கபாணி, அமெரிக்காவில் பல ஆண்டுகளாக ரோபாட் பற்றி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இவர் தலைமையிலான குழுவினர் பல வகையில் ரோபாட் செயல்பாடுகளை கணக்கிட்டு, அதற்கு தனி கட்டளைகளை பிறப்பித்து, தானியங்கி முறையில் மட்டுமின்றி, சுயமாக சிந்தித்து, குறைந்தபட்ச செயல்பாடுகளை மேற்கொள்ள வைத்தனர். இதில் ஜகன்னாதன் வெற்றி கண்டுள்ளார். ரோபாட் சுயமாக சிந்தித்து, செயல்படக்கூடிய அளவில் அதற்கு மனிதர்களுக்கு உள்ளதை போல மூளையை கண்டுபிடித்துள்ளார். எல்லா கட்டளைகளையும் மூளையில் வைத்து, மனிதனை போலவே சிந்திக்கும் அளவுக்கு, புரிந்து கொள்ளும் அளவுக்கு ரோபாட்டின் செயல்பாட்டை மாற்றியமைத்துள்ளார். சோதனை ரீதியாக ரோபாட்டுக்கு மூளையை பொருத்தி செயல்படுத்தியபோது, ரோபாட்டுக்கு இலக்கை மட்டும் கமாண்ட் செய்து விட்டால் அதை அடைய மனிதனை போல தானாகவே சிந்தித்து, செயல்பட முடியும் என்பதில் ஏறக்குறைய வெற்றி கண்டுள்ளார். ரோபாட்டுக்கு அவர் கண்டுபிடித்த மூளையை பொருத்துவதில் படிப்படியாக மேலும் வெற்றி கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்த ஜகன்னாதன், எதிர்காலத்தில் ரோபாட்டால், மனிதனை போல சிரிக்க முடியும்; கோபப்பட முடியும். ஏன், முகபாவத்தை கூட காட்ட முடியும் என்று உறுதியுடன் கூறியுள்ளார்.
|