காகிதத்தால் அச்சடிக்கப்படும் ரூபாய் நோட்டுகளின் தரம் குறைவாக இருப்பதால், பிளாஸ்டிக் நோட்டுகளை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி கடந்த 2010-ம் ஆண்டில் முடிவு செய்தது.
முதலில் 10 ரூபாய் பிளாஸ்டிக் நாணயங்களை தயாரிக்க தீர்மானித்த ரிசர்வ் வங்கி, இவற்றை தயாரிப்பதற்காக சமீபத்தில் ‘டெண்டர்’ வெளியிட்டது. இதற்கு பல முன்னணி நிறுவனங்கள் விண்ணபித்துள்ளது. விரைவில் இவை பரிசீலிக்கப்பட உள்ளன. இதன் அடிப்படையில், குறைந்த செலவில் தயாரிக்க முன்வரும் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்படும்.
சோதனை அடிப்படையில் முதலில் பிளாஸ்டிக் 10 ரூபாய்களை தயாரிக்கவும், படிப்படியாக நூறு ரூபாய் முக மதிப்புள்ள நாணயங்களை அறிமுகப்படுத்தவும் ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது, புதிதாக தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ள நூறு கோடி பிளாஸ்டிக் 10 ரூபாய்களை கேரளாவின் கொச்சி, கர்நாடகத்தின் மைசூர், ராஜஸ்தானின் ஜெய்ப்பூர், ஒடிசாவின் புவனேஸ்வர் மற்றும் இமாச்சலபிரதேசத்தின் சிம்லா ஆகிய 5 நகரங்களில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த புதிய முயற்சிக்கு கிடைக்கும் வரவேற்பையடுத்து, நாடு முழுவதும் பிளாஸ்டிக் ரூபாய்களை நடைமுறைப்படுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
|