LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 1063 - குடியியல்

Next Kural >

இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்
வன்மையின் வன்பாட்ட தில்.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
வறுமைத் துன்பத்தை இரப்பதன் வாயிலாகத் தீர்ப்போம், என்று கருதி முயற்சியைக் கைவிட்ட வன்மையைப் போல் வன்மையானது வேறு இல்லை.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
இன்மை இடும்பை இரந்து தீர்வாம் என்னும் வன்மையின் - வறுமையான் வருந்துன்பத்தை முயன்று நீக்கக்கடவேம் என்று கருதாது இரந்து நீக்கக் கடவேம் என்று கருதும் வன்மை போல; வன்பாட்டது இல் - வலிமைப்பாடுடையது பிறிது இல்லை. (நெறியாய முயற்சி நிற்க, நெறியல்லாத இரவான் தீர்க்கக் கருதுதலின், வன்மையாயிற்று, வன்பாடு - முருட்டுத் தன்மை அஃதாவது, ஓராது செய்து நிற்றல். இதனான் 'வறுமை தீர்த்தற்கு நெறி இரவன்று' என்பது கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
வறுமையாலுற்ற துன்பத்தைப் பிறர்மாட்டு இரந்து பெற்ற பொருளினாலே தீர்ப்பே மென்று கருதுகின்ற வன்மைபோல, வன்பாயிருப்பது பிறிது இல்லை. இஃது இரந்தாலும் நல்குரவு தீரா தென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
இன்மை இடும்பை இரந்து தீர்வாம் என்னும் வன்மையின்-வறுமைத் துன்பத்தை உழைப்பால் நீக்குவோமென்று கருதாது இரப்பால் நீக்குவோமென்று கருதும் வன்மையைப்போல்; வன்பாட்டதுஇல்-வன்மைபாடுள்ளது வேறொன்றுமில்லை. முதலாவது; பிறரிடம் ஒன்று ஏற்பதே இகழ்ச்சி; அதையும் இரந்து பெறுதலோ மிக இழிந்தது. மதிப்பாக வுழைத்து மானத்தோடு வாழ இறைவன் கைகால் முதலிய உறுப்புகளைத் தந்திருக்கவும். அவற்றைப் பயன்படுத்தாது இரத்தலை மேற்கொண்டு ஒரே இல்லத்திற் பெறாது தெருத்தெருவாகவும் வீடுவீடாகவும் சென்று, சிறிது சிறிதாகவும் ஒன்றோடொன்றொவ்வாது பல்வேறு வகைப்பட்டனவாகவும், புதியனவும் பழையனவும் சுவையுள்ளனவும் இல்லனவுமாகவும், சில மனைகளில் மறுக்கப்பட்டும் சில மனைகளில் வெறுக்கப்பட்டும், தொல்லைப்பட்டு மானங்கெட்டுத் தொகுத்த மிச்சிலும் எச்சிலுமான வுணவையுண்டு உடம்பு தாங்கி, நாய்போல் திரிய மனங் கொள்வது ஆறறிவு படைத்த மாந்தப் பிறப்பிற்கு எவ்வகையிலும் ஏற்காத மாபெரு வன் செயலாதலின், ’வன்மையின் வன்பாட்ட தில்’ என்றார். இதனால் வறுமை நீக்கும் வழி இரவன்றென்பது கூறப்பட்டது.
கலைஞர் உரை:
வறுமைக்கொடுமையைப் பிறரிடம் இரந்து போக்கிக் கொள்ளலாம் என்று கருதும் கொடுமையைப் போல் வேறொரு கொடுமை இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
இல்லாமையால் வரும் துன்பத்தை (உழைத்துப் போக்காது) பிச்சை எடுத்துப் போக்கிக் கொள்ளலாம் என்று எண்ணும் கொடுமையிலும் கொடுமை வேறு இல்லை.
Translation
Nothing is harder than the hardness that will say, 'The plague of penury by asking alms we'll drive away'
Explanation
There is no greater folly than the boldness with which one seeks to remedy the evils of poverty by begging (rather than by working).
Transliteration
Inmai Itumpai Irandhudheer Vaamennum Vanmaiyin Vanpaatta Thil

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >