LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 387 - அரசியல்

Next Kural >

இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
இனியச் சொற்களுடன் தக்கவர்க்குப் பொருளை உதவிக் காக்க வல்ல அரசனுக்கு இவ்வுலகம் தன் புகழோடு தான் கருதியபடி அமைவதாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
இன்சொலால் ஈத்து அளிக்க வல்லாற்கு - இனிய சொல்லுடனே ஈதலைச் செய்து அளிக்கவல்ல அரசனுக்கு, இவ்வுலகு தன் சொலால் தான் கண்டனைத்து - இவ்வுலகம் தன் புகழோடு மேவித் தான் கருதிய அளவிற்றாம். (இன்சொல்: கேள்வியினும் வினையினும் இனியவாய சொல். ஈதல்: வேண்டுவார்க்கு வேண்டுவன கொடுத்தல். அளித்தல்: தன் பரிவாரத்தானும் பகைவரானும் நலிவுபடாமல்காத்தல். இவை அரியவாகலின் 'வல்லாற்கு' என்றும், அவன் மண் முழுவதும் ஆளும் ஆகலின் 'இவ்வுலகு' என்றும்கூறினார். கருதிய அளவிற்றாதல் - கருதிய பொருள் எல்லாம் சுரத்தல்.)
மணக்குடவர் உரை:
இனிய சொல்லோடே கொடுத்துத் தலையளி செய்ய வல்ல அரசனுக்குத் தன்னேவலாலே இவ்வுலகம் தான் கண்டாற் போலும் தன் வசத்தே கிடக்கும்.
தேவநேயப் பாவாணர் உரை:
இன்சொலால் ஈத்து அளிக்க வல்லாற்கு - இனிய சொல்லுடன் வேண்டியவற்றைக் கொடுத்து அன்பாகக் காக்கவல்ல அரசனுக்கு; இவ்வுலகு தன் சொலால் தான் கண்ட அனைத்து - இவ்வுலகம் தன்புகழோடு கூடித் தான் கருதியவாறு அமைவதாம். 'இன்சொல்' குரலாலும் பொருளாலும் விளைவாலும் இனிய சொல். ஈதல் புலவர், பாணர், கூத்தர் முதலியவர்க்குப் பரிசும் முற்றூட்டும் அளித்தலும், கோயில்கள், துறவோர் பள்ளிகள், ஊட்டுப் புரைகள் முதலியவற்றிற்கு இறையிலியாக அறப்புறம் விடுதலும். அளித்தல் மேற்கூறிய ஐவகையாலும் தீங்கு நேராமற்காத்தல். இம் மூன்றும் ஒருங்கே யமைதல் அரிதாதலின் 'வல்லாற்கு' என்றார். இவ்வுலகம் தான் கருதியவாறு அமைதலாவது தனக்கு வயப்பட்டுத் தான் விரும்பிய வாறு பயன்படுதல்.
கலைஞர் உரை:
வாக்கில் இனிமையும், பிறர்க்கு வழங்கிக் காத்திடும் தன்மையும் கொண்டவர்க்கு இவ்வையகமே வசப்படும்.
சாலமன் பாப்பையா உரை:
இனிய சொல்லுடன் பிறர்க்குக் கொடுக்கவும், அவர்களைக் காக்கவும் ஆற்றல் பெற்ற அரசிற்கு அது எண்ணிய எல்லாவற்றையும் இவ்வுலகம் தரும்.
Translation
With pleasant speech, who gives and guards with powerful liberal hand, He sees the world obedient all to his command.
Explanation
The world will praise and submit itself to the mind of the king who is able to give with affability, and to protect all who come to him.
Transliteration
Insolaal Eeththalikka Vallaarkkuth Thansolaal Thaankan Tanaiththiv Vulaku

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >