இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை முறைகாக்கும் முட்டாச் செயின்.
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
உலகத்தை எல்லாம் அரசன் காப்பாற்றுவான், நீதிமுறை கெடாதவாறு ஆட்சி
செய்வானாயின் அரசனை அந்த முறையே காப்பாற்றும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
வையகம் எல்லாம் இறை காக்கும் - வையகத்தை எல்லாம் அரசன் காக்கும், அவனை முறை காக்கும் - அவன் தன்னை அவனது செங்கோலே காக்கும், முட்டாச் செயின் - அதனை முட்டு வந்துழியும் முட்டாமல் செலுத்துவனாயின். (முட்டாமல் செலுத்தியவாறு: மகனை முறைசெய்தான் கண்ணும்(சிலப் 20:53-55 ) தன் கை குறைத்தான் கண்ணும் (சிலப்,23: 42-53)காண்க. 'முட்டாது' என்பதன் இறுதி நிலை விகாரத்தால் தொக்கது. இவை நான்கு பாட்டானும் அதனைச் செலுத்தினான் எய்தும் பயன் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
அரசனுக்கு வெற்றி தருவது அவன் கையிலுள்ள வேலன்று, முறை செய்தல்; அவன் அதனைக் கோடச் செய்யானாயின்.
இது செங்கோன்மை செய்ய வெற்றியுண்டாமென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
வையகம் எல்லாம் இறை காக்கும் - உலகம் முழுவதையும் அரசன் காப்பான் ; முட்டாச் செயின் அவனை முறைகாக்கும் - முட்டுப்பாடு நேர்ந்த விடத்தும் முட்டில்லாது ஆட்சி செய்வானாயின், அவனை அவன் செங்கோலே காக்கும்.
முட்டில்லாமற் செய்தல் மனு முறைச் சோழன் தன்மகனை முறை செய்ததும், கொற்கைப் பாண்டியன் தன்கை குறைத்ததும் , போல்வதாம் . இனி, சிக்கலான வழக்குக்களைத் தீர்க்கும் வழியை இறைவனிடம் மன்றாடிக் கேட்டறிந்ததும் , முட்டாது செய்தலின் பாற்படும் . 'வையகம்' முதலாகுபெயர் . 'முட்டா' ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம்.
கலைஞர் உரை:
நீதி வழுவாமல் ஓர் அரசு நடைபெற்றால் அந்த அரசை அந்த நீதியே
காப்பாற்றும்.
சாலமன் பாப்பையா உரை:
ஆட்சியாளர் பூமியைக் காப்பர்; அவரையோ அவரது குறையற்ற நேர்மையான ஆட்சி காக்கும்.
Translation
The king all the whole realm of earth protects;
And justice guards the king who right respects.
Explanation
The king defends the whole world; and justice, when administered without defect, defends the king.