பழுதறு தெய்வம் காட்டிப் பண்டையின் உழுவலின் நலத்தால் ஓருயிர் என்றும் கடுஞ்சூள் தந்தும் கைபுனை புனைந்தும் பூழியம் போனகம் பொதுவுடன் உண்டும் குழமகற் குறித்தும் சிலமொழி கொடுத்தும் (5)
கையுறை சுமந்தும் கடித்தழை தாங்கியும் உயிரினில் தள்ளா இரங்கியும் உணங்கியும் பனையும் கிழியும் படைக்குவன் என்றும் இறடியம் சேவற்கு எறிகவண் கூட்டியும் புனமும் எம்உயிரும் படர்கரி தடிந்தும் (10)
அழுங்குறு புனல்எடுத்து அகிற்புகை ஊட்டியும் ஒளிமணி ஊசல் பரியவிட்டு யாத்தும் இரவினில் தங்க எளிவரல் இரந்தும் இருவிஅம் புனத்திடை எறிஉயிர்ப்பு எறிந்தும் தெரித்தலர் கொய்தும் பொழில்குறி வினவியும் (15)
உடலொடும் பிணைந்தகை ஆய்துயில் ஒற்றி செறிஇருள் குழம்பகம் சென்றுபளிங் கெடுத்த இற்பொழில் கிடைக்கும் அளவும்நின் றலைந்தும் பல்நாள் பல்நெறி அழுங்கினர் இன்று முகன்ஐந்து மணத்த முழவம் துவைக்க (20)
ஒருகால் தூக்கி நிலையம் ஒளிர்வித்து மூவுடல் அணைத்த மும்முகத்து ஓர்முகத்து எண்கடிப்பு விசித்த கல்லலகு எறிய இருட்குறள் ஊன்றிஎம் அருங்களி ஆற்றி உருள்வாய்க் கொக்கரை உம்பர்நாட் டொலிக்க (25)
கரம்கால் காட்டி தலையம் இயக்கி இதழ்அவிழ் தாமரை எனும்தகு ணிச்சம் துவைப்ப நீள்கரத்துக் கவைகள் தோற்றி கரிக்கால் அன்ன மொந்தைகலித் திரங்க துடிஎறிந்து இசைப்ப துகளம் பரப்பி (30)
வள்ளம் பிணைத்தசெங் கரடிகை மலக்க எரியகல் ஏந்திவெம் புயங்கமிசை ஆக்கி எரிதளிர்த் தன்ன வேணியில் குழவிப் பசும்பிறை அமுதொடு நிரம்பிய தென்ன மதுக்குளிர் மத்தமும் மிலைத்தொரு மறுபிறை (35)
மார்பமும் இருத்திய தென்னக்கூன் புறத்து ஏனக் கோடுவெண் பொடிப்புறத் தொளிர பொலன்மிளிர் மன்றப் பொதுவகம் நாடித் தனிக்கொடி காணஎவ் இடத்துயிர் தழைப்ப ஆடிய பெருமான் அமர்ந்துநிறை கூடல் (40)
கனவிலும் வினவா தவரினும் நீங்கி சூளும் வாய்மையும் தோற்றி நீளவும் பொய்த்தற்கு அவர்மனம் கரியே! (43)
|