இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான் சீரல் லவர்கண் படின்.
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
சிறப்பு நிலையும் தனக்கு பொருந்தாத சீரற்ற கீழ் மக்களிடம் ஏற்பட்டால், வரம்பு மீறிய செயலை உடையதாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
சிறப்பும் தான் - தனக்கு ஒக்கும் பெரியாரிடத்து அமைந்திருத்தலைச் செய்வதாய சிறப்புத்தானும்; சீர் அல்லவர்கண்படின் - தனக்கு ஒவ்வாத சிறியாரிடத்துப் படுமாயின்; இறப்பே புரிந்த தொழிற்றாம் - அதனை ஒழிந்து தருக்கின் கண்ணே மிக்க செயலை உடைத்தாம்.(தருக்கினை மிகச்செய்யும் என்பதாயிற்று. சிறப்பு - குடிமை, செல்வம், கல்விகளினாய மிகுதி. இவை இரண்டு பாட்டானும் அஃதிலார் செய்தி கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
செல்வமானது தனக்கு நிகரில்லாதார்மாட்டே நிற்குமாயின், நிதியை இறப்பாரிடத்தே பொருந்தின தொழிலை உடைத்தாம். சீரல்லவர்- பெரியரல்லர்.
தேவநேயப் பாவாணர் உரை:
சிறப்பும் தான்- பெருமையைத் தரும்செல்வம்; கல்வி அதிகாரம், மதிநுட்பம் முதலியவற்றின் மிகுதிதானும்; சீர் அல்லவர் கண் படின் - தன்னைக் கொண்டிருத்தற்குத் தகுதியில்லாத சிறியோரிடம் சேரின் ; இறப்பே புரிந்த தொழிற்றாம் - அடக்கமின்றிச் செருக்கே மிகுந்த செயல்களைச் செய்யும் இயல்பினதாம். "உடைப்பெருஞ் செல்வத் துயர்ந்த பெருமை அடக்கமி லுள்ளத்த னாகி - நடக்கையின் ஒள்ளிய னல்லான்மேல் வைத்தல் குரங்கின்கைக் கொள்ளி கொடுத்து விடல் ." இவ்விரு குறளாலும் சிறியோ ரியல்பு கூறப்பட்டது.
கலைஞர் உரை:
சிறப்பான நிலையுங்கூட அதற்குப் பொருந்தாத கீழ் மக்களுக்குக் கிட்டுமானால், அவர்கள் வரம்புமீறிச் செயல்படுவது இயற்கை.
சாலமன் பாப்பையா உரை:
பணம், படிப்பு, பதவி ஆகிய சிறப்புகள் சிறுமைக்குணம் உடையவரிடம் சேர்ந்தால், அவர்களின் செயல்கள் அகங்காரத்தோடு வருவனவாம்.
Translation
Whene'er distinction lights on some unworthy head,
Then deeds of haughty insolence are bred.
Explanation
Even nobility of birth, wealth and learning, if in (the possession of) the base, will (only) produce everincreasing pride.