LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 1068 - குடியியல்

Next Kural >

இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்தாக்கப் பக்கு விடும்.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
இரத்தல் என்னும் காவல் இல்லாத மரக்கலம் உள்ளதை ஒளித்துவைக்கும் தன்மையாகிய வன்னிலம் தாக்கினால் உடைந்து விடும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
இரவு என்னும் ஏமாப்பு இல் தோணி - இவ்வறுமை என்னும் கடலை இதனால் கடத்தும் என்று கருதி ஒருவன் ஏறிய இரவு என்னும் சேமமற்ற தோணி; கரவு என்னும் பார் தாக்கப்பக்குவிடும் - அதன்கண் ஓடுங்கால் கரத்தல் என்னும் வன்னிலத்தோடு தாக்குமாயின் பிளந்துபோம். (முயற்சியால் கடப்பதனை இரவால் கடக்கலுற்றான் அதன் கரை காணாமையின், 'ஏமாப்பு இல் தோணி' என்றார். ஏமாப்பு இன்மை தோணி மேல் ஏற்றப்பட்டது. அது கடத்தற்கு ஏற்றது அன்மையானும் நிலம் அறியாது செலுத்தியவழி உடைதலானும், அதன்கண் ஏறற்க என்பதாம். இஃது அவயவ உருவகம்.)
மணக்குடவர் உரை:
ஒருவன் வறுமையாகிய கடலை நீந்திக் கடக்க அமைத்துக் கொண்ட இரத்தலாகிய அரணில்லாத தோணி, இரக்கப்பட்டார் மாட்டுக் கரத்தலாகிய கல்லோடே தாக்க இறந்துவிடும். இஃது நல்குரவு தீராமைக்குக் காரணங் கூறிற்று.
தேவநேயப் பாவாணர் உரை:
இரவு என்னும் ஏமாப்பு இல் தோணி-வறுமை யென்னுங் கடலைக் கடப்பதற்கு ஒருவன் ஏறிய இரப்பு என்னும் பாதுகாப்பில்லாத தோணி; கரவுஎன்னும் பார்த்தாக்கப் பக்குவிடும்-வழியிலுள்ள கரத்தல் என்னும் பாறையால் தாக்கப்படும்போது பிளந்துபோம். உழைப்பாற் கடக்கவேண்டிய கடலை இரப்பாற் கடக்கத் தொடங்கியவன், சேதமின்றித் தன்தோணியைச் செலுத்த முடியாமையால் , 'ஏமாப்பி றோணி' என்றார். இது வறுமையென்னுங் கடலைப்பற்றிக் கூறாது அக்கடலிலுள்ள தோணியையும் பாறையையுமே கூறியதனால் , சினையுருவகம்.
கலைஞர் உரை:
இருப்பதை மறைத்து இல்லையென்று கூறும் கல் நெஞ்சின் மீது, இரத்தல் எனப்படும் பாதுகாப்பற்ற தோணி மோதினால் பிளந்து நொறுங்கிவிடும்.
சாலமன் பாப்பையா உரை:
வறுமைக் கடலைக் கடந்துவிட ஏறிய பிச்சை என்னும் வலு இல்லாத தோணி இருப்பதை மறைத்தல் என்னும் பாறையில் மோதப் பிளந்துபோகும்.
Translation
The fragile bark of beggary Wrecked on denial's rock will lie.
Explanation
The unsafe raft of begging will split when it strikes on the rock of refusal.
Transliteration
Iravennum Emaappil Thoni Karavennum Paardhaakkap Pakku Vitum

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >