குறிப்பிட்ட சில காரணங்களுக்காக, கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கும் சட்ட மசோதாவில், அயர்லாந்து அதிபர் கையெழுத்திட்டு உள்ளார்.
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் சவிதா, இவர் அயர்லாந்தில், பல் மருத்துவராக பணியாற்றினார். உடல் ரீதியான சில பிரச்னைகளால், கருவை கலைக்க அயர்லாந்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையை அணுகினார். அந்நாட்டில் கருகலைப்பு குற்றம் என்பதால், மருத்துவர்கள் கருச்சிதைவு செய்ய மறுத்துவிட்டனர். இதனால், வயிற்றில் இருந்த கரு இறந்து, அதன் நஞ்சு சவீதாவின் ரத்தத்தில் கலந்ததால் அவர் இறந்தார். இந்த சம்பவம் உலகமெங்கிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து அயர்லாந்தில் கருகலைப்பு சட்டத்தில் திருத்தம் செய்யக்கோரி பொதுமக்களின் போராட்டத்தால், அரசு இதற்கு ஒப்புதல் அளித்தது.இது தொடர்பான சட்டத் திருத்த மசோதா மீது, இம்மாதம், 11ம் தேதி, அயர்லாந்து பார்லிமென்டில், ஓட்டெடுப்பு நடந்தது. மசோதாவை ஆதரித்து, பெரும்பாலானோர் ஓட்டளித்தனர். இதையடுத்து, மசோதா நிறைவேறியது. "கருக்கலைப்பு செய்தால் மட்டுமே, தாய் உயிர் பிழைக்க முடியும்' என்ற சூழலில், கருக்கலைப்பு செய்ய மட்டுமே, இந்த சட்ட மசோதா வழி வகுக்கிறது. இந்த சட்ட வடிவுக்கு, அயர்லாந்து அதிபர் மைக்கேல் ஹிக்கின் நேற்று ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார்.
|