LOGO
  முதல் பக்கம்    மற்றவை    சிறப்புக்கட்டுரை Print Friendly and PDF

இ(ஹி)ந்தி கற்றல் அவசியமா?

நண்பருடன் உரையாடும்போது எங்களுடைய முந்தைய வேலை பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டோம்.  நாங்களிருவரும் வட இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் சில வருடங்கள் பணியாற்றியது, அங்கு நாங்கள் சந்தித்த நபர்கள், அவர்களது கலாச்சாரம், பழக்கவழக்கம், உணவுமுறை, விருந்தோம்பல் என்று பல்வேறு தலைப்புகள் பற்றி விவாதித்தோம்.  
இவ்வாறாகத் தொடங்கிய உரையாடல், நாங்கள் அங்கு எதிர்கொண்ட பிரச்சனைகள், குறிப்பாக மொழி சார்ந்த பிரச்சனைகள்  பற்றிய திசையில் திரும்பியது. ஹிந்தி தெரியாததால் நாங்கள் சந்தித்த பிரச்சனைகள், நண்பர்களின் கேலி, யாருடனும் தோழமையுடன்  பழக முடியாத சுழ்நிலை, பிறருடன் பேசுவதிலிருந்த தயக்கம், கடைக்குச் சென்றால் பொருட்கள் வாங்குவதிலிருந்த சிக்கல் என்றவாறு சென்றது.
உடனே நண்பர், "ஹிந்தி படிச்சிருந்தா இப்படி கஷ்டப்பட்டிருக்க வேண்டியதில்லை, இதெல்லாம் நம்ம அரசியல்வாதிகள் செய்த வீண் பிரச்சனை, இவனுக அரசியலுக்கு நம்மதான் பலிகடா. தமிழ் மொழியைப் பின்பற்றுவதால் எந்த ஒரு நன்மையும் இல்லை, மாறாக ஹிந்தி தெரிந்திருந்தால் இந்தியாவின் எல்லா பகுதிகளுக்கும் சுலபமாகச் சென்றுவர முடியும். ஹிந்தி தெரியலனா எவ்வளவு கஷ்டம்ன்னு” சொன்னார்.
முதலில் அவர் கூறியதை ஆமோதித்த நான், பின்னர் கூறியவற்றைக் கேட்டு எரிச்சலடைந்தேன். இன்றும் ஞாபகமுள்ளது, பத்து வருடங்களுக்கு முன் எனக்கும் என் வடஇந்திய நண்பருக்குமிடையில் ஏற்பட்ட வாக்குவாதம்.
“நீ இந்தியாவில தான இருக்கே, அப்பறம் ஏன் ஹிந்தி தெரியல? தேசிய மொழியே தெரியாம நீங்கெல்லாம் எதுக்கு இருக்கீங்க? எல்லா மாநிலங்களிலும் ஹிந்தி கட்டாயம் கற்றுத் தரப்படுகிறது, ஆனா தமிழ்நாட்டில மட்டும் ஏன் இது கட்டாயமாக்கப் படவில்லை. வேலைக்கு மட்டும் நார்த் இந்தியா வேண்டும், சென்ட்ரலிருந்து ஃபண்ட் மட்டும் வேணும் ஆனா ஹிந்தி வேண்டாம்?” என்று கூறினார்.
அதுவரை அமைதியாக அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த நான் உடனே, “ஹிந்தி தெரிஞ்சாதான் இந்தியன்னு யார் சொன்னது? லாங்வேஜ் தெரிஞ்சா இந்தியனாகிவிட முடியுமா? பாகிஸ்தானி ஹிந்தி பேசறான், அதனால அவன இந்தியன்னு சொல்லலாமா? ஒருவனுடைய மொழி அறிவை கருத்தில் கொண்டு அவன் இந்தியனா இல்லையான்னு சொல்றது தப்பு. இந்திய அரசாங்கத்திற்கு நீ எவ்வளவு டேக்ஸ் (tax) கட்டரையோ அதே டேக்ஸ் நானும் கட்டரேன். எங்களுக்குனு தனி மொழி இருக்கு, ஆயிரம் இலக்கியங்கள் இருக்கு, அதனால இன்னொரு மொழிய கத்துக்க வேண்டிய தேவையில்லை. தனக்குன்னு ஒரு மொழி இல்லாதவன் தான் இன்னொரு மொழிய கத்துக்க வேண்டிய கட்டாயமிருக்கு, எங்களுக்கு அந்த அவசியமில்லை” என்றேன்.   இன்றுடன் பத்து வருடங்களாகிறது, அன்று பேசுவதை நிறுத்திய நாங்களிருவரும் இன்று வரை பேசியதில்லை. சந்தர்ப்பங்கள் பல அமைந்தும் இருவருக்குமிருந்த கசப்புணர்வால் நட்புபாராட்ட இயலவில்லை. அதற்காக நான் இன்று வரை கவலை பட்டதுமில்லை. இந்தக் கேள்வி அவர் ஒருவரிடம் மட்டுமில்லாமல் பெரும்பாலான வட இந்திய மக்களிடமும் உள்ளது. ஏன் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் ஹிந்திக்கு எதிர்ப்பு உள்ளது? நாட்டின் தேசிய மொழியைக் கற்பதென்பது தேச விரோதச் செயலா? பின்னர் ஏன் தமிழர்கள் ஹிந்தியை எதிர்க்கிறார்கள்? ஆங்கிலேயர் விட்டுச் சென்ற ஆங்கிலம் நம் அன்னிய மொழியாக இருந்தாலும், அதைக் கற்க முனையும் தமிழர்கள் தேசிய மொழியை புறக்கணிப்பது எவ்வாறு சரியாகும்? தமிழர்களின் இச்செயல்பாடு தவறானதல்லவா? என்பது போன்ற பேச்சுக்களை தமிழ்நாட்டிற்கு வெளியே வாழ்ந்து வரும் தமிழர்கள் நிச்சயம் கேட்டிருப்பர்.
இக்கேள்விகளுக்கான தீர்வுகளை ஆராயும் முன், சில வரலாற்று நிகழ்வுகளைப இங்கு பதிவு செய்தல் அவசியமாகிறது. இன்னொறு முக்கியமான விஷயம், வரலாற்று நிகழ்வுகளை வாசிக்கும் பொழுது அங்கு குறிப்பிடப்படும் செய்திகளை நிகழ்காலத்தோடு ஒப்பிடாமல், நிகழ்வு நடைபெற்ற காலகட்டத்திற்குச் சென்று வாசித்தல் தவறான புரிதலைத் தடுத்து நம் புரிதலை எளிமையாக்கும்.
ஹிந்தி புறக்கணிப்பு அல்லது ஹிந்தி எதிர்ப்பு என்பது இன்றோ நேற்றோ தொடங்கப்பட்ட்தல்ல. ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்கு முன் துவங்கிய ஒரு போராட்டம் (1900-1940).  ஆம் ஹிந்தியை இந்தியாவின் ஆட்சிமொழியாக்கும் மத்திய/மாநில அரசின் திணிப்பு/பலவந்தத்தை  எதிர்த்துத் தொடங்கப்பட்டதே இந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம். இம்மொழித் திணிப்பு தமிழகத்தில் மட்டுமல்லாது இந்தி பேசாத அனைத்து மாநிலங்களிலும் அரசால் கொண்டுவரப்பட்டது.
1937ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் காங்கிரசின் இராஜகோபாலாச்சாரி தலைமையில் அமைந்த அரசு, பள்ளிகளில் இந்தி படிப்பதைக் கட்டாயமாக்கியது. இராஜாஜியின் இந்தச் சட்டத்தை எதிர்த்துப் போராடியவர்களில் மிக முக்கியமானோர்  -  மறைமலை அடிகள், ஈ.வே.ரா பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், கி. ஆ. பெ. விசுவநாதம் மற்றும் ஏ. டி. பன்னீர் செல்வம் ஆவர்.
இதைத் தொடர்ந்து  ஆறு, ஏழு, எட்டு வகுப்புகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கு இந்தி கட்டாயப் பாடமாக்கப்போவதாக அறிவிக்கப்பட்டது.  இந்தி பயில்வது மட்டுமல்லாது, இந்தி தேர்வில் போதிய மதிப்பெண் பெற்றால் மட்டுமே அடுத்த வகுப்பிற்குச்  செல்ல முடியும் என்ற நிலை உருவானது. இதனால் கிராம மற்றும் நகர்ப்புறத்தில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு  ஆங்கிலம், இந்தி என இரு புதிய மொழிகளைக் கற்பதில் சிரமம் ஏற்பட்டது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் யாதேனில் சாதி, மத பேதமில்லாமல் அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்து கட்டாய இந்திக் கல்வியை எதிர்த்து  தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களின் இம்முயற்சி தமிழரை வட இந்தியர்களுக்கு அடிமையாக்குவதாகக் கருதிய பெரியார் தலைமையிலான கட்சியினரும், பல்லாயிரக்கணக்கான தமிழர்களும் ஒன்றிணைந்து உண்ணாநோன்பு, மாநாடுகள், பேரணிகள் மற்றும் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். அதன் விளைவாக அன்றைய காங்கிரஸ் கட்சி பதவி விலகிதையடுத்து, 1940இல் இருந்த பிரிட்டிஷ் அரசு இந்தக் கட்டாய இந்திக் கல்வியை விலக்கினர். 
இந்தி திணிப்பின் தொடக்கம் காங்கிரஸ் கட்சியை மட்டுமே சாராது, நாம் தேசத் தந்தையாகப் போற்றும் காந்தியடிகள் மற்றும் நேருவின் பங்கும் இதில் முக்கியமானது.  பிரிட்டிஷ் ஆட்சியின்போது ஆங்கிலம் அரசுமொழியாக விளங்கி வந்த நிலையில், பிரிட்டிஷுக்கு எதிராக அனைத்து மாநிலத்தவரையும் ஒன்றிணைக்கும் வகையில் ஒரு பொது மொழியை உருவாக்கும் முனைப்பில் தொடங்கப்பட்டதே இந்த தேசிய மொழி அல்லது பொது மொழித்திட்டம்.  இதன் வழிகாலே இந்தியும் உருதுவும் கலந்த இந்துஸ்தானி என்ற மொழியின் பிறப்பு. இதனடிப்படையிலேயே இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி இந்துஸ்தானி மொழியை பிற மாநிலங்களில் பரப்புவதில் முனைப்புடன் செயல்பட்டது. ஆனால் முடிவில் வெற்றிபெற இயலவில்லை.
1948-49 ஆம் ஆண்டில் இந்தியா விடுதலை பெற்ற பின்னர் காங்கிரசு தலமையிலான இந்திய அரசு, இந்தியைப் பள்ளிகளில் கட்டாயமாக்க மாநிலங்களை வற்புறுத்தியது. இதனை எதிர்த்து சென்னை மாகாணம் மற்றும் இன்னபிற இடங்களிலும் இந்தித் திணிப்பை எதிர்த்து திராவிடர் கழகத்தின் அறிஞர் அண்ணாவும், நீதிக்கட்சியின்  பெரியாரும் போர்க்கொடி தூக்கி தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் எதிரொலியாக கட்டாயப் பாடமாக இருந்த இந்தி விருப்பப் பாடமாக மாற்றப்பட்டது.
1948-50இல் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றும்/வகுக்கும் நேரத்தில் ஒருமையான அல்லது ஒன்றுபட்ட தேசிய மொழி பற்றிய விவாதமும் நடைபெற்றது. இவ்வமைப்பிலிருந்தவர்களில் பெரும்பாலானோர் இந்தி பேசும் மாநிலங்களின் உறுப்பினர்கள், பொதுமொழி என்பதன் அடிப்படையில்  பல்வேறு மசோதாக்கள்  இந்தி மொழியில் இயற்றப்பட்டது. அமைப்பிலிருந்த சிலர்  "இந்துஸ்தானி அறியாதவர்கள் இந்தியாவில் இருக்க உரிமையற்றவர்கள். இந்தியாவின் அரசியலமைப்பை முடிவு செய்கின்ற இந்த மன்றத்தில் இருந்துகொண்டு இந்துஸ்தானி அறியாதவர்கள் உறுப்பினராக இருப்பதற்கே தகுதியற்றவர்கள்; அவர்கள் விலகிக் கொள்ளலாம்" என்று முழங்கினர்.
இதனை எதிர்த்து அமைப்பிலிருந்த தென்னாட்டவர்கள், இதுபோன்று  இந்தி படிக்கக் கட்டாயப்படுத்தினால், முற்காலத்தில் ஆங்கிலத்தை  வெறுத்த  எம்மக்கள்  பலரும் ஆங்கிலத்திற்கு ஆதரவாகும் நிலை ஏற்படுமென்பதை உரைத்தனர்.   இதவே பின்னாளில் மொழி அறியாத மக்களை அடிமைப்படுத்தும் நிலை உருவாகுமென்று எடுத்துரைத்தனர்.
தீவிர-வாதங்களுக்குப் பிறகு, இந்தி இந்திய ஒன்றியத்தின் அலுவலக மொழியாக தேர்வு செய்யப்பட்டு, இந்தி பேசாத  மாநிலங்களில் ஆங்கிலமும் அடுத்த பதினைந்து ஆண்டுகளுக்கு அலுவலக மொழியாக நீடிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன் காரணமாகவே ஆங்கிலம் நமது அனைத்து சட்ட நடவடிக்கைகள், நீதிமன்றங்கள், சட்டங்கள், மசோதாக்கள், விதிகள் போன்றவற்றில் நிலைத்தது.
இதன்பின் 1955-58ல் பிரதமராக இருந்த நேரு தலைமையில் அமைக்கப் பெற்ற ஆணையம், ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியைக் கொணரும்  வழிகளைக் குறிப்பிட்டது. அதனடிப்படையில் இந்தி அலுவல் மொழியாகவும் ஆங்கிலம் துணைமொழியாகவும் பரிந்துரைக்கப்பட்டது.  முன்பு தீவிரமாக இந்தியை ஆதரித்த இராஜாஜி அவர்கள் இச்சமயம் ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தி அமைவதற்கு எதிராக மாநாடு நடத்தினார். அப்போது "இந்தி ஆதரவாளர்களுக்கு எவ்வாறு ஆங்கிலம் அந்நிய மொழியோ அதேபோல் இந்தி பேசாதவர்களுக்கு இந்தியும் அந்நிய மொழியே” என முழங்கினார்.
இதுபோன்று பல்வேறு எதிர்ப்புகள் இந்தி திணிப்புக்கெதிராக வலுத்து வந்த நேரத்தில் பிரதமர் நேரு அவர்கள் இந்தி மொழித்திணிப்பை நிறுத்தி, ஆங்கிலம் இணையாக வரலாம் என்ற ஆணையைப் பிறப்பித்தார். 
1960-63ல் மீண்டும் அலுவல்மொழிச் சட்ட மசோதாவை எதிர்த்து தமிழகத்தின்  பல்வேறு இடங்களில் போராட்டங்களும் மறியலும் வலுவானது. இந்தித் திணிப்பு எதிர்ப்புக் கொள்கையை முன்னிருத்திய  கட்சிகளில் மிகமுக்கியமானது அண்ணாவால் தொடங்கப்பட்ட 'திராவிட முன்னேற்றக் கழகம்'. அந்நாளில் முனைப்புடன் இந்தித் திணிப்பை எதிர்த்தவர்களில் மிக முக்கியமானவர் கலைஞர்  கருணாநிதி அவர்கள்.  மத்தியில் மொழிச்சட்டத்தின் முக்கிய கருத்தாக "இந்தியாவில் பெரும்பான்மையான மக்களால் பேசப்படும் மொழி 'இந்தி', ஆதலால் இதுவே தேசிய மொழியாக வழங்கப்பட வேண்டும்" என்று பரிந்துரைக்கப்பட்டது. இதற்கு பதிலுரைத்த அண்ணா அவர்கள், "எண்ணிக்கைகளால் முடிவுகள் எடுக்கப்படுமானால் இந்தியாவின் தேசியப் பறவை மயிலாக இருக்காது; காகமாகத்தான் இருக்கும்" என்றார்.
1964ல்  நேருவின்  மறைவைத் தொடர்ந்து லால் பகதூர் சாஸ்திரி இந்தியப் பிரதமரானார். சாஸ்திரியும் அவரது அமைச்சரவையின் அமைச்சர்களான மொரார்ஜி தேசாய் மற்றும் குல்சாரிலால் நந்தா ஆகியோரும் இந்தியை ஒரே அரசு மொழியாக்குவதில் தீவிரமாக இருந்தனர்.
அரசு வேலைகளில் இந்திக்கு முதலிடம் தரப்படும் என்றும், குடியியல் சேவை தேர்வுகளில் இந்தி கட்டாயமாக்கப்பட்டும், பள்ளிகளில் ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தி திணிக்கப்படும் என்ற அச்சமும் கவலையும் மாணவர்களை இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் பெருமளவில் பங்கேற்க வழிவகுத்தது.
அன்றைய முதல்வர் எம். பக்தவத்சலம் மும்மொழி திட்டத்தைப் (ஆங்கிலம், இந்தி, தமிழ்) பள்ளிகளில் கற்க முன்மொழிந்தார்.  இதனால் மூன்று மொழிகளைப் படிக்க வேண்டிய கட்டாயம் தமிழக மாணவர்களிடையே இந்தித் திணிப்பு எதிர்ப்பினை அதிகரித்தது. தமிழக அரசியல் கட்சிகளனைத்தும்,  இந்தி அலுவல் மொழியாக மாறும் ஜனவரி 26 நாளை துக்கநாளாக அறிவித்தன. இதன் தொடர்ச்சியாக தி.மு.க தொண்டர்களும், மாணவர்களும் இணைந்து மாநிலமெங்கும் கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். "இந்தி ஒழிக", "Hindi Never, English Ever"  என்ற கோஷங்கள் முதன்முதலில் எழுப்பப்பட்டது.  இதன்பின் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் மாணவர்களுக்குமிடையே கலவரம் ஏற்பட்டது.  கலவரத்தின் தொடர்ச்சியாக காவல்துறையினர் மாணவர் ஊர்வலங்கள் மீது தடியடி மற்றும் துப்பாக்கிச் சூடும்  நடத்தியது, இதனால் நிலைமை மேலும் மோசமாகி தீவைப்பு, கொள்ளை மற்றும் பொதுச்சொத்து அழிப்பு என பெருகியது. தொடர்வண்டி நிலையங்களில் தொடர்வண்டிப் பெட்டிகள், இந்திப் பெயர்பலகைகள் கொளுத்தப்பட்டன. அன்று நடந்த கலவரத்தில் மாணவர்கள் பலரும் படுகாயமடைந்ததோடு, கட்சித் தொண்டர்கள் பலரும் பெட்ரோல் ஊற்றித் தீவைத்து தற்கொலை செய்து கொண்டனர்.
இப்போராட்டத்திற்குப் பிறகு, லால் பகதூர் சாஸ்திரி நாட்டில் ஏற்பட்ட கலவரங்கள்  குறித்து அதிர்ச்சி தெரிவித்ததோடு நேருவின் வாக்குறுதிகள் பின்பற்றப்படும் என்று உறுதியளித்தார்.
1.  ஒவ்வொரு மாநிலமும் தனது செயல்பாட்டிற்குத் தொடர்ந்து தான் தேர்ந்தெடுத்த மொழியில், வட்டாரமொழி அல்லது ஆங்கிலத்தில் தொடரலாம். 2.  இரு மாநிலங்களுக்கு இடையேயான தொடர்பாடல் ஆங்கிலத்தில் இருக்கும் அல்லது ஆங்கில மொழிபெயர்ப்பு உடனிருக்கும். 3.    இந்தி இல்லாத மாநிலங்கள் மைய அரசுடன் ஆங்கிலத்தில் தொடர்பாட முழு உரிமை உண்டு; இந்நிலையில் இந்தி இல்லாத மாநிலங்களின் ஒப்புதலன்றி எந்த மாற்றமும் நிகழாது. 4. மத்திய அரசின் அலுவல்களில் ஆங்கிலம் தொடர்ந்து பயன்படுத்தப்படும்
இதன் தொடர்ச்சியாக, 1967ஆம் ஆண்டு நடைபெற்ற மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்து, திமுக முதன்முறையாக தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பேற்றது. தேர்தலில் மாணவர் தலைவர் சீனிவாசன் காமராஜருக்கு எதிராக விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் கண்டார்.  அந்நாளே தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் கோலோச்சம் முற்றிலுமாக நின்றது.
காமராஜரின் இத்தோல்விக்கு முக்கியக் காரணம் இந்தி திணிப்பை ஆதரித்த காங்கிரஸ் கட்சியை எதிர்க்கும் நோக்கமே.
பின்னர் பல்வேறு நிலைகளில் தமிழகத்தில் அவரசச் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டதோடு, மும்மொழித் திட்டம் கைவிடப்பட்டு இந்தி முழுமையாகக் கல்வித்திட்டதிலிருந்து விலக்கப்பட்டது. தமிழும் ஆங்கிலமும் மட்டுமே பயிற்றுவிக்கப் பட்டது. அனைத்துக் கல்லூரிகளிலும் தமிழ்வழிக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திக்கு அளிக்கப்பட்ட தனிநிலை அந்தஸ்து முடிவுற்று அனைத்து மொழிகளுக்கும் சமநிலை வழங்கும் அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது.
1986ல் பிரதமர் ராஜீவ் காந்தி தேசிய கல்விக் கொள்கையை மீண்டும் அறிமுகப்படுத்தினார். அப்போது திமுகவின்  தீவிரமான போராட்டத்தின் முடிவில் தொண்டர்கள் பலர் தீயிட்டு தற்கொலை செய்துகொண்டனர். போராட்டம் தீவிரமாவதைக் கண்ட ராஜீவ் காந்தி அவர்கள்  இந்தி கட்டாயமாக்கப்படாது என்று வாக்குறுதியளித்ததால் போராட்டங்கள் முடிவுக்கு வந்தன.
பிரதமர் மோடியின் துவக்க காலத்தில் இந்தித் திணிப்பு மீண்டும் உருவாகும் நிலை எழுந்தது. அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, வைகோ போன்ற அரசியல் தலைவர்களின் எதிர்ப்பலையால் இந்தித் திணிப்பு தடுத்து நிறுத்தப்பட்டது. இன்றும் ஏதோ ஒருமூலையில் இந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே வருகிறது. 
மேற்குறிப்பிட்ட அனைத்தையும் வெறும் வரலாறாக மட்டும் ஏற்பது தவறானதாகும். என் பார்வையில் சுதந்திரம் என்பது தனிமனிதனின் அல்லது ஒரு சமூகத்தின் மீது மற்றவரின் திணிப்பு இல்லாமலிருப்பது. அதுவே இங்கு மொழி பற்றிய திணிப்பிற்கும் பொருந்தும்.
இந்தி கற்றால்தான் இந்தியாவில் வாழ முடியும் என்ற நிலையில் நாமில்லை, அந்நிலை வரும் நிலையிலுமில்லை. செம்மொழியாம் நம் தமிழ் மொழியின் சிறப்பிற்கு இணையான இன்னொரு மொழி இருப்பதாகத் தோன்றவில்லை. அதைப் பற்றி சிந்திக்கவும் எனக்கு எண்ணமில்லை. என் தமிழ் ஆசிரியன் பாரதி குறிப்பிட்டது போல்,
“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்”.
தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் நாம் தமிழன் என்ற உணர்வு அவசியமிருத்தல் வேண்டும்.
“தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா”.
இந்தி என்பது இந்தியாவில் பேசப்படும் ஏனைய மொழிகளுள் ஒன்றே தவிர  வேறேந்த சிறப்பும் இருப்பதாக அறியப்படவில்லை.
திறன் படைத்த எந்தவொரு சமூகமும் பிறருக்கு அஞ்சி, பிறர் திணிப்பை ஏற்க வேண்டிய கட்டாயமில்லை. தாய்நாட்டிற் கெதிராக செயல்படுவது தீவிரவாதமே தவிர, இந்தி கல்லாமிலிருப்பது எவ்விதத்திலும் தீவிரமாகாது. ஆங்கிலத்தை நண்பனாக மட்டும் ஏற்றுக்கொள்ள முடியுமே தவிர நம் அன்னையாக என்றும் ஏற்கமுடியாது. திணிக்கப்படுவது புறக்கணிக்கப்படும் என்பது மனித இயல்பு.
தமிழனே நீ வெற்றி நடைபோட்டு தாய்மொழியாம் நம் தமிழ்மொழியை சிறப்புறச் செய்தல் வேண்டும். அதே நேரத்தில் இந்தி கற்க விருப்பமுள்ளவர்கள் தாராளமாக தாங்கள் விரும்பும் மொழியைக் கற்கலாம். எந்த மொழியையும் விரும்பிக் கற்பதில் தவறில்லை. கற்றவை யாவும் நற்பலனையே தரும். அது மொழிக்கும் பொருந்தும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துமில்லை.

by varun   on 18 Jul 2016  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழ்ச் சமூகத்தில் தேங்கியுள்ள ஆங்கில மோகமும், நம் தாய்மொழி சந்திக்கும் சவால்களும் தீர்வுகளும் தமிழ்ச் சமூகத்தில் தேங்கியுள்ள ஆங்கில மோகமும், நம் தாய்மொழி சந்திக்கும் சவால்களும் தீர்வுகளும்
தமிழின அடையாளங்களின் இன்றைய நிலையும் செல்லவேண்டிய திசையும் ..ச.பார்த்தசாரதி தமிழின அடையாளங்களின் இன்றைய நிலையும் செல்லவேண்டிய திசையும் ..ச.பார்த்தசாரதி
[ம.சு.கு]வின் :  மனித உறவுகள் மேம்பாடு – இரகசியம் [ம.சு.கு]வின் : மனித உறவுகள் மேம்பாடு – இரகசியம்
கொரியாவில் இயங்கலையில் இனிதே நடைபெற்ற தமிழர் திருநாள் 2021 பொங்கல் நிகழ்வு கொரியாவில் இயங்கலையில் இனிதே நடைபெற்ற தமிழர் திருநாள் 2021 பொங்கல் நிகழ்வு
கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2021 தலைவர் உரை கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2021 தலைவர் உரை
“இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் அதிகம் பாதிப்பது இளையோரையா? முதியோரையா?” “இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் அதிகம் பாதிப்பது இளையோரையா? முதியோரையா?”
வீடு மற்றும் பொது இடங்களில் மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துதல் குறித்த விரிவான கையேடு வீடு மற்றும் பொது இடங்களில் மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துதல் குறித்த விரிவான கையேடு
நிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா நிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா
கருத்துகள்
29-Dec-2017 09:21:19 கி.முனுசாமி said : Report Abuse
ஹாய், மிகவும் சிறந்த கருத்து, ஆசிரியருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.