நடிகர் கஞ்சா கருப்பு தயாரித்து, நடித்துள்ள வேல்முருகன் போர்வேல்ஸ் படம் கடந்த வெள்ளிகிழமை வெளியாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள லிங்கா படத்தின் கதையை திருடி இந்த படத்தை எடுத்துள்ளதாக இணையதளங்களில் செய்திகள் வெளியாயின.
இதற்கு பதில் அளித்து ‘வேல்முருகன் போர்வெல்ஸ்’ பட டைரக்டர்இயக்குனர் எம்.பி.கோபி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கம்பம், தேனி, போடி, கூடலூர் ஆகிய பகுதிகளில் மழைக்காலத்தில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்படும். அப்பொழுது மக்கள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்படுவார்கள். வெயில் காலத்தில் தண்ணீர் இல்லாமல் கஷ்டப்பட வேண்டிய சூழ்நிலை உள்ளது.
நான் எனது வேல்முருகன் போர்வெல்ஸ் படத்தில் முழுக்க முழுக்க போர் லாரியை பயன்படுத்தி ஏழை விவசாயிகளின் தண்ணீர் பஞ்சம் போக வைத்து விவசாயத்தையும், விவசாயியின் வாழ்க்கையையும் உயர்த்த போர் வண்டி எவ்வாறு பயன்படுகிறது என்றுதான் கூறி உள்ளேன்.
அதேபோல வண்டியை பயன்படுத்தி டேம் ஒன்று உடையும் தருவாயில் உள்ளதைப் பார்த்து ஊரையும், ஊர் மக்களையும் காக்க வேல்முருகன் போர் லாரி குழுவினர்கள் எப்படி பாடுபட்டு அந்த டேம்மை அடைக்கிறார்கள் என்பதை தான் காட்டி உள்ளேன்.
வேல்முருகன் போர்வெல்ஸ் படம் லிங்கா படத்தில் இருந்து திருடப்பட்டதாக கூறுவது தவறான செய்தி. இதை நம்பி ரஜினிகாந்த் மற்றும் படக்குழுவினர் வேல்முருகன் போர்வெல்சை பார்க்க சென்றதாக வாய்வழி செய்தி பரவி உள்ளது. தயவுசெய்து தவறான தகவல்களை பரப்பி என்னையும், என் படக்குழுவினரையும் அவமானப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
|