LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள்

இசை அமுது - பகுதி 2

 

                                      இசை அமுது - பகுதி 2

1.17 சிறார் பொறுப்பு


இன்று குழந்தைகள் நீங்கள் -- எனினும்
இனிஇந்த நாட்டினை ஆளப் பிறந்தீர்!
இன்று குழந்தைகள் நீங்கள்!

நன்றாய்ப் படியுங்கள்! நாட்டின் குழந்தைகாள்!
ஒன்றாய் இருங்கள் உயர்வினை எண்ணுங்கள்!
இன்று குழந்தைகள் நீங்கள்!

குன்றினைப்போல் உடல்வன்மை வேண்டும்!
கொடுமை தீர்க்கப்போ ராடுதல் வேண்டும்!
தின்றதையே தின்று தெவிட்டுதல் இல்லாமல்
அன்றன்று வாழ்விற் புதுமை காணவேண்டும்
இன்று குழந்தைகள் நீங்கள்!

பல்கலை ஆய்ந்து தொழில் பலகற்றும்,
பாட்டிற் சுவைகாணும் திறமையும் உற்றும்,
அல்லும் பகலும் இந்நாட்டுக் குழைப்பீர்கள்!
அறிவுடன் ஆண்மையைக் கூவி அழைப்பீர்கள்!
இன்று குழந்தைகள் நீங்கள்!



1.18 தூய்மை


தூய்மை சேரடா தம்பி -- என்
சொல்லை நீபெரிதும் நம்பித்
தூய்மை சேரடா தம்பி!

வாய்மையாலும் ஒழுக்கத்தினாலும் அகத்
தூய்மை உண்டாகும் மேலும்மேலும்
தூய்மை சேரடா தம்பி!

உடையினில் தூய்மை -- உண்ணும்
உணவினில் தூய்மை -- வாழ்வின்
நடையினில் தூய்மை -- உன்றன்
நல்லுடற் றூய்மை -- சேர்ப்பின்
தடையில்லை வாழ்நாள் ஒவ்வொன்றும் இன்பம்
தரும்நாள் ஆகும் நீஎன்றும்
தூய்மை சேரடா தம்பி!

துகளிலா நெஞ்சில் -- சாதி
துளிப்பதும் இல்லை -- சமயப்
புகைச்சலும் இல்லை -- மற்றும்
புன்செயல் இல்லை -- தம்பி
அகத்திலே அன்பின் வெள்ளம் மூளும்; தீய
அச்சம் போகும்! நீ எந்நாளும்
தூய்மை சேரடா தம்பி!



1.19 அன்பு


அன்பை வளர்த்திடுவாய் -- மெய்
யன்பை வளர்த்திடுவாய்

கூடப் பிறந்த குழந்தை யிடத்தினில்
கொஞ்சுதல் அன்பாலே! உற
வாடி அம்மாவை மகிழ்ந்த மகிழ்ச்சியும்
அன்பின் திறத்தாலே!
தேடிய அப்பத்தில் கொஞ்சத்தை இன்னொரு
சின்னவனுக்குத் தர --நீ
ஓடுவ துண்டெனில் கண்டிருப்பாய் உன்
உள்ளத்திருந்த அன்பை!

கன்றையும் ஆவையும் ஒன்றாய் இணைத்தது
கருதில் அன்பன்றோ?
உன்னையும் உன்னரும் தோழர்கள் தம்மையும்
ஒட்டிய தன்பன்றோ?
சென்னையி னின்றொரு பேர்வழி வந்ததும்
சிட்டுப் பறந்ததுபோல் -- நீ
முன்னுற ஓடஉன் உள்ளம் பறந்ததும்
முற்றிலும் அன்பன்றோ?



1.20 மெய்


மெய் சொல்லல் நல்லதப்பா! தம்பி
மெய் சொல்லல் நல்லதப்பா!

கண்டதைச் சொல்லென்று சொன்னாலும் -- நீ
உண்டதைச் சொல்லென்று சொன்னாலும்,
மண்டை யுடைத்திட வந்தாலும் -- பொருள்
கொண்டுவந் துன்னிடம் தந்தாலும்
மெய் சொல்லல் நல்லதப்பா!

பின்னவன் கெஞ்சியும் நின்றாலும் --அன்றி
முன்னவன் அஞ்சிட நின்றாலும்
மன்னவரே எதிர் நின்றாலும் -- புலி
தின்னவரே னென்று சொன்னாலும் -- நீ
மெய் சொல்லல் நல்லதப்பா!



1.21 பொறுமை


பொறுமைதான் உன்றன் உடைமை! அதைப்
போற்றலே கடமை

பொறுமையாற் கழியும் நாளிலே
புதுவன்மை சேருமுன் தோளிலே!
பொறுமைதான் உன்றன் உடைமை!

பொறுமையுடைய ஏழையே கொடையன்!
பொறுமையிலாதவன் கடையன்!
இறைவனே எனினும் பிழை செய்தோன்
ஏதுமற்றவனாகி நைவான்!
பொறுமைதான் உன்றன் உடைமை!

பலமுறை பொறுப்பாய் வேறு
பழுதும் நேருமெனில் சீறு!
நிலைமை மிஞ்சுகையில் பகைவனை
நீறாக்கலே பொறுமையின் பயன்
பொறுமைதான் உன்றன் உடைமை!



1.22 சினம்


சினத்தை யடக்குதல் வேண்டும் -- சினம்
உனக்கே கெடுதியைத் தூண்டும்!

சினத்தினை யடக்கிட முடியுமா என்று
செப்புகின்றாய் எனில்கேள் இதை நன்று

வலிவுள்ளவன் என்று கண்டு -- சினம்
வாராமலே யடக்கல் உண்டு;
வலிவிலான்மேல் அன்பு கொண்டு -- அதை
மாற்றாதான் பெரிய மண்டு!
நலியும் மொழிகளைப் பேசவும் சொல்லும்
நாக்கையும் பல்லால் நறுக்கவும் சொல்லும்
சினத்தை யடக்குதல் வேண்டும்!

அடங்கா வெகுளிமண் மேலே -- காட்
டாறுபோய்ச் சீறுதல் போலே,
தொடர்ந்தின்னல் செய்யுமதனாலே -- அதைத்
தோன்றாமலே செய்உன் பாலே!
கடிதில் சுடுமிரும்பைத் தூக்கவும் வைக்கும்
கண்ணாடி மேசையைத் தூளாய் உடைக்கும்
சினத்தை யடக்குதல் வேண்டும்!



1.23 மழை


மழையே மழையே வா வா -- நல்ல
வானப்புனலே வா வா! --இவ் 
வையத்தமுதே வாவா!

தழையா வாழ்வும் தழைக்கவும் -- மெய்
தாங்கா வெப்பம் நீங்கவும்
உழுவாரெல்லாம் மலைபோல் எருதை
ஓட்டிப் பொன்னேர் பூட்டவும் மழையே...

தகரப்பந்தல் தணதண வென்னத்
தாழும் குடிசை சளசள என்ன
நகரப்பெண்கள் செப்புக் குடங்கள்
நன்றெங் குங்கண கணகண வென்ன மழையே...

ஏரி குளங்கள் வழியும்படி, நா
டெங்கும் இன்பம் பொழியும்படி, பொடி
வாரித்தூவும் பூவும் காயும்
மரமும் தழையும் நனைந்திடும்படி மழையே...

இல்லாருக்கும், செல்வர்கள் தாமே
என்பாருக்கும், தீயவர் மற்றும்
நல்லாருக்கும் முகிலே சமமாய்
நல்கும் செல்வம் நீயேயன்றோ? மழையே...



1.24 நிலா


முழுமை நிலா! அழகு நிலா!
முளைத்ததுவிண் மேலே --அது
பழைமையிலே புதுநினைவு
பாய்ந்தெழுந்தாற் போலே!
அழுதமுகம் சிரித்ததுபோல்
அல்லி விரித்தாற் போல் -- மேல்
சுழற்றி எறிந்த வெள்ளித்தட்டுத்
தொத்திக்கிடந் தாற்போல்
முழுமை நிலா! அழகு நிலா!

குருட்டு விழியும் திறந்ததுபோல்
இருட்டில் வான விளக்கு! -- நம்
பொருட்டு வந்ததுபாடி ஆடிப்
பொழுது போக்கத் துவக்கு!
மரத்தின் அடியில் நிலவு வெளிச்சம்
மயிலின் தோகை விழிகள்! -- பிற
தெருக்கள் எல்லாம் குளிரும் ஒளியும்
சேர்த்து மெழுகும் வழிகள்!
முழுமை நிலா! அழகு நிலா!



1.25 கறவை


நிறையப் பால் தரும் கறவை -- நீ
மறவேல் அதன் உறவை!
குறைவிலாது வைத் திடுக தீனியைக்
குளிப் பாட்டிவா நாளும் மேனியை!
நிறையப் பால்தரும் கறவை!

நோய் மிகுத்து மாளும்! -- கொட்டில்
தூய்மை செய்எந் நாளும்!
தோய்வு குப்பை கூளம் -- இன்றித்
துடைக்க என் ஓக்காளம்? 
வாய் மணக்கவே, உடல் மணக்கவே
வட்டில் நெய்யோடு கட்டித்தயிர் ஏடு
நிறையப் பால்தரும் கறவை!

ஈக்கள் மொய்த்தல் தீது! -- கூடவே
எருமை கட்டொ ணாது!
மேய்க்கப் போகும் போது -- மேய்ப்போன்
விடுக பசும்புல் மீது!
நோக்கும் கன்றினும், நமது நன்மையைக்
காக்கும் தாயடா! காக்கும் தாயடா!
நிறையப் பால்தரும் கறவை!



1.26 சிட்டு


இத்தனைச் சிறிய சிட்டு! -- நீபார்!
எத்தனை சுறுசுறுப்பு! -- தம்பி
இத்தனைச் சிறிய சிட்டு!

குத்தின நெல்லைத் தின்றுநம் வீட்டுக்
கூரையில் குந்தி நடத்திடும் பாட்டு
இத்தனைச் சிறிய சிட்டு!

கொத்தும் அதன்மூக்கு முல்லை அரும்பு
கொட்டை பிளந்திடத் தக்க இரும்பு!
தொத்தி இறைப்பினில் கூடொன்று கட்டும்
கூட்டை நீ கலைத் தாலது திட்டும்!
இத்தனைச் சிறிய சிட்டு!

மல்லி பிளந்தது போன்றதன் கண்ணை
வளைத்துப் பார்த்த ளாவிடும் விண்ணை!
கொல்லையில் தன் பெட்டை அண்டையில் செல்லும்
குதித்துக் கொண்டது நன்மொழி சொல்லும்
இத்தனைச் சிறிய சிட்டு!



1.27 காக்கை


காக்கை யிடத்திலுள்ள ஒற்றுமை கண்டு -- நீ
வாழ்க்கை நடத்தினால் நன்மை உண்டு
காக்கை யிடத்திலுள்ள ஒற்றுமை...

ஆக்கிய சோறு கொஞ்சம் சிந்திக் கிடக்கும்! -- காக்கை
அழைத்துத்தன் இனத்தொடு குந்திப் பொறுக்கும்
காக்கை யிடத்திலுள்ள ஒற்றுமை...

காக்கையை ஒருபையன் கொன்று விட்டதால் --அதைக்
காக்கைகள் அத்தனையும் கண்டு விட்டதால்
கூக்குரல் இட்டபடி குந்தி வருந்தும்! -- அதைக்
கொன்றபையன் கண்டுதன் நெஞ்சு வருந்தும்
காக்கை யிடத்திலுள்ள ஒற்றுமை...

வரிசையில் குந்தியந்தக் காக்கைகள் எலாம் -- நல்ல
வரிசை கெட்டமக்களின் வாழ்க்கை நிலையைப்
பெருங்கேலி யாய்மிகவும் பேசியிருக்கும் -- அதன்
பின்பவைகள் தத்தமிடம் நோக்கிப் பறக்கும்
காக்கை யிடத்திலுள்ள ஒற்றுமை...



1.28 நாய்


என்றன் நாயின் பேர் அப்பாய்! அது
முன்றில் காக்கும் சிப்பாய்!

ஒன்றும் செய்யாது விளையாடும்; பெருச்சாளியைக்
கொன்று போடும்; குலைக்கும் எதிராளியை;
என்றன் நாயின் பேர் அப்பாய்...

அதன் இனத்தை அதுவே பகைக்கும்! -- எனில்
அதுதான் மிகவும் கெட்ட வழக்கம்! -- அது
முதல் வளர்த்தவன் போஎன்றாலும் போகாது;
மூன்றாண்டாயினும் செய்தநன்றி மறவாது!
என்றன் நாயின் பேர் அப்பாய்...

நாய் எனக்கு நல்லதோர் நண்பன் -- அது
நான் அளித்ததை அன்புடன் உண்ணும் -- என்
வாய் அசைந்திடில் முன்னின்றே தன் வாலாட்டும்
வருத்தினாலும் முன்செய்த நன்றி பாராட்டும்
என்றன் நாயின் பேர் அப்பாய்...



1.29 பூனை


பூனை வந்தது பூனை! -- இனிப் 
போனது தயிர்ப் பானை!

தேனின் கிண்ணத்தைத் துடைக்கும் -- நெய்யைத்
திருடி உண்டபின் நக்குந்தன் கையைப்
பூனை வந்தது பூனை!

பட்டப் பகல்தான் இருட்டும் -- அது
பானை சட்டியை உருட்டும்!
சிட்டுக் குருவியும் கோழியும் இன்னும்
சின்ன உயிரையும் வஞ்சித்துத் தின்னும்
பூனை வந்தது பூனை!

எலிகொல்லப் பூனை தோது -- மெய்தான்
எங்கள் வீட்டில் எலி ஏது?
தலை தெரியாத குப்பை இருட்டறை
தன்னிலன்றோ எலிக்குண்டு திருட்டறை!
பூனை வந்தது பூனை!



1.30 காப்பி


காப்பி எதற்காக நெஞ்சே?
காப்பி எதற்காக?

கையினில் சுக்குடன் மல்லி இருக்கையில்
காப்பி எதற்காக?

தீப்பட்ட மெய்யும் சிலிர்க்க இளிப்புக்கு
வாய்ப்புற்ற தெங்கு வளர்ந்த தென்னாட்டினில்
காப்பி எதற்காக?

ஆட்பட்டாய் சாதி சமயங்களுக்கே
அடிமை வியந்தாய் ஆள்வோர் களிக்கப்
பூப்போட்ட மேல்நாட்டுச் சிப்பம் வியந்தாய்
போதாக் குறைக்கிங்குத் தீதாய் விளைந்திட்ட
காப்பி எதற்காக?

திரும்பிய பக்கமெல் லாம்மேல் வளர்ந்தும்
சிவந்து தித்திப்பைச் சுமந்து வளைந்தும்
கரும்பு விளைந்திடும் இந்நாட்டு மண்ணும்
கசப்பேறச் செய்திடும் சுவையே இலாத
காப்பி எதற்காக?



1.31 புகைச் சுருட்டு


புகைச் சுருட்டால் இளமை பறிபோகும்
பொல்லாங் குண்டாகும்
புகைச் சுருட்டால்!

முகமும் உதடும் கரிந்துபோகும்
முறுக்கு மீசையும் எரிந்து போகும்
புகைச் சுருட்டால்!

மூச்சுக் கருவிகள் முற்றும் நோய்ஏறும் -- பிள்ளை
முத்தம் தருநே ரத்தில் வாய் நாறும்
ஓய்ச்சல் ஒழிவில் லாதிருமல் சீறும் -- நல்
ஊரோ உன்னைச் சீ என்றே கூறும்
பேச்சுக் கிடையில் பிடிக்கச் சொல்லும்
பெரியார் நெஞ்சம் துடிக்கச் சொல்லும்
புகைச் சுருட்டால்!

காசுபணத்தால் தீச்செயலை வாங்கிப் -- பின்
கைவிட எண்ணினும் முடியாமல் ஏங்கி
ஏசிக்கொண்டே விரலிடையில் தாங்கி -- நீ
எரிமலை ஆகா திருதுன்பம் நீங்கி
மாசில்லாத செந்தமிழ் நாடு
வறுமை நோய்பெற ஏன் இக்கேடு?
புகைச் சுருட்டால்!

 

by Swathi   on 28 Feb 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.