பி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஏவப்பட்ட பின்பு ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி, பி.எஸ்.எல்.வி. சி-21 ராக்கெட் மூலம் வெளிநாட்டைச் சேர்ந்த இரண்டு செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தும் பணி நேற்று வெற்றிகரமாக நடந்துள்ளது. 9.51 மணிக்கு ராக்கெட் செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் விண்வெளியில் சுற்றிவரும் விண்வெளி கழிவுகளில் ராக்கெட் மோதுவதை தவிர்க்க 2 நிமிடம் தாமதமாக விண்ணில் ஏவப்பட்டது. சந்திரனை ஆய்வு செய்யும் சந்திராயன்-2 திட்டம் 2014-ல் செயல்படுத்தப்படும். இதில் தரை இறங்கும் தொழில்நுட்பம் ரஷியாவில் இருந்து வரவேண்டும். பறக்கவிடும் தொழில்நுட்பம் நன்மை சார்ந்தது. நமது பணிகள் திட்டமிட்டப்படி நடந்து வருகின்றன. ரஷிய பணிகள் முடிந்து வந்ததும் சந்திராயன்-2 பறக்க விடப்படும். செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் அனுப்புவது சவால் நிறைந்தது. விண்வெளி துறையில் கடந்த 50 ஆண்டுகளாக பல சாதனைகளை இந்தியா புரிந்துள்ளது. விண்வெளி துறையில் சாதனைகள் செய்து வரும் 6 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. எனவே சவால்கள் நிறைந்த செவ்வாய் கிரகத்துக்கு வருங்காலத்தில் ராக்கெட் அனுப்பவும் திட்டமிட்டுள்ளோம் என்றும் கூறினார்.
|