இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமும், டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் இணைந்து ஹைட்ரஜனை எரிபொருளாக கொண்டு இயங்கும் பேருந்தை தயாரித்துள்ளனர்.
உலகில் இயற்கை எரிபொருளின் வளங்கள் குறைந்து வருவதை அடுத்து, மாற்று எரிபொருள்களை கண்டுபிடிப்பதில் பலவேறு நாடுகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமும்(இஸ்ரோ), டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் இணைந்து பல ஆண்டுகள் ஆராய்ச்சிக்கு பிறகு ஹைட்ரஜனை எரிபொருளாக பயன்படுத்தி இயங்கக்கூடிய பேருந்தை கண்டுபிடித்துள்ளனர்.இந்த பேருந்தில் செயல்விளக்கம் பற்றி, இஸ்ரோவின் கவுரவ ஆலோசகர் வி.ஞானகாந்தி மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணை பொது மேலாளர் டாக்டர் எம்.ராஜா ஆகியோர் நேற்று கூட்டாக தெரிவித்துள்ளதாவது,கடந்த 2006–ம் ஆண்டு இஸ்ரோ மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்கள் இந்த ஹைட்ரஜன் பஸ்சை வடிவமைப்பதற்கான கூட்டு முயற்சியில் ஈடுபடுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சி மையம் இந்த பஸ்சை தயாரிப்பதற்காக பயன்படுத்தப்பட்டது. இஸ்ரோ நிறுவனத்தின் ஒத்துழைப்போடு ஹைட்ரஜனை பஸ் இயக்கத்திற்காக பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவதற்கான ஒரு தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் 20 கிலோ வாட் முதல் 120 கிலோ வாட் வரை பஸ்சை இயக்கக்கூடிய எரி சக்தி உருவாக்கப்பட்டது.பல்வேறு நிலைகளில் இந்த தொழில்நுட்பம் பரிசோதிக்கப்பட்டு,பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் ஹைட்ரஜனை பயன்படுத்தி பஸ்சை இயக்குவதற்கான அனுமதி பெறப்பட்டது. முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தில் ஹைட்ரஜன் பஸ்சை தயாரித்து இருப்பதன் மூலம் இந்தியா இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வளர்ந்த நாடுகளின் பட்டியலில் இடம் பிடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. விரைவில் நம் நாட்டின் முக்கிய நகரங்களில் ஹைட்ரஜன் பேருந்துகள் வலம் வரும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
|