வீதி குத்திய குறுந்தாள் பாரிடம் விண்தலை உடைத்துப் பிறைவாய் வைப்ப குணங்கினம் துள்ள கூளியும் கொட்ப மத்தி யந்தணன் வரல்சொலி விடுப்பத் தில்லை கண்ட புலிக்கால் முனிவனும் (5)
சூயை கைவிடப் பதஞ்சலி ஆகிய ஆயிரம் பணாடவி அருந்தவத்து ஒருவனும் கண்ணால் வாங்கி நெஞ்சறை நிறைப்ப திருநடம் நவின்ற உலகுயிர்ப் பெருமான் கடல்மாக் கொன்ற தீப்படர் நெடுவேல் (10)
உருளிணர்க் கடம்பின் நெடுந்தார்க் கண்ணியன் அரிமகள் விரும்பிப் பாகம் செய்து களியுடன் நிறைந்த ஒருபரங் குன்றமும் பொன்அம் தோகையும் மணிஅரிச் சிலம்பும் நிரைத்தலைச் சுடிகை நெருப்புமிழ் ஆரமும் (15)
வண்டுகிளை முரற்றிய பாசிலைத் துளவும் மரகதம் உடற்றிய வடிவொடு மயங்க மரக்கால் ஆடி அரக்கர்க் கொன்ற கவைத்தலை மணிவேல் பிறைத்தலைக் கன்னி வடபால் பரிந்த பலிமணக் கோட்டமும் (20)
சூடகம் தோள்வளை கிடந்து வில்வீச யாவர்தம் பகையும் யாவையின் பகையும் வளனின் காத்து வருவன அருளும் ஊழியும் கணமென உயர்மகன் பள்ளியும் உவாமதி கிடக்கும் குண்டுகடல் கலக்கி (25)
மருந்து கைக்கொண்டு வானவர்க்கு ஊட்டிய பாகப் பக்க நெடியோன் உறையுளும் தும்பி உண்ணாத் தொங்கல் தேவர் மக்களொடு நெருங்கிய வீதிப் புறமும் மதுநிறை பிலிற்றிய பூவொடு நெருங்கி (30)
சூரரக் கன்னியர் உடல்பனி செய்யும் கடைக்கால் மடியும் பொங்கர்ப் பக்கமும் ஊடி ஆடுநர்த் திரையொடு பிணங்கித் தோழியின் தீர்க்கும் வையைத் துழனியும் (35)
அளவா ஊழி மெய்யொடு சூழ்ந்து நின்று நின்றோங்கி நிலைஅறம் பெருக்கும் ஆனாப் பெரும்புகழ் அருள்நகர்க் கூடல் பெண்ணுடல் பெற்ற சென்னிஅம் பிறையோன் பொற்றகடு பரப்பிய கருமணி நிரைஎன (40)
வண்டும் தேனும் மருள்கிளை முரற்றி உடைந்துமிழ் நறவுண்டு உறங்குதார்க் கொன்றையன் திருவடி புகழுநர் செல்வம் போலும் அண்ணாந்து எடுத்த அணிவுறு வனமுலை அவன்கழல் சொல்லுநர் அருவினை மானும் (45)
மலைமுலைப் பகைஅட மாழ்குறும் நுசுப்பு மற்றவன் அசைத்த மாசுணம் பரப்பி அமைத்தது கடுக்கும் அணிப்பாம்பு அல்குல் ஆங்கவன் தரித்த கலைமான் கடுக்கும் இருகுழை கிழிக்கும் அரிமதர் மலர்க்கண் (50)
புகர்முகப் புழைக்கை துயில்தரு கனவில் முடங்குளை கண்ட பெருந்துயர் போல உயிரினும் நுனித்த அவ்வுருக் கொண்டு பொன்மலை பனிப்பினும் பனியா என்னுயிர் வாட்டிய தொடிஇளங் கொடிக்கே. (55)
|