முனைவர்.அழகப்பா இராம்மோகன் அவர்களின் கனவுத் திட்டமான " திருக்குறள் அறிவகம் அடிக்கல் நாட்டுவிழா நிகழ்ச்சி அவரது சொந்த ஊரான கானாடுகாத்தானில் 26.12.2019 அன்று மிக எழுச்சியுடன் நடைபெற்றது.
அவருடன் பழகிய நண்பர்கள், உறவினர்கள், அறிஞர்கள் என்று பல நாடுகளிலிருந்து முதல்நாளே வந்து தங்கி முழுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவரது சிந்தனைகளை, அறக்கட்டளைக்கு அடிக்கல் நாட்டி, அதன் செயல்பாடுகளைக் குறித்துத் திட்டமிட்டனர்.
இந்நிகழ்வில் திரு.பழ. கருப்பையா, திரு.சுப.வீரபாண்டியன் , திரு.ஆறுமுகம் பரசுராமன் - முன்னாள் கல்வி அமைச்சர், மொரீசியஸ், திரு.ஸ்டாலின் குணசேகரன், முனைவர்.ஆயிக்கவுண்டன் , வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கத் தலைவர் திரு.சுந்தர் குப்புசாமி, திரு.கொழந்தைவேல் இராமசாமி -வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கத்தின் மக்கள் தொடர்பு , ச.பார்த்தசாரதி, வலைத்தமிழ் பன்னாட்டு மாத இதழ் ஆசிரியர், திரு.குமார் குமரப்பன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் அறக்கட்டளை அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றது. அதன்பிறகு முனைவர்.அழகப்பா இராம்மோகன் அவர்களுடனான நினைவுகளை நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரும் பகிர்ந்துகொண்டனர். அதில் உரையாற்றிய வலைத்தமிழ் ஆசிரியர் வலைத்தமிழ் தொடங்கியுள்ள திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்களைத் தொகுக்கும் திட்டத்திற்கு முனைவர் அழகப்பா ராம்மோகன் அவர்களின் பெயர் சூட்டப்படும் என்று அறிவித்தார். உலக நாடுகளிலிருந்து தொகுக்கும் திருக்குறளின் அனைத்து மொழிபெயர்ப்பு நூல்களையும் திருக்குறள் அறிவகத்தில் வைத்து உலகத் தமிழர்கள் பயன்படுத்த வழிவகை செய்யப்படும் என்று அறிவித்தார்.
முனைவர். இம்மண்ணிலிருந்து விடைபெற்றாலும், அவரது சிந்தனையில், அவரது திட்டமிடலில், அவரது சொந்த உழைப்பில் சேர்த்த செல்வத்தின் ஒரு பகுதியை தன் கிராமத்தில் அந்த கிராமத்திலும், அதைச் சுற்றியுள்ள மக்களுக்கும் பயனளிக்கும் நோக்கில் ஒரு திட்டமாகச் செயல்படுத்த அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வள்ளுவர் அறிவகம் நூலகம், படிப்பகம், கணினி மையம் , பயிற்சி மையம், மனவழி உள்நோக்கு மையம் ஆகிய ஐந்து பகுதிகளைக் கொண்டதாக இருக்கும்.
|