இந்த நிகழ்ச்சியில் பிரெடரிக் காமரர், கார்ல் கிரவுல் ஆகியோரால் ஜெர்மானிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகம் மற்றும் தமிழக ஆய்வாளர் கவுதம சன்னா எழுதிய ‘திருவள்ளுவர் யார் - கட்டுக்கதைகளைக் கட்டுடைக்கும் திருவள்ளுவர்’ என்னும் புத்தகமும், தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்பில் கதிரவன் உருவாக்கிய குழந்தைகளுக்கான திருக்குறள் மென்பொருளும், விழா மலரும் வெளியிடப்பட்டன. நிகழ்ச்சியில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், ‘லிண்டன்’ அருங்காட்சியக இயக்குநர் இனெஸ் டி கெஸ்ட்ரோ, தமிழ் மரபு அறக்கட்டளை தலைவர் க.சுபாஷிணி, எழுத்தாளர் கவுதம சன்னா உள்பட பலர் சிறப்புரையாற்றினர்.
தமிழ் மரபு அறக்கட்டளை நிறுவனர் முனைவர்.க.சுபாஷிணி ஐரோப்பா/ஜெர்மனியில் திருக்குறளின் தாக்கம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார் மேலும் இந்நிகழ்வின் முக்கியத்துவத்தை விளக்கிப் பேசினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், இந்தியப் பாராளுமன்ற உறுப்பினருமான திருமிகு தொல். திருமாவளவன், சாதி, இனம், மதம் கடந்த ஒரு பொது மறையான திருக்குறள் தமிழ் உலகின் பெருமை என்பதை வலியுறுத்திச் சிறப்புரை ஆற்றினார். திரு கவுதம சன்னா இந்நிகழ்வின் முக்கியத்துவத்தை உணர்த்தியும், 'திருவள்ளுவர் யார் - கட்டுக்கதைகளைக் கட்டுடைக்கும் திருவள்ளுவர்' என்கிறதன் நூலில் உள்ள சிறப்பம்சங்களை விளக்கி கூறினார். திரு பாலச்சந்திரன் இ.ஆ.ப. (ஓய்வு) திருக்குறள் தொன்மையான இலக்கணமாக இருப்பினும் எக்காலத்திற்கும் பொருந்துமாறு வள்ளுவன் வடித்த சிந்தனைகள் பலவற்றை மேற்கொள் காட்டி, இந்தச் சிலைகளை இங்கு நிறுவுவதன் வாயிலாக தமிழர் சிந்தனை உலகறியச்செய்வதில் ஒரு முக்கிய பங்காற்றும் என வாழ்த்தினர். தமிழகத்தில் இருந்து சிறப்பு விருந்தினர் இந்நிகழ்விற்காக ஜெர்மனி வந்து இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனர்.
ஐரோப்பாவில் பிரான்ஸ், ஸ்வீடன், டென்மார்க், நோர்வே மற்றும் பல நாடுகளில் இருந்தும் வெவ்வேறு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், தமிழ் ஆர்வலர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
|