சப்பான் தமிழ்ச்சங்கத்தின் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா நமது சிறப்புவிருந்தினர்கள் திரு.தங்கர்பச்சான்,தங்கமகன் மாரியப்பன் மற்றும் பயிற்சியாளர் சத்தியநாராயணா அவர்கள் குத்துவிளக்கேற்றி,தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்டது.
இந்த ஆண்டு பல முத்தாய்ப்பாக பல நிகழ்ச்சிகள் இடம்பெற்றிருந்தன,அதிலும் குறிப்பாக சப்பானியர்களுடன் நமது உறவுகளும் சேர்ந்து ஆடிய பறையாட்டம் அரங்கத்தையே ஆடவைத்தது,மேலும் குழந்தைகளின் கரகாட்டமும்,பாரதியார் நாடகமும்,சப்பானியர்கள் ஆடிய நமது கலாச்சார நடனமும்,மிகவும் ரசிக்கும்படி இருந்தது.இதனூடே நகைச்சுவையை அள்ளித்தெளித்த,இன்றைய அரசியல் நிலை பற்றிய நாடகம் சிந்திக்கும்படி இருந்தது.அதைப்போல வில்லுப்பாட்டு,வில்லுப்பாட்டில் நமது மன்னர்களையும் வரலாற்றையும் சொன்னவிதம் வியப்புக்குரியது.
மேலும் தங்கமகனுடன் கேள்வி நேரம் நிகழ்ச்சி,பத்மஶ்ரீ மாரியப்பனுடன் நமது உறவுகள் உரையாடும் வாய்ப்பாக அமைந்தது,அவரை பெருமைப்படுத்தும் நோக்கில் சப்பான் தமிழ்ச்சங்கம் ஒலிநாடா வெளியிட்டது.
கலைமாமணி தங்கர் பச்சானின் தமிழ் மற்றும் தமிழ்மண் சார்ந்த பேச்சு அனைவரின் மனசாட்சியை தட்டி எழுப்பியது.மேலும் தங்கரின் கருத்துக்களம் நிகழ்ச்சி நமது உறவுகளின் பேச்சாற்றலை பறைசாற்றியது.
அனைத்திற்கும் மேலாக தாய்லாந்திலிருந்து வருகைதந்து நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து நடத்தினார் காமராஜ். நிகழ்ச்சியின் இறுதியில் தனித்தமிழ் இயக்க நூற்றாண்டை நினைவுக்கோரும் வகையில் வடிவமைக்கப்பட்ட நாட்காட்டி வழங்கப்பட்டது.
|