சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ், நடப்பாண்டில் 60 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கு, ரூ.1,260 கோடி நிதி ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, எனது அரசு மூன்றாவது முறையாக பொறுப்பேற்ற உடன், கிராமப் பகுதிகளில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கென வீடுகள் கட்டும் திட்டத்தை தொடக்கி வைத்தேன். இந்தத் திட்டத்தின்படி, சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் ஒவ்வொன்றும் ரூ.1.80 லட்சம் மதிப்பீட்டில் 300 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 60 ஆயிரம் வீடுகள் வீதம் 5 ஆண்டுகளில் 3 லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் படி, கடந்த 2011-ஆம் நிதியாண்டில் ரூ.1,080 கோடி செலவில் 60 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 2012-13 ஆம் நிதியாண்டில் மேலும் 60 ஆயிரம் வீடுகளைக் கட்டும் பணி தொடங்கப்பட்டு முடிக்கப்பட உள்ளன.இன்றைய சூழ்நிலையில் வீடு கட்டத் தேவைப்படும் கட்டுமானப் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன. இதைக் கருத்தில் கொண்டு கிராம மக்கள் பயன்பெறும் வகையில் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகளுக்கான அலகுத் தொகையை நடப்பாண்டு முதல் ரூ.1.80 லட்சத்தில் இருந்து ரூ2.10 லட்சமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
|