வருகின்ற பொங்கல் பண்டிகைக்கு, தமிழகத்தில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு, 500 ரூபாய் ரொக்கம் அடங்கிய, பொங்கல் பை வழங்க தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கடந்த தி.மு.க., ஆட்சியில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சர்க்கரை பொங்கல் தயாரிக்க தேவையான, பச்சரிசி, வெல்லம், தலா அரை கிலோ, பாசிபயறு, 100 கிராம், முந்திரி, ஏலம், திராட்சை, 20 கிராம் ஆகிய பொருட்கள் அடங்கிய, பொங்கல் பை, அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும், ரேஷன் கடை மூலமாக இலவசமாக வழங்கப்பட்டது. இதற்காக, 70 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து, கடந்த பொங்கல் பண்டிகை அன்று, தலா 160 ரூபாய் மதிப்பிற்கு, பொங்கல் பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை அடங்கிய பையுடன், 100 ரூபாய் ரொக்கமாக ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்டது. இதற்காக, 300 கோடி ரூபாய் செலவானது.
இந்நிலையில், இந்த முறை பொங்கல் பண்டிகைக்கு, ரொக்க தொகையை ரூ 500 யாக உயர்த்தி வழங்க, தமிழக அரசு ஆலோசனை செய்து வருகிறது. இதனால், அரசுக்கு, 700800 கோடி ரூபாய் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
|