காவிரி ஆற்றின் குறுக்கே, கர்நாடகா அணைகட்டும் முயற்சியை, தடுத்து நிறுத்துமாறு, பிரதமருக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், கர்நாடக மாநிலம் மேகதாது வில் நீர் மின் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும், இதற்காக காவிரியின் குறுக்கே மூன்று தடுப்பணைகள் கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. காவிரி நதி பாயும் மற்ற மாநிலங்களின் ஒப்புதலைப் பெறாமல், அணை கட்டும் முடிவை கர்நாடக அரசு தன்னிச்சையாக எடுத்திருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. காவிரி நதி நீர் ஆணையத்தின் இறுதித் தீர்ப்பை அமல்படுத்த வசதியாக காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவற்றை உடனே அமைக்க வேண்டும் என்று அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதுவரை, கர்நாடக அரசின் நீர் மின் திட்டங்களுக்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், ஒப்புதல் தரக் கூடாது என்றும் அந்த கடிதத்தில் பிரதமரை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.
|