போராட்டக்காரர்கள் மீது ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தவில்லை, என்பதற்கான ஆதாரங்களை காட்டினால், சிரியா நாட்டின் மீதான தாக்குதலை தவிர்க்கலாம் என அமெரிக்கா அரசு தெரிவித்துள்ளது.
சிரியாவில், தற்போதைய அதிபர் பஷர் - அல் - ஆசாத் பதவி விலககோரி, கிளர்ச்சியாளர்கள் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த, 21ம் தேதி, ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதில், 1,300 பேர் கொல்லப்பட்டனர். இதனை அடுத்து, ஐ.நா குழு, இந்த சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு செய்து, முக்கிய தடயங்களை, சேகரித்து உள்ளது. இன்னும் இது தொடர்பான அறிக்கை ஐ.நா குழு வெளியிடப்படவில்லை. சர்வதேச விதிகளை மீறி, ரசாயன ஆயுதங்களை பயன்படுத்திய சிரியா மீது, ராணுவ தாக்குதலை நடத்த, அமெரிக்கா திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. "சிரியா மீது நடத்தப்படும் தாக்குதல், இரண்டு மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். அமெரிக்க வீரர்களின் காலடி அந்நாட்டில் படக்கூடாது' என, அமெரிக்க செனட் குழு தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டு உள்ளது. ரஷ்யாவில் நடந்த, "ஜி 20' உச்சி மாநாட்டில், ""சிரியா மீதான தாக்குதல் தவிர்க்க முடியாது,'' என, ஒபாமா திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். இதையடுத்து, சிரியா மீது, 72 மணி நேர தாக்குதலை நடத்த, அமெரிக்க தலைமையகமான, "பெண்டகன்' திட்டமிட்டு உள்ளது. சிரியா மீதான தாக்குதலால், அணு ஆயுதங்கள் பயன்படுத்தக்கூடிய அபாயம் உள்ளதாக, ரஷ்யா, பன்னாட்டு அணுசக்தி முகமையக கூட்டத்தில், நேற்று தெரிவித்தது.
இதற்கிடையே, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி சிரியா மீதான தாக்குதல் குறித்து குறிப்பிடுகையில், சிரியா அரசு தங்களிடம் ரசாயன ஆயுதங்கள் இல்லை; அதை பயன்படுத்தவில்லை, என்பதற்கான ஆதாரங்களை வெளிப்படையாக தெரிவிக்கும் பட்சத்தில், அந்நாட்டின் மீதான தாக்குதலை தவிர்க்க முடியும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
|