திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
என் காதலரைக் கண்ணாரக் காண்பேனாக; கண்ட பிறகு என்னுடைய மெல்லிய தோளில் உண்டாகிய பசலை நிறம் தானே நீங்கி விடும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(தலைமகன் வரவு கூற ஆற்றாயாய்ப் பசக்கற்பாலையல்லை என்ற தோழிக்குச சொல்லியது.) கண் ஆரக் கொண்கனைக் காண்க - என் கண்கள் ஆரும் வகை என் கொண்கனை யான் காண்பேனாக; கண்ட பின் என் மென்தோள் பசப்பு நீங்கும் - அங்ஙனம் கண்டபின் என் மெல்லிய தோள்களின்கண் பசப்புத் தானே நீங்கும்.('காண்க' என்பது ஈண்டு வேண்டிக் கோடற்பொருட்டு. அதுவேண்டும் என்பதுபட நின்றமையின் 'மன்' ஒழியிசைக்கண்வந்தது. 'கேட்ட துணையான் நீங்காது' என்பதாம்.)
மணக்குடவர் உரை:
என்கண்கள் கொண்கனை நிறையக் காண்பனவாக; அவனைக் கண்டபின்பு எனது மெல்லிய தோளிலுண்டான பசலை நீங்கும். இது காண்டல் வேட்கையால் கூறியது.
தேவநேயப் பாவாணர் உரை:
(தலைமகன் வரவு கூறி, ஆற்றாயாய்ப் பசக்கற் பாலை யல்லை யென்ற தோழிக்குச் சொல்லியது.) கண் ஆரக் கொண்கனைக் காண்க- என் கண்கள் நிறைவு பெறும் வகை என் காதலரை நான் காண்பேனாக; கண்ட பின் என் மேல் தோள் பசப்பு நீங்கும்- அங்ஙனங் கண்ட பின் என் மெல்லிய தோளின்கண் உள்ள பசலை தானே நீங்கி விடும். நிறைவுபெறும் வகை காணுதலாவது ஆசை தீரக் காண்டல். காண்க என்னும் வியங்கோள் ஆர்வமிகுதி பற்றியது. 'மன்' அது, இன்றியமையாததென்னும் பொருள்பட நின்றமையின் ஒழியிசை. காதலர் வரவைக் கண்ணாற் கண்டாலன்றிக் காதாற் கேட்டதினால் மட்டும் பசலை நீங்கா தென்பதாம்.
கலைஞர் உரை:
கண்ணார என் கணவனைக் காண்பேனாக; கண்டபிறகே என் மெல்லிய தோளில் படர்ந்துள்ள பசலை நிறம் நீங்கும்.
சாலமன் பாப்பையா உரை:
என் கண்கள் முழுக்க என் கணவரை நான் காண்பேனாகுக; அவரைக் கண்டபின் என் மெல்லிய தோளின் வாடிய நிறம் தானாக நீங்கும்.
Translation
O let me see my spouse again and sate these longing eyes!
That instant from my wasted frame all pallor flies.
Explanation
May I look on my lover till I am satisfied and thereafter will vanish the sallowness of my slender shoulders.