இருநிலம் தாங்கிய வலிகெழு நோன்மைப் பொன்முடிச் சயிலக் கணவற் புணர்ந்து திருவெனும் குழவியும் அமுதெனும் பிள்ளையும் மதியெனும் மகவும் அமருலகு அறியக் கண்ணொடு முத்தம் கலுழ்ந்து உடல் கலங்கி (5)
வாய்விட் டலறி வயிறுநொந் தீன்ற மனன் எழு வருத்தம் அதுஉடையை ஆதலின் பெருமயல் எய்தா நிறையினள் ஆக என்ஒரு மயிலும் நின்மகளாக் கொண்டு தோன்றிநின் றழியாத் துகளறு பெருந்தவம் (10)
நிதிஎனக் கட்டிய குறுமுனிக்கு அருளுடன் தரள மும் சந்தும் எரிகெழு மணியும் முடங்குளை அகழ்ந்த கொடுங்கரிக் கோடும் அகிலும் கனகமும் அருவிகொண் டிறங்கிப் பொருநைஅம் கன்னிக்கு அணிஅணி பூட்டும் (15)
செம்புடல் பொதிந்த தெய்வப் பொதியமும் உவட்டாது அணையாது உணர்வெனும் பசியெடுத்து உள்ளமும் செவியும் உருகிநின்று உண்ணும் பெருந்தமிழ் அமுதும் பிரியாது கொடுத்த தோடணி கடுக்கைக் கூடல்எம் பெருமான் (20)
எவ்வுயிர் இருந்தும் அவ்வுயிர் அதற்குத் தோன்றாது அடங்கிய தொன்மைத் தென்ன ஆர்த்தெழு பெருங்குரல் அமைந்துநின் றொடுங்கிநின் பெருந்தீக் குணனும் ஒழிந்துளம் குளிருறும் இப்பெரு நன்றி இன்றெற்கு உதவுதி (25)
எனின்பதம் பணிகுவல் அன்றே நன்கமர் பவள வாயும் கிளர்பச் சுடம்பும் நெடுங்கயல் விழியும் நிறைமலை முலையும் மாசறப் படைத்து மணிவுடல் நிறைத்த பெருமுகில் வயிறளவு ஊட்டித் திருவுலரு அளிக்கும் கடல்மட மகளே! (31)
|