|
||||||||
காதல் என்பது -முனைவர். சித்ரா மகேஷ் |
||||||||
இன்றைய வாழ்வில் காதல் குறித்த செய்திகள் இல்லாமல் அன்றாடச் செய்திகள் இல்லை. அப்படியான காதல் அன்றைய காலத்திலிருந்து இன்றைய நாள்வரை எதுவும் மாறாது நடந்து வருகிறது. கண்டதும் காதல் தொடங்கி, திருமணம், அதைத் தொடர்ந்து இல்லற வாழ்வில் நடக்கும் நிகழ்ச்சிகள் அனைத்தும் நம் சங்க கால உறவுகள் வாழ்ந்ததன் தொடர்ச்சியே. அவற்றிற்கான குறிப்புகளை இலக்கணங்களாகவும், இலக்கியப்பாடல்களின் வழியாகவும் பதிவு செய்துள்ளனர் புலவர்கள். ஒவ்வொரு செய்தியும் படிக்கும் போது இது நம் வாழ்வில் அன்று நடந்தது என்றும், நண்பனுக்கு நேர்ந்தது என்றும் திகைப்பை ஏற்படுத்தும் செய்திகளாகக் காணமுடிகிறது. பாங்கன் கூட்டம் தலைவனுக்குத் துணையாக இருக்கும் போது, தலைவிக்குத் துணையாகக் காதல் காலத்தில் இன்பம், துன்பம் எனத் தொடர்ந்து வருபவள் பாங்கி எனும் தோழி. தலைவி, தோழி இருவரின் நட்பின் வலிமையும், ஆழமும் காதலுக்கு உறுதுணையாக நிற்கச் செய்கிறது. இப்படி இந்தக் காதலில் நிகழும் ஒவ்வொன்றுக்கும் பெயரிட்டு விளக்கமும் தரப்பட்டுள்ளது. அவை… பகற்குறி: பகல் நேரத்தில் இருவரும் சந்தித்துப் பழகுதல் இரவுக்குறி: இரவு நேரத்தில் தலைவன் கடல், காடு கடந்து தலைவியின் வீட்டின் அருகே வந்து காத்திருப்பதைச் சில குறிப்பினால் தெரியப்படுத்திப் பின்னர் இருவரும் சந்திக்கின்றனர். அப்படிச் சந்திப்பதைப் பற்றிச் சொல்வதே இரவுக்குறி எனப்படும். இரவுக்குறி இடையீடு: அப்படி இரவுநேரத்தில் தலைவன் வரும்பொழுது சூழ்நிலைகள் காரணமாகத் தலைவனும், தலைவியும் இருவரும் சந்திக்க முடியாது போவதை இரவுக்குறி இடையீடு என்றழைத்துள்ளனர். வரைவு கடாதவுதல்: நாள்தோறும் இரவு நேரத்தில் தலைவியைச் சந்திக்கப் பல இன்னல்களைத் தாண்டித் தலைவன் வரவேண்டியுள்ளது. அப்படிச் சந்திக்கும் காதலை அறிந்த ஊரினர் பேசுவதும், தலைவியும் பிரிவினால் உள்ளம் வாடி, உடல் மெலிந்து காணப்படுவது ஊரார் பேசுவதற்கான காரணமாக அமைவதும் கண்டு, தோழி தலைவனிடம் விரைவில் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று தலைவனுக்கு உணர்த்துவதை வரைவு கடாதல் என்று கூறினர். வரைபொருட் பிரிவு: திருமணம் செய்து கொள்வதற்குத் தேவையான பொருள்களைத் தேடிச் சேர்ப்பதற்காகத் தலைவியைப் பிரிந்து செல்வது. உடன்போக்கு: காதலைத் தலைவியின் பெற்றோர்கள் ஏற்றுக் கொள்ளாததை அறிந்த தலைவன், அவளைத் தன்னுடைய ஊருக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து கொள்வது. வரைவு: திருமணம் செய்து கொள்வதற்காகப் பொருள் சேர்த்து வந்த பின்னர் அனைவரிடம் சொல்லுகின்றனர். அனைவரும் மகிழ்ச்சியுடன் ஒத்துக் கொண்டதும் திருமணம் நடைபெறும். பின்னர் இருவரும் இன்பத்துடன் இல்லறம் நடத்தத் தொடங்குபவர். காதலில் நிகழும் இதுபோன்ற காதல் நிகழ்வுகளைப் பெயரிட்டு அகப்பாடல்களின் வழியே அதைக் காட்சிப்படுத்தி நம் முன்னோர்கள் வாழ்ந்த முறைகளைச் சொல்லியுள்ளனர் சங்கப் புலவர்கள். காதல் இரு உள்ளங்களின் சந்திப்பில் நிகழ்வது. காதல் என்பது எதிர்பார்ப்புகள் ஏதுமற்று இரு உள்ளங்கள் இணைவது. காதல் என்பது அன்பு. அன்பு அன்பு மட்டுமே. |
||||||||
by Swathi on 28 Sep 2019 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|