|
|||||
பாம்பன் பாலம் இந்திய பொறியியல் துறையின் பெருமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு - அப்துல்கலாம் !! |
|||||
கடலில் கப்பல்கள் செல்லும் போது திறந்து மூடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள பாம்பன் ரயில் பாலம் நம் நாட்டின் பொறியியல் துறையின் பெருமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
பாம்பன் ரயில் பாலம் செயல்பட ஆரம்பித்து, வரும் பிப்ரவரி 24ம் தேதியுடன் நூறு ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையொட்டி, ரயில்வே நிர்வாகத்தின் பராமரிப்பில் இருந்து வரும் இப்பாலத்தின் நூற்றாண்டு துவக்க விழா பாம்பன் ரயில்நிலையம் அருகில் நடைபெற்றது. விழாவுக்கு தலைமை வகித்து, கல்வெட்டினை திறந்து வைத்து முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பேசியதாவது,
பூமி ஒருமுறை சூரியனை சுற்றி வர ஒரு வருடம் ஆகிறது. பாம்பன் ரயில் பாலம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு 100 முறை சூரியனை பூமி சுற்றி விட்டதால் தான் அந்தப் பாலத்துக்கு நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது.
புயல், சூறாவளி, கடல் காற்றின் அரிப்புத்தன்மையிலிருந்து பாலத்தை இன்றுவரை ரயில்வேத் துறை சிறப்பாக பராமரித்து வருவது பாராட்டுக்குரியது. இந்தியாவின் முதல் கடல்வழிப்பாலம் பாம்பன் ரயில் பாலம். பாம்பனில் மேம்பாலம் அமைப்பதற்கு முன்பாக இலங்கைக்கும்,ராமேசுவரத்துக்கும் செல்வதற்கு மிகவும் பயனுள்ள பாலமாக இருந்துள்ளது. இப்பாலத்தின் மூலமாகத் தான் பயணப் போக்குவரத்தும் சுற்றுலாவும் மேம்பட்டிருக்கிறது.
பாம்பன் ரயில் பாலத்தின் வழியாக இன்று பல லட்சம் மக்கள் ராமேசுவரத்துக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். மீட்டர் கேஜ் பாதையாக இருந்த இப்பாலத்தை அகலரயில் பாதையாக ரயில்வேத் துறை செய்தமைக்கும், கடந்த ஆண்டு கப்பல் மோதி இப்பாலத்தின் தூண் ஒன்று சேதமாகியபோது, அதை ஏழே நாள்களில் செப்பனிட்டு உடனடியாக ரயில் சேவையை துவக்கியமைக்காகவும் ரயில்வேத் துறையின் பொறியாளர்களை பாராட்டுகிறேன்.
1964ல் புயலால் பாலம் சேதமடைந்த போது, அந்தப்பாலத்தை 63 நாள்களிலேயே மீண்டும் புதுப்பித்து சேவையை துவக்கிய ரயில்வே பொறியாளர்களையும் இந்த நேரத்தில் பாராட்டுகிறேன். கப்பல்கள் வரும் போது திறந்து மூடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் பாலம் ரயில்வே நிர்வாகத்துக்கு ஒரு பொக்கிஷமாக இருந்து வருகிறது. கடல் காற்றால் துருப்பிடிக்க வேண்டிய நிலையிலும்கூட இதனை ரயில்வே நிர்வாகம் சிறப்பாக பாதுகாத்து வருகிறது. பொறியியல் தொழில் நுட்ப பெருமைகள் கொண்டதாகவும், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பாலமாகவும் பாம்பன் ரயில் பாலம் அமைந்துள்ளது.
இந்தப் பாலம் ராமேசுவரம் தீவையும், நிலப்பரப்பையும் இணைக்கும் பாலம். இப்பாலத்தைப் போலவே மக்களையும், மனித மனங்களையும்,மதங்களையும் இணைக்கும் பாலமாக நாம் இருப்போம். மனிதத்துவத்தை வளர்க்கும் பாலமாக இருப்போம். புயல், சூறாவளி, கடலின் அரிப்புத்தன்மை உடைய காற்று ஆகியவற்றிலிருந்தும் நீடித்து இருப்பதைப் போல மனித வாழ்வில் எத்தகைய பிரச்னைகள் வந்தாலும் அவற்றை தாங்கிக்கொள்ளும் தைரியம் உடையவர்களாக இருக்க வேண்டும்.
அடுத்தவரின் துன்பத்தை துடைப்பவராக, பிறருக்கு உதவும் படகாகவும் இருப்போம். உறக்கத்தில் வருவதல்ல கனவு, உன்னை உறங்காமல் செய்வது தான் கனவு என்பதை நினைவில் கொண்டு செயலாற்றுவோம் என்றார் அப்துல் கலாம்.
பாம்பன் ரயில் பாலத்தின் வழியாகத்தான் சிறுவனாக இருந்த போது பல லட்சம் முறை பயணம் செய்து நாளிதழை வீடு வீடாகச் சென்று போட்டிருக்கிறேன். பள்ளி,கல்லூரிகளில் படிக்கும் காலத்திலும்,வேலைக்குச் சென்ற நாள்களிலும் இந்தப் பாலத்தில் பல லட்சம் முறை பயணம் செய்திருக்கிறேன். ஆர்ப்பரிக்கும் கடல், மேலே வானம் இவை இரண்டுக்கும் இடையே ரயில் பாலத்தில் ரயில் செல்லும் போது, தென்றல் காற்று வரும். ஒரு வித தெய்வீக சங்கீத ஓசை கேட்கும். அந்த சங்கீதம் என்னை பலமுறை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. ராமேசுவரம் எனது சொந்த ஊராக இருந்தாலும் பாம்பன் எனக்கு மிகவும் பிடித்த ஊர். இந்த விழாவில் கலந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சியுடையவனாக இருக்கிறேன்.
பாம்பன் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் இந்த நேரத்தில் ரயில்வே நிர்வாகம் பாம்பனை நினைவு கூறும் வகையில் சென்னைக்கும் ராமேசுவரத்துக்கும் ஒரு புதிய விரைவு ரயிலை இயக்க வேண்டும். அந்த ரயிலில் மீனவ மக்கள் பயனடையும் வகையில் மீன்களை பதப்படுத்தும் வசதியுடைய ஒரு ரயில் பெட்டியும் இணைக்கப்பட வேண்டும். இதையே ரயில்வே நிர்வாகத்துக்கு எனது அன்பு வேண்டுகோளாக வைக்கிறேன் என்றார்.இந்த விழாவில், சட்ட மன்ற உறுப்பினர்கள், நாடாளமன்ற உறுப்பினர்கள், என பல அரசியல் பிரமுகர்களும், உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். |
|||||
by Swathi on 28 Jan 2014 0 Comments | |||||
Tags: APJ Abdul Kalam Pamban bridge centenary celebrations of Pamban bridge Abdul Kalam பாம்பன் பாலம் அப்துல் கலாம் பாம்பன் பாலம் பெருமை | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|