LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- கலேவலா

பாடல்கள் 25-35

 பாடல் 25 - மணமகனும் மணமகளும் வீட்டில் வரவேற்கப்படுதல் *

அடிகள் 1 - 382 : மணமகனையும் மணமகளையும் அவர்களுடன் சேர்ந்து வந்தவர்களையும் இல்மரினனின் வீட்டில் வரவேற்றல்.

அடிகள் 383 - 672 : கூட்டத்தினரைச் சிறப்பாக உபசரித்து உணவும் பானமும் வழங்குதல்; தலைவன், தலைவி, விருந்து நிகழ்ச்சியின் தலைவன், மணமகளின் தோழி, விவாகத்தில் கலந்து கொண்டோ ர் ஆகியோரைப் புகழ்ந்து வைனாமொயினன் பாடுகிறான்.

அடிகள் 673 - 738 : விவாகத்தில் கலந்துவிட்டுத் திரும்பும்போது வைனாமொயினனின் சறுக்கு வண்டி உடைகிறது; அதைத் திருத்திக் கொண்டு அவன் வீடு திரும்புகிறான்.


காத்தே யிருந்தனர் கனநீள் நேரமாய்
காத்தே யிருந்தெதிர் பார்த்தே யிருந்தனர்
பாவையோ டிணைந்த பரிவ(஡)ர வரவை
கொல்லன்இல் மரினனின் இல்லம தற்கு:
முதியவர் விழிகள் அருவிகள் ஆகின
சாளரத் தருகே தரித்தவ ரிருந்தால்,
இளைஞரின் முழங்கால் இறங்கிப் பணிந்தன
வாயி லவரெதிர் பார்த்தே யிருந்ததால்,

குழந்தைகள் கால்கள் குளிரில் விறைத்தன
சுவரின் அருகில் அவர்கள்நின் றிருந்ததால்,   10
காண்நடு வயதினர் காலணி சிதைந்தன
நீர்க்கரை யதிலே நெடிதலைந் திட்டதால்.
அடுத்தடுத் தணைந்த தினத்திலோர் காலை
அடுத்தடுத் தணைந்த தினத்திலோர் பகலில்
மரக்காட் டிருந்து வந்ததோர் சத்தம்
வண்டியின் ஓசை வந்தது புல்வெளி.

கவின்*லொக் காவெனும் கருணைத் தலைவி
கலேவா மகளெனும் அழகார் மனையாள்
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"மகனின் சறுக்கு வண்டியே அதுதான்    20
வடநா டிருந்து வருகிறா னென்மகன்
தன்இள மனையாம் பெண்ணவ ளுடனே.

இந்நாடு நோக்கி இப்போ(து) வருகிறான்
இத்தோட் டத்து எழில்வெளி நோக்கி
தந்தையார் அமைத்த தனிவசிப் பிடத்தே
பெற்றவர் கட்டிய பெருவாழ் விடத்தே."

அந்தக் கொல்லன் அவ்வில் மரினன்
விரைந்தே வந்து வீட்டினை யடைந்தான்
தந்தையார் அமைத்த தனிவசிப் பிடத்தை
பெற்றவர் கட்டிய பெருவாழ் விடத்தை;   30
வனக்கோழி வடிவ மணிகள் ஒலித்தன
இளமரத் தியைந்த ஏர்க்கால் தம்மிலே,
இன்குயில் வடிவில் இசைத்தன மணிகள்
மின்னும் வண்டியின் முன்னணி யத்தில்,
செதுக்கிய அணில்கள் திரிந்தன துள்ளி
**'மாப்பிள்' மரத்து வண்டியின் நுகத்தில்.

கவின்லொக் காவெனும் கருணைத் தலைவி
கலேவா மகளெனும் அழகார் மனையாள்
இந்தச் சொற்களில் இயம்பினள் அவளே
இயம்பினள் அவளே இயம்பினள் இவ்விதம்:   40
"ஊர்காத் திருந்தது ஒளிர்புது மதிக்கு
இளையோர் சூரிய உதய மதற்கு
பிள்ளைகள் **சிறுபழச் செடியார் தரைக்கு
நீர்காத் திருந்தது கீல்பட குக்கு;
அரைச்சந் திரற்கும் அதைநான் காத்திலேன்
அல்லது பானுவை அறவெதிர் பார்த்திலேன்
எனதுசோ தரனை எதிர்பார்த் திருந்தேன்
எனதுசோ தரனையும் என்மரு மகளையும்
காலையில் பார்த்தேன் மாலையில் பார்த்தேன்
எப்படி மறைந்தான் என்பதை யறியேன்,   50
வளர்சிறு பிள்ளையை வளர்க்கின் றானா
அல்லது மெலிந்ததைக் கொழுப்பாக் குவனா
எப்படியும் அவன் இங்குமீ ளாததால்
அவனும் உண்மையாய் அளித்துவாக் ககன்றான்
காண்அடிச் சுவடுகள் கலையுமுன் வருவதாய்
குளிர்ந்த சுவடுகள் அழியுமுன் வருவதாய்.

எப்போதும் காலையில் இருந்தேன் வழிபார்த்(து)
பலநாள் நெஞ்சில் நினைவா யிருந்தேன்
சகோதரன் வண்டி தான்உரு ளாததால்
சகோதரன் வண்டி தான்ஒலிக் காததால்   60
இந்தச் சிறிய முன்றிலின் பரப்பில்
இந்தத் தோட்டத் தியைகுறு வெளியில்;
வைக்கோல் ஆனதோர் வனப்பரி இருப்பினும்
வலியஈர்ச் சட்ட வண்டியா யிடினும்
ஒருவண்டி யென்றே உரைப்பன்நான் அதையும்
சறுக்குவண் டியெனச் சாற்றுவேன் உயர்வாய்
என்சோ தரனையஃ திங்கு கொணருமேல்
என்அழ கனையஃ தில்லம் கொணருமேல்.

எதிர்பார்த் திருந்தேன் எல்லாக் காலமும்
பகற்பொழு தெல்லாம் பார்த்துநா னிருந்தேன்   70
எதிர்பார்த் திருந்தேன் என்தலை சாய்வரை
தளர்குழற் குடுமி சரிந்து விழும்வரை
நேர்பார் வைவிழி சோர்வாம் வரையும்
என்சகோ தரன்வரு மெனநம் புகிறேன்
இச்சிறு முற்ற எழிற்பரப் புக்கு
இத்தோட் டத்து இயல்குறு வெளிக்கு;
இங்குவந் தவனும் இறுதியில் சேர்ந்தான்
இறுதியில் ஒருதரம் இதைச்செய் திட்டான்
செந்நிற முகத்தாள் சேர்ந்தரு குள்ளாள்
சிவந்தகன் னத்தாள் திகழ்ந்தரு குள்ளாள்.   80

மாப்பிள்ளை யாரே, மதிப்புள சோதர!
நுதற்சு(ட்)டிப் புரவியை இதம்செ(ல்)ல விடுவீர்
நல்லினப் பரியதைச் செல்லவிட் டிடுவீர்
பழக்கம் அதற்குள பதவைக் கோற்கு
தகுமதன் வழக்குடைத் **தானியத் துக்கு;
பொருந்தடுத் தெமக்கு விருந்தொன் றளிப்பீர்
ஏனையோர்க் களியும் எமக்கும் தாரும்
அனைத்துக் கிராமத் தவர்க்கும் தாரும்.

விருந்தெலாம் தந்து விரைந்து முடிந்தபின்
உரைப்பீர் எங்களுக் குமது கதைகளை    90
பகர்வதற் கொன்றிலாப் பயணம் முடிந்ததா
நலமாய்ச் சுகமாய் நடந்ததா வழிச்செலல்?
மாமியார் அவளிடம் போய்ச்சேர் கையிலே,
விரிபுகழ் மாமனார் வீடடை கையிலே?
அரிவையை யடைந்திரா? ஆட்சியைப் பிடித்திரா?
போர்க்குவந் தவரைப் புறம்கண் டீரா?
பலகைக் கோட்டையைப் பணிய வைத்தீரா?
எதிர்எழும் சுவரை இடித்துவீழ்த் தினீரா?
மாமியார் இடத்தடி வைத்தேகி னீரா?
எசமானன் இடத்தில்நீர் இருந்துகொண் டீரா?   100

இல்லாது வினாவல் இப்போ(து) பார்க்கிறேன்
உசாவல் இன்றியே உளத்தில் உணர்கிறேன்
நலமாய்ச் சுகமாய் நடந்தது வழிச்செலல்
சிறப்பாய் இனிப்பாய் செலவவர்க் கானது
பெற்றனர் வாத்துப் பிடித்தனர் ஆட்சி
போர்க்குவந் தவரைப் புறம்கண் டிட்டார்
பலகைக் கோட்டையைப் பணியவும் வைத்தார்
**பலகைச் சுவரைப் படியில் விழுத்தினார்
மாமியா ரிடத்தினிலே மகிழ்ந்திருக் கையிலே
இணையிலா மாமனார் இல்லத் திருக்கையில்;   110
பொன்னாம் வாத்துப் போந்தரு கிருந்தாள்
கோழிகக் கத்துக் கொள்அணைப் பிருந்தாள்
அருகிலே தூய அரிவையு மிருந்தாள்
அவனுடை ஆட்சியில் அமர்ந்தள்வெண் ணிறத்தாள்.

இப்பொ(ய்)யை இங்கு எவர்எடுத் தடுத்தார்?
கொடிய செய்தியைக் கொணர்ந்ததா ரப்பா?
மாப்பி(ள்)ளை வெறுங்கையாய் வருகிறார் என்று,
பொலிப்பரி அங்கே போனது வீணென?
மாப்பி(ள்)ளை வெறுங்கையாய் வரவி(ல்)லை யிங்கு
பொலிப்பரி அங்கே போந்தில துவீண்:    120
ஏதோஇருக் கிறது இழுத்துவ ரப்பரி
**'சணற்சடை' அசைவில் தரித்துள தர்த்தம்
ஏனெனில் வியர்த்து இருக்கிற து(நற்)பரி
நுரைத்துநிற் கிறது தரப்பரிக் குட்டி
**அளகுக் குஞ்சையிங் கழைத்துவந் ததனால்
இரத்த நிறத்தளை இழுத்துவந் ததனால்.

இப்போது வண்டியி லிருந்தெழு, அழகே!
தரமிகு பரிசே, சறுக்குவண் டியிலிருந்(து)!
நீயாய் எழுவாய் நினைக்கரம் தொடாமல்
எழுவாய் உதவிநீ இல்லா தெதுவும்    130
இளங்கண வன்உனை ஏந்திட வரலாம்
இரும்சிறப் புன்னவன் எழுப்பிட வரலாம்.

சறுக்குவண் டியின்மேல் தான்நீ யெழுந்து
வியன்புற வழியாய் வெளியே றுகையில்
பழுப்பு நிறத்துப் பாதையில் அடிவை
ஈரல் நிறத்துப் பூமியில் கால்வை
பன்றியின் நடையால் மென்மையாம் தரையில்
பன்றிக் கணங்கள் பதம்மிதி பூமியில்
ஆட்டுக் குழுதிரிந் தமைந்தமென் நிலத்தில்
திகழ்பரிப் பிடர்மயிர் தேய்படு பூமியில்.    140

தாரா அடிபோல் தரைமிசை அடிவை
வாத்தின் பதம்போல் வைப்பாய் வெளிகால்
முழுமையாய்க் கழுவிய முற்றப் பரப்பிலே
மட்டமாய்ப் பரந்தஇவ் வன்னமாம் நிலத்தில்
மாமனார் செய்தவிவ் வன்முற்றப் பரப்பிலே
மாமியார் படைத்தே வைத்தஇவ் விடங்களில்
சகோதரன் செதுக்கிய தன்தொழில் தலத்திலே
சகோதரி நீலத் தண்பசும் புல்நிலம்;
பாதம் மெதுவாய்ப் படிமிசை வைப்பாய்
மண்டபப் பலகைக்(கு) மாற்றுவாய் அதைப்பின்   150
மண்டபத் தூடே மற்றுநீ மேற்செல்
அங்கிருந் துள்ளே அதன்பின் இடம்பெயர்
புகழ்பெறும் கூரைப் புணர்தம் பக்கீழ்
இல்லத் தழகாய் இயைகூ ரையின்கீழ்.

இப்போது நிகழும் இகல்குளிர்க் காலம்
நிகழ்ந்து முடிந்த நேர்கோடை நாட்கள்
தாரா எலும்பால் தரையெலாம் மிசைத்தது
ஆரேனும் வந்தவ் வகல்தரை நிற்க,
ஒலித்தது பொன்இயை பொலிமனைக் கூரை
யாரேனும் வந்து நடப்பதற் கதன்கீழ்,   160
சாளரம் யாவுமே தனிமகிழ் வுற்றன
ஆரேனும் வந்து அமர்வதற் கவற்றில்.

இப்போது நிகழும் இகல்குளிர்க் காலம்
நிகழ்ந்து முடிந்த நேர்கோடை நாட்கள்
கதவில் கிறீச்சென கைப்பிடி ஒலித்தது
மோதிரக் கையினால் மூடப் படற்கு,
களஞ்சியக் கூடத்தும் கனவொலி எழுந்தது
சிறந்தமே லங்கி திகழழ **காட்கு,
என்றும் கதவுகள் இருந்தன திறந்தே
வருபவர் திறந்திட, வரவெதிர் பார்த்தே!    170

இப்போது நிகழும் இகல்குளிர்க் காலம்
நிகழ்ந்து முடிந்த நேர்கோடை நாட்கள்
சுழல்காற்று இவ்வறை சுழன்றுவீ சியது
யாரேனும் வந்தே நனிதுகள் துடைக்க,
கூடம் இடமொதுக்கி ஆயத்தம் கொண்டது
யாரேனும் வந்து நேரிற்சுத் தம்செய,
புத்தில்லக் குடில் புலம்பித் தவித்தன
யாரேனும் வந்தே நன்றாய்ப் பெருக்கிட.
இப்போது நிகழும் இகல்குளிர்க் காலம்
நிகழ்ந்து முடிந்த நேர்கோடை நாட்கள்   180
மறைவாய் முன்றில்கள் மாறிவந் தனவிடம்
யாரேனும் வந்து நனிதுகள் பொறுக்கிட,
மாடங்கள் தாமாய் வந்தன கீழே
யாரேனும் வந்து நனியுள் நுழைய,
உயர்வளை வளைந்தது உத்தரம் பதிந்தது
இளம்மனை ஒருத்தியின் எழில்உடை களுக்கு.

இப்போது நிகழும் இகல்குளிர்க் காலம்
நிகழ்ந்து முடிந்த நேர்கோடை நாட்கள்
ஒழுங்கைசந் தெல்லாம் ஒலிசெய் தழைத்தன
யாரேனும் வந்து நடந்திடத் தம்மேல்,    190
மாட்டுத் தொழுவுகள் வந்தன நெருங்கி
யாரேனும் வந்து நற்சுத் தம்செய,
களஞ்சிய முற்றம் நகர்ந்து பின்போனது
வாத்தொன்று வந்து ஆற்றிடஅதில் தொழில்.

இன்றைக் கிங்கே இப்பகற் பொழுதில்
நேற்றும்அத் தோடு நேற்று முழுவதும்
வேளைகத் தியது வியன்பசு மாடு
காலையூண் கொடுப்போர் களைஎதிர் பார்த்து,
குதிரையின் குட்டிகள் குரல்கொடு கனைத்தன
யாரேனும் வந்து வீசிட வைக்கோல்,    200
வசந்தத்து ஆடு வலிதுகத் தியது
எதிர்பார்த்து மென்மேல் இரைவைப் போரை.

இன்றைக் கிங்கே இப்பகற் பொழுதில்
நேற்றும்அத் தோடு நேற்று முழுவதும்
அமர்ந்தனர் சாளரத் தனைத்து முதியரும்
காண்பிள் ளைகள்நீர்க் கரைகளில் திரிந்தனர்
அரிவைய ரோசுவர் அருகினில் நின்றனர்
நின்றனர் பையன்கள் நெடுங்கடை வாயிலில்
வருமிளம் மனைவியின் வரவினை நோக்கி
மணப்பெண் ஒருத்தியை மகிழ்ந்தெதிர் பார்த்து.   210

இப்போ(து) முன்றிலில் இருப்போர்(க்கு) வாழ்த்துக்கள்!
வெளியில் நிற்கும் வீரர்கள் யா(வ)ர்க்கும்!
உனக்கும் குடிசையே, உளோர்க்கும் வாழ்த்துக்கள்!
குடிற்கும், தங்கிக் கொண்டஅன் னியர்க்கும்!
கூடமே, உனக்கும்நீ கொண்டுளோர் தமக்கும்!
மிலாறுரிக் கூரை(க்கும்), மிகக்கீ ழுளோர்க்கும்!
மாடமே, உனக்குமுள் வாழ்வோர்(க்கும்) வாழ்த்துக்கள்!
பலகைநூ றி(ல்லிற்கும், படிந்துளசிறார்க்கும்!
வான்நிலா வாழ்த்துக்கள், மன்னனே வாழ்த்துக்கள்!
இளையநற் பரிவ(஡)ரம் எல்லோர்க்கும் வாழ்த்துக்கள்   220
ஒருபோ தும்முன் இருந்தில திங்கே
இருந்தில முன்னும் இருந்தில நேற்றும்
இவ்வித மொருகுழாம் இங்கிருப் பவர்போல்
எழிலுறும் மனிதர்கள் இங்கிருப் பவர்போல்.

மாப்பிள்ளை யாரே, மதிப்புள சோதர!
சிவப்புச் சிறுதுணி அவிழ்த்துப் போடுக
பட்டு முகத்திரை அப்பால் நீக்குக
கிளருமும் அன்புடைக் **கீரியைக் காட்டுக
காத்திருந் தீர்இதற் காயைந் தாண்டுகள்
எட்டாண்டு விரும்பி எதிர்பார்த் திருந்தீர்.    230

நீர்முயன் றிருந்தபொற் காரிகை கொணர்ந்திரா?
குயிலாள் ஒருத்தியைக் கொணர முயன்றிரே!
நீள்புவி வெள்ளை நிறத்தளைத் தெரிந்திரே!
சிவந்தகன் னத்தளை புனற்பெற இருந்திரே!

எவ்வினா வும்மிலா திப்போ பார்க்கிறேன்
கேள்வியே யிலாது கிளர்மனத் துணர்கிறேன்
குயிலாள் ஒருத்தியை கொணர்ந்தீர் உம்முடன்
நீலநல் தாரா நிதமும் காப்பினில்
உச்சியில் தளிர்த்தநற் புத்தம் புதுத்தளிர்
பலபசுந் தளிரதில் ஒரேயிளம் தளிரதை   240
சிறுபழச் **செடியிலே மிகப்புதுத் தழையதை
பலபுதுச் செடிகளில் ஒருபுதுச் **செடியதை."

அங்கொரு பிள்ளை அகல்தரை யிருந்தது
தரையிலே யிருந்தஅப் பிள்ளைசாற் றியது:
"இழுத்துவந்(த) தென்னநீ இனியஓ, சோதர!
அழகில்கீல் பூசிய அடிமரக் கட்டையாம்
தார்ப்பீப்(பா) பாதியதாம் சரிநீ ளத்தினில்
நூனாழி அளவாம் நுதலிய உயரம்.

அப்படி யப்படி அப்பாவி மாப்பிளாய்
இதைக்காத் திருந்தீர் இந்நாள் முழுதும்   250
தெரிவேன் நூறுபெண் சமன்என் றீரே
கொணர்வேன் ஆயிரத் தொருத்தி யென்றீரே;
நூறிலே நல்லளாய் நுவலஒன் றடைந்தீர்
அவலட் சணம்சமம் ஆயிரம் பெற்றீர்
காண்சதுப் புநிலக் **காகம் போலவும்
வேலியி லிருந்திடும் வெறும்**புள் போலவும்
வயல்களில் வைத்திடும் வெருளியைப் போலவும்
தருசி நிலக்கரிக் குருவியைப் போலவும்.

இத்தனை நாட்களும் என்னசெய் தாளவள்
கடந்தகோ டையிலே நடந்தது தானெது?   260
வன்னக்கை யுறையெதும் பின்னா திருந்திடில்
தூயகா லுறையெதும் தொடங்கா திருந்திடில்.
வெறுங்கையை வீசியே வீடு வருகிறாள்
நவில்மாமன் **இற்கு நற்பரி சின்றியே
அவள்கூடைச் சுண்டெலி சலசலத் தோடுதாம்
**'பெருஞ்செவி' பெட்டியுள் பரபரத் தோடுதாம்."

கவின்லொக் காவெனும் கருணைத் தலைவி
கலேவா மகளெனும் அழகிய மனையாள்
அதிசய மாம்இக் கதையது கேட்டு
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:   270
"என்னநீ சொன்னாய்? ஈனப் பிள்ளையே!
பிதற்றிய தென்ன? பதரெனும் பிறப்பே!
அறியலாம் பிறரது அதிசயச் செய்தி
இகழ்வுறும் செய்தியும் எங்கும் பரவலாம்
எனினுமொன் றரிவையாம் இவள்சார் பில்லையே
பகர்இவ்வில் வாழ்பவர் பற்றியும் இல்லையே.

தீயதோர் வார்த்தையை செப்பினாய் இப்போ(து)
வார்த்தையும் இப்போ(தே) வந்தது கொடியதாய்
ஒருநிசி வயதுறும் ஒருகன் றின்வாய்
ஒருபகல் வயதுறும் ஒருகுட் டியின்தலை;    280
மாப்பிள்ளை பெற்றது வன்னநல் நங்கையே
நனி**விழு நாட்டினால் கொணரப் பட்டவள்
பாதியே பழுத்த **சிறுபழம் போன்றவள்
ஒருகுன் றுதித்த **சிறுபழம் அனையவள்
அல்லது மரத்திலே அமர்ந்துள குயிலவள்
**பேரியில் தங்கிடும் ஒருசிறு புள்ளவள்
மிலாறுவின் எழிலுறும் வியன்சிறைப் பறவையாம்
'மாப்பிள்' மரத்தமர் ஒளிர்மார் புடையவள்.

ஜெர்மனி நாட்டிலும் எவரும் பெறவொணா
எஸ்தோனி யாவுக் கப்பால்(உம்) பெறவொணா  290
இந்த அரிவையின் இத்தனை அழகையும்
இந்த வாத்ததின் இனிமையின் தன்மையை
இந்த வதனத்து இதுபோல் எழிலினை
இந்தத் தோற்றத்தில் தெரிகின்ற மகிமையை
இந்தக் கரங்களில் இருக்கும் வெண்மையை
மென்மைக் கழுத்தில் வியப்பமை வளைவினை.

அத்துடன் வெறுங்கையாய் அரிவையும் வந்திலள்
கம்பளித் துணிகள் நம்புவிக் கொணர்ந்தவை
மேலங்கி வகைகளும் மிக்கன அவற்றுடன்
அகல்விரிப் புகளும் மிகச்சுமந் துற்றனள்.   300

பெண்ணுக்கு இங்கே திண்ணமாய் நிறைந்துள
சொந்தத் தறியின் தொழிலாம் பொருட்களும்
சொந்தராட் டினத்தில் விந்தைநெய் துணிகளும்
சொந்த விரல்நுனித் தோன்றிய வகைகளும்
வெள்ளை நிறத்தில் மிகுவகை ஆடைகள்
குளிர்கா லத்தில் கழுவிய உடைகளும்
வசந்த வெய்யிலில் வைத்துலர் துணிகள்
கோடை நிலவிலே காய்ந்தது முள்ளன:
நலமார் விரிப்புகள் சலசலத் தசையும்
தடித்த தலையணை பிடித்தநல் மென்மை   310
பட்டுத் துணிகள் பளபளத் தாடும்
கம்பளி யாடைகள் பைம்பொனா யொளிரும்.

நல்ல நங்கையே, நவிலெழி லணங்கே!
அழகிய செந்நிற அரிவையே, கேளாய்!
இல்லில்நீ நிறைவாய் புகழோ டிருந்தவள்
பிதாவின் வீட்டிலே மகளா யிருக்கையில்,
நிறைவாம் புகழோடு நிலைப்பாய் வாழ்வெலாம்
மருமக ளாக மணாளனின் மனையிலே.
துன்பப் படுதலைத் தொடங்கவும் வேண்டாம்
தொல்லைகள் வருமெனத் துணியவும் வேண்டாம்   320
அழைத்துனை வந்தது சதுப்புத் தரைக்கல
படர்ந்துனைக் கொணர்ந்தது படுகுழிக் கல்ல,
தானிய மேடிருந்(து) தனிக்கொணர் பட்டனை
இன்னுமோர் அதிகமாய் இருக்கும்தா னியவிடம்,
நீகொணர் பட்டனை 'பீரு'ள வீடிருந்(து)
'பீர்'இன்னும் மிக்குள வீடொன்று நோக்கியே.

நல்ல நங்கையே, நவிலெழி லணங்கே!
இப்போ துன்னிடம் இவ்விதம் கேட்கிறேன்:
இங்குநீ வருகையில் இதுகண் டனைகொல்
கதிர்த்தா னியத்திரள் கட்டிவைத் திருந்ததை    330
செறிகனக் கதிர்களைத் திரட்டிவைத் திருந்ததை?
அவையனைத் தும்மிவ் வகத்தையே சேர்ந்தவை
உயர்ந்தஇம் மாப்பிளை உழுததால் வந்தவை
உழுததால் வந்தவை விதைத்ததால் விளைந்தவை.
பாவையே, இளமைப் பருவப் பெண்ணே!
இப்போ துனக்கு இதனைக் கூறுவேன்:
இம்மனை நீவர எவ்வா றறிந்தையோ
அதுபோல் பழகலும் அறிந்தே யுள்ளாய்
இங்கே ஒருபெண் இருப்பது நல்லது
மருமகள் இங்கே வளர்வதும் நல்லது    340
**நிறைதயிர்ச் சட்டி நின்கரத் துள்ளது
வெண்ணெய்க் கிண்ண மெலாமுன துடமை.

ஒருபெண் ணிங்கே உறைவது நல்லது
ஒருகோழி யிங்கே வளர்வதும் நல்லது
சவுனாப் பலகையிங் ககலமா யானவை
அகத்தரைப் பலகைகள் அமைவன விசாலம்
தலைவர்கள் இனியர்நின் தந்தையைப் போல
தலைவிகள் இனியர்நின் தாயார் போல
புத்திரர் நல்லவர் போலநின் சோதரர்
நல்லவர் புதல்விகள் நின்சகோ தரிபோல்.   350

ஏதெனும் முனக்கு ஆசையேற் பட்டால்
வந்தால்ஏ தெனும் மனதில் விருப்பம்
உந்தை பிடிக்கும் உயர்மீன் போலோ
வேட்டைச் சோதரன் காட்டுக் கோழியோ
அதைமைத் துனரிடம் அடுத்துப் பேசேல்
மாமனா ரிடம்போய் மற்றதைக் கேளேல்
மாப்பிள்ளை யிடத்தே வந்துநே ராய்க்கேள்
உனைக்கொணர்ந் தவரிடம் உகந்ததைப் பெறுவாய்.
எதுவுமே இல்லையே இருக்குமக் காட்டில்
நான்குகால் களிலே நனிவிரை பிராணிகள்,   360
வானப் பறவைகள் மற்றெதும் இல்லையே
வியன்சிறை இரண்டினை விசிறிப் பறப்பவை,
அத்துடன் நீரிலும் மற்றெது மில்லையே
மிகவும் சிறந்திடு மீன்கணக் கூட்டம்,
உன்னைப் பிடித்தவர் பிடிக்கொணா ஒன்று
பிடித்தவர் பிடியா(தது) கொணர்ந்தவர் கொணரா(தது).

இங்கொரு மங்கை இருப்பது நல்லது
ஒருகோழி யிங்கே வளர்வதும் நல்லது
திரிகைக் கற்கிங் கவசர மில்லை
உரலைப் பெறற்கும் ஒருகவ லையிலை   370
தண்ணீர் கோதுமை தனையிங் கரைத்திடும்
நீர்வீழ்ச்சி நன்கே **தானியம் கலக்கிடும்
பாத்திரங் களைஅலை பதமாய்க் கழுவிடும்
அவற்றைக் கடல்நுரை ஆக்கிடும் வெளுக்க.

ஓ,நீ அன்புடை உயரிய கிராமமே!
விரிந்தஎன் நாட்டில் மிகச்சிறப் பிடமே!
கீழே புற்றரை மேலே வயல்நிலம்
இடைநடு வினிலே இருப்பது கிராமம்
இயல்கிரா மக்கீழ் இனிதாம் நீர்க்கரை
அந்தநீர்க் கரையில் அருமைநீ ருளது    380
வாத்துக்கள் நீந்த வளமிகு பொருத்தம்
விரிநீர்ப் பறவைகள் விளையாட் டயர்தலம்."

வந்தோர்க் குப்பின் வழங்கினர் பானம்
வழங்கினர் உணவு வழங்கினர் பானம்
ஏர(஡)ள மிருந்தன இறைச்சித் துண்டுகள்
அத்தொடு பணிய(஡)ர அழகிய வகைகள்
பார்லியில் வடித்த 'பீரு'ம் இருந்தது
கோதுமை யூறற் பானமு மிருந்தது.

புத்தாக்க உணவு போதிய திருந்தது
போதிய உணவும் போதிய பானமும்    390
தயங்கு செந்நிறச் சாடிகள் பலவிலும்
அழகிய கிண்ணம் அவைகள் பலவிலும்
நனிபிய்த் துண்ணப் பணியா ரங்கள்
விரும்பிக் கடிக்க வெண்ணெய்க் கட்டிகள்
வெட்டி யெடுக்க வெண்ணிற மீன்கள்,
துண்டு துண்டாக்க வஞ்சிர மீன்கள்
வெள்ளியில் அமைந்த வெட்டுக் கத்தியால்
தங்கத் தமைந்த தனியுறைக் கத்தியால்.

வாங்கப் படாத'பீர்' வழிந்தோ டிற்று
செலுத்தா **மர்க்காத் தேன்பெரு கிற்று   400
உத்தர உச்சி(யி)ருந் தோடிற் றுப்'பீர்'
பீப்பாவு ளிருந்து பெருகிற் றுத்தேன்
அருந்து'பீர்' இருந்தது அதரங்க ளூற
தேனங் கிருந்தது சேர்ந்துள மயங்க.

இங்கே குயில்போல் இனிதுயார் பாடுவார்?
பொருத்தம தான பொற்பா டகன்யார்?
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
என்றுமே நிலைத்த இசைப்பா டகனவன்
பாடல்கள் அங்கே பாடத் தொடங்கினன்
பாடல்கள் யாத்துப் பாடத் தொடங்கினன்   410
இனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னான்
இந்த மொழிகளில் இவ்விதம் மொழிந்தான்:
"அன்புடைச் சோதர, அரியஎன் சோதர!
என்னொடு இணைந்த இனியசொல் வல்லவ!
நாவன்மை படைத்தவென் நல்லதோ ழர்களே
இப்போநான் புகல்வதை இனிதுகே ளுங்கள்
வாத்துக்கள் சேர்வது **வாய்க்குவாய் அரிது
கண்ணொடு சோதரி கண்ணைநோக் குதலும்
அருகரு கிருப்பதுவும் அரிதுசோ தரர்கள்
தோளொடு **தோள்தாய்த் தோன்றல்கள் நிற்பதும்   420
வறிதாய் வீணே மயங்கிடும் எல்லையில்
தெரியும் வடபால் செழிப்பிலா நிலத்தில்.

பாடல்கள் இவ்விதம் பாடத் தொடங்கவா?
பாடல்கள் யாத்துப் பாடத் தொடங்கவா?
பாடல்கள் பாடலே பாடகர் தொழிலாம்
கூவுதல் வசந்தக் குயிலின் தொழிலாம்
**நீலமா தர்க்குச் சாயம் அழுத்தலும்
**தறியமர் மகளிர்க்(கு) நெய்தலும் தொழிலாம்.

லாப்பில்வாழ் பிள்ளைக ளெலாம்பா டிடுவர்
வைக்கோற் காலணி மாந்தரு மிசைப்பர்   430
இரும்காட் டருமெரு திறைச்சியுண் நேரம்
சிறுகலை மான்ஊன் தின்றிடும் நேரம்;
நானுமே னிங்கு பாடா திருக்கிறேன்
எமது பிள்ளைகள் ஏன்பா டுகிலர்
உயர்தா னியத்தில்நல் உணவுண் நேரம்
வாய்நிறை உணவை மகிழ்ந்துண் கையிலே?

லாப்பில்வாழ் பிள்ளைக ளெலாம்பா டிடுவர்
வைக்கோற் காலணி மாந்தரு மிசைப்பர்
ஒருகிண் ணம்நீர் உவந்தருந் துகையில்
**மரப்பட்டை ரொட்டி மகிழ்ந்துமெல் லுகையில்;   440
நானுமே னிங்கு பாடா திருக்கிறேன்
எமது பிள்ளைகள் ஏன்பா டுகிலர்
தானியம் வடித்த பானம் பருகையில்
பார்லியில் செய்த 'பீர்'அருந் துகையில்?

லாப்பில்வாழ் பிள்ளைக ளெலாம்பா டிடுவர்
வைக்கோற் காலணி மாந்தரு மிசைப்பர்
வெளியே புகைபடி கூடார ஒளியில்
படிந்த கறைநிறை படுக்கை யதிலே;
நானுமே னிங்கு பாடா திருக்கிறேன்
எமது பிள்ளைகள் ஏன்பா டுகிலர்    450
உயர்புக ழுடையஇவ் உத்தரத் தின்கீழ்
குறையா அழகுக் கூரையின் கீழே?

ஆடவர் இங்கே அமர்தல்நன் றாகும்
இனியபெண் மணிகள் இருப்பதும் நன்றாம்
'பீர்'நிறைந் திருக்குமிப் பீப்பாப் பக்கம்
தேன்நிறைந் திருக்குமிச் சாடியைச் சூழ்ந்து
எங்கள் அருகில்வெண் மீனின் நீரிணை
அருகில்வஞ் சிரத்தின் அகல்வலை வீச்சிடம்
உண்கையில் உணவெதும் ஒழிந்துபோ னதேயிலை
பபானம் பருகையில் பற்றா நிலையிலை.   460

ஆடவர் இங்கே அமர்தல்நன் றாகும்
இனியபெண் மணிகள் இருப்பதும் நன்றாம்
உறுதுய ரோடிங்(கு) உணல்கிடை யாது
கவனிப்(பு) ஒன்றிலாக் கழியும் வாழ்விலை;
உறுதுயர் இன்றியே உண்ணுதல் இங்குள
கவனிப்பு நிறைந்த கவின்வாழ் விங்குள
இந்தத் தலைவனின் எல்லாக் காலமும்
இந்தத் தலைவியின் இன்வாழ் நாளெலாம்.

இங்கே முதலில் எவரைப் புகழ்வேன்?
தலைவர் இவரையா தலைவி இவளையா?   470
வீரர் வழமையாய் மிகுமுன் பொழுதெலாம்
தலைவரைப் புகழ்ந்தே தனிமதித் தார்முதல்
தலைவர் அமைத்தவர் சதுப்பில் வசிப்பிடம்
வனத்தி லிருந்தொரு வசிப்பிட மமைத்தவர்
அகல்பெரு ஊசி(யி)லை அடிமரம் கொணர்ந்தார்
தாருவைத் துணித்துத் தலையுடன் கொணர்ந்தார்
அவற்றைநல் லிடத்தில் அமைவுடன் வைத்தார்
அவற்றை உறுதியாய் ஆங்காங்கு நிறுத்தி
உயர்ந்த குடிக்கு உயர்பெரும் வசிப்பிடம்
அழகுறும் தோட்டத் தமைத்தனர் வீட்டை;   480
கட்டினார் சுவர்மரக் காட்டினி லிருந்து
உத்தரம் பயங்கரக் குன்றிலுண் டானது
பல்குறுக் குமரம் பாறை நிலத்திலும்
சிறந்தசட் டமெலாம் சிறுபழப் புதரிலும்
**சிறுபழச் செடியுள திடரினில் பட்டையும்
உறைந்திடாச் சேற்றினில் பாசியும் பெற்றனர்.

வாழ்விடம் சரியாம் வகைகட் டியதும்
இருப்பிடம் சரியாம் இடத்தில் அமைந்தது
சுவர்வே லைக்குத் தோற்றினர் நூற்றுவர்
இல்லக் கூரையில் இருந்தனர் ஆயிரம்   490
இந்தவாழ் விடமதை இனிதாய் அமைத்திட
பகருமிந் நிலத்தைப் பரப்பி யமைத்திட.

ஆயினும் இவ்வா றமைந்தஇத் தலைவர்
வாழ்விடம் அமைத்து வருகையில் இவ்விதம்
கண்டது இவர்சிகை காற்றுப் பலதினை
கொடுங்கால நிலையைக் குழலும் கண்டது
அடிக்கடி இந்தநல் லழகிய தலைவரின்
கையுறை பாறைக் கல்லில் இருந்தது
தாருவின் கிளையில் தரித்தது தொப்பி
சேற்றில் காலுறை திணிந்து கிடந்தது.   500

அடிக்கடி இந்த அழகுநல் தலைவர்
காலையில் மிகஅதி காலைவே ளையிலே
மற்றைய மனிதர் வளர்துயி லெழுமுன்
கிராமச் சனங்கள் கேட்பதன் முன்னர்
அனல்வெப்ப மருங்கு அகல்வார் துயிலால்
குச்சியால் கட்டிய குடிசையில் எழுவார்
துரிகைகொண்டு வாரித் தலையை
பனித்துளி யால்விழி பாங்காய்க் கழுவுவார்.

அதன்பின் இந்த அழகுநல் தலைவர்
அறிந்த மனிதரை அகத்துள் கொணர்வார்   510
பாடகர் வாங்கில் பலர்மிக் கிருப்பர்
திளைப்போர் களிப்பில் திகழ்வர்சா ளரத்தே
மந்திரம் சொல்பவர் வன்னிலப் பலகையில்
மூலையில் இருப்பர் மாயம் செய்பவர்
சுவரின் பக்கம் தொடர்ந்து நிற்போரும்
வேலியோ ரத்தை மிதித்தகல் வோரும்
முன்றிலில் நீடு நடந்துசெல் வோரும்
நாட்டின் குறுக்கே நனிபய ணிப்பரும்.

தலைவரை முதலில் தனிப்புகழ்ந் திசைத்தேன்
தருணமிஃ தன்புத் தலைவியைப் புகழ்வேன்   520
தயாராய் உணவைச் சமைத்துவைத் ததற்கு
நீண்ட மேசையை நிறைத்து வைத்ததற்கு.

தடித்த ரொட்டிகள் படைத்தவள் அவளே
தகுபெரு மாப்பசை தட்டி யெடுத்தவள்
உவந்தவள் விரையும் உள்ளங் கைகளால்
அவளது வளைந்த ஐயிரு விரல்களால்
ரொட்டிகள் மெதுவாய்ச் சுட்டே எடுப்பாள்
விருந்தா ளிகளை விரைந்துப சரிப்பாள்
பன்றி இறைச்சியும் பலதொகை சேர்த்து
அத்துடன் மீன்பணி யாரமும் கலந்து;   530
கத்தியின் அலகுகள் மெத்த நழுவிடும்
உறைக்கத்தி முனையும் உடனாய் வழுவும்
வஞ்சிர மீனின் வன்தலை துணிக்கையில்
கோலாச்சி மீனின் கொழுந்தலை அறுக்கையில்.

அடிக்கடி இந்த அழகுநல் தலைவி
கவனம் மிகுமிக் கவின்அக மனையாள்
சேவல்இல் லாமலே தெரிந்தவள் துயிலெழ
கோழிக் குஞ்சுக் குரலிலா தேகுவாள்
உகந்தஇவ் வதுவை ஒழுங்காம் காலம்
பணியா ரம்பல பலசுடப் பட்டன   540
புளித்த மாவுறை முழுப்பதப் பட்டது
'பீரு'ம் வடித்துப் புர்த்தியா யிருந்தது.

சிறப்புறும் இந்தத் திகழ்நல் தலைவி
கவனம் மிகுமிக் கவினக மனையாள்
அறிவாள் 'பீரை' அரும்பதம் வடிக்க
பெருகவே விடுவாள் பெருஞ்சுவைப் பானம்
நுரைக்கும் முளைகள் நுண்தளிர் இருந்து
கூலத் தினிக்கும் ஊறலி லிருந்து
கவின்மர அகப்பையால் கலக்கவும் மாட்டாள்
கிடைத்தகாத் **தண்டினால் கிளறவும் மாட்டாள்  550
கைமுட்டி கொண்டு தானே கலக்குவாள்
தொட்டதன் கரங்களால் மட்டும் கிளறுவாள்
கவினார் புகையில்லாச் சவுனா வறையில்
சுத்தமாய்ப் பெருக்கித் துடைத்த பலகையில்.

இந்தநல் தலைவி என்றுமே செய்யாள்
கவனம் மிகுமிக் கவினக மனையாள்
அடித்து முளைகள்கூ ழாக்கவும் மாட்டாள்
கூலமா வூறலைக் கொட்டாள் நிலத்தில்
ஆயினும் சவுனா அடிக்கடி செல்வாள்
நடுநிசி நேரமும் நனிதனிச் செல்வாள்   560
ஓநாய் பற்றி உறாளாம் அச்சம்
வனவிலங் கெதற்கும் மனத்துப் பயப்படாள்.

இப்போ(து) புகழந்து இசைத்தேன் தலைவியை
பொறுங்கள் என் சிறந்த மனிதரைப் புகழுவேன்!
சிறந்த மனிதராய்த் திகழ்ந்தவர் எவரோ?
இன்றைய காட்சியின் இயக்குனர் யாரோ?
சிறந்தவர் கிராமச் சிறந்த மனிதராம்
காட்சியை நடாத்தும் பாக்கியம் பெற்றவர்.

எங்களின் சிறந்த இவரைப் பார்ப்பீர்
அகன்ற துணிமே லாடையில் இருக்கிறார்   570
அவ்வுடை கைக்கீழ் அளவா யுள்ளது
இடுப்பின் பரப்பில் இறுக்கமா யுள்ளது.

எங்களின் சிறந்த இவரைப் பார்ப்பீர்
ஒடுங்கிய நீண்ட உடையி லிருக்கிறார்
ஆடையின் விளிம்பு அதுமண் தொடுமாம்
ஆடையின் பின்புறம் அதுநிலம் படியும்.

மேற்சட்டை சிறிது வெளித்தெரி கிறது
எட்டிப் பார்க்கிற ததிற்சிறு பகுதி
நிலவின் மகளவள் நெய்ததைப் போன்று
ஈயத்து நெஞ்சாள் இயற்றிய தைப்போல்.   580

எங்களின் சிறந்த இவரைப் பார்ப்பீர்
அரையினில் கம்பளி அமைந்தநற் பட்டி
ஆதவன் மகளவள் அமைத்தநற் பட்டி
மிளிர்நக முடையவள் மினுக்கிய பட்டி
தீயில் லாத காலம் நடந்தது
நெருப்பையே அறியா நேரம் நடந்தது.

எங்களின் சிறந்த இவரைப் பார்ப்பீர்
கவின்பட் டிழைத்த காலுறை கால்களில்
காலுறைப் பட்டியும் கவின்பட் டானது
காலதன் பட்டிஒண் கவின்பட் டானது    590
எழிற்பொன் னாலிவை இழைக்கப் பட்டன
அலங்க(஡)ரம் வெள்ளியால் ஆக்கப் பட்டன.

எங்களின் சிறந்த இவரைப் பார்ப்பீர்
கவினார் ஜேர்மனிக் காலணி கால்களில்
ஆற்றிலே அன்னம் அழகாய் மிதத்தல்போல்
வாத்துக் கரைகளில் வந்துநீந் துதல்போல்
தாராக் கிளைகளில் தரித்திருப் பதுபோல்
மரம்வீழ் காட்டில் இடம்பெயர் புட்போல்.

எங்களின் சிறந்த இவரைப் பார்ப்பீர்
பொன்னிறத் தினிலே மென்சுருள் தலைமயிர்   600
தங்கப் பின்னலாய்த் தான்மிளிர் தாடி,
தலையில் மிலைந்த தனிநீள் தொப்பியோ
முகிலைத் துளைத்து முன்உயர்ந் திருந்தது
காடுகள் அனைத்தும் கவினொளி விதைத்தது
கொடுத்தும் நூறு கொள்ளவே முடியா
**மர்க்காஆ யிரத்திலும் வாங்கிட முடியா.

இப்போ புகழ்ந்தேன் என்சீர் மனிதரை
பொறுங்கள், மணமகள் தோழியைப் புகழ்வேன்!
மணமகள் தோழி வந்தளெங் கிருந்து
அதிர்ஷ்டக் காரியை அடைந்ததெங் கிருந்து?   610
மணமகள் தோழி வந்தளங் கிருந்து
அதிர்ஷ்டக் காரியை அடைந்ததங் கிருந்து
*தனிக்காக் கோட்டைத் தன்பின் புறத்தால்
*புதிய கோட்டைப் புணர்வெளிப் புறத்தால்.

அங்கிருந் தாயினும் அவளைப் பெற்றிலர்
அங்ஙனம் பெறற்கு ஆதாரம் சற்றிலை
மணமகள் தோழி வந்தளங் கிருந்து
அதிர்ஷ்டக் காரியை அடைந்ததங் கிருந்து
*வெண்கட லிருக்கும் வியன் நீரிருந்து
விரிந்து அகன்ற வியநீர்ப் பரப்பிருந்(து).    620

அங்கிருந் தாயினும் அவளைப் பெற்றிலர்
அங்ஙனம் பெறறற்கு ஆதாரம் சற்றிலை
திகழ்தரை **சிறுபழச் செடியொன்(று) வளர்ந்தது
படர்புதர் செந்நிறப் பழந்தரு **மொருசெடி
வளர்ந்தது ஒருபுல் வயலில் ஒளியொடு
பூத்தது பொன்னிறத் தொருபூ காட்டிலே
மணமகள் தோழி வந்தள்அங் கிருந்து
அதிர்ஷ்டக் காரியை அங்கிருந் தெடுத்தனர்.

மணப்பெண் தோழியின் வாய்அழ கானது
நுவல்பின் லாந்தின் **நூனாழி போன்றது,   630
உயர்மணத் தோழியின் உயிர்ப்புள விழிகள்
விண்ணகத் தொளிரும் விண்மீ னனையவை,
மணப்பெண் தோழியின் வளப்புகழ்ப் புருவம்
கடல்மேற் திகழும் கவின்நிலாப் போன்றவை.

தோன்றுமெம் மணப்பெண் தோழியைக் காண்பீர்
பூக்கழுத் தில்நிறை பொன்னிறச் சுருள்கள்
சென்னியில் நிறைய பொன்னிறக் கூந்தல்
தங்க வளையல்கள் தளிர்க் கரங்களிலே
பொன்னினால் மோதிரம் பூவிரல் களிலே
பொன்னினால் அமைந்த பொன்மணி காதிலே   640
தங்கநூல் முடிச்சுகள் துங்கவிற் புருவம்
முத்தலங் காரம் வித்தகக் கண்ணிமை.

நனிமதி திகழ்வதாய் நானும் எண்ணினேன்
பொன்னின் வளையம் மின்னிய போதினில்;
எல்லவன் ஒளிர்வதாய் எண்ணினேன் நானும்
சட்டையின் கழுத்துப் பட்டி ஒளிர்கையில்;
நாவாய் ஒன்று நகர்வதா யெண்ணினேன்
தலையில் தொப்பி தளர்ந்தசை கையிலே.

மணப்பெண் தோழியை வானாய்ப் புகழ்ந்தேன்
பார்க்க விடுங்கள் நோக்குமெல் லோரையும்   650
அனைவரும் இங்கே அழகா னவரா
முதியோர் எல்லாம் அதிமதிப் பினரா
இளைஞர்கள் எல்லாம் எழிலா னவரா
கூட்டத்தில் அனைவரும் கொள்சிறப் பினரா!

மற்றஎல் லோரையும் இப்போது பார்த்தேன்
அனேகமாய் அனைவரும் அறிந்தவர் தாமே
இங்கிப் படிமுன் னிருந்தது மில்லை
இருக்கப் போவது மிலையினி நிச்சயம்
கூட்டத்தில் அனைவரும் கொள்சிறப் பினராய்
அனைவரும் இங்கே அழகா னவராய்    660
முதியோர் எல்லாம் அதிமதிப் பினராய்
இளைஞர்கள் எல்லாம் எழிலான வராய்;
வெளுப்புறு முடையில் முழுப்பே ருமுளர்
உறைபனி மூடிய உயர்காட் டினைப்போல
கீழ்ப்புறம் எல்லாம் கிளர்புல ரொளிபோல்
மேற்பபுற மெல்லாம் மிளிர்வை கறைபோல்.

வெள்ளிக் காசுகள் மிகமலிந் திருந்தன
பொற்காசு விருந்தில் பொலிந்து கிடந்தன
முழுக்கா சுப்பை முன்றிலில் கிடந்தன
பணப்பை பாதையில் பரவிக் கிடந்தன   670
அழைக்கப் பட்ட அயல்விருந் தினர்க்காய்
அழைத்த விருந்தினர் அதிபெரு மைக்காய்."

நிலைபெறும் முதிய வைனா மொயினன்
அழிவிலாப் பாடலின் ஆத(஡)ரத் தூணவன்
வண்டியில் இதன்பின் வந்தே யேறினன்
திகழ்அகம் நோக்கிச் செய்தனன் பயணம்;
தன்கதை பற்பல தாழ்விலா திசைத்தான்
மந்திரப் பாடல்கள் மாண்புறப் பயின்றான்
ஒருகதை பாடினான் இருகதை பாடினான்
மூன்றாம் கதையும் முடிவுறும் போது   680
மோதிற்று பாறையில் முன்வண்டி விற்கால்
முட்டிற் றடிமரக் குற்றியில் ஏர்க்கால்
நொருங்கிச் சிதைந்தது பெருங்கவி வண்டி
பாடகன் விற்கால் ஊடிற்று வீழ்ந்தது
ஏர்க்கால் வெடித்து இற்றுப் பறந்தது
பலகைகள் கழன்று பரவின பெயர்ந்து.

முதிய வைனா மொயினன் மொழிந்தான்
உரைத்தான் அவனே உரைத்தான் இவ்விதம்:
"இங்கே இருக்கும் இளைஞர்கள் மததியில்
வளர்ந்திடும் தேசிய மக்களின் மத்தியில்    690
அல்லது முதுமை அடைந்துளார் மத்தியில்
தளர்ந்தரு கிவரும் சந்ததி மத்தியில்
துவோனலா ஏகுவார் எவரெனு முளரோ
சாவுல குக்குப் போவார் உளரோ
துவோனலா விருந்து துறப்பணம் கொணர
தொல்சா வுலகினால் துளைப்பான் கொணர
சறுக்கு வண்டியைச் சமைக்கப் புதிதாய்
வண்டியைத் திருத்தி வருபுதி தமைக்க?"

இளைஞரும் அத்துடன் இவ்விதம் கூறினர்
முதுமையுற் றோரும் மறுமோழி கூறினர்:   700
"இல்லை யிங்குள இளைஞரின் மத்தியில்
இல்லை முதியவர் எவரிலும் நிச்சயம்
உயர்குடி மக்களில் ஒருவரு மில்லை
வீரம் நிறைந்த வீரரில் இல்லை
வல்லவன் துவோனலா செல்லுதற் கொருவர்
இறப்புல குக்கு எழுவோர் ஒருவர்
துவோனலா விருந்து துறப்பணம் கொணர
தொல்சா வுலகினால் துளைப்பான் கொணர
சறுக்கு வண்டியைச் சமைக்கப் புதிதாய்
வண்டியைத் திருத்தி வருபுதி தமைக்க."   710

முதிய வைனா மொயினன் பின்னர்
என்றுமே நிலைத்த இசைப்பா டகனவன்
தானே மீண்டும் போனான் துவோனலா
படுமாய் வுலகு பயணம் செய்தான்
துவோனலா விருந்து துறப்பணம் கொணர்ந்தான்
தொல்சா வுலகினால் துளைப்பான் கொணர்ந்தான்.

முதிய வைனா மொயினன் அதன்பின்
நீல நிறவனம் நிமிர்ந்தெழப் பாடினான்
அரியசிந் தூரம் அதிலெழப் பாடினான்
உகந்ததாய்ப் பேரி உயர்ந்தெழப் பாடினான்   720
அவற்றிலே யிருந்து அமைத்தான் வண்டி
அவற்றில் விற்கால் அமைத்தான் வகையாய்
ஏர்க்கால் அவற்றில் எடுத்தான் பின்னர்
நுகமரம் எல்லாம் இயற்றி முடித்தான்
சறுக்கு வண்டி திருத்தினான் இவ்விதம்
அப்புது வண்டியை அமைத்து முடித்தான்
புரவிக் குட்டியை அலங்கா ரித்தான்
மண்ணிறப் புரவி வண்டிமுன் நின்றது
ஏறிச் சறுக்கு வண்டியில் இருந்தனன்
ஏறி வண்டியில் இருந்து கொண்டனன்;   730
சாட்டைவீ சாமல் தனிப்பரி விரைந்தது
**மணிஅடி யிலாமலே வளர்பரி விரைந்தது
பழகிய சதுப்பு படர்நிலம் விரைந்தது
இரையுள்ள இடத்தே எழிற்பரி விரைந்தது
முதிய வைனா மொயினனைக் கொணர்ந்தது
என்றுமே நிலைத்த இசைப்பா டகனை
அவனது சொந்த அகல்கடை வாயில்
சொந்தக் களஞ்சிய முன்றிலின் முன்னே.


பாடல் 26 - லெம்மின்கைனனின் ஆபத்தான பிரயாணம் *

அடிகள் 1 - 382 : தன்னைத் திருமணத்துக்கு அழைக்காத காரணத்தால் ஆத்திரம் கொண்ட லெம்மின்கைனன் வடநாட்டுக்குப் புறப்படுகிறான். அங்கு அவனுக்கு ஏற்படக்கூடிய அபாயங்கள் பற்றியும் முன்னர் அங்கு ஏற்பட்ட மரணங்கள் பற்றியும் கூறித் தாய் தடுத்தும்கூடக் கோளாமல் பயணத்தை மேற்கொள்கிறான்.

அடிகள் 383 - 776 : அவனுடைய பயணத்தின்போது பல ஆபத்தான இடங்களைக் கடக்க நேர்ந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாகத் தனது மந்திர அறிவினால் எல்லாவற்றிலும் வெற்றி காண்கிறான்.

அஹ்தி என்பான் அகல்தீ வுறைபவன்
பரந்தகல் வளைகுடாப் பகுதியின் முடிவில்
உழுதுகொண் டிருந்தான் ஒருவயல் அவனே
உழுது புரட்டினான் ஒருவய லையவன்
அவனது செவிகள் அதிநுண் தகையன
கேட்கும் சக்தியும் கிளர்கூர் மையது.

கேட்டதோர் கூச்சல் கிராமத் திருந்து
ஏரிக்கு அப்பால் எழுந்தது சத்தம்
பனிக்கட்டி மீதில் பாதம் ஊன்றொலி
சமபுற் றரைமேல் சறுக்குவண் டியினொலி;   10
அவனுக் கொருநினை வப்போ துதித்தது
நெஞ்சிலோர் சிந்தனை நேரா யெழுந்தது;
வடபால் நிலம்திரு மணம்நடந் ததுவோ
எழும்குடி மனிதரின் இரகசியக் கூட்டமோ!
தன்வாய் கோணித் தலையைத் திருப்பினன்
கறுத்தத் தாடியைக் கையால் முறுக்கினன்
குருதியும் வடிந்து கொடிதிறங் கிற்று
காண்அபாக் கியவான் கன்னத் திருந்து;
உடனே தனது உழவினை நிறுத்தினான்
புரட்டலைப் பாதிப் புன்வயல் நிறுத்தினான்   20
எழில்நிலத் திருந்து ஏறினான் குதிரையில்
புறப்பட் டான்இல் போவதற் காக
அன்பு நிறைந்த அன்னையின் அருகே
பெரும்புக ழுறுதன் பெற்றோர் பக்கம்.

சென்றதும் அவ்விடம் செப்பினன் இங்ஙனம்
வந்து சேர்ந்ததும் வருமா றுரைத்தனன்:
"ஓ,என் அன்னையே, உயர்வய தினளே!
உணவினை விரைவாய் உடனெடுத் திடுவாய்
இங்கொரு பசியுளோன் இருக்கிறான் உண்ண
ஒருகடி கடிக்க உளம்கொள் பவற்கு;    30
அதேகணம் சூட்டை ஆக்கிடு சவுனா
அறையில்தீ மூட்டி ஆக்கிடு வெப்பம்
மனிதனைச் சுத்தமாய் மாற்றுமவ் விடத்தில்
தனிவிறல் வீரனைத் தயார்செயு மிடத்தில்."

அப்போது லெம்மின் கைனனின் அன்னை
உணவினைக் கொஞ்சம் உடன்விரைந் தெடுத்தாள்
பசியுறு மனிதன் பார்த்துண் பதற்காய்
ஒருகடி கடிக்க உளம்கொளு பவற்காய்
குளியல் குடிசையும் கொண்டது தயார்நிலை
ஆயத்த மானது அச்சவு னாவறை.   40

குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
உணவினைக் கொஞ்சம் உடன்விரைந் தெடுத்தான்
அந்நே ரத்தே அடைந்தான் சவுனா
குளியல் அறையுளும் குறுகினன் அங்ஙனம்;
அங்கொரு **பறவை அலசிக் கொண்டது
செய்தது சுத்தம் திகழ்**பனிப் பறவை
தலையை ஒருபிடி சணலைப் போலவும்
கழுத்தையும் வெளுப்பாய்க் கழுவிக் கொண்டது.

வீட்டினுள் சவுனா விருந்தவன் சென்றான்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:   50
"ஓ, என் அன்னையே, உயர்வய தினளே!
குன்றத் திருக்கும் குடிற்கே விரைவாய்
அங்கிருந் தெடுத்துவா அழகிய உடைகளை
மாசிலா ஆடைகள் வாகாய்ச் சுமந்துவா
நானே அவற்றை நன்கணி வதற்கு
என்னுடல் அவற்றை எடுத்துத் தரிக்க!"

விரைந்து அன்னையும் வினவுதல் செய்தாள்
மிகுவய துப்பெண் விசாரணை செய்தாள்:
"எங்கே செல்கிறாய் எந்தன் மகனே
**சிவிங்கிவேட் டைக்கா செல்லப் போகிறாய்    60
அல்லது காட்டெரு ததன்பின் சறுக்கவா
அல்லது எண்ணமா அணிலதை எய்ய?"

குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"ஓ,என் அன்னாய், உழன்றெனைச் சுமந்தாய்!
சிவிங்கிவேட் டைக்குச் செல்லுதற் கில்லை
சறுக்கவு மில்லைத் தனிக்காட் டெருதுபின்
அல்லது இல்லை அணிலையும் எய்தல்:
வடநாட்(டு) விருந்து புறப்படப் போகிறேன்
இரகசியக் குடியர் இடம்போ கின்றேன்;   70
எழிலார் உடைகளை என்னிடம் கொணர்வாய்
கொணர்வாய் என்னிடம் குறைவிலா ஆடை
கடிமண வீட்டில் காட்சியா யிருக்க
விருந்து நிகழ்ச்சிக் கணிந்து நான்செல்ல."

தனது மைந்தனைத் தடுத்தாள் அன்னை
தனது மனிதனைத் தடுத்தாள் பெண்ணவள்
வேண்டாம் என்றனர் விளங்கிரு பெண்கள்
தடுத்தனர் இயற்கையின் தையலர் மூவர்
புறப்ப(ட்)டு லெம்மின் கைனன் போவதை
நிகழ்நல் வடபால் நிலவிருந் துக்கு.    80

மாதா இவ்விதம் மகனுக் குரைத்தாள்
பெருவய தினள்தன் பிள்ளைக் குரைத்தாள்:
"அன்பின் மகனே, அகலுதல் வேண்டாம்!
நேசமார் மகனே, தூரநெஞ் சினனே!
வைபவ விருந்து வடநாட் டுக்கு
குழுவினர் பலபேர் குடிக்கும் வைபவம்!
அங்கே நீயும் அழைக்கப் பட்டிலை
நீயோ அங்கே தேவைப் பட்டிலை."

குறும்பன் லெம்மின் கைனனப் போது
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:   90
"அழைப்புக் கேகுவர் அதிஇழிந் தவர்கள்
அழைப் பில்லாமல் அரியோர் துள்ளுவர்;
அழைக்கப் பட்டவர் அம்நிலா வயதினர்
ஓய்வே இல்லா உயர்தூ துவராம்
தீப்பொறி சிந்தும் திகழ்வாள் அலகில்
குவிந்தொளி சிதறும் கூரிய முனையில்."

லெம்மின் கைனனின் அன்னையப் போது
தடுக்க முயன்றாள் தனையனை இன்னும்:
"வேண்டாம் வேண்டாம் விறல்என் மதலாய்!
வடபுல விருந்தில் வலிந்தே செல்லல்!   100
பயணத் தறிவாய் பற்பல அற்புதம்
மாபெரும் அதிசயம் வந்திடும் வழியில்
வன்கொடு மூன்று மரணம் நேர்ந்திடும்
மனிதனின் இறப்பும் வந்திடும் மூன்று."

குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"வயோதிப மாதர்க்(கு) மரணம்என் றும்தான்
எல்லா இடத்திலும் இவர்க்கிறப் புத்தான்
இவைசார் அக்கறை இல்லைவீ ரர்க்கு
இவைபற்றி கவனமும் இல்லைஅ வர்க்கு    110
ஆயினும் அவைஅவை அங்ஙனம் நிகழ்க,
என்றன் காதில்நீ இயம்புவாய் கேட்க
எந்த மரணம் இனிமுதல் நிகழ்வது
முதலில் நிகழ்வதும் முடிவில் நிகழ்வதும்?"

லெம்மின் கைனனின் அன்னை மொழிந்தனள்
முதிய மாதவள் மொழிந்தாள் மறுமொழி:
"மரணம் பற்றி வழுத்துவேன் உள்ளதை
மனிதன் விருப்புபோல் மரணம் நிகழா
முதல்வரப் போகும் மரணம் மொழிவேன்
மரணம் இதுவே வருமுதல் மரணம்    120
சிறிதுதூ ரம்நீ செல்வாய் பாதையில்
பாதையில் ஒருநாள் பயணம் முடிப்பாய்
அப்போ(து) நெருப்பு ஆறொன் றெதிர்ப்படும்
அந்தஆ றுன்னெதிர் வந்தே அடுக்கும்
ஆற்றில்தீ வீழ்ச்சி அங்கே தோன்றிடும்
படர்தீ வீழ்ச்சியில் பாறைத்தீ வொன்(று)
பாறைத் தீவிலே பதிந்ததோர் தீமுடி
தீமுடி யதிலே தீக்கழு கொன்று
இரவில் அலகை எடுத்திடும் தீட்டி
பகலில் நகத்தைப் படுகூ ராக்கிடும்    130
அவ்வழி வந்திடும் அந்நிய மனிதர்க்(கு)
தன்வழி வந்திடும் தனிநபர் ஒருவர்க்(கு)."

குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"இந்த மரணம் அரிவையர் மரணம்
வல்வீ ரன்தன் மரணமே அல்ல
நல்லது அதற்கோர் நல்வழி காண்பேன்
ஏதெனும் நல்லதாய் எண்ணுவேன் கருமம்:
பரியொன்று தோன்றநான் பாடுவேன் **'அல்டரி'ல்
'அல்டரி'ல் மனிதனும் அமையநான் பாடுவேன்   140
என்னுடைய பக்கத் தேகுதற் காக
என்றன் முன்புறம் இனிதுற நடக்க;
தாரா போல்நான் மூழ்குவேன் அப்போ
அடியில் வாத்தாய் ஆழத் தேகுவேன்
கழுகின் கூரிய உகிர்களின் கீழாய்
**இராட்சசக் கழுகின் இகல்விரற் கீழாய்;
"ஓ,என் அன்னாய், உழன்றெனைச் சுமந்தோய்!
இடையில்வந் தெய்தும் இறப்பினை நவில்க!"

லெம்மின் கைனனின் அன்னை கூறினள்:
"இந்த மரணம் இரண்டாம் மரணம்    150
சிறிதுதூ ரம்நீ செல்வாய் பாதையில்
பயணம் முடிப்பாய் பகரிரண் டாம்நாள்
நெருப்புக் கணவாய் நேர்ப்படும் அப்போ
அதுஉன் பாதையில் அணுகும் குறுக்கே
வெகுதொலை கிழக்கில் மிக்குநீண் டிருக்கும்
வடமேல் எல்லையும் முடிவற் றிருக்கும்
கொதிக்கும் கற்களைக் கொண்டது நிறைய
எரியும் பாறைகள் இருக்கும் அதனுள்;
அதனுட் சென்ற ஆட்கள்பல் நூற்றுவர்
அதனுள் நிறைந்தவர் ஆயிரக் கணக்காம்   160
வாள்விற லார்எ(ண்)ணில் வரும்ஒரு நூறுபேர்
இரும்புப் பரிகள் இருக்குமோ ராயிரம்."

குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"அதுவொரு மனிதனின் மரணமே அல்ல
அதுவொரு வீரனின் அழிவுமே யல்ல
ந(ல்)லது அதற்கொரு நனிசூழ் வெண்ணினேன்
நினைத்தேன் சூழ்ச்சியை நேர்வழி கண்டேன்
பாடுவேன் தோன்றிடப் பனித்திரள் மனிதன்
மிகுபலப் பனித்திரள் வீரனைப் பாடுவேன்  170
அனலின் நடுவிலே அவனைத் தள்ளுவேன்
அழுத்துவேன் பலமாய் அவனை நெருப்பில்
கொதிசவு னாவில் குளிப்பதற் காக
அத்துடன் செப்பில் அமைந்த தூரிகை;
மாறியப் போதே மறுபுறம் செல்வேன்
எரியின்ஊ டாக எனைக்கொடு போவேன்
எனது தாடியாங் கெரியா திருந்திடும்
சுருளுறும் தலைமுடி கருகா திருந்திடும்
ஓ,என் அன்னாய், உழன்றெனைச் சுமந்தோய்!
இறுதிவந் தெய்தும் இறப்பினைப் பகர்வாய்!"   180

லெம்மின் கைனனின் அன்னை கூறினள்:
"மொழியுமிம் மரணம் மூன்றாம் மரணம்
செல்லுவாய் இன்னும் சிறுதொலை பாதையில்
முடிந்திடும் இன்னொரு முழுநாள் இதிலிருந்(து)
வடபால் நிலத்து வாயிலை நோக்கியே
அந்தமா நிலத்து அமைகுறும் பாதையில்
உன்மீ தப்போ ஓரோநாய் பாய்ந்திடும்
அடுத்ததாய்க் கரடியும் அடித்திடும் உன்னை
வடபால் நிலத்து வாயில் தலத்தினில்
மிகவும் குறுகிய மிகச்சிறு ஒழுங்கையில்;   190
உண்டது இதுவரை ஒருநூற் றுவராம்
அழிந்து போனவர் ஆயிரம் வீரராம்
உனைஏன் அவையும் உண்டிட மாட்டா
காப்பில்லா உனைஏன் கடிதழித் திடாவாம்?"

குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"செம்மறி யாட்டுக் குட்டியைத் தின்னலாம்
பச்சையாய்க் கிழித்துப் பலதுண் டாக்கலாம்
ஆயினும் முடியா அதுபல வீனரை
அல்லது சோம்பேறி யானவீ ரரையும்!   200
மனிதனின் பட்டிநான் நனிபூட் டியுளேன்
நனிபொருத் தியுளேன் மனிதனின் ஊசிகள்
வலிதுகட் டியுளேன் மறவரின் வளையம்
ஆதலால் நானும் வீழவே மாட்டேன்
*உந்தமோ என்பான் ஓநாய் வாய்களில்
பெரிதே சபிப்புறு பிராணியின் அலகில்.

இப்போ தோநாய்க்(கு) எண்ணினேன் சூழ்ச்சியொன்(று)
கரடிக்கும் கூடக் கண்டுளேன் ஓர்வழி
ஓநாய் வாய்க்கட் டுண்டிட விசைப்பேன்
கரடிக்கு இரும்புக் கட்டுறப் பாடுவேன்    210
தரைமட்ட மாக்கித் தரிபத ராக்குவேன்
சுளகிலே சலித்துப் துகளாக மாற்றுவேன்
இங்ஙனம் விடுவித் தென்னையே கொள்வேன்
இங்ஙனம் பயணத் தெல்லையை அடைவேன்."

லெம்மின் கைனனின் அன்னை கூறினள்:
"எல்லையை இன்னும்நீ எய்தவே யில்லை!
அப்படிப் பயணித் தகலும் காலை
மாபெரும் அற்புதம் வரும்பய ணத்தில்
துயர அதிசயம் தோன்றிடும் மூன்று
மனிதச் சாவுக்கு வந்திடும் முவ்வழி;    220
அவ்விடத் தைநீ அடைந்திடும் நேரம்
நேர்ந்திடும் இன்னும் நெடுந்துயர்ச் சம்பவம்:
பயணித் தொருகுறும் பாதையில் செல்வாய்
வடநாட்டு முற்றம் வந்துநீ சேர்வாய்
அங்கொரு வேலி அமைந்திடும் இரும்பால்
அடைப்பு உருக்கினால் ஆனதும் வந்திடும்
நிலத்தினி லிருந்து நீள்வான் வரையிலும்
விண்ணிலே யிருந்து வியன்புவி வரையிலும்
ஈட்டிகள் செருகி இருந்திடும் அதனில்
வரிச்சுகள் நெளியும் புழுக்களால் ஆனவை   230
பிணைப்புண் டிருந்தன பெரும்பாம் பிணைத்து
கனபல்லிக் **கணத்தால் கட்டிய வேலியாம்;
வால்கள் இருப்பது வளைந்தசைந் திருக்க
மொட்டந் தலைகள் முழுதசைந் தாட
மண்டை ஓடுகள் வாய்உமிழ்ந் திருக்க
வாலெலாம் உள்ளே வருதலை வெளியே.

பூமியில் இருந்தவை புழுக்கள்வெவ் வேறாம்
வரிசையாய்ச் சர்ப்பம் விரியன் பாம்புகள்
மேலே நாக்குகள் சீறிக் கிடப்பன
கீழே வால்கள் ஆடிக் கிடப்பன;    240
அனைத்திலும் பயங்கர மான ஒன்றுளது
குறுக்கே வாயிலில் படுத்துக் கிடப்பது
நீண்டது வசிப்பிட மரத்திலும் நெடியதாய்
ஒழுங்கைக் கதவத் துயர்தூண் பருப்பம்
மேலே நாவினால் சீறிக் கிடக்கும்
மேலே வாயினால் மிகஇரைந் திருக்கும்
எதிர்பார்த் தல்ல எவரையும் வேறு
ஏழை உனையே எதிர் பார்த்தங்கு."

குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:   250
"அந்த மரணம் அதுகுழந் தையின்சா
அதுவொரு வீரனின் மரணமே யல்ல;
அனலை வசியப் படுத்தவும் அறிவேன்
தணலை அணைத்துத் தணிக்கவும் அறிவேன்
தடுத்துப் புழுக்களை நிறுத்தவும் அறிவேன்
அரவைத் திருப்பி அனுப்பவும் அறிவேன்;
நேற்றுத் தானே நிகழ்ந்த திச்சம்பவம்
விரியன் பாம்பு விளைநிலம் உழுதேன்
பாம்புப் பூமியைப் பாங்காய்ப் புரட்டினேன்
விளங்கிய எனது வெற்றுக் கைகளால்   260
விரியன் பாம்புகள் விரல்நகத் தெடுத்தேன்
தூக்கினேன் பாம்புகள் துணிந்தென் கைகளால்
பத்து விரியன் பாம்புகள் கொன்றேன்
அழித்தேன் நூறு கறுத்தப் புழுக்களை
ஆயினும் விரியனின் இரத்தமென் உகிர்களில்
பாம்பின் கொழுப்புப் படிந்தது கைகளில்;
ஆதலால் எனக்கு அதுநிக ழாது
என்றுமே இனிமேல் ஏற்பட மாட்டா
இராட்சசப் புழுவின் வாய்க்குண வாக
பாம்பொன் றின்வாய்ப் படுமிரை யாக:   270
நீசப் பிராணிகள் நீள்கரத் தெடுப்பேன்
கழுத்துக்கள் அனைத்தையும் முறுக்கிப் பிழிவேன்
விரியன் பாம்பினை வீழ்த்துவேன் ஆழம்
இழுப்பேன் தெருவின் ஓரம் புழுக்களை
வடநில முன்றிலால் வைப்பேன் அடிகளை
செல்வேன் முன்னே இல்லத் துள்ளே."

லெம்மின் கைனின் அன்னை கூறினள்:
"வேண்டாம், எனது வியன்மகன் வேண்டாம்!
வடபுல வசிப்பிட வழிச்செலல் வேண்டாம்!
வேண்டாம் சரியொலா வில்அமை வீட்டினுக்(கு)!   280

வன்**வார் வாளுறு மனிதர் அங்குளார்
போரின் படைக்கல வீரர்கள் அங்குளார்
குடித்துன் மத்தம் பிடித்த மனிதர்கள்
அதிகம் குடித்து அறக் கெட்டவர்கள்
ஏழையே உன்னை இனிச்சபித் திசைப்பார்
கூரிய அலகுறும் கொடுவாள் களுக்கு;
பாடப் பட்டனர் பலசீர் மனிதர்முன்
வெல்லப் பட்டனர் மிகவுயர் மனிதரும்."

குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:   290
"நான்அங்கு முன்னர் நனிசென் றுள்ளேன்
வாபால் நிலத்து வசிப்பிடத் தாங்கே
எனைப்பா டினரிலை லாப்பியர் எவரும்
என்னைச்சா டினரிலை எத்துர்யா மனிதரும்
நானே பாடுவேன் நவில்லாப் பியரை
சாடுவேன் துர்யா மனிதர்கள் தம்மையும்
அவர்கள் தோள்ஊடாய் அங்குநான் பாடுவேன்
தாடையின் ஊடாய்ச் சரியாய்ப் பேசுவேன்
சட்டைக் கழுத்து சரியிரண் டாம்வரை
மார்பு எலும்புகள் வலிதுடை படும்வரை."   300

லெம்மின் கைனனின் அன்னை கூறினள்:
"ஓ,என் மைந்தா, அபாக்கிய வானே!
முன்னைய நிகழ்ச்சியை இன்னமும் நினைவாய்
பழையதைப் பற்றிப் புழுகியே நிற்கிறாய்
நீயங்கு சென்றது நிசம்தான் முன்னர்
வடபால் நிலத்து வசிப்பிடத் தாங்கே
தேங்கிய குளங்களில் நீந்திய துண்டுதான் பயின்றாய் **முட்செடி பலவுள குளங்களில்
இரையுநீர் வீழ்ச்சியில் இறங்கி விழுந்தாய்
பொங்கிப் பாயும் புதுநீ ரோட்டம்    310
துவோனிநீர் வீழ்ச்சியைத் தொட்டே அறிந்தாய்
அளந்தாய் மரண அகிலத் தருவியை
இன்றும் அங்குதான் இருந்திருப் பாய்நீ
ஆயினும் ஏழையுன் அன்னையால் தப்பினாய்.

நெஞ்சில்வை யப்பா நினக்குநான் மொழிவதை
வருகிறாய் நீயே வடபுல வசிப்பிடம்
உண்டு கழுமரம் குன்றுகள் நிறைய
முன்றில்கள் நிறைய முழுத்தூண் உள்ளன
நிறைய மனிதரின் தலைகள் அவற்றிலே
கழுமர மொன்றுதான் தலையிலா துளது   320
அக்கழு மரத்தின் அருங்கூர் முனைக்கு
உன்தலை கொய்தே உடனெடுக் கப்படும்."

குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"மடையன் அவற்றால் மனத்துயர் கொள்வான்
தகுதியற் றவன்தான் தான்கவ னிப்பான்
ஐந்து ஆறுபோ ராட்டஆண் டுகளில்
கொடும்ஏழ் யுத்தக் கோடைகா லத்தில்
மறவன் அவற்றை மனதில் கொள்ளான்
தவிர்க்கவ<ம் செய்யான் தான்குறைந் தளவு;஠ 330
என்போ ராடை எடுத்துக் கொணர்வாய்
பழைய போராடையைப் பாங்காய்க் கொணர்வாய்!
எந்தையின் வாளை இனிநான் எடுக்கிறேன்
அப்பா வின்வாள் அலகைத் தேடுவேன்;
அதுவும் வெகுநாள் அருங்குளிர்க் கிடந்தது
இருந்தது மறைவாய் இயைபல் லாண்டு
அங்கே இதுவரை அழுதுகொண் டிருந்தது
தரிப்போன் ஒருவனை எதிர்பார்த் திருந்தது."

அங்ஙனம் யுத்த ஆடையைப் பெற்றனன்
படுபழம் போரின் உடையைப் பெற்றனன்   340
தந்தையின் நித்தியத் தனிவாள் எடுத்தனன்
தாதையின் போரின் தோழனைக் கொண்டனன்
பலகையில் அதனைப் பலமாய்க் குத்தினான்
நிலத்தில் குத்தி அலகைத் திணித்தான்:
திருப்பி வாளினைச் செங்கைப் பிடித்தான்
பழச்செடி முடியில் ஒருபுதுப் பறவைபோல்
அல்லது வளர்**சூ ரைச்செடி போல;
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்:
"வடபால் நிலத்து மனைகளில் அரிது
சரியொலாப் பகுதியின் தங்ககத் தரிது    350
அரியஇவ் வாளினை அளக்க முடிந்தவன்
இகல்வாள் அலகை எதிர்க்க முடிந்தவன்."

உருவினன் குறுக்குவில் உறும்சுவ ரிருந்து
உரமுறு கொளுவியில் இருந்தே ஒருவில்
இனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னான்
இந்த மொழிகளில் இவ்விதம் மொழிந்தான்:
"நானொரு மனிதனாய் நவில்வேன் அவனையே
நானொரு வீரனாய் நம்புவேன் அவனையே
எந்தன் குறுக்குவில் இழுப்பவன் தன்னை
வளைந்தஎன் வில்லை வளைப்பவன் தன்னை   360
வடபால் நிலத்து வசிப்பிடத் தாங்கே
அந்தச் சரியொலா அமையகங் களிலே."

குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
எழிலார் தூர நெஞ்சினன் என்போன்
அமர்க்காம் உடைகளை அணிந்து கொண்டனன்
சமர்க்காம் உடைகளைத் தரித்துக் கொண்டனன்
தன்அடி மைக்குச் சாற்றினான் இவ்விதம்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"அறவிலைக் கெடுத்த அடிமையே கேள்நீ!
காசுக்குப் பெற்ற கூலியே, கேள்நீ!    370
அமர்க்காம் குதிரையை ஆயத்தம் செய்வாய்
போர்ப்பரிக் குட்டிக்குப் பூட்டு அணிகலன்
நான்விருந் துக்கு நலமுடன் செல்ல
கூளிக் குடியரின் கூட்டத் தேக!"

அந்த அடிமை அமைபணிச் சேவகன்
முன்னேர் விரைந்து முன்றிலை யடைந்து
அம்பரிக் குட்டிக் கணிகலன் பூட்டி
தீச்செந் நிறத்ததை ஏர்க்கால் பூட்டி
அங்கே யிருந்து அவன்வந் தியம்பினான்:
"என்வே லையைநான் இனிதே முடித்தேன்   380
ஆயத்த மாக்கினேன் அரியநும் பரியை
நற்பரிக் குட்டியை நன்கலங் கரித்தேன்."

குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
புறப்பட் டேகப் புணர்ந்தது நேரம்
ஒருகை இணங்க மறுகை பிணங்க
நரம்புள விரல்பல வந்தம் செய்தன;
நினைத்தவா றவனே நேர்புறப் பட்டான்
அவதான மிலாதே அவன்புறப் பட்டனன்.

சேய்க்குத் தாயவள் செய்தாள் போதனை
மூத்தோள் பிள்ளையை முன்னெச் சரித்தாள்   390
உத்தரத் தின்கீழ் உயர்கத வருகே
கலயமும் கெண்டியும் கலந்தவைப் பிடத்தில்:
"எந்தன் மகனே, இணையிலா தவனே!
எனது குழந்தாய், இகலுரப் பிள்ளாய்!
நிதக்குடிக் குழுவிடம் நீசெல நேர்ந்தால்
எங்கே யாயினும் அங்ஙனம் நிகழ்ந்தால்
சாடியில் உள்ளதில் பாதியை அருந்து
கலயப் பாதியே கவனமா யருந்து
பெறட்டும் மற்றவன் அடுத்துள பாதியை
தீயமா னிடர்க்காம் தீதுறும் பாதி   400
சாடியின் அடியிலே சார்ந்துள புழுக்கள்
ஆழக் கலயத் தமைவன கிருமி."

போதனை இன்னம் புரிந்தாள் மகற்கு
தன்பிள் ளைக்குச் சாற்றினள் உறுதியாய்
தூரத்து வயல்கள் தொடுமுடி விடத்தில்
கடைசி வாயிற் கதவத னருகில்;
"நிதக்குடிக் குழுவிடம் நீசெல நேர்ந்தால்
எங்கே யாயினும் அங்ஙனம் நிகழ்ந்தால்
இருக்கையில் பாதி இருக்கையி லிருப்பாய்
அடியிடும் போது அரையடி வைப்பாய்   410
பெறட்டும் மற்றவன் அடுத்துள பாதியை
தீயமா னிடர்க்காம் தீதுறும் பாதி
அவ்விதம் வருவாய் அருமனி தனாய்நீ
நீமா றிடுவாய் நிகரிலா வீரனாய்
மக்கள்மன் றங்கள் மற்றுநீ செலலாம்
வழக்குகள் ஆய்ந்து வழங்கலாம் சமரசம்
வீரர்கள் நிறைந்த வியன்குழு மத்தியில்
மனிதர்கள் நிறைந்த கணங்களின் மத்தியில்."

பின்புறப் பட்டான் லெம்மின் கைனன்
அரும்பரி வண்டியில் அமர்ந்தவ னாக   420
சாட்டையை ஓங்கிச் சாடினான் பரியை
மணிமுனைச் சவுக்கால் மற்றதை அடித்தான்:
இகல்பரி வண்டியை இழுத்துச் சென்றது
உயர்பரி விரைந்து ஓடிச் சென்றது.

சற்றுநே ரம்மவன் சவாரியே செய்தான்
நற்சிறு பொழுதே நடத்தினன் பயணம்
பாதையில் கோழிப் பல்கணம் கண்டனன்
காட்டுக் கோழியின் கூட்டம் பறந்தது
பறவைகள் கூட்டமும் பறந்தே வந்தது
ஓடிச் சென்ற உயர்பரி முன்னே.    430

சிறுதொகை மட்டுமே இறகுகள் இருந்தன
காட்டுக் கோழியின் கவின்சிறை வழியில்
எடுத்தனன் லெம்மின் கைனனே அவற்றை
சேர்த்தே வைத்தனன் சிறுபை யொன்றிலே;
என்ன வருமென எவருமே யறியார்
பயணத் தென்ன நிகழுமென் றுணரார்
பயிலகத் தெதுவும் பயனுள தாகலாம்
அவசர தேவைக் கவைநலம் தரலாம்.

சிறிதே இன்னமும் செய்தனன் சவாரி
பாதையிற் கொஞ்சம் பயணம் செய்தனன்   440
அப்போ குதிரை நிமிர்த்திற் றதன்செவி
தழைத்ததன் செவிதாம் பரபரப் பாயின.
குறும்பன் லெம்மின் கைனன் அவனே
அவன்தான் குறும்பன் தூர நெஞ்சினன்
சறுக்கு வண்டியில் தானே எழுந்து
சற்றே சரிந்து எட்டிப் பார்த்தனன்:
அன்னை சொன்னது அதுபோ லிருந்தது
சொந்தப் பெற்றவள் சொல்போ லிருந்தது
நிசமாய் அங்கொரு நெருப்பா றிருந்தது
குதிரையின் முன்னே குறுக்காய் எழுந்தது   450
ஆற்றிலே நெருப்பு வீழ்ச்சிதோன் றிற்று
பாய்வீழ்ச் சியில்தீப் பாறைத் தீவு
பாறைத் தீவிலே படியும் தீமுடி
நெருப்பு முடியிலோர் நெருப்புக் கழுகு
கழுகின் தொண்டையில் கனலே மூண்டது
வாயிலே தீவெளி வந்தது சீறி
இறகுகள் அனலாய் எங்கும் ஒளிர்ந்தன
தீப்பொறி சிதறி திசையெலாம் பறந்தது.

தூரநெஞ் சினனை தொலைவிற் கண்டது
லெம்மின் கைனனை நெடுந்தொலை கண்டது:   460
"எங்கப்பா பயணம் ஏ,தூர நெஞ்சின?
லெம்பியின் மைந்தனே, எங்கே எழுந்தனை?"

குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"வடபுல விருந்து, வழிப்புறப் பட்டேன்,
குடிக்கும் இரகசியக் குழுவிடம் போகிறேன்;
சற்று அப்பால் தள்ளியே நிற்பாய்
வழியினை விட்டே விலகியே நிற்பாய்
பயணியைப் போகப் பாங்குடன் விடுவாய்
லெம்மின் கைனனை விடுவாய் சிறப்பாய்   470
கடந்துசெல் தற்கு கடுகிநின் புறமாய்
உனக்கப் பாலே உடன்நடந் தேக!"

இவ்விதம் கழுகால் இயம்ப முடிந்தது
வியன்தீத் தொண்டையால் மெதுவாய்ச் சொன்னது:
"நானொரு பயணியை நனிசெல விடுவேன்
நிசமதிற் சிறப்பாய் லெம்மின் கைனனை
என்வா யுடா யேகுவ தற்கு
தொண்டையின் ஊடாய்த் தொடர்செல வுக்கு
அங்குதான் உன்றன் அகல்வழி செல்லும்
அங்கிருந் ததனுடை அமைநிலத் தேக   480
அந்தநீள் பெரிய அருவிருந் துக்கு
நிரந்தர மானதோர் நேரமர் வுக்கு."

எதைத்தான் ஏற்றான் லெம்மின் கைனன்
அதைப்பொறுத் ததிகம் அக்கறை யில்லை
சட்டைப் பையினில் தன்கை விட்டான்
சுருக்குப் பையினில் தொடுவிரல் நுழைத்தான்
காட்டுக் கோழியின் கறுப்பிற கெடுத்தான்
சிறிதே அவற்றை மெதுவாய்த் தேய்த்தான்
தன்னிரு உள்ளங் கைகளின் நடுவே
தன்விரல் பத்தின் தனியிடத் திடையே   490

காட்டுக் கோழியின் கூட்டம் பிறந்தது
காட்டுக் கோழியின் கூட்டம் முழுவதும்
கழுகின் தொண்டையுள் கடிதவை திணித்தான்
பெரும் பட்சணியின் பேரல குக்குள்
கழுகின் நெருப்பு உமிழ்தொண் டைக்குள்
இரையுண் பறவையின் ஈறுகள் நடுவே;
இடுக்கணில் அன்றவன் இவ்விதம் தப்பினான்
அவன் முதல்நாளை அங்ஙனம் கடந்தான்.

சாட்டையை ஓங்கிச் சாடினான் பரியை
மணிமுனைச் சவுக்கால் மற்றதை அடித்தான்;  500
படர்பொலிப் புரவி பாய்ந்தே சென்றது
பரியும் துள்ளிப் பாய்ந்தே சென்றது.
சிறிதே பயணப் பாதையில் சென்றனன்
சிறிது தூரம் சென்றனன் கடந்து
அதிர்ச்சியிப் போது அடைந்தது குதிரை
பயந்து கத்திப் பாய்பரி நின்றது.

எழுந்தனன் சறுக்கு வண்டியி லிருந்து
எட்டிப் பார்க்க எடுத்தனன் கழுத்தை
அன்னை சொன்னது அதுபோ லிருந்தது
சொந்தப் பெற்றவள் சொல்போ லிருந்தது   510
நெருப்புக் கணவாய் நேரெதிர் வந்தது
அந்தப் பாதையில் அதுகுறுக் கிட்டது
கிழக்கில் வெகுதொலை முழுக்கநீண் டிருந்தது
வடமேல் எல்லையும் முடிவற் றிருந்தது
கொதிக்கும் கற்களும் கூடவே இருந்தன
எரியும் பாறைகள் தெரிந்தன அதனுள்.

எதைத்தான் ஏற்றான் லெம்மின் கைனன்
மானிட முதல்வனை மனதில் வணங்கினன்:
"ஓ,முது மனிதனே, உயர்மா தெய்வமே!
விண்ணுல குறையும் வியனார் தந்தையே!   520
வடமேற்கிருந்தொரு மஞ்சினை யெழுப்பு
இன்னொன்றை மேற்கில் இருந்தே யனுப்பு
மூன்றாவ தொன்றை முதிர்கிழக் கிருந்து
வடகிழக் கொன்றினை வாகாய் உயர்த்து
அவற்றின் கரைகளை அமைப்பாய் ஒன்றாய்
ஒன்றொடு அவற்றை ஒன்றில் மோது!
சறுக்கு மரமாழ் தண்பனி மழைபொழி
ஈட்டி ஆழம் எழட்டும் பொழிந்து
அச்செங் கனலும் அகன்ற பாறைமேல்
பற்றி எரியுமப் பாறைகள் மேலே!"    530

அம்முது மனிதர், அதிஉயர் தெய்வம்,
வானகம் வதியும் மாமுது தந்தை,
வடமேற் கிருந்தொரு மஞ்சினை எழுப்பினார்
இன்னொன்றை மேற்கில் இருந்தே அனுப்பினார்
கிழக்கி லிருந்தும் கிளர்முகில் படைத்தார்
வடகிழக் கிருந்து வருகாற் றுயர்த்தினார்
அவைகள் அனைத்தையும் அமைத்தார் ஒன்றாய்
ஒன்றொடு அவற்றில் ஒன்றை மோதினார்
சறுக்கு மரமாழ் தண்மழை பொழிந்தது
ஈட்டிஆ ழத்தில் எழுந்தது பொழிந்து    540
அச்செங் கனலும் அகன்ற பாறைமேல்
பற்றி எரியுமப் பாறைகள் மேலே;
ஒருபனி மழைக்குளம் உதித்தது ஆங்கே
உறுகுழம் பினிலேரி உருவா யிற்று.

குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
பனித்திரள் பாலம் பாடினான் அதன்மேல்
பனிமழை நிறைந்த படிகுளக் குறுக்கே
ஒருகரை யிருந்து மறுகரை வரைக்கும்
அங்ஙனம் தாண்டினன் அந்தஆ பத்தை
பகர்இரண் டாம்நாட் பயணம் முடித்தான்.   550

சாட்டையை ஓங்கிச் சாடினான் பரியை
மணிமுனைச் சவுக்கால் மற்றதை அடித்தான்;
விரைந்து குதிரை பறந்தே சென்றது
பரியும் துள்ளிப் பாய்ந்தே சென்றது.
ஓரிரு **மைல்கல் ஓடிற் றுப்பரி
சிறந்தநாட் டுப்பரி சிறுதொலை சென்றது
சென்றபின் அப்பரி திடீரென நின்றது
அசையா(து) நின்றது அந்த இடத்திலே.

குறும்பன் லெம்மின் கைனன் அவனே
துள்ளி யெழுந்தான் துணிந்தே பார்த்தான்   560
வாயிலில் ஆங்கே ஓநாய் நின்றது
ஒழுங்கையில் கரடி ஒன்றெதிர் நின்றது
வடபால் நிலத்து வாயிலில் ஆங்கு
எதிர்நீள் ஒழுங்கையின் எல்லையில் ஆங்கு.

குறும்பன் லெம்மின் கைனனப் போது
அவன்தான் அழகிய தூர நெஞ்சினன்
சட்டைப் பையில் தன்கை யிட்டான்
சுருக்குப் பையில் தொடுகை நுழைத்தான்
செம்மறி உரோமம் சிறிதே யெடுத்தான்
சிறிது மென்மையாய் தேய்த்தான் அவற்றை   570
தன்னிரு உள்ளங் கைகளின் நடுவில்
தன்விரல் பத்தின் தனியிடத் திடையே.

உள்ளங் கையில் ஒருமுறை ஊதினான்
செம்மறி யாடுகள் திசைவிரைந் தோடின
செம்மறிக் கூட்டம் சேர்ந்தெலாம் விரைந்தது
மாபெரும் ஆட்டு மந்தைகள் ஓடின;
ஓநாய் அவ்வழி ஓடின விரைந்து
அவற்றைக் கரடிகள் தாக்கத் தொடங்கின
குறும்பன் லெம்மின் கைனன் அவன்தான்
தொடங்குதன் பயணம் தொடர்ந்தே சென்றனன்.   580

தன்வழி சிறுதொலை தானே சென்றதும்
அடைந்தனன் வடபால் அகல்நில முற்றம்
அங்கே வேலியும் ஆனது இரும்பால்
அடைப்பும் உருக்கால் அடைக்கப் பட்டது
அறுநூறு அடிகள் அகழ்மண் ணுள்ளே
ஆறா யிரமடி அகலவிண் ணோக்கி
ஈட்டிகள் செருகி இருந்திடும் அதனில்
வரிச்சுகள் நெளியும் புழுக்களால் ஆனவை
பிணைப்புண் டிருந்தன பெரும்பாம் பிணைத்து
பல்லிக் கணத்தால் பிணைத்த வேலியாம்;  590
வால்கள் இருப்பது வளைந்தசைந் திருக்க
மொட்டந் தலைகள் முழுதசைந் தாட
நவில்பெருந் தலைகள் நடுங்குதற் காக
வாலெலாம் உள்ளே வருதலை வெளியே.

குறும்பன் லெம்மின் கைனன் அவனே
தெரிந்தனன் பினனர் சிந்தனை செய்தான்:
"எந்தன் அன்னை இயம்பிய வாறிது
சுமந்தவள் என்னை, புலம்பிய வாறிது,
அத்தகை வேலி ஆங்கே யுள்ளது
மண்ணி லிருந்து விண்ணுக் கிணைத்தது   600
விரியன் பாம்பு இரிந்தூர் வதுகீழ்
ஆயினும் வேலி அதன்கீழ் உள்ளது
பறவை உயரப் பறக்கிற தொன்று
ஆயினும் வேலி அதன்மே லுள்ளது."

அந்த லெம்மின் கைனனப் போது
அதிகம் அக்கறை அவன்கொள வில்லை
உறையி லிருந்து உருவிக் கத்தியை
கூரிய இரும்பைக் கொண்டபை யிருந்து
வேலியை அதனால் வெட்டினான் ஆங்கே
கம்பை இரண்டாய்க் கத்தி கிழித்தபின்   610
இரும்பு வேலியை இழுத்துத் திறந்தான்
கலைத்தான் பாம்புக் கணத்தை ஒருபுறம்
ஐந்து தூண்இடை அகல்வெளி பெற்றான்
எடுத்தான் கம்புகள் ஏழு அகலம்
முனைந்தான் பயணம் முன்எதிர் நோக்கி
வடபால் நிலத்தின் வாயிலின் முன்னே.

பாதையில் நெளிந்தது பாம்புதா னொன்று
குறுக்கே வாயிலில் படுத்துக் கிடந்தது
வீட்டுஉத் தரத்திலும் மிகநீண் டதுஅது
கதவுத் தூணிலும் கனதடிப் பானது   620
ஊரும் பிராணிக்கு உளவிழி நூறு
அந்தப் பிராணிக் காயிரம் நாக்குகள்
கண்அரி தட்டின் கண்களை யொத்தவை
ஈட்டியின் அலகுபோல் இகல்நீள் நாக்கு
வைக்கோல் வாரியின் வன்பிடி போற்பல்
ஏழு தோணிகள் போல்முது களவு.

குறும்பன் லெம்மின் கைனன் அதன்பின்
துணிந்தா னில்லைத் தொடுகரம் வைக்க
நூறு விழியுள சீறும் பிராணிமேல்
ஆயிரம் நாக்குகள் உரியபாம் பதன்மேல்.   630

குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"நிலத்துள் வாழும் நீள்கரும் பாம்பே!
மரணச் சாயலை வாய்த்துள புழுவே!
காய்ந்த புல்லின் கண்நகர் பிராணியே!
பிசாச வேர்களில் வசிக்கும் பிறவியே!
புல்மே டுகளில் போய்ஊர் சீவனே!
மரவேர் களிலே மறைந்துவாழ் சன்மமே!
புற்களி லிருந்துனை பற்றினோர் எவரோ?
புல்வே ரிருந்துனைப் பிடித்தவ ரெவரோ?   640
புமியில் இங்ஙனம் புரள்வதற் காக?
வழியிலே இவ்விதம் நெளிவதற் காக?
உந்தன் தலையை உயர்த்திய தெவரோ?
கூறிய தெவரோ, வேறெவர் ஆணையோ?
விறைப்பாய்த் தலையை உயர்த்திய தெவரால்?
கழுத்தைப் பலமாய் நிறுத்தியது எவரால்?
உந்தன் தந்தையா, அல்லது அன்னையா?
உனக்கு முன்பிறந்த உயர்அண் ணன்களா?
அல்லது பின்வரும் அருத்தங் கைகளா?
அல்லது வேறு அமையுற வினரா?    650

வாயை மூடிப்போ மறைப்பாய் தலையை
உள்ளே ஒளிப்பாய் உன்சுழல் நாக்கை
சுருண்டு சுருண்டு சுருளாய்க் கிடப்பாய்
வளைந்து வளைந்து வளையமாய்ப் படுப்பாய்
பாதையைத் தருவாய் பாதிப் பாதையை
பயணியை மேலும் பயணிக்க விடுவாய்
அல்லது வழியைவிட் டகல்வாய் நீயே
இழிந்த பிறப்பே ஏகுக புதருள்
புற்பற் றைக்குள் போய்நீ மறைவாய்
பாசி நிலத்திற் படர்ந்துநீ ஒளிவாய்    660
கம்பிளிக் கட்டுபோல் கடுகிநீ நழுவுவாய்
அரசங் குற்றிபோல் உருண்டுநீ செல்லுவாய்
புற்புத ருள்தலை போகத் திணிப்பாய்
புற்பற் றையுளே போவாய் மறைந்து
புற்புத ருள்ளே உள்ளதுன் வீடு
புற்பற் றையுளேயுன் இல்லம துள்ளது;
நீஅங் கிருந்து நேர்தலை தூக்கினால்
இறைவன் உன்தலை இன்றே நொருக்குவான்
உருக்கு முனைகொள் ஊசிக ளாலே
இரும்பினா லான எறிகுண் டுகளால்."    670

அப்படிச் சொன்னான் லெம்மின் கைனன்
ஆயினும் பாம்போ அதைக்கணித் திலது
உமிழ்ந்து கொண்டே நெளிந்தது பாம்பு
நாக்கைச் சுழற்றி நனிசீ றியது
வாயை உயர்த்தி வலிதே ஒலித்தது
லெம்மின் கைனனின் சிரசிலக் கானது.

குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
நிகழ்பழஞ் சொற்களை நெஞ்சிற் கொண்டான்
முதுதாய் முன்னர் மொழிந்த சொற்களை
தாயின் முந்திய போதனைச் சொற்களை;   680
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"இதற்கும்நீ கவனம் எடுக்கா திருந்தால்
கணிப்புக் கொஞ்சமும் காட்டா திருந்தால்
நோவால் உன்னுடல் ஊதிப் போகும்
வெந்துயர் நாட்களால் வீங்கிப் போகும்
கொடியநீ வெடிப்பாய் இரண்டாய்ப் பிளப்பாய்
நீசநீ மூன்று நெடுந்துண் டாவாய்
உன்தாய் அவளைநான் உரப்பி அழைத்தால்
அழைத்தால் உன்புகழ் அரும்பெற் றோரை;   690
சுருண்ட பிராணிஉன் தொல்பிறப் பறிவேன்
நிலத்தின் அழுக்குன் வளர்ப்பையு மறிவேன்
உன்அன் னைபெரும் ஊணே **உண்பவள்
உன்னைப் பெற்றவள் புனற்பெருஞ் சக்தி.

பெருமூண் உண்பவள் விரிபுனல் துப்பினாள்
எச்சிலை நீரின் எழும்அலை யிட்டனள்
காற்றுவந் ததனை ஆட்டி யசைத்தது
நீரின் சக்திதா லாட்டிச் சென்றது
ஆறு வருடமும் அதுதா லாட்டிய(து)
ஏழு கோடையும் இதுவே நிகழ்ந்தது    700
தெளிந்த கடலின் செறுமுய ரலைகளில்
நுரைத்து எழுந்த நுடங்கலை நடுவே;
இரும்தொலை நீரதை இழுத்துச் சென்றது
வெங்கதிர் காய்ச்சி மென்மையா யாக்கினன்
தவழ்அலை அதனைத் தரைதள் ளியது
கடலலை அதனைக் கரைவிரட் டியது.

மூவர் இயற்கைப் பாவையர் நடந்தனர்
திரையெறி கடலின் கரையில் நடந்தனர்
இரையும் கடலதன் கரைதனில் நடந்தனர்
நடந்தவர் அதனை நனிகரைக் கண்டனர்    710
கண்டதும் இங்ஙனம் களறினர் கன்னியர்:
'இதிலே யிருந்து எதுதான் தோன்றலாம்
கர்த்தர் சுவாசம் கடிதிதற் கீந்து
கண்களைக் கொடுத்துக் கருணையும் காட்டினால்?'

கர்த்தர்இக் கூற்றைக் கேட்கவும் நேர்ந்தது
உரைத்தார் ஒருசொல் உரைத்தார் இவ்விதம்:
"தீயதி லிருந்து தீயதே தோன்றும்
கொடியதன் உமிழ்நீர் கொடியதே ஆகும்
நானும் சுவாசம் நன்கிதற் கூட்டினால்
கண்வைத் துத்தலை கருணையும் காட்டினால்."   720

கெட்ட பிசாசிதைக் கேட்கவும் நேர்ந்தது
கருங்கொடு மானுடம் கவனிக்க லானது
வலிந்துதான் கர்த்தராய் மாறவும் நினைத்தது
சுவாசத்தை ஊட்டிப் பிசாசம் வைத்தது
உறுதீக் கொடியாள் உமிழ்நீ ருக்கு
இரும்ஊண் உண்பவள் எச்சில் அதற்கு
பின்னர் அதுஒரு பெரும்பாம் பானது
மாகரும் புழுவாய் மாற்றம் பெற்றது.

எங்கிருந் தந்தச் சுவாசமும் வந்தது?
பிசாசின் எரிதழற் பிறந்தே வந்தது;    730
எங்கிருந் திதயம் அதற்கும் வந்தது?
பெருமூண் உண்பவள் பெற்றிட்ட இதயமாம்;
கொடியவிம் மூளையும் கொண்டது எவ்விதம்?
பயங்கர அருவியின் பறிநுரை யதனில்;
வந்தது எவ்விதம் வன்கொடுங் குணங்குறி?
பெரியநீர் வீழ்ச்சியின் நுரையிலே யிருந்துதான்;
தீயஇச் சக்தியின் திகழ்தலை எதனினால்?
அதன்தலை அழுகிய பயற்றம் விதையினால்.

அதற்கு விழிகளும் ஆனது எதனினால்?
ஆனது பிசாசதன் அரிசணல் விதைகளால்;   740
கெட்டதன் காதுகள் கிட்டிய தெதனினால்?
பிசாசதன் மிலாறுவின் பிஞ்சிலை யவைகளால்;
எதனினால் வாயும் இதற்கமைந் திட்டது?
பேருண்டி யாள்**வார்ப் பிரிவளை யத்தினால்;
இழிந்ததன் வாய்நாக் கெவ்வித மானது?
தீயஇச் சக்தியின் தெறிஈட்டி அதனினால்;
கொடியஇப் பிராணியின் கூர்எயி றெவ்விதம்?
துவோனியின் பார்லியின் சோர்உமி அதனினால்;
தீயஇச் சக்தியின் செவ்வீறு எதனினால்?
கல்லறைக் கன்னியின் கழலீறு அதனினால்.   750

முதுகினைக் கட்டி முடித்தது எதனால்?
கடும்பிசா சின்தீக் கரிகளி லிருந்து;
ஆடும் வாலையும் அமைத்தது எதனால்?
பெரும்தீச் சக்தியின் பின்னிய கூந்தலால்;
குடல்களைப் பிணைத்துக் கொண்டது எதனால்?
அந்திம காலச் சங்கிலிப் பட்டியால்.

இவ்வள வேஉன் இனத்தவ ராவார்
பேர்பெறும் கெளரவப் பெருமையிவ் வளவே
நிலத்தின் கீழ்வாழ் பிலங்கரும் புழுவே
மரண(த்து) நிறம்கொள் வலிய பிராணியே   760
பூமியின் நிறமே, **பூண்டின் நிறமே,
வானத்து வில்லின் வர்ணம் அனைத்துமே
இப்போது பயணியின் இடம்விட் டகலு
இடம்நகர் மனிதனின் எதிர்புற மிருந்து
இப்போ பயணியை ஏக விடுவாய்
லெம்மின் கைனனை நேர்செல விடுவாய்
வியன்வட பால்நில விருந்தத னுக்கு
நற்குடிப் பிறந்தார் நல்விருந் துக்கு."

இப்போ(து) பாம்பு இடம்விட் டகன்றது
விழிநூ றுடையது விலகிச் சென்றது    770
தடித்த பாம்பு தான்திரும் பியது
ஓடும் பாதையில் இடம்மா றியது
பயணியை அவன்வழி படரவும் விட்டது
லெம்மின் கைனனை நேர்செல விட்டது
வியன்வட பால்நில விருந்தத னுக்கு
குடிக்கும் ரகசியக் குழுவி னிடத்தே.



பாடல் 27 - வடநாட்டில் போரும் குழப்பமும் *

அடிகள் 1 - 204 : வடபால் நிலத்துக்கு வந்த லெம்மின்கைனன் பல வழிகளிலும் முரட்டித்தனமாக நடக்கிறான்.

அடிகள் 205 - 282 : வடநாட்டுத் தலைவன் கோபங் கொண்டு லெம்மின்கைனனை மந்திர சக்தியால் தோற்கடிக்க முயற்சித்து, முடியாத கட்டத்தில் வாட் போருக்கு வரும்படி சவால் விடுகிறான்.

அடிகள் 283 - 420 : இந்தப் போரின்போது லெம்மின்கைனன் வடநாட்டுத் தலைவனின் தலையைச் சீவி எறிகிறான். அதனால் ஆத்திரம் கொண்ட வடநாட்டுத் தலைவி ஒரு படையைத் திரட்டி லெம்மின்கைனனை எதிர்க்கிறாள்.


கொணர்ந்தேன் இப்போ தூர நெஞ்சினனை
அஹ்தி தீவினன் அவன் வருவித்தேன்
மரணப் பற்பல வாயில்கள் கடந்து
கல்லறை நாக்கின் கனபிடி கடந்து
வடபால் நிலத்து வசிப்பிடத் தாங்கே
இரகசியக் குடியர் எலாம்கூ டிடத்தே;
இனிநான் புகலும் விடயம் எதுவெனில்
எனது நாவினால் இயம்புவ தெதுவெனில்
குறும்பன் லெம்மின் கைனன் எவ்விதம்
அவனே அழகிய தூர நெஞ்சினன்    10
வடபால் வசிப்பிடம் வந்தான் என்பது
சரியொலா இருப்பிடம் சார்ந்தான் என்பது
அமையும் விருந்துக் கழைப்பில் லாமல்
குடிக்கும் நிகழ்வுக் கொருதூ தின்றி.

குறும்பன் லெம்மின் கைனனப் ஧஡பாது
பையன் செந்நிறப் படுபோக் கிரிபின்
வந்து உடனே வசிப்பிடம் சேர்ந்ததும்
தரைமத் திக்கு அடிவைத் தேகினன்
ஆட்டம் கண்டது **அப்பல கைத்தளம்
எதிரொலி செய்தது தேவதா ரின்மனை.   20

குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
உரைத்தான் அவனே உரைத்தான் இவ்விதம்:
"நானிங் குற்றதால் நலமார் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் கூறவந் தோர்க்கும் வாழ்த்துக்கள்
கேளாய், வடபுலக் கீர்த்திகொள் தலைவனே!
இங்கே இந்த இல்லத் துளதா
பாய்பரி கடிக்கப் பார்லித் தானியம்
அருந்த வோர்வீரன் அரும்'பீர்'ப் பானமும்?"

அவன்தான் வடபுல அந்நாட் டதிபன்
நீள்மே சையின்முனை நிமிர்ந்தே யிருந்தான்   30
அவனும் அவ்விடத் தமர்ந்தே கூறினன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"எங்கெனும் இந்த இல்லத் திருக்கலாம்
குதிரை தங்க இடமும் இருக்கலாம்
இங்கே தடையெதும் இல்லை உனக்கும்
இந்த மனையில்நற் பண்போ டிருந்தால்
நற்கடை வாயிலின் பக்கமும் நிற்கலாம்
உயர்கடை வாயில் உத்தரத் தின்கீழ்
இரண்டு கலயத் திடைநடு வினிலே
மூன்று **முளைகள் முட்டும் இடமதில்."   40

குறும்பன் லெம்மின் கைனன் அதன்பின்
கறுத்தத் தாடியைக் கையால் முறுக்கினன்
சட்டியின் நிறத்தில் தானிருந் த(அ)தனை
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"பிசாசுதான் இந்த வசிப்பிட மடைய,ம்
நற்கடை வாயிலின் பக்கலில் நிற்க
படிந்த ஓட்டடை துடைத்திட இவ்விடம்
பெருக்கியே யெடுக்க புகைச்சுடர்க் குப்பை.
எந்தன் தந்தையும் இதைச்செயார் என்றும்
இசையுறும் எந்தன் ஈன்றவர் செய்யார்   50
அந்த இடத்தில் அவ்விதம் நிற்பதை
உயர்கடை வாயில் உத்தரத் தின்கீழ்
ஏனெனில் அப்போ திடமும் இருந்தது
கவினார் பரிக்குக் களஞ்சிய முன்றிலில்
கழுவிய அறைகள் வரும்மனி தர்க்கு
கையுறை வீசிடற் கமைந்தன கொளுவி
மனிதரின் கையுறை முளைகளும் இருந்தன
சுவர்களும் வாள்களைச் சொருகிட விருந்தன
எனக்கு மட்டுமே ஏனது இங்கிலை
இதன்முன் எந்தைக் கிருந்தது போலவே?"   60

அடுத்ததாய் மேலும் அவன்முன் னேறினான்
மேசையின் ஒருபுற வெறுமுனைக் கேகினன்
ஆசன ஓரத் தவனுட் கார்ந்தனன்
அமர்ந்தனன் தேவதா ரரும்பல கையிலே
அடிப்புறம் வெடித்த ஆசனத் தமர்ந்தான்
ஆடிய தேவரா ரதன்பல கையிலே.

குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்:
"வரவேற் புடைய பெருவிருந் தலநான்
'பீர்'க்குடி பானம் நேர்க்கொண ராவிடின்
வந்து சேர்ந்தவிவ் வளவிருந் தினற்கு."   70

*இல்போ மகளவள் நல்லெழில் தலைவி
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"ஓஹோ பையனே உறுலெம்பி மைந்தனே
எவ்வகை விருந்தினன் இயம்புக நீயே
வந்தனை எந்தன் மண்டையை மிதிக்கநீ
எந்தன் மூளையை இழிவு படுத்தநீ;
எங்கள்'பீர்' பார்லியாய் இன்னமும் உள்ளது
சுவைப் பானம்மா வூறலா யுள்ளது
சுடப்படா துள்ளன துண்டிலாம் ரொட்டிகள்
தகுந்தமா மிசக்கறி சமையாது உள்ளன.   80
ஓர்நிசி முந்திநீ யுவந்துவந் திருக்கலாம்
அல்லது அடுத்தநாள் அன்றுவந் திருக்கலாம்."

குறும்பன் லெம்மின் கைனன் அதன்பின்
தன்வாய் கோணித் தலையைத் திருப்பினன்
கறுத்தத் தாடியைக் கையால் முறுக்கினன்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"ஆகவே விருந்திங் கருந்தப் பட்டது
விவாகக் குடியும் விருந்தும் நிகழ்ந்தது
பருகு'பீர்'ப் பானம் பங்கிடப் பட்டது
அருநறை மனிதர்க் களவிடப் பட்டது    90
சாடிகள் அனைத்தும் சரிசேர்ப் புண்டன
வைக்கப் பட்டன வன்கல யம்மெலாம்.

ஓ,நீ வடபால் உயர்நிலத் தலைவியே!
இருண்ட நாட்டின் எயிறுநீள் பெண்ணே!
பொல்லா தவருடன் புரிந்தனை திருமணம்
நாய்மதிப் புடையரை நாடியே அழைத்தனை
தொடுபெரும் ரொட்டித் துண்டுகள் சுட்டனை
பார்லி மணியில் 'பீர்'ப்பானம் வடித்தனை
ஆறு வழிகளில் அனுப்பினை அழைப்பு
அழைப்பவர் ஒன்பது அகல்வழிச் சென்றனர்   100
இழிஞரை அழைத்தனை ஏழையை அழைத்தனை
அழைத்தனை ஈனரை அழைத்தனை அற்பரை
குடிசைவாழ் மெலிந்த குழுவினர் தம்மையும்
நன்கிறு கியவுடை நாடோ டி தம்மையும்
அழைத்தனை பலவகை ஆட்கள்எல் லோரையும்
அதிலெனை மாத்திரம் அழையாது விட்டனை.

எதற்காய் இதனை எனக்குநீ செய்தனை,
தந்துமா எந்தன் சொந்தப் பார்லியை?
அகப்பை அளவிலே அடுத்தோர் கொணர்ந்தனர்
பார்லியைக் கொட்டினர் பாத்திரத் தொருசிலர்,   110
**பறையி஢லே அளந்து பார்த்துக் கொணர்ந்தனே
அரையரை **மூடையாய் அள்ளி யெறிந்தனே
பார்லிஎன் சொந்தப் பயன்தா னியத்தை
உழுதுநான் விளைத்த உயர்தா னியத்தை.
லெம்மின் கைனன்நா னிப்போ தலவோ,
மிகுநற் பெயருடை விருந்தின னலவோ,
'பீரி'னைக் கொணராப் போனதால் இங்கு
அடுப்பில் கலயம் இடாதே போனதால்
கலயத் துள்ளே கறியு மிலாததால்
பன்றி யிறைச்சிகாற் **பங்கு மிலாததால்    120
நானுண் பதற்கும் நான்குடிப் பதற்கும்
நீண்டஎன் பயண நிகழ்வின் முடிவில்."

இல்போ மகளவள் நல்லெழில் தலைவி
இந்தச் சொற்களில் இயம்பினள் அவளே:
"ஏய், யா ரங்கே, இளஞ்சிறு பெண்ணே!
எந்தன் நிரந்தர இணையில் அடிமையே!
கலயத் துள்ளே கறியதை வைப்பாய்
விருந்தாளிக்கு வியன்'பீர்' கொணர்வாய்!"

சிறிய அப்பெண் வெறுமைப் பிள்ளை
கலயம் ஒழுங்கறக் கழுவி எடுப்பவள்    130
குறையாய் அகப்பையைத் துடைத்து வைப்பவள்
கரண்டியைச் சிறியதாய்ச் சுரண்டு கின்றவள்
கலயத்தி னுள்ளே கறியதை வைத்தாள்
மாமிச எலும்பையும் மற்றுமீன் தலையையும்
**கிழங்கின் பழைய கீழ்த்தண் டுகளையும்
தொடுகன ரொட்டியின் துண்டு துகளையும்;
சாடியில் அடுத்துப் 'பீரை'க் கொணர்ந்தனள்
தரமிலாப் பானம் தனைக்கல யத்தில்
குறும்பன் லெம்மின் கைனன் குடிக்க
பெருங்குடி கேட்டவன் பெரிதுங் குடிக்க.   140
இந்தச் சொற்களில் இயம்பினள் அவளே:
"உண்மையில் நீயொரு உயர்சரி மனிதனா
இப்'பீர்'ப் பானம் எடுத்தருந் துதற்கு
இம்முழுச் சாடியும் ஏற்றுக் குடிக்க?"

குறும்புப் பையன் லெமம்மின் கைனன்
அப்போ பார்த்தனன் அந்தச் சாடியுள்:
அடியா ழத்தில் கிடந்தன புழுக்கள்
பாதி வழிவரை பாம்புகள் மிதந்தன
விளிம்புப் பகுதியில் நெளிந்தன ஊர்வன
பல்லி யினங்களும் பதிந்துட னூர்ந்தன.   150

குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
தூர நெஞ்சினன் சொல்லினன் திடீரென
"சாடியைக் கொணர்ந்தோர் ஏகுவர் துவோனலா
கலயம் சுமந்தோர் கடுமிறப் புலகு
சந்திர உதயம் தான்வரு முன்னர்
இன்றையப் பொழுது ஏகி முடியுமுன்!"

பின்வரும் சொற்களில் பின்அவன் சொன்னான்:
"ஓ,நீ 'பீர்'எனும் உரமுள பானமே!
இங்கே வீணாய் இப்போ வந்தனை
வந்தாய் பொருளிலா வழிகள்பின் பற்ற;   160
வாயால் குடிப்பது வடித்த'பீர்'ப் பானம்
கழிவைப் பின்னர் எறிவது நிலத்தில்
மோதிர விரலின் முழுத்துணை கொண்டு
அத்துடன் இடது கட்டை விரலினால்."

சட்டைப் பையில் தன்கை நுழைத்தனன்
சுருக்குப் பைக்குள் துழாவிப் பார்த்தான்
தூண்டிலைப் பையினால் தூக்கி எடுத்தான்
இரும்பு கொளுவியை எடுத்தான் பையிருந்(து)
சாடிக் குள்ளே தாழ்த்தினன் அதனை
'பீர்'ப் பானத்தில் போட்டனன் தூண்டில்   170
தூண்டிலில் தடக்கித் தொங்கின புழுக்கள்
வெறுப்புறு விரியன் விழுந்தன ஊசியில்
பிடித்தான் தூண்டிலில் பெருநுணல் நூறு
ஓரா யிரம்கரும் ஊர்வன வந்தன
புமியில் வீசினன் புவிநலத் துக்காய்
அந்தத் தரையிலே அனைத்தையும் போட்டான்;
உருவினான் தனது ஒருகூர்க் கத்தியை
பதவுறை யிருந்த பயங்கர இரும்பை
வெட்டினான் பின்னர் வியன்புழுத் தலைகளை
முறித்தான் பாம்புகள் அனைத்தையும் கழுத்தில்   180
போதிய வரைக்கும் 'பீரை'க் குடித்தான்
கறுத்தத் தேனைத் தன்மனம் நிறைய
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"மிகமன முவந்துகொள் விருந்தாளி யல்லநான்
'பீர்'ப்பானம் கொணரும் பேறிலாப் படியால்
தரமான பானம் தரவும் படாமையால்
தாராள மான தரும்கரங் களினால்
இன்னமும் பெரிதாம் எழிற்கல யங்களில்
கொல்லப் படவிலை கொழும்நற் செம்மறி
வெட்டப் படவில்லை மிகப்பெரும் எருது   190
கொணரப் படவில்லை கொழும்எரு தில்லம்
குளம்புறும் கால்நடை விளம்பறைக் குள்ளிலை."

அவன்தான் வடபுல அந்நாட் டதிபன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"ஆதலால் எதற்குநீ அடைந்தனை இவ்விடம்
உன்னையார் அழைத்தார் உவந்துஇக் கூட்டம்?"

குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"அழைப்புள்ள விருந்தினன் ஆவான் சிறந்தவன்
அழைப்பிலா விருந்தினன் அவனிலும் சிறந்தவன்;   200
வடநில மைந்தநீ வருவிப ரம்கேள்
வடபால் நிலத்திடை வன்எச மானன்நீ
விலைக்குப் 'பீரை' விடுவைநீ வாங்க
பணத்துக்குக் கொஞ்சம் பானம் பெறுவேன்."

அப்போது வடபுல அந்நாட் டதிபன்
சினமே கொண்டான் சீற்றமும் கொண்டான்
கடுமையாய்க் கோபமும் காய்தலும் கொண்டான்
தரையிலே ஓர்குளம் தான்வரப் பாடினான்
லெம்மின் கைனனின் நேர்எதிர் ஆங்கே
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:   210
"அதோஓர் அருவி அருந்துதற் கேநீ
குளமும் ஒன்றதோ குடிக்கநீ நக்கி."

எதைத்தான் ஏற்றான் லெம்மின் கைனன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
**"மனைவியர் வளர்த்த வளர்கன் றல்லநான்
வாலொன் றுடைய வல்லெரு தல்லநான்
அருவியில் ஓடும் அந்நீர் குடிக்க
குளத்திலே யுள்ள கொடுநீர் குடிக்க!"

பாடத் தொடங்கினன் மந்திரப் பாடல்கள்
பாடத் தொடங்கினன் அவனே பாடல்கள்   220
எருதொன்(று) தரையிலே ஏற்படப் பாடினான்
மாபெரும் காளை வளர்பொற் கொம்புகள்;
குளத்திலே இறங்கிக் கலக்கிக் குடித்தது
அருவியில் மனம்போல் அருந்திய ததுநீர்.

வடநிலத் தான்அம் மனிதன் உயர்ந்தவன்
வாயி லிருந்தொரு ஓநாய் **அழைத்தனன்
தரையிலே வந்தது தரிக்கப் பாடினான்
கொழுத்த காளையைக் கொல்வதற் காகவே.

குறும்புப் பையன் லெம்மின் கைனன்
வெண்ணிறத் தொருமுயல் வெளிவரப் பாடினான்   230
தரையிலே துள்ளித் தானது குதிக்க
அவ்வோ நாயின் அகல்வாய் முன்னால்.

வடநிலத் தான்அம் மனிதன் உயர்ந்தவன்
கோணல் அலகுறும் நாய்வரப் பாடினன்
குறித்தவம் முயலைக் கொல்வதற் காக
வாக்குக்கண் பிராணியை வாயால் கிழிக்க.

குறும்புப் பையன் லெம்மின் கைனன்
அவ்வுத் தரம்மேல் அணில்வரப் பாடினன்
உத்தரம் மீதிலே ஓடித் திரியவே
அதனைப் பார்த்து அந்தநாய் குரைக்க.    240

வடநிலத் தான்அம் மனிதன் உயர்ந்தவன்
பொன்னெஞ்(சுக்) கீரி புதிதெழப் பாடினன்
அந்தக் கீரிபாய்ந் தணிலைப் பிடித்தது
உத்தரம் மீது உற்றிடும் அணிலை.

குறும்புப் பையன் லெம்மின் கைனன்
நற்பழுப் புநிற நரிவரப் பாடினன்
பொன்னெஞ்(சுக்) கீரியைப் போய்ப்பிடித் துண்டது
கவினார் **உரோமம் காணா தொழிந்தது.

வடநிலத் தான்அம் மனிதன் உயர்ந்தவன்
வாயி லிருந்தொரு கோழியை **எடுத்தனன்   250
படர்தரைக் கோழியும் படபடத் தோடவே
அந்த நரியின் அகல்வாய் எதிரிலே.

குறும்புப் பையன் லெம்மின் கைனன்
வாயிலே பருந்து வந்திடப் பாடினன்
நாவிலே யிருந்து நனிவிரை **நகப்புள்
வந்தது கோழியை வலிப்பாய்ந் தெடுத்தது.

வடநிலத் தலைவன் வருமா றுரைத்தனன்
இயம்பினன் அவனே இயம்பினன் இவ்விதம்:
"இங்கே விருந்து நன்கமை யாது
விருந்தினர் அளவு மிகக் குறையா விடின்;  260
வேலைக்கு வீடு விருந்தினர் வழிக்கு
நல்ல குடியரின் நாள்நிகழ் விருந்தும்.
பேய்வெளிப் பாடே, போஇங் கிருந்துநீ!
மனித வர்க்க வருபுணர்ப் பிருந்து
நீசனே, இழிந்தோய், நின்வீட் டுக்கு!
தீயனே, உடனே செல்கநின் நாடு!"

குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"சபித்தலால் ஒருவனைச் சமைத்திடல் முடியா
எத்துணை தீயவன் என்றபோ திலுமே   270
அவனது இடந்திருந் தகற்றிட அவனை
அவனது நிலையிருந் தவனைத் துரத்திட."

அப்போது வடபுல அந்நாட் டதிபன்
சுவரி லிருந்தொரு சுடர்வாள் பெற்று
பயங்கர அலகைப் பற்றிக் கரத்தினில்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"ஓ,நீ அஹ்தி, தீவில்வாழ் பவனே!
அல்லது அழகிய தூரநெஞ் சினனே!
எங்களின் வாள்களால் எங்களை யளப்போம்
எங்களின் அலகால் எங்களைக் கணிப்போம்   280
என்வாள் சிறந்ததா இல்லையா என்பதை
அல்லது தீவினன் அஹ்தி வாள் என்பதை!"

குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்:
"என்வாள் பற்றி இயம்புவ தானால்
எலும்புக ளதனை என்வாள் பிளந்தது
என்வாள் நொருக்கிய தெல்லா மண்டையும்!
அங்ஙனம் அதுவும் அமையும் போதிலே
இங்கே விருந்து நன்கமை யாது
ஆதலால் வாள்களால் அளப்போம் கணிப்போம்
எவரது வாள்தான் கூரிய தென்பதை!    290
முன்னொரு போதும் எந்தன் தந்தை
அளக்க வாளால் அஞ்சிய தில்லை
மைந்தனின் சந்ததி மாறியா போகும்
பிள்ளையின் தலைமுறை பிறவே றாகுமா?"

எடுத்தான் வாளை இரும்பை உருவினான்
அனற்பொறி சிந்தும் அலகைப் பற்றினான்
தோலினா லான தொடுமுறை யிருந்து
தோலினால் இயைந்த தொடர் பட்டியினால்;
அவர்கள் கணித்தனர் அளந்தனர் அவர்கள்
அந்த வாள்களின் **அளவுநீ ளத்தை:    300
சிறிதே நீளமாய்த் தெரிந்தது ஒன்று
வடபுலத் தலைவனின் வாளே அதுதான்
விரல்நக மேற்கரும் புள்ளியின் நீளம்
பாதி விரலின் பகுகணு வளவு.

தீவினன் அஹ்தி செப்பிட லாயினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"உன்றன் வாள்தான் உயர மானதால்
உன்முறை வீசி உடன்முதல் அறைதல்."

அதன்பின் வடபுல அந்நாட் டதிபன்
வீசி அறைந்தனன் விறற்குறி நெருங்கினன்   310
குறியை நெருங்கிக் குறுகினும் தவறினன்
லெம்மின் கைனனின் நேர்தலைக் குறியை;
அடித்தனன் ஒருமுறை அங்குள உத்தரம்
கூரை மரத்தின் மீதும் மோதினன்
ஓசை யெழுப்பிய உத்தர முடைந்தது
கூரை மரமும் கூறிரண் டானது.

தீவினன் அஹ்தி செப்பிட லாயினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"உத்தரம் செய்த உயர்பிழை என்ன
கூரை மரத்தின் குற்றமும் என்ன    320
உத்தரம் மீது ஓங்கி அறைந்தனை
கூரை மரத்தைக் குறிபார்த் தடித்தனை?

வடபால் வாழும் மைந்தனே, கேள்நீ!
வடபால் நிலத்தின் வன்தலை வன்நீ!
மிகவும் சிரமம் வீட்டினுள் பொருதலும்
முதுமா தரிடம் மிகுதுணிச் **செயலும்;
புதியஇவ் வில்லினை அதிபழு தாக்குவோம்
தரையைக் குருதியால் கறையாக் கிடுவோம்;
முற்றம் நோக்கிநாம் முன்வெளிச் செல்லலாம்
போரிட வெளியே போகலாம் வயற்புறம்   330
புற்திடர் நோக்கியே போகலாம் சமர்க்கு;
இருந்திடும் நன்கே இரத்தம் முன்றிலில்
அழகாய் அமைந்திடும் அயல்தோட் டவெளி
இயற்கையாய் தெரிந்திடும் இதுபனி மழைமேல்."

அவர்கள் வந்தனர் அவ்வெளி முற்றம்
பசூசுவின் ஒருதோல் நனிகொணர் பட்டது
அதுவும் முற்ற மதில்விரி பட்டது
இருவரும் அதன்மேல் இனிதுநிற் பதற்கு.

தீவினன் அஹ்தி செப்பிட லாயினன்
"வடபால் நிலத்தின் மைந்தனே கேட்பாய்!   340
உந்தன் வாள்தான் உயர்நெடி தானது
உந்தன் வாளே உயர்பயங் கரமாம்
ஆயினும் தேவை அதுஉனக் காகலாம்
இருவரும் நாங்கள் இங்கு பிரியுமுன்
உந்தன் கழுத்து உடைவதன் முன்னே
வடநில மைந்தா வாமுதல் வீசு!"

வடநில மைந்தன் வந்துமுன் வீசினன்
ஒருமுறை வீசினன் இருமுறை வீசினன்
அறைந்தனன் மூன்றாம் முறையும் விரைந்து
ஆயினும் இலக்கில் அறைவிழ வில்லை   350
அதுசீவ வில்லை அவன்சதை கூட
அதுதொட வில்லை அவன்தோல் கூட.

தீவினன் அஹ்தி செப்பிட லாயினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"எனக்கொரு வாய்ப்பை இப்போ தருவாய்
இனிவரப் போவது எந்தன் முறையே!"

அப்போ(து) வடபுல அந்நாட் டதிபன்
செப்பிய மொழிக்குச் செவிசாய்த் திலனே
அறைந்தான் ஓயா தறைந்தான் மீண்டும்
குறிபார்த் தானெனில் குறிதவ றிற்று.   360

தீப்பொறி பயங்கர இரும்புசிந் திற்று
உருக்கின் அலகில் நெருப்பு எழுந்தது
குறும்பன் லெம்மின் கைனனின் கையில்
எழுந்து சென்றதோர் இகல்ஒளிப் பிழம்பு
நோக்கிக் கழுத்தை நுழைந்தழிப் பதற்கு
வடபால் நிலத்தின் மைந்தனின் கழுத்தை.

எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"ஆஹா, வடபால் அகல்நிலத் தலைவ!
இழிந்த மனிதனே இயைந்தநின் கழுத்து
மிகச்சிவந் துளது விடியலைப் போல."   370

அப்போ வடபால் அகல்நில மைந்தன்
அவன்தான் வடபுல அந்நாட் டதிபன்
தனது பார்வையைத் தான்பின் திருப்பி
நோக்கினன் சொந்த நுவல்தன் கழுத்தை;
குறும்பன் லெம்மின் கைனனப் போது
அறைந்தனன் ஓங்கி விரைந்தே வாளால்
மனிதனை அங்கே வாளால் அடித்தனன்
தாக்கினன் வீசித் தன்வாள் அலகை.

அறைந்தான் பின்னர் அங்கே ஒருதரம்
பெயர்த்தான் தலையைப் பெருந்தோ ளிருந்து   380
மண்டையை நொருக்கினன் வன்கழுத் திருந்து
**கிழங்கின் தண்டை எழுந்தொடிப் பதுபோல்
கதிர்த் தானியத்தை அறுத்தெடுப் பதுபோல்
முழுமீன் சிறகை முன்அரி தலைப்போல்;
முன்றிலில் உருண்டு முன்தலை சென்றது
மனிதனின் மண்டை வெளித் தோட் டத்தில்
செருகணை தூக்கிச் சென்றது போல
மரத்தினால் விழுந்ததொர் மரக்கோ ழியைப்போல்.
நின்றன கழுமரம் குன்றிலே நூறு
முன்றிலில் ஆயிரம் முன்எழுந் திருந்தன   390
கழுவிலே நூற்றுக் கணக்காம் தலைகள்
இருந்தது தலையிலா தொருகழு மரந்தான்
அந்தக் குறும்பன் லெம்மின் கைனன்
மதிப்புறும் பையனின் வன்தலை எடுத்தான்
முன்றிலி லிருந்து மண்டையைக் கொணர்ந்தான்
அந்தக் கழுமர அருமுனை தனக்கு.

பின்னர் அஹ்தி என்னும் தீவினன்
அழகிய தூர நெஞ்சினன் அவனே
உள்ளே திரும்பி உடன்இல் வந்து
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:   400
"வெறும்புனல் கொணர்வாய், வெறுப்புறு பெண்ணே!
எனது கைகளை இங்கே கழுவிட
தீய தலைவனின் செந்நீ ரிருந்து
கொடியோன் உறைந்த குருதியி லிருந்து!"

வடநில முதியவள் மாசின முற்றனள்
சினமே கொண்டாள் சீற்றமும் கொண்டாள்
வாளுடை வீணரர்கள் வரவெளிப் பாடினள்
நற்படைக் கலம் கொடு நாயகர் வெளிவர
வாள்கைக் கொண்ட மனிதர்கள் நூறுபேர்
வாள்களைச் சுமந்து வந்தபே ராயிரம்    410
லெம்மின் கைனனின் நிமிர்தலை குறித்து
தூர நெஞ்சினன் தொடுகழுத் ததில்விழ.

நிசமாய் இப்போ(து) நேரமும் வந்தது
சென்று கொண்டிருந்தது நிகழ்நாள் நழுவி
வருந்தத் தக்கதாய் வந்தது சூழ்நிலை
அனைத்தும் தொல்லையாய் ஆனது நிலமை
அஹ்திப் பையன் அங்கிருப் பதற்கு
தங்கி இருந்திட லெம்மின் கைனன்
வடபால் நிலத்து நடைபெறு விருந்தில்
இரகசியக் குடியரின் இகல்கூட் டத்தில்.   420


பாடல் 28 - லெம்மின்கைனனும் அவனது அன்னையும் *

அடிகள் 1 - 164 : லெம்மின்கைனன் வடநாட்டிலிருந்து விரைவாகத் திரும்பி வீட்டுக்கு வருகிறான். வடநாட்டிலிருந்து ஏராளமானோர் தன்னுடன் போருக்கு வருவதாகவும், தான் எங்கே போய் மறைந்து வாழலாம் என்றும் தாயிடம் ஆலோசனை கேட்கிறான்.

அடிகள் 165 - 294 : வடநாட்டுக்குச் சென்றதற்காக முதலில் தாய் அவனைக் கடிந்தாலும் பின்னர் மறைந்து வாழக்கூடிய பல்வேறு இடங்களைப் பற்றிக் கூறுகிறாள். கடைசியாக, ஒரு பெரிய போர் நடைபெற்ற காலத்தில் அவனுடைய தந்தை அமைதியாக வாழ்ந்த இடமான, பல கடல்களுக்கு அப்பால் உள்ள ஒரு தீவுக்குச் செல்லும்படி ஆலோசனை கூறுகிறாள்.


இப்போ(து) அஹ்தி என்னும் தீவினன்
குறும்பன் லெம்மின் கைனன் அவன்தான்
ஓரிடம் தேடினான் ஒளிந்து வாழ்ந்திட
விரைந்தே யவ்விடம் விட்டே ஓடினான்
இருள்நிறை வடபால் இயைநிலத் திருந்து
மங்கிய *சராவின் வாழ்வீ டிருந்து.

பனிப்புயல் போலவன் புறப்பட் டேகினன்
மூடு புகைபோல் முன்றிலை யடைந்தான்
தீச்செய லிருந்து சென்று விடுபட
தனதுகுற் றத்தால் தான்மறை தற்காய்.    10

அங்ஙனம் முன்றிலால் அவன்வரு கையிலே
செலுத்தினான் பார்வை திரும்பினான் சுற்றி
முன்னர் கொணர்ந்த மொய்ம்பரி தேடினான்
முந்திய பரியை முயன்றவன் கண்டிலன்
ஆனால் வயலிலோ அமைந்ததோர் பாறை
அலரிப் பற்றையோர் அருகினில் இருந்தது.

இப்போ(து) நல்ல தெதுவாம் உபயம்
எதைப்பின் பற்றலாம் ஏற்றநல் வழியென
செறும்அவன் தலைக்குத் தீது வாராமல்
அவன்கே சத்துக் கழிவுநே ராமல்   20
அல்லது எழில்மயிர் அதுவீழ்ந் திடாமல்.
இந்த வடநிலத் திருக்கும் முன்றிலில்
கிராமத் திப்போ கேட்டதோர் ஓசை
இரைச்சலும் கேட்டது எலாஅயல் இல்லிலும்
உட்கிரா மத்திலோர் ஒளிக்கீற்று மின்னல்
சாளரத் தூடாய்த் தரிசித் தனகண்.

குறும்பன் லெம்மின் கைனன் அங்கே
அவன்தான் தீவில் வாழ்பவன் அஹ்தி
மற்றெது வாகவோ வரநேர்ந் ததுவே
ஏற்றுள தன்னுரு மாற்றநே ரிட்டது:    30
கழுகாய் மாறிக் ககனத் தெழும்பினன்
விண்ணினை நோக்கி மேற்பறக்(க) எண்ணினன்
கன்னம் இரண்டையும் காய்ந்தது சூரியன்
புருவம் இரண்டையும் எரித்தது சந்திரன்.
குறும்பன் லெமம்஢ன் கைனனு மங்கே
மானிட முதல்வனை மனதில் வணங்கினன்:
"ஓ,முது மனிதனே, உயர்நல் தெய்வமே!
விண்ணிலே உறையும் மெஞ்ஞா னவனே!
முழங்கும் முகில்களை முழுதாள் சக்தியே!
நீராவி அனைத்தையும் நிதமாள் பவனே!   40
புகாருள காலப் புதுநிலை யாக்குவாய்
சிறிது சிறிதாய் செழுமுகில் படைப்பாய்
அந்த ஒதுக்கில்நான் அகன்றுபோய்ச் சேரலாம்
எந்தன்இல் லத்தை நனிபெற முயலலாம்
மீண்டுமென் அன்புறும் மேலாம் தாயிடம்
என்றன் புகழ்சேர் ஈன்றவ ரிடத்தே."

அங்ஙனம் அவனும் அகன்றனன் பறந்து
செல்கையில் ஒருமுறை திரும்பிப் பார்த்தனன்
கலங்கிய நிறத்தொரு கருடனைக் கண்டனன்
அதனுடை விழிகள் அனலாய் எரிந்தன    50
வடபால் நிலத்து மைந்தனைப் போலவே
வடக்கின் முன்னால் திடத்தலை வன்போல்.

கலங்கிய நிறத்தக் கருடன் மொழிந்தது:
"ஓகோ, அஹ்தி, என் உயர்சோ தரனே!
முன்னாள் யுத்தம் நின்நினை வுளதா
சமமாய் நடந்த சமர்நினை வுளதா?"

செப்பினன் அஹ்தி என்னும் தீவினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"ஓ,என் கருடனே, ஒளிருமென் பறவையே!
வீட்டினை நோக்கிநீ விரைவாய்த் திரும்பி    60
சென்றதும் அங்கு செப்புவாய் இங்ஙனம்
இருள்நிறை வடபால் இயைநிலத் தாங்கே:
'கழுகொன்று பிடிப்பதும் கடினம் கைகளால்
உளசிறப் பறவையை உண்பதும் உகிர்களால்.' "

விரைந்தே அவனும் வீட்டினை யடைந்தான்
அன்புறும் தாயின் அருகினில் வந்தான்
முகத்தில் கவலை முழுமையாய் இருந்தது
நெஞ்சமும் துயரம் நிறைந்தே கிடந்தது.
அன்னையின் எதிரில் அவனும் வந்தான்
ஒழுங்கையில் அவளும் உடன்நடக் கையிலே   70
விரைந்தடி வைக்கையில் வேலியின் அருகில்;
ஆவலாய்க் கேட்டாள் அப்போ தன்னை:
"எந்தன் மகனே, என்னிளம் மகனே!
எந்தன் பிள்ளையே, இகல்மிகும் பிள்ளையே!
மனதிலே கவலை வந்தது எதனால்
திகழ்வட நாட்டினால் திரும்பிய வேளை?
அநீதி நற்சாடி அளிக்கையில் நடந்ததா?
வடநில விருந்து வைபவம் அதிலே?
அநீதி நற்சாடி அளிக்கையில் நடந்தால்
பெருந்திறச் சாடியைப் பெறுமை நீயிங்கு   80
உந்தையார் போரிலே உரிமையாய்ப் பெற்றது
அமரில் பெற்றிங் கரிதே கொணர்ந்தது."

குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்:
"எந்தன் அன்னையே, எனைச்சுமந் தவளே!
சாடியால் அநீதி தாமிழைப் பவர்யார்?
தலைவரைக் கூடநான் தனிஏ மாற்றுவேன்
வீரர்நூற் றுவரை ஏமாற்ற வல்லவன்
எதிர்கொள்ள முடிந்தவன் எதிர்க்குமா யிரவரை."

லெம்மின் கைனனின் அன்னை கூறினள்:
"ஆயினும் எதனால் அகத்துயர் கொண்டாய்?   90
பொலிப்பரி உந்தனைப் புறமுறச் செய்ததா?
அவமானம் குதிரைக் குட்டியால் ஆனதா?
பொலிப்பரி உந்தனைப் புறமுறச் செய்திடில்
சிறப்புடைப் பொலிப்பரி தேர்ந்தொன்று வாங்குவாய்
உந்தை பெற்றிட்ட உயர்பொருட் களினால்
பெற்றவர் தேடிய சொத்துக் களினால்."

குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்:
"எந்தன் அன்னையே, எனைச்சுமந் தவளே
அவமதிப் பதற்கு எவருளர் பரியால்?
என்னை வெல்பவர் எவர்பரிக் குட்டியால்?   100
நானே தலைவரை நன்கவ மதிப்பவன்
மாபரி யோடும் மனிதரை வெல்பவன்
வலியுடை மனிதரை மற்றவர் குதிரையை
வீரரை அவரவர் விறற்பொலிப் பரியுடன்."

லெம்மின் கைனனின் அன்னை கூறினள்:
"ஆயினும் எதனால் அகத்துயர் கொண்டாய்?
நெஞ்சில் துயரமும் நிறைந்தது எதனால்?
வடநிலத் திருந்து வந்திடும் வேளை
நங்கையர் பார்த்துனை நகைத்தது முண்டா?
அல்லது கேலி அரிவைசெய் தனரா?    110
அங்ஙனம் உனைப்பார்த் தரிவையர் நகைத்தால்
அல்லது கேலி அரிவையர் செய்தால்
அரிவையர் மீண்டும் அதேசெயப் படுவர்
நங்கையர் பின்னர் நகைத்திடப் படுவர்."

குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்:
"எந்தன் அன்னையே, எனைச்சுமந் தவளே!
எவருளர் மகளிரால் எள்ளியே நகைப்பவர்,
யாருளர் மகளிரால் கேலிசெய்(து) நகுபவர்!
நானே தலைவரை நகைப்பவன் பார்த்து
எல்லாப் பெண்ணையும் கேலியே செய்பவன்   120
நானே நகைப்பவன் நங்கைநூற் றுவரை
மணக்கோ லத்து மாதரா யிரவரை."

லெம்மின் கைனனின் அன்னை கூறினள்:
"என்றன் மைந்தஉன் சங்கதி என்ன?
நிசமாய் உனக்கு நேர்ந்தது என்ன
நீவட பாலாம் நிலம்சென்(ற) நேரம்,
அல்லது அதிகமாய் அயின்றதன் பின்னர்
அதிகமாய் உண்டு அருந்திய பின்னர்
நூதன மான நுவல்கனா வந்ததா
நீதுயின் றிட்ட நீள்இரா வேளை? "   130

குறும்பன் லெமமின் கைனனப் போது
இவ்வித வார்த்தையில் இயம்பவும் முடிந்தது:
"முதிய மாதர் அதைநினைக் கட்டும்
கார்நிசி தோன்றிய கனவுகள் பற்றி!
என்இராக் கனவுகள் இருப்பன நினைவில்
தெளிவாய் மேலும் திகழ்வது பகற்கனா;
அன்னையே, என்றன் அரும்முது பெண்ணே!
சாக்கிலா காரத் தகுபொருள் கட்டு
சணல்நூற் பையிலே உணவுகள் வைப்பாய்
துணிப்பை ஒன்றிலே கட்டுவாய் **உப்பினை   140
புறப்படும் வேளை புணர்ந்தது பையற்(கு)
சுயநா டகன்று பயணிக்கும் நேரம்
பொன்னெனும் இந்தப் போற்றும்இல் லிருந்து
அழகுறு தோட்ட அகல்வெளி கடந்து
வாள்களைத் தீட்டுவர் மனிதர்கள் இங்கே
சாணை பிடிக்கிறார் சமர்க்காம் ஈட்டிகள்."

அன்னையும் விரைந்து இங்ஙனம் கேட்டனள்
வருத்தம் கண்டு வாகாய் வினவினள்:
"வாள்களை எதற்கு வலிதே தீட்டுவார்
எதற்காய் ஈட்டியைப் பிடிக்கிறார் சாணை? "   150

குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"வாள்தீட்டு கின்றனர் வலிந்திதற் காக
ஈட்டியைச் சாணை இதற்காய்ப் பிடிக்கிறார்:
இல்லாப் பாக்கியன் என்தலைக் காக
இழிந்த மனிதன் என்கழுத் துக்காய்;
அங்கொரு நிகழ்ச்சி, சங்கதி நடந்தது,
அந்த வடநில அகல்முற் றங்களில்
வடபுல மைந்தனை வலிந்துநான் கொன்றேன்
அந்த வடநாட் டதிபதி அவனையே    160
வடநாடு போர்க்கு வரத்திரண் டெழுமால்
கலகக் காரர்கள் கடும்போர்க் கெழுகிறார்
இருந்துயர் கொண்டவன் எந்தனுக் கெதிராய்
தனியனாய் நிற்கும் தமியனைச் சுற்றி."

இந்த சொற்களில் இயம்பினள் அன்னை
முதியவள் மகற்கு மொழிந்தனள் இவ்விதம்:
"ஏலவே உனக்குநான் இயம்பிய துண்டு
இதையே நிசமாய் எச்சரித் துள்ளேன்
முயன்றேன் எவ்வளவோ முன்உனைத் தடுக்க
வடபால் நிலத்து வழிசெலல் நிறுத்த;    170
சரியாம் வழிநீ தான்நடந் திருக்கலாம்
தாயின் வசிப்பிடம் நீவாழ்ந் திருக்கலாம்
உரியபெற் றோர்பரா மரிப்பில்நின் றிருக்கலாம்
உன்னைச் சுமந்தோள் தன்தோட் டவெளி(யில்)
அமரென எதுவும் அடுத்திருக் காது
சண்டைசச் சரவு தான்நிகழ் திராது.

இப்போது எங்கே, அதிர்ஷ்டமில் என்மகன்,
எங்குநான் சுமந்து ஈன்றசேய் ஏழ்மையன்
நவையிழைத் தமையால் மறைவிடம் ஏகவா
தீச்செயல் புரிந்ததால் மூச்சிலா தோடவா    180
கேடுன் தலைக்குக் கிட்டி வராதிட
எழிலார் கழுத்தும் உடையா திருந்திட
சடைமயிர் துயரம் தான்கொளா திருக்க
உதிரா திருக்க உன்சீர்க் கேசம்?"

குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்:
"எனக்கு ஓரிடமும் இன்னும் தெரிந்தில
எங்கே செல்லலாம் எங்ஙனம் செல்லலாம்
என்நவைச் செயல்களில் இருந்தே மறைய;
எந்தன் அன்னையே, எனைச்சுமந் தவளே!
எங்கே மறைந்து இருக்கலாம், சொல்வாய்? "   190

லெம்மின் கைனனின் அன்னை கூறினள்
இயம்பினள் அவளே இயம்பினள் இவ்விதம்:
"எங்கென்று சொல்ல, எனக்குத் தெரிந்தில,
எங்கெனச் சொல்ல, எங்கே செல்லென,
தேவநல் தாருவாய் சென்றுநில் குன்றிலே
சூரைச் செடியாய் மாறுவாய் புதரில்
ஆயினும் அங்கும் அழிவுநேர்ந் திடலாம்
துரதிர்ஷ்டம் அங்கும் துரத்தியே வருமுனை
ஏனெனில் அடிக்கடி எழில்மலைத் தாருவும்
சிறுதுண்டுப் பலகைக்குச் சிதைந்தறு படல்உள   200
புதருள சூரைப் பொழிற்செடி அடிக்கடி
கம்புகள் அமைக்கக் கழிப்பதுண் டழித்து.

நீயெழு மிலாறுவாய் நிலச்சதுப் பதனிடை
புர்ச்சநல் மரமெனப் பொதுப்பொழில் ஒன்றில்நில்
ஆயினும் அங்கும் அழிவுநேர்ந் திடலாம்
துரதிர்ஷ்டம் அங்கும் துரத்தியே வருமுனை
ஏனெனில் சதுப்பிலே இம்மிலா றடிக்கடி
விறகினைப் பெற்றிட வெட்டிடப் படலுள
பொதுப்பொழி லதிலுள பூர்ச்சமும் அடிக்கடி
விளைநில மாக்கவே வெட்டியும் சுடலுள.   210

சென்றுநீ மலைமேல் சிறுபழ மாகிநில்
பசும்புல் தரையிலே **பழமொன் றாயிரு
எழிற்செம் **பழமென இருப்பைநீ பூமியில்
நீலக் **கருங்கனி யாகுவே றிடங்களில்
ஆயினும் அங்கும் அழிவுநேர்ந் திடலாம்
துரதிர்ஷ்டம் அங்கும் துரத்தியே வருமுனை
உன்னைப் பொறுக்குவர் ஒளிரிள மங்கையர்
**ஒடித்தீய நெஞ்சத்து ஒண்டொடி எடுப்பர்.

கோலாச்சி மீனாய் குடாக்கடற் செல்லுக
மெதுவாம் நதியிலே வெள்ளைமீ னாகுக   220
ஆயினும் அங்கும் அழிவுநேர்ந் திடலாம்
துரதிர்ஷ்டம் அங்கும் துரத்தியே வருமுனை
புகார்போல் நிறத்தோர் புத்திளம் மனிதன்
வலைகொடு வருவான் வளர்நீர்ப் பரப்பெலாம்
கரைவலை யிளமீன் கவர்ந்திழுத் திடுவான்
மீன்வலை யால்முது மீனெலாம் பிடிப்பான்.

ஓநாய் உருவெடு உயர்வனம் சென்று
காட்டினுட் புறத்தில் கரடியாய் மாறுவாய்
ஆயினும் அங்கும் அழிவுநேர்ந் திடலாம்
துரதிர்ஷ்டம் அங்கும் துரத்தியே வருமுனை   230
புகார்த்தோற் றத்தோர் புத்திள மனிதன்
ஈட்டிகள் தீட்டி எடுப்பான் கூர்மையாய்
காட்டோ நாய்களைக் கடிதுகொன் றழிக்க
மிகுவனக் கரடிகள் வீழ்த்தி யொழித்திட."

குறும்பன் லெம்மின் கைனனப் போது
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"அறிவேன் பயங்கர அகலிடங் களைநான்
எனக்குத் தெரியும் எலாக்கொடும் இடங்களும்
மரணம் எங்குதன் வாய்க்கவ் வும்என
எங்கெ கொடுமுடி வேற்படும் என்று;    240
எந்தன் அன்னையே, எனைவளர்த் தவளே!
அம்மா, எனக்கு அரும்பா லூட்டினோய்!
எங்கே மறைந்து இருக்கச் சொல்கிறாய்
எங்ஙனம் மொழிகிறாய், எங்ஙனம் இசைக்கிறாய்?
வாயெதிர் வந்தே மரணம்நிற் கிறது
தாடிக்கு நேராய்த் தீநாள்நிற் கிறது
ஒருமனி தன்தலை தப்பஓர் நாள்உள
ஒருமுழு நாளே உளததில் தப்பிட."

லெம்மின் கைனனின் அன்னையப் போது
உரைத்தாள் அவளே உரைத்தாள் இவ்விதம்:  250
"நல்லதோ ரிடத்தை நானிவண் மொழிவேன்
பெருஞ்சிறப் பொருவிடம் பெயரொடு மொழிவேன்
தீச்செய லிருந்து தெரிந்திடா தொளிக்க
இழிந்த குணமுளோன் விரைந்துபோய் மறைய:
இப்போ தொருசிறு இடத்தை நினைக்கிறேன்
ஒருஇடம் பற்றி ஒருசிறி தறிவேன்
உணப்படா திருக்க, அடிபடா திருக்க
வாள்வீ ரர்களும் வந்துசே ராவிடம்,
என்றென்றும் நிலைக்க இடுவையோர் ஆணை
பொய்யும் கேலியும் புணர்ந்திடா ஆணையொன்(று)  260
ஆறு,பத் தாண்டு அருங்கோ டைருது
இகல்போ ருக்குஏ கேனென் றாணை
வெள்ளியை விரும்பியும் செல்லேன் அத்தோடு
பொன்வேண் டியும்நான் புகேன்என் றாணை."

குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்:
"ஆணையொன் றிட்டேன் அதிபல மாய்இதோ!
கோடை முதல்வரும் காலத்தி லில்லை
அல்லது பருவம் அடுத்ததில் இல்லை
போர்பெரி துக்கும் போவதே யில்லை
மொய்ம்வாள் அவைகள் மோதிடங் களுக்கு;   270
காயங்கள் இன்னும் கவின்தோள் உள்ளன
ஆழத் துவாரம் அகல்மார் புளது
நடந்து முடிந்த நாட்களி யாட்டம்
கடந்த மோதல் களினால் இவைகள்
பெரும்போர் நிகழ்ந்த பெருமலை களிலே
மனிதரின் கொலைவீழ் தனிக்களங் களிலே."

லெம்மின் கைனனின் அன்னையப் போது
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"உன்றன் தந்தையின் உயர்பட கெடுப்பாய்
அங்கே சென்று அரும்மறை வேற்பாய்    280
ஒன்பது கடல்களில் சென்றப் பாலே
பத்தாம் கடலின் பாதியைக் கடந்து
திறந்தநீர்ப் பரப்பின் தீவகம் ஒன்றிலே
பரவையி லுள்ள பாறைத் தீவிலே
உந்தை முன்னர் ஒளித்த இடமது
ஒளித்துத் தன்னைக் காத்த ஓரிடம்
கோடைக் காலக் கொடும்போர் தம்மிலே
கடும்போர் நிகழ்ந்த கொடும்வரு டங்களில்
அவரங் கிருந்தது ஆனது நன்மையாய்
நாட்களைக் கழிப்பது நன்மையாய் யிருந்தது;   290

அங்கே ஒளிப்பாய் ஓர்ஈர் ஆண்டு
அகத்தினை நோக்கி ஆண்டுமூன் றினில்வா
உன்றன் பழகிய தந்தையார் மனைக்கு
பெற்றார் அமைத்த நற்பட குத்துறை."


பாடல் 29 - லெம்மின்கைனனின் அஞ்ஞாத வாசமும் துணிக்கர செயல்களும் *

அடிகள் 1 - 78 : லெம்மின்கைனன் தனது படகில் கடல்களின் ஊடாகப் பயணம் செய்து பாதுகாப்பாக அந்தத் தீவை அடைகிறான்.

அடிகள் 79 - 290 : லெம்மின்கைனன் அந்தத் தீவில் பருவமடைந்த மகளிருடனும் மற்றும் மாதருடனும் உல்லாசமாகக் காலம் கழிக்கிறான். போருக்குச் சென்றிருந்த ஆண்கள் திரும்பி வந்து அவனுடைய செய்கைகளைக் கண்டு ஆத்திரமடைந்து அவனைக் கொல்வதற்குச் சதித் திட்டம் வகுக்கிறார்கள்.

அடிகள் 291 - 402 : லெம்மின்கைனன் தீவைவிட்டு ஓடிப் போகிறான்; அதனால் அவனும் அவனில் பிரியம் கொண்ட பெண்களும் வருந்துகிறார்கள்.

அடிகள் 403 - 452 : லெம்மின்கைனனின் படகு ஒரு பெரும் புயலில் அகப்பட்டுச் சேதமடைகிறது. அவன்நீந்திக் கரையை அடைந்து, அங்கு ஒருபடகைப் பெற்றுத் தனது நாட்டின் கரைக்கு வந்து சேர்கிறான்.

அடிகள் 453 - 514 : லெம்மின்கைனன் தனது பழைய வீடு எரிக்கப் பட்டிருப்பதையும் எல்லா இடங்களும் அழிக்கப்பட்டிருப்பதையும் கண்டு வருந்துகிறான்; குறிப்பாகத் தனது தாயும் இறந்திருக்கலாம் என்று எண்ணி அழுகிறான்.

அடிகள் 515 - 546 : ஆனால் அவனுடைய அன்னை அப்பொழுது உயிரோடுதான் இருந்தாள்; கடுங்காட்டில் தஞ்சம் புகுந்திருந்தாள்; இதனை அறிந்த லெம்மின்கைனன் மகிழ்ச்சியடைகிறான்.

அடிகள் 547 - 602 : லெம்மின்கைனனின் தாய் வடநாட்டு மக்கள் வந்து வீடுகளை எரித்துச் சாம்பராக்கிய விபரங்களைக் கூறுகிறாள்; லெம்மின்கைனன் இன்னமும் சிறந்த வீடுகளை அமைப்பேன் என்றும் தன் தாய் பட்ட துன்பங்களுக்காக வடநாட்டைப் பழிக்குப்பழி வாங்குவேன் என்றும் சபதம் செய்கிறான்; அத்துடன் தீவில் அஞ்ஞாதவாசம் செய்த காலத்தில் தான் மகிழ்ச்சியாக வாழ்ந்த விபரங்களையும் தாய்க்குக் கூறுகிறான்.


லெம்மின் கைனன் குறும்புப் பையன்
அவன்தான் அழகிய தூர நெஞ்சினன்
தன்உண வுப்பொருள் சாக்கிலே பெற்றான்
கோடை வெண்ணெயைக் கொண்டான் பெட்டியில்
ஒருவரு டம்மவன் உண்டிட வெண்ணெய்
அடுத்த ஆண்டில் அயிலப் பன்றியூன்;
மறைவிடம் நோக்கி மற்றவன் சென்றான்
சென்றான் அத்துடன் சென்றான் விரைந்து
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"செல்கிறேன் இப்போ செல்கிறேன் விரைந்து   10
முழுதாய் எதிர்கொளும் மூன்று கோடைக்கு
அடுத்தே வந்திடும் ஐந்தாண் டுக்கு
புழுக்களை விடுகிறேன் புசிக்கவிந் நாட்டை
எழிற்பொழில் **சிவிங்கி இருந்திளைப் பாற
கழனியில் புரண்டு கலையுரு ளட்டும்
வனத்து வெளிகளில் வாத்து வாழட்டும்.

என்நலத் தாயே, இதோவிடை பெற்றேன்,
வடபுல மக்கள் வந்தால் இவ்விடம்
இருண்ட பூமியின் திரண்டிடும் மக்கள்
உறும்என் தலையை உசாவிக் கொண்டு    20
நான்புறப் பட்டதாய் நவில்வாய் அவர்க்கு
இவ்விட மிருந்துநான் எழுந்துபோ னேனென
சுட்டுக் கொழுத்திய சுடுகானக வெளி
கதிர்களை வெட்டிக் கட்டிய பின்னர்."

படகை நீரின் பரப்பில் தள்ளினான்
கப்பலை அலைமேல் கடிதே விட்டான்
உருக்கினா லான உருளைக ளிருந்து
செப்புப் படகுத் திகழ்துறை யிருந்து
பாய்மரம் தனிலே பாயினை விரித்தான்
கம்பத் தேதுணி கட்டிப் பரத்தினான்;    30
அகல்பின் னணியம் அவனும் அமர்ந்தான்
ஆயத்த மானான் அவன்புறப் படற்கு
நம்பியே மிலாறு நல்முன் னணியம்
தொடர்கலம் நடத்தும் சுக்கான் துணையுடன்.

உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
உரைத்தே அவன்தான் உரைசெய லாயினன்:
"காற்றே வீசு கப்பலின் பாய்க்கு
வாயுவே விரட்டி வன்கலம் செலுத்து
விரிமரக் கலத்தை விடுவாய் ஓட
தாருவின் படகைத் தான்செல விடுவாய்   40
**உறுசொற் களேயிலா ஒருதீ வுக்கு
பெயரிடப் படாத பெருங்கடல் முனைக்கு.
தவழ்கால் படகைத் தாலாட் டியது
தண்கடல் நுரையும் தள்ளிச் சென்றது
திறந்து பரந்தநீர்ச் செழும்பரப் பதனில்
விரிந்த விசால வியன்கடற் புறத்தில்;
மாதம் இரண்டு தாலாட் டியது
மூன்றிலும் அங்ஙனம் முன்விரைந் திட்டது.

அவ்விடம் கடல்முனை அரிவையர் இருந்தனர்
நீலக் கடலின் நீள்கரை யோரம்     50
அவர்கள் பார்த்தனர் அவர்கள் திரும்பினர்
நீலக் கடற்றிசை நீந்தின கண்கள்
சகோதர னுக்காய்த் தரித்தனள் ஒருத்தி
எதிர்பார்த் திருந்தாள் வரும்தந் தையினை
ஆயினும் உண்மையில் ஒருத்தியாங் கிருந்தது
மணமகன் தனக்காய் வருவதை நோக்கி.

தொலைவில் தெரிந்தனன் தூர நெஞ்சினன்
தூரநெஞ் சினன்கலம் தொலைவிலே வந்தது
நளிர்சிறு முகிற்திடர் நகர்வதைப் போல
வயன்நீ ருக்கும் வானுக் கும்நடு.    60

கடல்முனை அரிவையர் கடிதுசிந் தித்தினர்
தீவின் கன்னியர் செப்பினர் இவ்விதம்:
"அதெ(ன்)னப்பா கடலிலே அபூர்வமாக தெரிவது
அலைமேல் அதிசயம் ஆனது எவ்விதம்?
எங்களைச் சார்ந்ததாய் இருந்தால் கப்பல்
தீவின் பாய்மரச் செழும்பட கானால்
இல்லத்தை நோக்கி இப்புறம் திரும்பு
தீவின் படகுத் துறையதை நோக்கி:
செய்திகள் நாங்கள் செவிமடுக் கவுளோம்
வெளிநிலப் புதினம் தெரியவு முள்ளோம்   70
கரையோர மாந்தர் அமைதியில் உளரா
அல்லது போரோ அவர் வாழ்வென்றே."

காற்றும் கலத்தைக் கடத்திச் சென்றது
அலையும் கப்பலை அடித்துச் சென்றது
குறும்பன் லெம்மின் கைனன் விரைவாய்
படகை ஓட்டினன் பாறை ஒன்றுக்கு
தீவினெல் லைக்குச் செலுத்தினன் கப்பல்
தீவின் கடல்முனை நுனிக்குச் சென்றனன்.

சென்றதும் அங்கு செப்பினன் இங்ஙனம்
வந்து சேர்ந்ததும் வருமா றுசாவினன்:    80
"இந்தத் தீவிலே இடமெது முளதோ
தீவின் தலையிடத் திருக்குமோ நிலமெதும்
கப்பல் ஒன்றினைக் கரையிலே சேர்க்க
கலத்தைக் கவிழ்க்கக் காய்ந்த மண்ணிலே?"

தீவின் கன்னியர் செப்பினர் இவ்விதம்
கடல்முனைக் கன்னியர் கூறினர் உத்தரம்:
"ஆமப்பா தீவிலே அதற்கிட முள்ளன
தீவின் தலையிடத் திருப்பன நிலங்கள்
கப்பல் ஒன்றினைக் கரையிலே சேர்த்திட
கலத்தைக் கவிழ்த்திடக் காய்ந்த மண்ணிலே:   90
இங்குள துறைகள் இருப்பன விசாலமாய்
கரைகளில் நிறைய உருளைகள் உள்ளன
நூறு கலங்களில் ஏறிநீ வரிலும்
ஆயிரம் மரக்கலம் அவையிங் கடையினும்."

குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
கலத்தை இழுத்துக் கரையில் சேர்த்தனன்
மரத்து உருளைமேல் வடிவாய் ஏற்றினன்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"இந்தத் தீவிலே இடமெது முளதோ
தீவின் தலையிடத் திருக்குமோ நிலமெதும்   100
ஒருசிறு மனிதன் ஒளிப்பதற் காக
அங்கோர் மெலிந்தவன் அடைக்கலம் தேட
முழங்கும் பெரும்போர் முனைகளி லிருந்து
கூரிய வாள்களின் மோதலி லிருந்து?"

தீவின் கன்னியர் செப்பினர் இவ்விதம்
கடல்முனைக் கன்னியர் கூறினர் உத்தரம்:
"ஆமப்பா தீவிலே அதற்கிட முள்ளன
தீவின் தலையிடத் திருப்பன நிலங்கள்
ஒருசிறு மனிதன் ஒளிப்பதற் காக
அங்கோர் மெலிந்தவன் அடைக்கலம் தேட:  110
எம்மிடம் உண்டிங் கேற்றபல் கோட்டைகள்
வாழ்வதற் குண்டு வனப்புள தோட்டம்
வீரர்கள் வந்துற்ற போதிலும் நூற்றுவர்
ஆயிரம் மனிதர்வந் தடைந்தபோ தினிலும்."

குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"இந்தத் தீவிலே இடமெது முளதோ
தீவின் தலையிடத் திருக்குமோ நிலமெதும்
மிலாறு மரத்து வனத்திலோர் பகுதி
மற்றும் காட்டு வளர்புறத் தொருநிலம்    120
வெட்டிச் சுட்டது மிக்கழித் திடநான்
நல்லதோர் இடம்நான் நனிமுன் னோடியாய்?"

தீவின் கன்னியர் செப்பினர் இவ்விதம்
கடல்முனைக் கன்னியர் கூறினர் உத்தரம்:
"இந்தத் தீவிலே இடமெது மில்லை
தீவின் தலையிடத் தில்லை நிலமெதும்
இகல்உன் முதுகள விடமுமே யில்லை
நிகர்**பறை யளவு நிலமுமே யில்லை
வெட்டிச் சுட்டது மிக்கழித் திடநீ
நல்லதோர் இடம்நீ நனிமுன் னோடியாய்:  130
தேர்ந்தள பட்டன தீவகக் காணிகள்
வயல்கள்கோல் களினால் வகுக்கப் பட்டன
பல்காட்டு வெளிகள் பங்கிடப் பட்டன
நீதிமன் றங்களாய் நிலைத்தன புற்றரை."

குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன் உசாவினன்:
"இந்தத் தீவிலே இடமெது முளதோ
தீவின் தலையிடத் திருக்குமோ நிலமெதும்
எந்தன் பாடல்கள் இசைத்தே மகிழ்ந்திட
நீண்டகா வியங்களை நன்றாய்த் தொனிக்க   140
என்வாயி லேசொல் இனிதுரு(கு) கின்றன
முரசி லிருந்தவை முளைத்தெழு கின்றன."

தீவின் கன்னியர் செப்பினர் இவ்விதம்
கடல்முனைக் கன்னியர் கூறினர் உத்தரம்:
"ஆமப்பா தீவிலே அதற்கிட முள்ளன
தீவின் தலையிடத் திருப்பன நிலங்கள்
இனியஉன் பாடல்கள் இசைத்து மகிழ்ந்திட
நல்லகா வியங்களை நன்றாய்த் தொனித்திட
சோலைகள் உனக்குள சுகம் விளையாட
நடனங்கள் ஆடவும் நல்வெளி நிலமுள."   150

குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
பாடலைத் தானே பாடத் தொடங்கினன்
முன்றிலில் **பேரி முளைக்கப் பாடினன்
திகழ்களஞ் சியவெளி சிந்துர மரங்கள்
சிந்துர மரத்தில் சிறப்புறு கிளைகள்
ஒவ்வொரு கிளையிலும் ஒளிரும் பழமாம்
அந்தப் பழங்களில் தங்கப் பந்துகள்
தங்கப் பந்திலே வந்தது ஓர்குயில்
குலவுமக் குயிலும் கூவிய வேளையில்
வாயிலே தங்கம் வந்தது பெருகி    160
அலகிலே செம்பு அருவியாய்ச் சொரிந்தது
வெள்ளியும் நுரைத்து வெளியே வந்தது
பொன்னிலே ஆன பொன்மே டொன்றிலே
வெள்ளியா லான வெண்மலை யொன்றிலே.

மேலும் பாடினன் லெம்மின் கைனன்
மற்றும் பாடினன் மந்திரப் பாடல்கள்
மணலின் துகள்களை வெண்முத் தாக்கினன்
பளிச்சொளி விடும்வரை பாறையைப் பாடினன்
வண்செஞ் சுடர்விட மரங்களைப் பாடினன்
பொன்னிறம் பெறும்வரை பூக்களைப் பாடினன்.   170

மேலும் பாடினன் லெம்மின் கைனன்
தோட்ட வெளிகளில் தோன்றின கிணறுகள்
அந்தக் கிணறெலாம் தங்கநல் மூடிகள்
மூடியின் மேலொரு முகிழ்பொன் வாளியாம்
சகோதரர் குடிக்கலாம் அந்தக் கிணற்றுநீர்
சோதரி கள்தம் சுழல்விழி கழுவலாம்.

தரையிலே தோன்றவும் தடாகம் பாடினன்
நீலவாத் துக்கள் நீந்தின பொய்கையில்
தங்கத்தில் நெற்றி தலைகளோ வெள்ளி
எல்லா விரல்களும் இயைந்தன செம்பினால்.   180

தீவகக் கன்னியர் திகைத்துப் போயினர்
கடல்முனைக் கன்னியர் கண்டதி சயித்தனர்
லெம்மின் கைனனின் நிகரில் பாடலால்
வீரன் காட்டிய மிகுதிறன் கண்டதால்.

குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"நலமுறு பாடலை நயத்தொடு பாடுவேன்
சிறப்புறும் பாடலைச் சீராய்ப் பாடுவேன்
ஒருகூ ரையின்கீழ் உவந்துநா னிருந்தால்
முன்நீள் மேசை முகப்பிலே யிருந்தால்;   190
வழங்கு வதற்கொரு வனப்பில் இலையெனில்
தருவதற் கேயொரு தரையே யிலையெனில்
தொல்கா னடைந்தென் சொற்களைப் பாடுவேன்
பற்றையி னுள்ளென் பாடலைப் போடுவேன்."

தீவகக் கன்னியர் செப்பினர் இவ்விதம்
கடல்முனைக் கோதையர் கவின்மனத் தெண்ணினர்:
"வருவதற் கெம்மிடம் வாய்ந்துள வீடுகள்
வசிப்பதற் குள்ளன வளர்பெரும் தோட்டம்
பனிக்குளி ரிருந்து பாடலைக் கொணர
வெளிப்புறத் திருந்து மிகுசொற் பெறற்கு."    200

குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
வாழ்இல் லத்துள் வந்த கணத்தில்
பாடினன் அப்புறப் பக்கச் சளளாடிகள்
மேசையின் முனைவரை மிகநீண் டிருந்தவை,
'பீர்'பெரு கிற்றுச் சாடிகள் நிறைந்து
கலயத்து வந்தது கடிகமழ் தரத்தேன்
தகழிகள் எல்லாம் ததும்பி வழிந்தன
விளிம்பு வரைக்கும் நிறைந்தன கிண்ணம்
இருந்தது சாடிகள் நிறைந்து'பீர்'ப் பானம்
நறைகொணர்ப் பட்டது நிறையக் கலயம்   210
தயாராய் இருந்தது தண்ணொளிர் வெண்ணெய்
அத்துடன் பன்றி அதனூ னிருந்தது
குறும்பன் லெம்மின் கைனன் உண்டிட
தூர நெஞ்சினன் துய்ப்பதற் காக.

தூர நெஞ்சினன் இறுமாப் புற்றனன்
சுவையுண வுணணத் தொடங்கவே யில்லை
முற்றும் வெள்ளி முனைக்கத் தியிலா(து)
பொன்னில் குறுவாள் தன்கை யிலாமல்.

முற்றும் வெ(ள்)ளி முனைக்கத்தி கிடைத்தது
பொன்னில் குறுவாள் பின்வரப் பாடினன்   220
அதற்குப் பின்னர் அயின்றனன் நிறைய
வேண்டிய வரைக்கும் மிகு'பீர்' பருகினன்.

பின்னர் குறும்பன் லெம்மின் கைனன்
கிராமப் புறங்களில் உலாவித் திரிந்தனன்
தீவரி வையரொடு தினங்களித் திருந்தனன்
எழிலார் பினனல் இணைதலை யார்நடு
தலையை எப்புறம் தானே திருப்பினும்
அப்புறம் ஒருவாய் முத்தம் பொழிந்தது
எப்புறம் கையை எடுத்தே நீட்டினும்
அப்புறம் ஒருகை அதனைப் பிடித்தது.    230

இரவு முழுவதும் இருந்தனன் வெளிப்புறம்
இருண்ட கரிய இருளின் நடுவிலே
கிடந்தஅத் தீவில் கிராமமே ஒன்றிலை
இனியபத் தில்லம் இல்லாக் கிராமமாய்,
அக்கிரா மத்தில் அமைந்தவீ டொன்றிலை
ஏந்திழை பதின்மர் இல்லாஇல் லமாய்,
யாருமே மகளெனக் கூறுதற் கில்லையே
அன்னையீன் பிள்ளைகள் அங்கொருத் தியுமிலை
பக்கத் தவன்போய்ப் படுக்காப் பாவையாய்
அவன்சென் றணையா அழகுக் கரத்தளாய்.   240

ஆயிரம் மணப்பெண் அவனும் அறிந்தனன்
நூறு விதவையோ டோ ய்வுற் றிருந்தனன்
அரிவை பதின்மரில் அங்கிலை இருவரும்
முழுநூறு பேரிலே மூவரும் இல்லையே
அவன் அணைக்காத அரிவையென் றிம்ப
படுக்காத விதவைப் பாவையென் றுரைக்க.

குறும்பன் லெம்மின் கைனன் இவ்விதம்
சுகபோக வாழ்க்கை சுகித்தே நடத்தினன்
மூன்று கோடையின் முழுக்கா லத்திலும்
இருந்தஅத் தீவின் பெருங்கிரா மத்தில்,   250
கிராமப் பெண்களுக் கருமின் பூட்டினன்
விதவை யெலாரையும் நிறைவு படுத்தினன்;
திருப்திப் படாமல் இருந்தவள் மிஞ்சி
இழிந்தவள் ஒருத்தி முதிர்ந்ததோர் கன்னி
தீவின் நீள்தலைத் திகழ்புற மிருந்தவள்
பத்தாம் கிராமம் பாவையங் குறைபவள்.

பயணிக்க இப்போ அவனும் விரும்பினன்
உரியநா டேக உன்னினன் அவனே
வந்தாள் முதிய வன்முது கன்னி
இந்தச் சொற்களில் இயம்பினள் அவளே:   260
"இழிந்த தூர நெஞ்சினன் எழிலோன்
என்னை உனக்கு இல்லையேல் நினைவு
இங்கிருந் தேநீ ஏகலில் செய்வேன்
பாறையில் படகை மோதவே செய்வேன்."

துயிலெழச் சேவல் தொனிகேட் டிலது
இலை**குக் குடக்குஞ் சிலைப்புறப் பாடும்
இனபமக் காரிகைக் கினிதே தரற்கு
நாரியவ் வேழையை **நகைக்கவைத் தற்கு.

போயின பலநாள் புலர்ந்தது ஒருநாள்
பலமா லைகளில் ஒருநாள் மாலை    270
நிச்சயம் எழற்கோர் நேரம் குறித்தான்
சேவல் கூவற்கும் திகழ்நிலா வுக்கும்முன்.

எழுந்தான் வழமையாய் எழுநேர த்துமுன்
குறித்த பொழுதுமுன் கொள்துயி லெழுந்தான்
எழுந்ததும் உடனே புறப்பட் டேகினன்
கிராமத் தூடாய்த் திரிந்தான் அலைந்து
அந்தக் காரிகைக்கு கின்பம் தரற்காய்
நாரியவ் வேழையை நகைக்கவைத் தற்கு.

இரவுநே ரத்தில் ஏகினன் தனியாய்
கிராமத் தூடாய்ப் புறப்பட் டேகினான்   280
நீண்ட கடல்முனை நேர்தலை யிடத்தே
பத்தாவ தான படர்கிரா மத்துள்
அங்கொரு வீட்டையும் அவன்கண் டிலனே
மூன்று மனைகள் மூண்டுள வீட்டை
அங்கொரு மனையையும் அவன்கண் டிலனே
மூன்று மனிதர்கள் ஈண்டிவாழ் மனையை
அவன்எம் மனிதரும் அங்குகண் டிலனே
தம்தம் வாளை நன்குதீட் டார்களை
போர்க்கோ டாரியைக் கூராக் கானை
லெம்மின் கைனனின் நிமிர்தலை குறித்து.  290

குறும்பன் லெம்மின் கைனனப் போது
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"ஓகோ, அன்பே, உதித்தனன் ஆதவன்,
இனிய சூரியன் இதமாய் எழுந்தான்
எழைப் பையன் எந்தன் தலைக்கு
இழிந்தவன் எனது எழிற்கழுத் துக்கு!
பிசாசு வீரனைப் பெரிதுகாக் கட்டும்
ஒருதனி வீரனை உரிய உடையினில்
அவனது ஆடையில் அவனை வைத்திருக்க
அவனது போர்வையில் அவனைக் காக்க   300
எதிர்த்து நூற்றுவர் எழுந்திடும் போது
ஆயிரம் பேர்கள் தாக்க வருகையில்! "

அணைக்கப் படாமலே அரிவைய ரிருந்தனர்
அணைக்கப் பட்டவர் அணைபடா திருந்தனர்
படகின் உருளையைப் பார்த்தே நடந்தனன்
பாககிய மிலான்தன் படகினை நோக்கி
எரிந்து படகாங் கிருந்தது சாம்பராய்
உருந்திரிந் திருந்தது சாம்பராய் துகளாய்.

அழிவொன் றடுப்பதை அவனும் உணர்ந்தனன்
தொல்லை நாட்கள் தொடர்வதும் தெரிந்தது   310
செதுக்கத் தொடங்கினான் செம்பட கொன்றை
படகைப் புதிதாய்ப் படைக்கத் தொடங்கினன்.
மரக்கல மமைத்திட மரங்கள்தாம் வேண்டுமே
படகுசெய் வோற்குப் பலகைகள் வேண்டுமே
மரங்கள் கிடைத்தன வருமிகு கொஞ்சம்
பபலகைகள் கிடைத்தன பயனிலா அற்பம்
நூல்நூற் கும்தடி நுவல்ஐந்(து) துண்டு
இராட்டினப் பலகையில் இருமுத் துண்டு.

அவற்றினி லிருந்தே அமைத்தான் படகை
தோணியைச் செய்யத் தொடங்கினான் புதிதாய்   320
மந்திர அறிவால் மரக்கலம் கட்டினன்
ஆற்றலால் அறிவால் ஆக்கம் செய்தனன்;
ஒருமுறை அறைந்தான் ஒருபுறம் வந்தது
மறுமுறை அடித்தான் மறுபுறம் பிறந்தது
மூன்றாம் முறையும் மீண்டும் அறைந்தான்
அப்போ(து) வந்தது அகல்முழுப் படகு.

இப்போ(து) படகை இகல்நீர்த் தள்ளினான்
விட்டான் கப்பலை விரியலை களின்மேல்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்
உரைத்தே அவன்தான் உரைசெய லாயினன்:  330
"நீரில் படகே நீர்க்குமி ழாய்ச்செல்
அலையிலே மிதந்துசெல் அணிநீ ராம்பல்போல்
கழுகே(யுன்) இறகில் கொணர்வாய் மூன்றை
கழுகே மூன்று **காகமே இரண்டு
இச்சிறு படகின் இணைகாப் பாக
காத்திட ஏழைக் கவின்கல முன்புறம்."

கலத்தின் உள்ளே காலடி வைத்தான்
திருப்பினன் படகின் திகழ்பின் னணியம்
தாழ்ந்த தலையுடன் வீழ்ந்த மனத்துடன்
தொய்ந்து சரிந்த தொப்பியை அணிந்து   340
இரவிலே அங்கு இருக்கொணா ததனால்
வருபகல் அங்கு வாழொணா ததனால்
இன்பம் தீவக மகளிர்க் கீந்திட
பின்னிய கூந்தற் பெண்களோ டாட.

குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"பையன் புறப்படப் படர்ந்தது வேளை
இவ்வில் களிலிருந் தேகும் பாதையில்
இந்தப் பெண்ணின இன்பத் திருந்து
அழகிய மாதரின் ஆடலி லிருந்து;    350
ஆயினும் நான்எழுந் தப்புறம் போனபின்
நானிங் கிருந்துபோய் நடந்து முடிந்தபின்
இங்குள பெண்கள் இன்பமே யடையார்
பின்னிய கூந்தலார் பேசார் மகிழ்வுடன்
இருண்ட இந்த இல்லங் களிலே
எளியஇத் தோட்டத் தியைந்த பரப்பிலே."

அழுதனர் தீவதன் அரிவையர் இப்போ(து)
கடல்முனைக் கோதையர் கலங்கித் தவித்தனர்:
"ஏன் புறப்பட்டாய் லெம்மின் கைனனே
ஏன்பய ணித்தாய் இனியமாப் பிள்ளையே   360
பெண்புனி தத்தால் பெயரலுற் றனையா
அல்லது அரிவையர் அரிதென்ப தாலா?"

குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"பெண்புனி தத்தால் பெயர்ந்திட வில்லைநான்
அல்லது அரிவையர் அரிதென்று மல்ல
நூறு பெண்களை நான்பெறு வேனிங்(கு)
ஆயிரம் மாதரை அணைத்தெடுத் திருப்பேன்;
லெம்மின் கைனன் புறப்பட லிதற்கே
இனியமாப் பிள்ளையின் பயணம் இதற்கே   370
எனக்கொரு பெரிய ஏக்கம் வந்தது
சொந்த நாட்டைத் தொட்டதவ் வேக்கம்
சொந்தநாட் டினது **சிறுபழத் தெண்ணம்
உரியகுன் றோர **ஒருபழத் தாசை
சொந்தக் கடல்முனை மங்கையர் தவிப்பு
கொடும்சொந் தப்பொழிற் கோழிகள் கலக்கம்."

குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
தனது கப்பலைத் தள்ளினன் வெளிப்புறம்
காற்று வந்தது கடத்திச் சென்றது
அலையும் எழுந்தது இழுத்துச் சென்றது    380
நீல நிறத்து நீள்கடற் பரப்பில்
விரிந்து பரந்த வியன்கடல் மடியில்;
இழிந்த பாவையர் எஞ்சினர் கரையில்
மென்மன மங்கையர் மிகுஈர்ம் பாறையில்
தீவகத் தோகையர் தேம்பினர் துயருடன்
பொன்போற் பாவையர் புலம்பித் தவித்தனர்.

தீவகப் பாவையர் தேம்பினர் துயரதால்
கடல்முனைக் கன்னியர் கலங்கிப் புலம்பினர்
பாய்மரம் பார்வையில் படிகின்(ற) வரையிலும்
இரும்பதன் இணைப்புகள் தெரிந்திடும் வரையிலும்;   390
பாய்மரத் துக்காய்ப் பாவையர் அழுதிலர்
இரும்பிணைப் புக்காய்ப் பெருந்துய றுற்றிலர்
பாய்மரக் கீழுறும் பையனுக் கழுதனர்
சுக்கான் பீடத் தோனுக் கழுதனர்.

லெம்மின் கைனனும் நெஞ்சுற அழுதனன்
ஆனால் அழுததும் அடைகடுந் துயரும்
தீவதன் தரையே தெரிகின்ற வரைதான்
கடல்தீவு மேடுகள் காண்கிற வரைதான்;
தீவதன் தரைக்காய்த் திகைப்புற் றழுதிலன்
தீவுமேட் டுக்காய்ச் சேர்துயர் கொண்டிலன்  400
ஆனால் தீவதன் அரிவையர்க் கழுதனன்
மேட்டு நிலத்து வாத்துகட் கழுதனன்.

குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
நீலக் கடலில் நெடுந்தொலை சென்றனன்
சென்றனன் ஒருநாள் சென்றனன் இருநாள்
மூன்றாம் நாளில் முழுமையும் சென்றனன்
அப்போ(து) காற்று அங்கார்ந் தெழுந்தது
அத்துடன் அடிவான் அதுஇடித் தார்த்தது
வலியகாற் றொன்று வடமேற் கினிலே
கடும்காற் றொன்று காண்வட கிழக்கிலே   410
பற்றிய தொருபுறம் பற்றிய(து) மறுபுறம்
முற்றாய்ப் படகை முடித்தது புரட்டி.

குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
நீரை நோக்கி நீள்கரம் திருப்பி
வலித்துச் சென்றனன் வன்விரல் களினால்
உதைத்துச் சென்றனன் உறுதன் கால்களால்.

நேர்இரா நெடும்பகல் நீந்திச் சென்றபின்
அதிக தூரம் அவன்உதைத் தானபின்
நகர்வதைக் கண்டனன் நன்கோர் சிறுமுகில்
விரிவட மேற்கதன் விளிம்பைக் கண்டனன்   420
அதுபின் நிலமாய் அங்குமா றிட்டது
கடலின் முனையாய்க் காட்சியும் தந்தது.

கரையில் ஏறினன் கரையிலோர் இல்லம்
ரொட்டிகள் தலைவி சுட்டவா றிருந்தனள்
தையலர் அவற்றைத் தட்டிட லாயினர்:
"ஓ,நற் கருணைகூர் உயர்ந்த தலைவியே!
உன்னால் என்பசி உணர்ந்திட முடிந்தால்
எந்தன் நிலமையை இனிதுநீ அறிந்தால்
களஞ்சிய அறையை காணநீ ஓடு!
பனிப்புய லாய்ப்'பீர்'ப் பானத் தறைக்கு   430
சாடியொன் றார்'பீர்'ப் பானம் கொணர்வாய்
பன்றி யிறைச்சித் துண்டுகள் கொணர்வாய்
அவற்றைப் பின்னர் அனலில் வாட்டுவாய்
மிகைஅவை மீது வெண்ணெயைப் பூசுவாய்
இளைத்ததோர் மனிதன் எடுத்துணற் காக
நீந்திய நாயகன் சோர்ந்தவன் அருந்த
நானிராப் பகலாய் நளிர்கடல் நீந்தினன்
திறந்த கடலதன் பரந்த அலைகளில்
காற்றொவ் வொன்றையும் கருதித் தஞ்சமாய்
கடலின் அலைகளைக் கருணையாய்க் கருதி."   440

அப்போ(து) கருணைகூர் அந்தத் தலைவி
கவின்குன்றி லேயமை களஞ்சியம் சென்றனள்
வெண்ணெயைக் களஞ்சியத் திருந்தே வெட்டினள்
பன்றி யிறைச்சியைத் துண்டுதுண் டாக்கினள்
அவற்றை வாட்ட அனலில் போட்டனள்
பசியுறு மனிதன் புசிப்பதற் காக
சாடியொன் றினில்'பீர்'ப் பானம் கொணர்ந்தனள்
நீந்திய நாயகன் சோர்ந்தவன் அருந்த;
பின்னர் புதியதோர் பெரும்பட கீந்தனள்
தயாராய் இருந்த தக்கதோர் தோணி    450
மனிதன் வேறொரு நனிநா டேக
இல்லினை நோக்கி எழுந்திடப் பயணம்.

குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
இல்லம் வந்து இறங்கிய போது
அறிந்தனன் நிலத்தை அறிந்தனன் கரையை
தீவுக ளோடு தெரிந்தனன் நீரிணை
தொன்நாட் படகுத் துறையையும் உணர்ந்தனன்
வழக்கமாய் வாழ்ந்த வளவிடம் உணர்ந்தனன்
குன்றையும் குன்றின் குலத்**தேவ தாருவும்
மேட்டையும் மேட்டின் வியன்**தாரு மரத்தையும்   460
ஆயினும் இல்லத் தடத்தை யறிந்திலன்
இல்லதன் சுவர்கள் இருந்தஅவ் விடத்தை
இல்லம் இருந்த இடத்திலிப் போது
இளம்பழச் **செடிகள் சலசலத் திருந்தன
தேவதா ரிருந்தது திகழ்மனைக் குன்றிலே
சூரைச் செடிகளாம் சுவரின் பாதையில்.

குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"நான்உலா வியபொழில் நன்கதோ உள்ளது
அங்கே யுளனயான் அடியிட்ட பாறைகள்    470
நான்விளை யாடிய நற்புற் றரையதோ
துள்ளித் திரிந்தஎன் நல்வயற் கரைஅதோ;
பழகிய என்னிலைப் பறித்தே கியதெது
அழகிய கூரையை அகற்றிய வர்யார்?
வீட்டை யெரித்ததால் சாம்பரா யானது
சாம்பரைக் காற்றும் தானடித் தகன்றது."

அங்கே அவன்பின் அழவும் தொடங்கினன்
ஒருநாள் அழுதனன் இருநாள் அழுதனன்;
அவனே அழுதது அகத்துக் கல்லவே
களஞ்சிய அறைக்காய்க் கவலையு முற்றிலன்   480
இ(ல்)லத்துப் பழகிய ஏந்திழைக் கழுதான்
அக்களஞ் சியவறை அன்புளாட் கழுதான்.

பறவை ஒன்று பறப்பதைக் கண்டனன்
ஓர்கழு கங்கு உயர்ந்தசைந் தகல்வதை
அதனை இவ்விதம் அவனும் வினவினன்:
"ஓ,என் கழுகே, உயர்நற் பறவையே!
உரைத்திட எனக்கு உனாலா காதா
எனது முந்திய இனியதாய் எங்கே
என்னைச் சுமந்தஅவ் வெழில்மகள் எங்கே
எனைமுலை யுட்டிய இனியவள் எங்கே? "   490

எதுவும் நினைவிலை ஏகிய கழுகுக்(கு)
மூடப் பறவை முற்றொன் றறியா(து)
இறந்தாள் அவளே எனக்கழு கறியும்
காணா தொழிந்ததைக் **காகமும் அறியும்
ஒருவாள் செயலால் வறிதே மறைந்தாள்
கொடும்போர்க் கோடரிக் கொலையுண் டனள்என.

குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"ஐயகோ எனைச்சுமந் தளித்த அழகியே!
முலையுட்டி வளர்த்த முந்தென் இனியளே!   500
எனைச் சுமந்தவளே, இறந்து போயினையோ?
அன்புறும் அன்னாய், அகன்று போனாயோ?
அன்னாய் தசைநிலத் தழுகி யழிந்ததோ!
தேவதா ரதன்மேல் செறிந்து முளைத்ததோ!
குதிக்கால் சூரைக் கொழும்செடி வளர்ந்ததோ!
அலரியும் விரல்நுனி அவற்றில் எழுந்ததோ!

தண்டனைக் குரியவன் தான்நான் இழியவன்
துர்பாக் கியவான் அற்பப தராதி
எந்தன் வாளை எடுத்தாங் குயர்த்தினேன்
அழகிய ஆயுதம் அதைநான் ஏந்தினேன்   510
அங்கே வடபால் அகல்நில முன்றிலில்
வல்லிருட் பூமியின் வயற்கரை யோரம்
சொந்த இனத்தொரு தோகையைக் கொல்ல
அன்றெனைச் சுமந்த அன்னையை இழக்க."

பார்த்தனன் திரும்பிப் பார்த்தனன் சுற்றிலும்
காற்சுவ டொன்றைக் கண்டனன் சிறிதே
காண்புல் நடுவில் கசங்கிக் கிடந்ததை
அப்பசும் புற்றரை அழிந்து கிடந்ததை;
அந்தப் பாதையில் அறிதற் கேகினன்
அவ்வழி ஏகினன் அதைஓர் வதற்காய்    520
அவ்வழி வனத்தின் அமைவுட் சென்றது
அவ்வழி அவனை அழைத்துச் சென்றது.

ஏகினன் ஒன்று இரண்டு**மைல் தூரம்
சிறிதே தூரம் தரையில் விரைந்தனன்
உயர்இருட் காட்டின் உள்ளே நுழைந்தனன்
வலிதடர் காட்டின் வளைவில் மூலையில்;
இரகசியச் சவுனா இருக்கக் கண்டனன்
மறைந்தொரு சிறிய மனைக்குடில் இருந்தது
இருஉயர் பாறை இடைநடு வினிலே
முத்தேவ தாரு மூலையின் கீழே    530
அன்புறும் அன்னையை அங்கே கண்டனன்
உயர்சிறப் புடையாள் ஒளித்தாங் கிருந்தனள்.

குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
பெரிதும் மகிழ்ந்தான் பேர்களிப் படைந்தான்
இனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னான்
இந்தச் சொற்களில் இவ்விதம் மொழிந்தான்:
"ஓகோ, எந்தன் உயர்வன் பன்னாய்!
தாயே, என்னைத் தனிவளர்த் தவளே!
இன்னும் உயிரோ டிருக்கிறா யம்மா!
ஈன்றநீ இன்னும் இருக்கிறாய் விழிப்பாய்   540
இறந்து போனதாய் இதுவரை அறிந்தேன்
எல்லா வகையிலும் இழந்ததாய் நினைத்தேன்
வாளின் வலியால் வலிதே சென்றதாய்
ஈட்டி குத்தியும் இறந்ததாய் நினைத்தேன்;
அழுதேன் இனிய அகல்விழி மறைய
அழகிய முகமும் அழிந்தே போக."

லெம்மின் கைனனின் அன்னை கூறினள்:
"இன்னும் உயிரோ டிருக்கிறேன், ஆமாம்,
அங்கிருந் தேநான் அகன்றிட நேரினும்,
மறைந்து வாழ்நிலை வந்திட்ட போதிலும்,   550
இந்தக் காட்டின் இருண்டவிவ் விடத்தே
அடர்ந்த காட்டின் அமைவளை மூலையில்;
ஒருபெரும் யுத்தம் வடநிலம் தொடுத்தது
போருக்கு வந்ததோர் புதுப்பெருங் கூட்டம்
இழிந்த மனிதன் எதிராய் உனக்கு
அதிர்ஷ்ட மற்றவ னாமுனக் கெதிராய்
இல்களைச் சாம்பராய் எரித்தே யாக்கினர்
எங்கள் தோட்டம் எல்லாம் வீழ்த்தினர்."

குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்:
"என்றன் அன்னையே, எனைச்சுமந் தவளே!   560
என்றுமே இதற்காய் இனித்துயர் வேண்டாம்
அதற்காக வேனும் எதற்காக வேனும்
கவின்மனை புதிதாய்க் கட்டத் தொடங்கலாம்
இன்னும் சிறந்த இல்கள் கட்டலாம்
வடநில மீது வன்போர் தொடுபடும்
பிசாச இனத்தவர் பேரழி வுறுவர்."

பின்னர் லெம்மின் கைனனின் அன்னை
இந்தச் சொற்களில் இயம்பினள் அவளே:
"வெகுநாள் தங்கினாய் வெளியே மகனே
தூரநெஞ் சினனே தொலைவிலே வாழ்ந்தாய்   570
அந்த வெளிப்புற அயல்நா டுகளில்
அன்னிய மான அம்மனை வாயிலில்
பெயரிடப் படாத பெருங்கடல் முனைகளில்
**உறுசொற் களேயிலா ஒருதீ வதனில்."

குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"அங்குநான் வாழ்ந்தது அருமையா யிருந்தது
திரிந்து மகிழ்ந்தது தினம் இனிப்பானது
திகழுமம் மரங்கள் சிவப்பாய் மிளிர்ந்தன
மரங்களோ சிவப்பு மண்ணதோ நீலம்   580
ஊசி யிலைமரத் துயர்கிளை வெள்ளி
புதர்ச்செடிப் **பூக்கள் பொன்னா லானவை;
தேன்நிறை குன்றுகள் செறிந்தாங் குள்ளன.
பாறைகள் எங்ஙணும் கோழியின் முட்டைகள்
பட்ட**தா(ரு) மரமெலாம் பசுந்தேன் வடிந்தது
உழுத்திடும் **தேவதா ரூற்றிய துபால்
வேலிகள் மூலையில் வெண்ணெயாய் வழிந்தது
வேலியின் கம்பத்தில் மிகுந்த'பீ ரொ'ழுகிற்று.

அங்குநான் வாழ்ந்தது அருமையா யிருந்தது
காலம் மதுரமாய்க் கழிந்துகொண் டிருந்தது;   590
அங்குபின் வாழ்வது ஆனது கொடுமையாய்
அங்குநான் இருப்பது அன்னிய மானது:
அஞ்சினர் அவர்கள்தம் பெண்களைப் பற்றியே
நம்பினர் கெட்டவர் நடத்தையில், என்பதாய்,
எளிய பிறவிகள் இரும்பானை **வயிறுளார்
தீய கொழுத்த செயல்கெடும் பிறவிகள்,
தையலர் இருந்தனர் தகாத நடத்தையில்
என்னுடன் கழித்தனர் இரவுகள் பலவென;

மறையலா யினேன்நான் மங்கைய ரிடத்திருந்(து)
கவனமா யிருந்தேன் வனிதையர் மகளார்க்(கு)   600
ஓநாய் பன்றிகட் கொளிப்பதைப் போல
கிராமக்கோ ழிக்குக் கழுகு மறைதல்போல்."


பாடல் 30 - லெம்மின் கைனனும் உறைபனி மனிதனும் *

அடிகள் 1-122 : லெம்மின்கைனன் வடநாட்டின் மீது போர் தொடுப்பதற்கு உதவுமாறு தனது பழைய தோழனான தியேராவைக் கேட்கிறான்.

அடிகள் 123-316 : வடநிலத் தலைவி உறைபனியை உருவாக்கி கடலில் இருந்த கப்பல்களை உறையச் செய்கிறாள். உடன் இருந்த வீரர்களும் உறையப் போகும் சமயத்தில் லெம்மின்கைனன் தனது மந்திர சக்தியாலும் மாயச் செயல்களாலும் உறைபனியினால் ஏற்பட்ட அகோரத்தைத் தாங்குகிறான்

அடிகள் 317- 500 : லெம்மின்கைனன் பனிக்கட்டி மேல் நடந்து கடற்கரைக்கு வருகிறான். பின்னர் வெகுகாலம் காடுகளில் துன்பத்துடன் அலைந்து தி஡஢ந்து கடைசியில் தனது வீட்டை அடைகிறான்.


அஹ்திப் பையன் அவன்நிக ரற்றோன்
குறும்புப் பையன் லெம்மின் கைனன்
காலை ஒருநாள் வேளை வைகறை
அந்த நாளில் முன்புலர் நேரம்
படகுச் சாலையுட் பதித்தான் காலடி
நற்கப் பற்றுறை நடந்தான் நோக்கி.

அங்கே மரத்தின் அகல்பட கழுதது
புலம்பிற் றிரும்பின் துடுப்புப் பூட்டு:
"எவரோ கட்டிய எனக்கெது வுண்டு
எவரோ செதுக்கிய எளியேன் எனக்கு?   10
செருபோ ருக்கெனைச் செலுத்திலன் அஹ்தி
ஆறு,பத் தாண்டு அருங்கோ டைருது
வெள்ளியை அவனும் விரும்பிய தில்லை
பொன்னைத் தேடிப் போனது மில்லை."

குறும்பன் லெம்மின் கைனன் அவனே
படகினை அறைந்தான் பருகை யுறையால்
எழிலாய் மின்னும் இகத்தோ லுறையால்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"தாருவின் மிதவையே தனித்துயர் வேண்டாம்
மரத்தின் புறமே முறையிடல் வேண்டாம்   20
இனியும் போர்க்கெழ இருக்கும் வாய்ப்பு
சண்டைக் கேகும் சந்தர்ப் பம்வரும்:
துடுப்புக் காரரால் நிரப்பப் படுவைநீ
நாளை விடியும் நற்பொழு திருந்து."

அன்னையின் அருகே அடிவைத் தடைந்தான்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"அன்னையே இப்போ தழுவது வேண்டாம்!
பெற்றவ ளேயெனை, பொ஢தும் புலம்பேல்!
எங்கா வதுதான் ஏகுவ தானால்
போர்க்களத் துக்குப் போவதா யிருந்தால்;   30
என்றன் மனதில் இதுதோன் றியது
எனக்கு வந்த எண்ணமு மிதுவே
வீழ்த்துதல் வேண்டும் மிகுவட நாட்டாரை
தண்டிக்க வேண்டும் தாழ்விழி மாந்தரை."

அவனைத் தடுக்க அன்னையும் முயன்றாள்
எச்சா஢த் தனளவ் விருமுது பெண்ணே:
"செல்லுதல் வேண்டாம், செல்வஎன் மகனே!
அந்த வடபால் அகல்நிலப் போர்க்கு!
எதிர்நோக் கிவரும் இறப்பே யங்கு
சந்திக்க நேரும் தனிநின் மரணம்."    40

எதைத்தான் ஏற்றான் லெம்மின் கைனன்
செல்வது என்றே தீர்மா னித்தான்
புறப்பட் டேக ஒரேமுடி வெடுத்தான்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"இன்னொரு மனிதனை எங்கே பெறலாம்
இன்னொரு மனிதனும் இன்னொரு வாளும் அஹ்தி போர்க்கே அருந்துணை யாக
உதவிக் கின்னொரு உரமுறு மனிதனை?

தொ஢ந்தவன் எனக்குத் *தியேரா உள்ளான்
*பனிப்பத மனிதனை பல்கால் அறிவேன்   50
பெறுவேன் அவனைப் பிறிதொரு மனிதனாய்
பிறிதொரு மனிதனும் பிறிதொரு வாளும்
அஹ்தி போர்க்கே அருந்துணை யாக
உதவிக் கின்னொரு உரமுறு மனிதன்.

கிராமத் தூடாய் விரைந்தவ னேகினன்
தியேரா தோட்டத் தெருக்களின் வழியாய்
அங்கவ னடைந்தது மிங்ஙனம் மொழிந்தான்
சேர்ந்ததும் வந்து செப்பினன் விவரம்:
"தியேரா, என்விசு வாசத் தோழனே!
இன்னரும் நண்பனே, இனிய மித்திரனே!   60
அந்தநாள் ஞாபகம் சிந்தையி லுளதா
வந்ததா அந்தநாள் வாழ்க்கையும் நினைவில்
இருவரும் ஒன்றாய் ஏகினோம் அன்று
பொ஢யதாய் நடந்த பேரமர்க் களங்களில்?
அப்போ கிராமம் அங்கொன் றிலையே
இல்லம் பத்தே இல்லாக் கிராமமாய்.
அப்போ தங்கொரு அகமுமே யிலையே
வீரர்கள் பதின்மர் விளங்கா இல்லமாய்,
அங்கொரு வீரனும் அப்போ தில்லையே
கணிப்புள மனிதனாய் மதிப்புள மனிதனாய்  70
வீரர்நா மிருவரும் வீழ்த்தா மனிதனாய்
தருக்கிநாம் வெட்டிச் சாதிக்கா மனிதனாய்."

சாளரப் பீடம் தந்தையார் இருந்தார்
பிடிஈட் டிக்குச் செதுக்கிய வாறே
அன்னையும் களஞ்சியக் கூடத் தமர்ந்தனள்
தாய்மத் தொன்றால் தயிர்கடை தன்மையில்
வாயிலில் சகோதரர் வழியினில் நின்றனர்
சறுக்கு வண்டியைப் பிணைத்த வண்ணமாய்
சோதா஢ முனையில் துறையதில் நின்றனர்
கழுவித் துணிகளை அலசிய வண்ணமாய்.   80

சாரளத் திருந்த தங்தையும் மொழிந்தார்
களஞ்சியக் கூடத் திருந்ததாய் கேட்டனள்
வாயிலில் நின்ற சகோதரர் விளித்தனர்
துறைமுனைச் சோதா஢ சொல்லினர் இப்படி:
"நேரமே யில்லை தியேராபோர்க் கேக
தியேரா ஈட்டி செய்சமர்க் கலக்க;
தியேராவோர் இணக்கம் செய்தனன் புகழுற
நீடுமொப் பந்தம் நேர்ந்தொன் றியற்றினன்
இளம்பெண் ஒருத்தியை இப்போ மணந்தனன்
தனக்கென உ஡஢த்தாய்த் தலைவியை ஏற்றனன்  90
இன்னும் விரல்படா திருப்பன முலைக்காம்(பு)
திகழ்மார் பின்னும் தேய்படா துள்ளன."

இருந்தனன் தியேரா இதஅடுப் பருகே
கணப்பின் மூலையில் பனிப்பத மனிதன்
ஒருகால ணியை அடுப்பின் அருகிலும்
மற்றதைப் பீடமேல் வைத்தனன் கணப்பில்
இடுப்பின் பட்டியை இட்டே வாயிலில்
நடைபயின் றிட்டான் நன்கே வெளிப்புறம்;
தியேரா(தன்) ஈட்டியைச் செங்கர மெடுத்தான்
பென்னம் பொ஢ய ஈட்டியஃ தல்ல   100
சின்னஞ் சிறிய ஈட்டியு மல்ல
ஆயினும் ஒருநடுத் தரமே யானது:
அதன்முனை **பா஢யொன் றங்கே நின்றது
அலகின் அருகிலே முயலும் குதித்தது
ஓநாய்ப் பொருத்தில் ஊளை யிட்டது
கரடி குமிழில் கனன்றுறு மியது.

அவன்தன் ஈட்டியை அங்கே சுழற்றினான்
சுழற்றினான் ஈட்டி சுற்றி விசிறினான்
ஆறடி ஈட்டியின் அலகைச் செலுத்தினான்
வயலின் களியாம் மண்ணா ழத்தில்    110
ஏதும் பயிரிலா இயல்பொது மண்தரை
மேடுஇல் புற்றரை மீதே நிலத்தில்.

திணித்தான் தனது ஈட்டியைத் தியேரா
அஹ்திவைத் திருந்த அவனது ஈட்டியுள்
வந்தான் பின்அவன் வந்தான் விரைவாய்
போரிலஹ் திக்குப் பொருந்தும் உறுதுணை

பின்னர் அஹ்தி பெருந்தீ வின்மகன்
இறக்கினன் தோணியை இரும்நீர்த் தள்ளி
வெளிர்புல் லுறையும் வி஡஢யன் பாம்புபோல்
அல்லது உயிருடை அரவம் போல    120
புறப்பட் டேகினர் புறம்வட மேற்காய்
வடபுலப் பூமியின் கடலதி லாங்கே.

அந்த வடநிலத் தலைவியைப் போது
*உறைபனி மனிதனை உருச்செய் தனுப்பினள்
வடபுலப் பூமியின் கடலதி லாங்கே
வி஡஢ந்து பரந்த வியன்கடல் மடியில்;
இந்தச் சொற்களில் இயம்பினள் அவளே
கூறினாள் இவ்விதம் கொடுத்தாள் கட்டளை:
"உறைபனி மைந்தனே ஓ,சிறு பையனே!
என்றன் சொந்த எழிலார் வளர்ப்பே!   130
நான்புகல் இடத்தே நீசெலல் வேண்டும்
நான்புகல் இடத்தே நன்கென் ஆணைபோல்:
துடுக்கா஢ன் தோணியைப் படுத்துறை குளிராய்
குறும்பன் லெம்மின் கைனனின் படகை
உயர்ந்த தெளிந்த ஒளிர்கடல் மேலே
வி஡஢ந்து பரந்த வியன்கடல் மடியில்!

தலைவன் தனையே சா஢யாய்க் குளிர்செய்
துடுக்கனை நீ஡஢ல் உறைந்து போகச்செய்
என்றும் அவன்வெளி வந்திடா திருக்க
என்றுமே விடுதலை யில்லா திருக்க    140
விரும்பி நானே விடுத்தால் தவிர
சென்றுநான் விடுதலை தந்தால் தவிர!"

உறைபனி யோன்எனும் நிறைதீச் சக்தி
தீய மனத்தொடு திகழுமப் பனிப்பையல்
புறப்பட் டான்கடல் நிறைகுளி ராக்க
அலைகளை நிறுத்தி அவையுறைந் திடச்செய;
அவ்வா றவனும் அவ்வழி செல்கையில்
தரையிலே நடந்து தான்செல் வேளையில்
மரங்களைக் கடித்து மரத்திலை யகற்றினான்
புற்களின் தாள்களைப் போக்கினான் அவ்விதம்.  150
அங்கே பின்அவன் அடைந்தநே ரத்தில்
வடபுலக் கடலின் வருவிளிம் பெல்லையில்

முடிவே யில்லாப் படிநீர்க் கரையில்
உடன்வரு முதலாம் உறுஇர வதனில்
குளிர்வித் தான்குடா, குளிர்வித் தான்குளம்,
கடலின் கரைகளைக் **கடினம தாக்கினான்
ஆனால் இன்னும் ஆழியை ஆக்கிலன்
படிய வைத்திலன் படரலை நிறுத்தி;
ஒலிகடல் நீர்மேல் ஒருசிறு **குருவி
வளர்அலை மேலொரு **வாலாட் டிப்புள்   160
இன்னும் குளிர(஡க) விலையதன் நகங்கள்
குளிர்பிடித் திலதது கொள்சிறு தலையில்.

அதிலிருந் திருநிசி அங்கே கடந்தபின்
வளர்ந்தது மாபெரும் வல்லமை யுடையதாய்
ஈடுபா டுற்றது எழு**நா ணின்றியே
மிகமிகப் பயங்கர மாய்மேல் வளர்ந்தது
உள**விசை முழுதினால் உறையவே வைத்தது
உறைபனி யோன்விசை உக்கிர மானது
உதித்தது பனிக்கட்(டி) ஒருமுழத் தடிப்பில்
சறுக்கணித் தடியாழ் உறைபனி பொழிந்தது   170
வந்தது துடுக்கனின் வன்கலம் குளிராய்
அஹ்தியின் கப்பலும் அலைகடல் மீதே.

அஹ்தியைக் குளிர்செய அங்கவன் கருதினன்
விறைக்கவைக்(க) எண்ணினன் மிகுவீ றுடையனை
அவனுடை உகிர்களை அவன்கேட் டேகினன்
அடிமுதல் விரல்வரை அவன்தேடி யேகினன்;
லெ(ம்)மின்கைன னப்போ நெடுஞ்சினங் கொண்டனன்
பாதிப்பு முற்றனன் படுபெருஞ் சினத்தொடே
உறைபனி யோனையே உடன்அனல் இட்டனன்
தள்ளினான் இரும்பினால் தானமை சூளையுள்.  180

உறைபனி யோனிலே உடன்கரம் வைத்தவன்
கொடுங்கால நிலையினை கொண்டிட லாயினன்
இனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னான்
இந்த மொழிகளில் இவ்விதம் மொழிந்தான்:
"உறைபனி யோனே, உயர்வாடை மைந்த!
குளிர்ப்பரு வத்துக் குளிராம் மகனே!
எனது நகங்களுக் கேற்றிடேல் குளிரை
எனது விரல்களை இனிக்கேட் காதே
எனது செவிகளை இனிநீ தொடாதே
எனது சிரத்தை இனிக்கடிக் காதே!    190
நீகுளி ராக்க நிறையவே யுள்ளன
குளிரூட் டுதற்குக் கோடிகள் உள்ளன
மனிதனின் தோல்தனை மாத்திரம் தவிர்த்து
அன்னைபெற் றெடுத்த அழகுடல் தவிர்த்து:
குளிரூட்(டு) சதுப்பைக் குளிரூட்(டு) நிலத்தை
குளிராம் பாறை குளிரூட் டிடுமேல்
நீர்க்கரை அலா஢யை நீகுளி ராக்கு
காட்டர சதனின் கணுக்களைக் குளிரச்செய்
மிலாறுவின் பட்டையைமிக்நோ கச்செய்
இளம்ஊ சி(யி)லை எழில்மர மா஢த்தெடு   200
ஆனால் வேண்டாம் அருமானுடன் தோல்
ஒருபெண் ஈன்ற உத்தமன் மயிரும்!

இதுவும் போதா தின்னமு மென்றால்
மற்றும் அதிசய மாம்பொருள் குளிர்ச்செய்
கொதிக்கும் பாறைக் கொடுங்கல் குளிர்ச்செய்
கனன்றே எ஡஢யும் கற்பா ளங்களை
இரும்பால் ஆன எழிற்குன் றுகளை
உருக்கினா லான உயர்ந்த மலைகளை
வுவோக்சியின் பயங்கர முறுநீர் வீழ்ச்சியை
கொடுமையே தானாய்க் கொள்இமாத் திராவை  210
நீர்ச்சுழல் தொண்டை நெடுமதன் வாயை
கொடிய பயங்கரம் கொள்நீர்ச் சுழியை!

உனதுவம் சத்தை உரைக்கவா இப்போ
உன்கெள ரவத்தை உறவெளிப் படுத்தவா
உன்வம் சத்தின் உடைமைகள் அறிவேன்
நீவளர்ந் தவித நிசமெலா மறிவேன்:
உறைபனி யோனின் உதிப்பல ஡஢ச்செடி
வெய்யகா லநிலை மிலாறுவின் மத்தி
வடபால் நிலத்து வசமுள இல்லுள்
இருள்சூழ் வசிப்பிட இயைஆ ழத்தில்    220
மாசு படிந்ததோர் வன்தந் தைக்கு
பயனில் லாததோர் பதராம் தாய்க்கு.

யார்உறை பனியனை நேர்பால் ஊட்டினர்
பெருங்கொடுங் காற்றைப் பேணி வளர்த்தவர்
அன்னை யிடம்பால் அற்றவந் நேரம்
அன்னை யிடம்முலை இல்லா நிலையில்?

வி஡஢யன்பா லூட்டிய துறைபனி யோற்கு
வி஡஢யன்பா லூட்ட ஒருபாம் பூட்டுமூண்
முனையில் லாத முலைக்காம் புகளால்
பால்அற நேர்ந்த மார்பகங் களினால்;   230
அவனை வாடை அங்குதா லாட்ட
அவனைக் குளிர்காற் றாராட் டிற்று
கொடிய அலா஢ கொள்நீ ரோடையில்
நிரம்பி வழிந்த சதுப்பு நிலங்களில்.

தீய மனத்தவன் ஆனான் சிறுபையல்
அழிக்கும் ஆற்றலை அவன்பெற் றிருந்தான்
இன்னும் அவனுக் கிடுபெய ரொன்றிலை
பயனெது மற்ற பைய னவற்கு;
தீப்பைய னுக்குச் செப்பினர் ஒருபெயர்
உறைபனி யோனென உரைத்தனர் அவனை.   240

வேலிகள் மீதவன் மோதிச் சென்றனன்
தண்பற் றைகளிடைச் சலசலத் திட்டனன்
கோடையில் சேற்றில் குறைவிலா துலவினன்
தனிப்பெரும் திறந்த சதுப்பு நிலங்களில்
குளிர்கா லத்தில் குதித்தான் தாருவில்
வளர்தேவ தாரு மரங்களில் இரைந்தான்
மோதித் தி஡஢ந்தான் மிலாறு மரங்களை
பூர்ச்சம் பொழிலில் புகுந்தே யாடினான்
வழுதுகள் மரங்களைக் குளிரச் செய்தனன்
மேட்டு நிலங்களை மட்டம தாக்கினன்    250
மரங்களைக் கடித்து மரத்திலை அகற்றினான்
புதர்ச் **செடிகளிலே பூக்களை அழித்தான்
பூர்ச்ச மரங்களில் போக்கினான் பட்டையை
ஊசி யிலைமரத் துறுசு(ள்)ளி வீழ்த்தினான்
இப்போ துநீ எடுத்தனை பேருரு
அழகாய் மிகவும் வளர்ந்தவ னானாய்
எனைக்குளி ராக்கலாம் என்றா கருதினை
என்செவி வீங்கவைத் திடுதற் கெண்ணமா
அடியிருந் தென்கால் அடையும் நினைவா
மேலிருந் தெனது விரல்நகம் கேட்கவா?   260

ஆனால் நீயெனை அக்குளி ராக்கிடாய்
கொடுமையா யுறையக் கூடிய தாக்கிடாய்
நெருப்பைத் திணிக்கிறேன் நிறையஎன் காலுறை
கொள்ளி களையென் குளிர்கா லணிக்குள்
தணலையென் ஆடை தம்விளிம் புகளுள்
காலணி களின்நூற் கோலநா டாக்கீழ்
உறைபனி யோனெனை உறைய வைத்திடான்
கொடுங்கால நிலையும் குறித்தெனைத் தொடாது.

உன்னைச் சபித்துநான் ஓட்டுகி றேனங்(கு)
வடபால் நிலத்தின் வளர்கோ டிக்கரை;   270
அந்த இடத்தைநீ அடைந்ததன் பின்னர்
உனது வீட்டைநீ ஓடி யடைந்தபின்
அனலுறும் கலயம் அறக்குளி ராக்கு
அடுப்பிலே எ஡஢யும் அந்த அனலையும்
மாப்பசை யில்லுள மங்கையர் கைகளை
பாவையர் மார்புப் பையன் களையும்
செம்மறி யாட்டின் சேர்மடிப் பாலை
குதிரையின் வயிறுறும் குதிரைக் குட்டியை!

அதற்கும் நீபணி யாதே போனால்
அதற்குமப் பாலுனைச் சபித்துத் துரத்துவேன்  280
அரக்கா஢ன் மத்தியில் இருக்கும் அனலிடை
பிசாசு களின்பெரு நெருப்புச் சூளை(க்கு)
நீயே அங்குனைத் தீயில் திணிப்பாய்
கொல்லுலை தன்னிலே உன்னைக் கொடுப்பாய்
கொல்லன் சுத்தியல் கொண்டடிப் பதற்கு
சம்மட்டி யாலுனைச் சாடியே நொருக்க
சுத்திய லாலுனைத் தொடர்ந்துரத் தறைய
சம்மட்டிக் கொண்டுனைச் சா஢யாய் நொருக்க!

அதற்கும் நீபணி யாதே போனால்
அதைநீ சற்றும் கவனியா திருந்தால்    290
இன்னொரு இடத்தை எடுப்பேன் நினைவில்
மற்றொரு புறத்தை மெத்தவும் உணர்வேன்
உன்வாய் தென்திசைக் கோட்டிச் செல்வேன்
கோடைவீட் டுக்குக் கொடியவுன் நாவை
என்றும்நீ அங்கிருந் தெழுந்திட முடியா
என்றுமே விடுதலை ஏற்றிட மாட்டாய்
விரைந்துநான் வந்துனை விடுத்தலே யன்றி
நானே விடுதலை நல்கினா லன்றி."

வாடையின் மைந்தன் வருமுறை பனியோன்
உறுமழி வொன்றினை உணர்ந்தான் தானே   300
கருணைக் கேட்டுக் கெஞ்சத் தொடங்கினன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"இப்போ செய்யலாம் ஒப்பந்த மொன்றுநாம்
ஒருவரை யொருவர் வருத்துவ திலையென
என்றுமே வருத்துவ தில்லை நாமென
பொன்னில்லாத் திகழும் பொற்பொழு தெல்லாம்.

நான்குளி ரூட்டலாய் நீயுணர்ந் தாயேல்
திரும்பவும் தவறைச் செய்வதை யறிந்தால்
திணிப்பாய் அடுப்பில் திகழும் நெருப்பில்
புதைப்பாய் கனன்று பொங்கும் தீய்க்குள்   310
கொல்லன் உலையில் கொடுங்கன லுள்ளே
இல்மா஢ னன்னவன் கொல்லுலைக் குள்ளே
அல்லது கொண்டுசெல் அங்குதெற் கென்வாய்
கோடைவீட் டுக்குக் கொடும்என் நாக்கை
என்றுமே வெளிவரா திருப்பேன் அங்கு
என்றுமே விடுதலை யில்லா திருப்பேன்."

குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
விட்டான் குளிருறக் கப்பலை யங்கே
நிற்கப் போர்க்கலம் நிலையாய் அங்கே
தானே புறப்பட் டேகிட லானான்;    320
இரண்டாம் ஆளாய் இணைந்தான் தியேரா
துடுக்குப் பையனின் சுவட்டின் பின்னால்.

மட்ட மாம்பனிக் கட்டிமேல் நடந்தான்
பனிக்கட்டி மென்மையில் படர்ந்தான் வழுக்கி;
ஒருநாள் நடந்தான் இருநாள் நடந்தான்
மூன்றா வதுநாள் முன்வரு போதில்
**பசிக்கடல் முனையைப் பார்க்க முடிந்தது
இழிந்த கிராமம் எட்டிற் றுவிழி(யில்).

கடல்முனைக் கோட்டையின் இடம்கீழ் வந்தனன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:  330
"இந்தக் கோட்டையில் இறைச்சியு முளதோ
மிளிருமித் தோட்டம் மீன்களு முளவோ
இளைத்துப் போன இகல்வீ ரனுக்காய்
களைத்துப் போன கவின்மனி தனுக்காய்?"
அந்தக் கோட்டையில் அமைந்தில திறைச்சி
அந்தத் தோட்டத் தங்குமீ னில்லை.

குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"எ஡஢ப்பாய் நெருப்பே, இம்மடக் **கோட்டையை!
எடுப்பாய் நீரே இத்தகு இடத்தைநீ!"   340
முன்னே றியவன் முனைந்துமுன் சென்றான்
காட்டின் உள்ளே கடுகியே சென்றான்
வசிப்பிட மில்லா வழியினில் சென்றனன்
முன்னறி யாத முனைவழிச் சென்றான்.

குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
அவன்தான் அழகிய தூர நெஞ்சினன்
கம்பளி நூலைக் கற்களிற் பிடுங்கினான்
பாறை முனையில் உரோமம் கிழித்தான்
அவற்றில் செய்தனன் அழகிய கையுறை
கைக்கு அணியும் கவினுறை இயற்றினான்   350
குளிர்ஆ திக்கம் கொள்இடத் துக்கு
உறைபனி யோனின் உயர்கடி தாங்க.

அறியப் பாதையை அவன்மேற் சென்றனன்
சென்றான் தொடர்ந்து தொ஢ந்திட வழிகள்;
பாதைகள் உள்ளே படர்ந்தன காட்டில்
வழிகள் அவனை வரவேற் றேகின.

குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"ஓ, தியேரா, உயர்என் சோதர!
இப்போது வந்து எங்கேயோ சேர்ந்துளோம்  360
திங்களும் தினங்களும் தி஡஢ந்தலை தற்கு
என்றென்று மந்த அடிவான் நோக்கி."

தியேரா இந்தச் சொற்களில் சொன்னான்
இயம்பினன் அவனே இயம்பினன் இவ்விதம்:
"வஞ்சம் தீர்க்கநாம் வருமிழி பிறப்புகள்
வஞ்சம் தீர்க்கநாம் வறியபாக் கியர்கள்
பெற்றோம் ஒன்றினைப் பெரும் போராக
இருள்நிறை வடபால் இயைநிலத் தாங்கே
எங்கள் சொந்த இழப்பிற் குயிர்களை
எம்மையே என்றும் இழப்பதற் காக   370
தீமைகள் நிறைந்தவித் தீதா மிடங்களில்
முன்னறி யாதவிம் வன்தெருக் களிலே.
எதுவும் தொ஢யவே யில்லையெங் களுக்கு
தொ஢யவு மில்லைநாம் தேர்ந்துணர்ந் ததுமிலை
எத்தெரு அழைத்து எங்களைச் செல்லும்
எவ்வழி செல்லும் எமைவழி காட்டி
அடர்ந்த வனத்தில் இறந்துபோ தற்கு
புதா஢ல் புற்றரையில் போய்வீழ் வதற்கு
அண்டங் காக்கையின் அவ்வில் லங்களில்
காகம் வாழும் கவின்பெரு வெளியில்.   380

அண்டங்கா கங்கள் அங்கிடம் மாற்றும்
கொடிய பறவைகள் கடிதெமைச் சுமக்கும்
இறைச்சி கிடைக்கும் எல்லாப் புட்கும்
காகங் களுக்குச் சூடாம் குருதி
அண்டங் காக்கையின் அலகை நனைக்க
இழிவாம் எங்கள் இரும்பிணத் திருந்து
எங்கள் எலும்பை இடும்பா றைகளில்
கற்குன் றுக்குக் கடிதுகொண் டேகும்.

இதனை அறிந்திடாள் என்தாய் பேதை
என்னைச் சுமந்தவள் இதனை உணர்ந்திடாள்   390
அவளது தசையெங் கசைகிற தென்பதை
அவளது குருதியெங் கதிர்ந்தோடு மென்பதை
பொ஢தாய்ப் பொருதும் அமா஢லா என்பதை
சமமாம் ஓர்பெரும் சமா஢லா என்பதை
அல்லது பெருங்கடல் அதனிலா என்பதை
மிகுந்துயர் அலைகளின் மீதிலா என்பதை
அல்லது தாருக்குன் றலையுமா என்பதை
சிறுபற்றை வனங்களில் தி஡஢யுமா என்பதை.

என்னுடை அன்னை எதையுமே அறியாள்
அபாக்கிய மானதன் அருமகன் பற்றி   400
தன்மகன் இறந்ததைத் தாயவள் அறிவாள்
தூயதான் சுமந்தவன் தொலைந்தான் என்பதை;
என்றன் அன்னை இவ்விதம் அழுவாள்
புகழ்ந்தெனைப் பெற்றவள் புலம்புவாள் இவ்விதம்:
'பாக்கியம் அற்றஎன் பாலகன் அங்கே
அறியாப் பாவிஎன் ஆத(஡)ரம் அங்கே
துவோனியின் விளைவுறும் தொன்னிலம் தன்னில்
படர்கல் லறையிடம் பரவிய மண்ணில்;
இப்போ தென்றன் எழில்மகன் விடுகிறான்
பாக்கிய மற்றஎன் பாலகன் அவனே    410
உயர்தன் குறுக்குவில் ஓய விடுகிறான்
கடிவலு வில்லினைக் காய விடுகிறான்
பறவைகள் நன்கே பாங்குறக் கொழுக்க
காட்டின் கோழிகள் கனகுதூ கலம்பெற
சிறப்பாய்க் கரடிகள் செழிப்புடன் வாழ
வயல்களில் கலைமான் இனிதலைந் துலவ.' "

குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"ஆமாம், அதுசா஢, அன்னை ஏழையள்,
ஆமப்பா, பாவியே, அன்றெனைச் சுமந்தாய்!   420
ஒருவைப்பின் கோழிகள் உவந்துநீ வளர்ந்தாய்
அன்னக் கணமென் றனைத்தையும் வளர்த்தாய்
செறிகாற் றடித்தது சிதறச் செய்தது
கலையச் செய்தது கடும்பேய் வந்தது
ஒன்று அங்கே இன்னொன் றிங்கே
மூன்றாவ தெங்கோ முன்னே போனது.

இன்றந் நாட்களை எண்ணிப் பார்க்கிறேன்
சிறந்தவப் பொழுதைச் சிந்தனைச் செய்கிறேன்
மலர்களைப் போலநாம் உலாவிய நாட்களை
உ஡஢யநம் நிலத்து உயா஢ய பழம்போல்;   430
எமதுதோற் றங்களை அனைவரும் பார்த்தனர்
உற்றுப் பார்த்தனர் உருவம் எமதை
அதுஇந் நாட்கள்போல் அறவே இல்லை
தீமைகள் நிறைந்தஇத் தீயநாட் களிலே;
காற்றொன் றேயெமக் கேற்றநட் பாயுள
தொன்னாட் கண்டதில் சூ஡஢யன் ஒன்றுதான்
முகில்கூட இப்போ மூடி விலகிட
மழையும் மறைந்து மறைந்து செல்கிறது.
எனக்கெதும் அக்கறை யிலையே இதனால்
இனிப்பெருந் துயர்ப்பட எதுவுமே இல்லை   440
கன்னிப் பெண்கள் களிப்புடன் வாழ்ந்தால்
மகிழ்வுடன் பின்னல் தலையினர் உலவினால்
நங்கைய ரனைவரும் நகைப்புட னிருந்தால்
வதுவை மகளிர் மனமகிழ் வடைந்தால்
ஏக்கத் தாலெழும் இன்னலை விடுத்து
தொல்லைகள் தந்திடும் துயரம் ஒழித்து.

எமையினும் மயக்கிலர் இம்மாந் தி஡ணகரே
பார்ப்பவர் பார்வைமாந் தி஡ணகா஢ன் மயக்கலும்,
இந்த வழிகளில் இறந்தொழி தற்கு
பயணப் பாதையில் புதைந்துபோ தற்கு   450
இளம்பராய த்திலேயே உறக்கம் கொளற்கு
இரத்தச் செழிப்புடன் இறந்துவீழ் தற்கு.

மயக்குவோன் எந்தமாந் தி஡ணகனே யாயினும்
பார்ப்பவன் எத்தகு பார்வையோன் ஆயினும்
அவன் செயல் அவனுடை அகத்திருக் கட்டும்
அவன்வசிப் பிடத்தில் அடிகோ லட்டும்;
அவர்களை யேமயக் கத்தில்ஆழ்த் தட்டும்
பாடட்டும் அவர்கள்தம் பாலர்கள் மீதே
அவர்கள்தம் இனத்தையே அழித்தொழிக் கட்டும்
தம்முற வையவர் தாம்சபிக் கட்டும்!    460

எந்தைமுன் என்றுமே இதுபு஡஢ந் தா஡஢லை
உயர்ந்த சீர்ப்பெற்றார் ஒருக்கா லும்மிலை
மாந்தி஡ணகன் மனதை மதித்தது மில்லை
லாப்பியற் கீந்ததும் இல்லை வெகுமதி;
இவ்வா றுரைத்தார் என்னுடைத் தந்தை
நானுமவ் விதமே நவில்கிறேன் இங்கு:
நிலைபெரும் கர்த்தரே நீரெனைக் காப்பீர்
எழிலார் தெய்வமே எனைக்காப் பாற்றுவீர்
உதவிக்கு வாரும் உமதின் கரங்களால்
நீர்பெற் றிருக்கும் மேதகு சக்தியால்   470
மானுடர் மனத்திலே வருவிருப் பிருந்து
எழும்முது மாதா஢ன் எண்ணத் திருந்து
தாடிசேர் வாய்களின் தகுமொழி யிருந்து
தாடியற் றோர்கள் தம்சொல் லிருந்து!
என்றும் எமக்கே இருப்பீர் உறுதுணை
ஆகுவீர் நிலைபெறும் பாதுகா வலராய்
பி஡஢ந்துபோ காதெப் பிள்ளையு மிருக்க
அன்னையீன் மதலை அழிந்திடா திருக்க
ஆண்டவன் படைத்த அருநெறி யிருந்து
இறைவனார் ஈந்த இவ்வழி யிருந்து!"    480

குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
அவன்தான் அழகிய தூர நெஞ்சினன்
கவனம் அனைத்தையும் கனபா஢ யாக்கினான்
கவலை அனைத்தையும் கருமா வாக்கினான்
தீயநாட் களினால் சேர்ந்தது தலைக்கணி
இரகசிய வெறுப்பினால் இயைந்தது ஆசனம்;
அதன்நல் முதுகில் அவன்பாய்ந் தேறினன்
நற்சுடர் நுதலுடை மெச்சிடும் சடைமேல்
பயணம் தனது பாதையில் தொடங்கினன்
சேர்தன் தோழன் தியேரா தன்னுடன்    490
கடற்கரை தனிலே கலகலத் தோடினன்
சென்றனன் தொடர்ந்து திகழ்மணற் றரைமேல்
அன்பான அன்னையின் அருகே மீண்டும்
சீர்மிகும் பெற்றோர் திருமுகம் நோக்கி.

என்தூர நெஞ்சனை அங்கே விடுகிறேன்
எனதுஇக் கதையி லிருந்தே சிலகால்
தியேரா வைவழிச் செல்லவே விடுகிறேன்
அவன்இல் நோக்கி அவன்பய ணிக்க
இந்தக் கதையை இப்போ மாற்றுவேன்
மற்றொரு பாதையில் வழிச்செல விடுகிறேன்.   500


பாடல் 31- குலப் பகையும் அடிமை வாழ்வும் *

அடிகள் 1-82 : உந்தமோ தனது சகோதரன் கலர்வோ என்பவனுக்கு எதிராகப் போர்த்தொடுத்து அவனையும் அவனுடைய படையையும் அழிக்கிறான். கலர்வோவின் இனத்தில் கர்ப்பவதியான ஒரு பெண் மட்டுமே உயிர்வாழ விடப்படுகிறாள். அழைத்துச் செல்லப்படும் அந்தப் பெண்ணுக்கு உந்தமோவின் தோட்டத்தில் குல்லர்வோ என்ற மகன் பிறக்கிறான்.

அடிகள் 83-202 : குல்லர்வோ தொட்டிலில் இருக்கும் பொழுதே உந்தமோவைப் பழிக்குப்பழி வாங்கத் தீர்மானிக்கிறான். உந்தமோ குல்லர்மோவைக் கொல்லப் பலவழிகளில் முயன்றும் அம்முயற்சிகள் பலனளிக்கவில்லை.

அடிகள் 203-374 : குல்லர்வோ வளர்ந்ததும் உந்தமோவுக்குப் பலவழிகளிலும் தொல்லை தருகிறான். அலுத்துப் போன உந்தமோ குல்லர்வோவை இலமா஢னனுக்கு அடிமையாக விற்று விடுகிறான்.


வளர்த்தாள் கோழி வளர்குஞ் சொருதாய்
ஒருபெருங் கூட்டம் உயரன் னங்களை
கோழிக் குஞ்சுகள் வேலியில் வைத்தாள்
அன்னங் களையெடுத்(து) **ஆறு கொணர்ந்தாள்;
அங்கொரு கழுகுவந் தவற்றைப் பிடித்தது
கருடன் வந்து சிதறிடச் செய்தது
கவின்சிறைப் பறவை கலையச் செய்தது:
கடத்திய தொன்றைக் *கர்யா லாவுக்(கு)
ஒன்றைக் கொணர்ந்தது ரஷ்ய மண்ணிடை
வீட்டொடு மூன்றா வதையது விட்டது.   10

ரஷ்ய நாட்டுக் குடன்கொடு சென்றது
வர்த்தக மனிதனாய் வளர்ந்தது அங்கே;
கர்யலா வுக்குக் கடத்திச் சென்றது
*கலர்வோ வாக கவினுற வளர்ந்தது;
வீட்டோ டிருக்க விட்டுச் சென்றது
*உந்தமோ வாக உயர்ந்து நிமிர்ந்தது
தினமெலாம் பிதாவின் தீயவன் அவனே
அன்னையின் உளத்தை அவனே உடைப்பவன்.

உந்தமோ வி஡஢த்து உயர்வலை பரப்பினன்
மீன்களைக் கலர்வோ விரும்பிப் பிடிப்பிடம்;   20
வந்தவன் கலர்வோ வலைகளைக் கண்டனன்
மீன்களைத் தன்பை மிகச்சேர்த் திட்டனன்;
வீரமும் வலிமையும் மிகுந்தவன் உந்தமோ
அவன்சினங் கொண்டனன் ஆத்திரப் பட்டனன்
விரல்களி லிருந்தே விறற்போர் தொடங்கினன்
உள்ளங்கை அருகினால் உறுபோர் கேட்டனன்
மீன்குட லால்ஒரு மிகுபோர்க் கெழுந்தனன்
பொ஡஢த்தநன் னீர்மீனால் பெருத்தபோ ரொன்றுக்(கு).

செய்தனர் கலகம் செருத்துப் பார்த்தனர்
ஒருவரை ஒருவர் உறவென் றிலராம்   30
எவன்மற் றவனை ஓங்கி அடித்தானோ
அவனே கொடுத்ததை அதன்பதில் பெற்றனன்.

இதற்குப் பின்னர் இன்னொரு வேளை
இரண்டு மூன்றுநாள் ஏகிமுடிந்த பின்
கொஞ்சம் கலர்வோ **கூலம் விதைத்தான்
உந்தமோ வாழ்ந்த ஓ஡஢ல் லின்பின்.

உந்தமோ தோட்டத் துரம்பெறும் செம்மறி
கலர்வோ தானியக் கதிரைத் தின்றது
கலர்வோ பயங்கரக் கடிநாய் அப்போ
உந்தமோ செம்மறி உடலம் கிழித்தது.   40

உந்தமோ பின்பய முறுத்திட லாயினன்
கலர்வோஓர் வயிற்றில் கனிந்த சோதரனை
சொன்னான் கலர்வோ சுற்றம் கொல்வதாய்
அடிப்பதாய்ப் பொ஢தாய் அடிப்பதாய்ச் சிறிதாய்
அனைத்து இனத்தையும் அழிப்பதாய் மாய்ப்பதாய்
இல்களைச் சாம்பராய் எ஡஢த்து முடிப்பதாய்.

மனிதா஢ன் பட்டியில் வாள்களைச் செருகினன்
ஆயுதம் தந்தனன் அவன்மற வோர்கரம்
சிறுவர்கள் பட்டியில் சேர்ந்தகுத் தூசிகள்
அழகிய தோள்களில் அ஡஢புல் வாள்களும்;   50
பொ஢திலும் பொ஢தாம் பெரும்போர்க் கேகினர்
கூடிப் பிறந்தவர் குறையில்சோ தரனுடன்.

கலர்வோ(வின்) மருமகள் கவினுறு மொருத்தி
அமர்ந்து சாரளத் தருகினில் இருந்தனள்
சாரளத் தூடாய்த் தான்வெளிப் பார்த்தனள்
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"அங்கே தடித்த அதுவென்ன புகையாய்
அல்லது நிறத்தில் அதுகரு முகிலோ
தொலைவிலே தொ஢யும் தொடர்வயல் வெளிகளில்
புதிய ஒழுங்கையின் புறக்கடை முடிவினில்?"   60

ஆயினும் அதொன்றும் புகாரான புகாரல்ல
அல்லது தடிப்புறும் புகையுமே அல்லவாம்:
அங்ஙனம் தொ஢ந்தனர் உந்தமோ வீரர்கள்
புறப்பட்டு வந்தனர் போர்பொ஢ துக்கென.

வந்தனர் உந்தமோ என்பவன் வீரர்கள்
வாள்பட்டி யதிலுறும் மனிதர்கள் சேர்ந்தனர்
கலர்வோ(வின்) கூட்டத்தைக் கடிதுகீழ் வீழ்த்தினர்
பொ஢தான இனமதைப் பொ஢துகொன் றழித்தனர்
இல்களைச் சாம்பராய் எ஡஢த்தவர் முடித்தனர்
மாற்றியே அமைத்தனர் வரவெ(ற்)று நிலமதாய்.   70

கலர்வோவின் ஒருத்தியே கா஡஢கை மிஞ்சினாள்
அவளுக்கு வயிறதோ அதிகனத் திருந்தது
உந்தமோ என்பவன் உறுவீர ரப்போ(து)
தம்முடன் வீட்டிடைத் தையலைக் கொணர்ந்தனர்
சிறியதாம் ஓர்அறை செய்யவும் சுத்தமாய்
தரையினைப் பெருக்கியே தான்கூட்டி வைக்கவும்.

சிறுகாலம் மெதுவாகச் சென்றிட லானது
சிறியதோர் பையனாய் ஒருசேயும் பிறந்தது
மகிழ்ச்சியே இல்லாத மங்கையவ் வன்னைக்கு;

by Swathi   on 25 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.