பாடல் 36 - குல்லர்வோவின் மரணம் *
அடிகள் 1-154 : குல்லர்வோ போருக்கு ஆயத்தமாகித் தன் குடும்பத்தாரிடம் விடை பெறுகிறான். அவனுடைய தாய் மட்டும் அவனைப் பற்றியும் அவன் எங்கே போகிறான் என்பதைப் பற்றியும் அவன் இருப்பானா இறப்பானா என்பதைப் பற்றியும் எண்ணி வருந்துகிறாள்.
அடிகள் 155-250 : குல்லர்வோ உந்தமோவின் தோட்டத்துக்கு வந்து எல்லோரையும் வீழ்த்தி எல்லா வசிப்பிடங்களுக்கும் தீ வைத்து அழிக்கிறான்.
அடிகள் 251-296 : அவன் வீட்டுக்குத் திரும்பி வந்தபொழுது வீட்டில் யாருமே இல்லாமல் வெறுமையாக இருக்கிறது. ஆனால் அங்கே ஒரு கிழட்டுக் கறுப்பு நாய் மட்டும் நிற்கிறது. வேட்டையாடி வாழ்வதற்காக அந்த நாயுடன் காட்டுக்குள் போகிறான்.
அடிகள் 297-360 : காட்டுக்குச் செல்லும் வழியில், முன்னொரு நாள் தனது சகோதரியைச் சந்தித்து அவளுடன் தகாத முறையில் நடந்து கொண்ட இடத்துக்கு வருகிறான். அங்கே மனச்சாட்சியின் உறுத்தலினால் தனது வாளினாலேயே தனது உயிரை மாய்க்கிறான்.
குல்லர்வோ என்பான் கலர்வோ மைந்தன் முழுநீல் காலுறை முதியவன் பிள்ளை அங்ஙனம் போர்க்கு ஆயத்த மாயினன் சமர்ப் பாதைக்குத் தயாராய் நின்றனன்; வருமொரு கணத்தே வாளைத் தீட்டினன் அடுத்ததில் ஈட்டியை ஆக்கினன் கூர்மை.
இவ்விதச் சொற்களில் இயம்பினள் அன்னை: "வேண்டாம் பாக்கிய மேயிலா என்மகன் பெரும்போ ரொன்றைப் பெற்றிட வேண்டாம் வாட்களை மோத வழிச்செல வேண்டாம்! 10 காரண மின்றியே கடும்போர்க் கேகுவோன் சண்டையைத் தொடங்கித் தானாய் வைப்பவன் அவனும் போரில் அழிக்கப் படுவான் கொடும்போ ரில்லவன் கொல்லப் படுவான் வெவ்வாள் களாலவன் வீழ்த்தப் படுவான் அதிர்வாள் அலகினால் அழகிக்கப் படுவான்.
ஆடொன்று மீதுநீ அமருக் கெழுகிறாய் ஆட்டுக் கடாவிலே அமர்பொரச் செல்கிறாய் வெள்ளாடு விரைவில் வென்றிட வும்படும் கடாவும் அழுக்கில் கடிதுவீழ்த் தப்படும் 20 நாயொன்றில் ஏறிநீ நண்ணுவாய் வீட்டை தவளையின் மீதுதான் முன்றிலை யடைவாய்."
குல்லர்வோ என்பான் கலர்வோ மைந்தன் உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்: "அப்படி யாயில்நான் அமிழேன் சேற்றில் அல்லது வீழேன் அகல்பசும் புற்றரை அல்லது அண்டங் காகத் தகத்தில் அல்லது காகம் அண்மிவா ழிடங்களில் போர்க்களத் தில்நான் போய்அமிழ் வேளையில் போர்க்கள மீதில் போய்வீழ் வேளையில். 30 மாள்வது போரின் வழிமிகச் சிறந்தது வாள்களின் மோதலில் வீழ்வதும் நல்லதே! அமரெனும் நோயோ அதுமிக இனியது திடீரென அதிலே செல்வான் பையன் வருந்ததுத லின்றி விரைந்தவன் செல்வான் நலிவு றாமலே நடுநிலம் வீழ்வான்."
இவ்விதச் சொற்களில் இயம்பினள் அன்னை: "போருக்கு நீபோய்ப் பொன்றுவ தானால் உன்தந் தைக்கு உறமிஞ் சுவதெது வயதாம் அவரது வறியநாட் களிலே?" 40
குல்லர்வோ என்பான் கலர்வோ மைந்தன் உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்: "தொழுவத் தெருவின் குவைச்சா கட்டும் தோட்டத்து வீழ்ந்து தொடுசா வவுறட்டும்."
"உன்அன் னைக்கு மிஞ்சுவ தெதுவோ வயதாம் அவளது வறியநாட் களிலே?"
"மாளட் டும்கை வைக்கோற் கட்டுடன் மாட்டுக் கொட்டிலில் மூச்சடைக் கட்டும்."
"உன்சகோ தரற்கு மிஞ்சுவ தெதுவோ இனிவரப் போகும் நனிநாட் கழிக்க?" 50
"அவனைக் காட்டை அடைந்திட விடலாம் காண்தோட் டவெளிக் கைவிடப் படலாம்."
"உன்சகோ தரிக்கு மிஞ்சுவ தெதுவோ இனிவரப் போகும் நனிநாட் கழிக்க?"
"கிணற்று வழியவள் கிடந்துசா கட்டும் தோய்க்கும் துறையவள் ஆழ்ந்து போகட்டும்."
குல்லர்வோ என்பான் கலர்வோ மைந்தன் வீட்டை விட்டே விரைந்தே எழுந்தான் உரைத்தான் தந்தைக் கொருசொல் இவ்விதம்: "விடைபெற் றேன்என் னுடையன் பெந்தையே! 60 நிகழுமா எனக்காய் நீங்கள் அழுவது அங்கிறந் தேனென அறியவும் நேர்ந்தால் எம்மனு மத்தியில் இருந்தே தொலைந்தால் அருமினம் பிரிந்து ஆழ்ந்தே னென்றால்?"
இந்தச் சொற்களில் இயம்பினார் தந்தை: "அறிந்துனக் காய்நான் அழப்போவ தில்லை அங்கிறந் தாயென அறியவும் நேர்ந்தால் பெற்றுக் கொளலாம் பிறிதொரு மகனை இன்னமும் மிகமிக இயைசிறப் பினனை பாரில் பெருந்திறன் படைத்ததோர் மகனை." 70
குல்லர்வோ என்பான் கலர்வோ மைந்தன் உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்: "ஆம்உமக் காய்நான் அழப்போவ தில்லை இறந்துநீர் போனீர் என்பதை அறிந்தால்; இதுபோல் தந்தையை இவ்விதம் பெறுவேன்: களிமண் வாயும் கல்லிலே தலையும் சேற்று நிலத்துச் **சிறுபழக் கண்களும் வாடிக் காய்ந்த வறுபுல் தாடியும் **அலரிக் கவர்த்தடி யாகிய கால்களும் மக்கி மடிந்த மரத்திலே தசையும்!" 80
சோதரற் பார்த்துச் சொன்னான் அவன்பின்: "விடைபெற் றேனென் னுடைச்சோ தரனே! நிகழுமா எனக்காய் நீயும் அழுவது அங்கிறந் தேனென அறியவும் நேர்ந்தால் எம்மனு மத்தியில் இருந்தே தொலைந்தால் அருமினம் பிரிந்து ஆழ்ந்தே னென்றால்?"
சகோதரன் இந்தச் சொற்களில் சாற்றினன்: "அறிந்துனக் காய்நான் அழப்போவ தில்லை அங்கிறந் தாயென அறியவும் நேர்ந்தால் பெற்றுக் கொள்ளலாம் பிறிதொரு சோதரன் 90 இன்னமும் மிகமிக இனியசோ தரனை இரண்டு மடங்கு எழிலார் ஒருவனை."
குல்லர்வோ என்பான் கலர்வோ மைந்தன் உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்: "ஆம்உனக் காய்நான் அழப்போவ தில்லை இறந்துநீ போனாய் என்பதை அறிந்தால்; இதுபோல் சோதரன் இவ்விதம் பெறுவேன்: கல்லிலே தலையும் களிமண் வாயும் சேற்று நிலத்துச் **சிறுபழக் கண்களும் வாடிக் காய்ந்த வறுபுற் கேசமும் 100 **அலரிக் கவர்த்தடி யாகிய கால்களும் மக்கி மடிந்த மரத்திலே தசையும்!"
சொன்னான் பின்னர் சோதரிக் கவனே "விடைபெற் றேனென் னுடைச்சோ தரியே! நிகழுமா எனக்காய் நீயும் அழுவது அங்கிறந் தேனென அறியவும் நேர்ந்தால் எம்மனு மத்தியில் இருந்தே தொலைந்தால் அருமினம் பிரிந்து ஆழ்ந்தே னென்றால்?"
இவ்வாறு சோதரி இயம்பினள் சொற்களில்: "ஆம்உனக் காய்நான் அழப்போவ தில்லை 110 ஆங்கிறந் தாயென் றறியவும் நேர்ந்தால் பெற்றுக் கொள்ளலாம் பிறிதொரு சோதரன் இன்னமும் மிகமிக இனிய சோதரனை இன்னமும் விவேகம் இயைந்த ஒருவனை."
குல்லர்வோ என்பான் கலர்வோ மைந்தன் உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்: "ஆம்உனக் காய்நான் அழப்போவ தில்லை இறந்துநீ போனாய் என்பதை யறிந்தால்; இதுபோற் சோதரி இவ்விதம் பெறுவேன்: கல்லிலே தலையும் களிமண் வாயும் 120 சேற்று நிலத்துச் **சிறுபழக் கண்களும் வாடிக் காய்ந்த வறுபுற் கூந்தலும் குளத்து **அல்லிக் கொழுமலர்ச் செவிகளும் உடலொன்று பின்னர் **'மாப்பிள்' மரத்திலும்!"
அதன்பின் உரைத்தனன் அன்னைக் கிவ்விதம்: "அன்னையே, என்றன் அன்புமிக் குடையளே! என்னைச் சுமந்தஎன் எழிலார் அணங்கே! கருவில் தாங்கிய கனகம் அனையளே! நீங்கள் அழுவது நிகழுமா எனக்காய் அங்கிறந் தேனென் றறியவும் நேர்ந்தால் 130 எம்மனு மத்தியில் இருந்தே தொலைந்தால் அருமினம் பிரிந்து ஆழ்ந்தே னென்றால்?"
இவ்விதச் சொற்களில் இயம்பினள் அன்னை இயம்பினள் அவளே இயம்பினள் இவ்விதம்: "அன்னையின் மனத்தை அறியமாட் டாய்நீ அன்னையின் இதயம் அதையுண ராய்நீ ஆமப்பா, உனக்காய் அழுவேன் நானும் அங்கிறந் தாயென அறிந்தஅவ் வேளை என்மனு மத்தியில் இருந்துநீ பிரிந்தால் அருமினம் பிரிந்து ஆழ்ந்ய் என்றால்: 140 வெள்ளம் வரும்வரை வீட்டில் அழுவேன் அகத்தின் தரையில் அலையெழ அழுவேன் வழிகள் எங்ஙணும் வளைந்த உடலுடன் தொழுவம் அனைத்திலும் தொடுகூன் முதுகுடன்; பனியைக் கட்டியாய்ப் படைக்க அழுவேன் பனிக்கட்டி மாறி படிவெறி தாகும் பின்னர் வெறுந்தரை வியன்பசும் நிலமாம் பசுமை நிலம்பின் வெளுறியே போகும்.
எனக்கழ முடியா நிலையுள எதுவெனில் வருந்த முடியா வகைநிலை எதுவெனில் 150 மக்கள் மத்தியில் மிக்கழு வதுவாம் அழுவேன் ரகசிய மாய்ச்சவு னாவில் அமரும் வாங்கில்நீர் அதுவழிந் தோட சவுனாப் பலகையில் தவழ்அலை எறிந்தெழ."
குல்லர்வோ என்பான் கலர்வோ மைந்தன் முழுநீல் காலுறை முதியவன் பிள்ளை இசைப்பா டலுடன் ஏகினான் போர்க்கு களிப்புடன் அவனும் கடும்போர்க் கேகினன்; இசைத்தனன் சேற்றில் இசைத்தனன் தரையில் பசும்புற் றரைகளில் பண்ணெதி ரொலித்தனன் 160 பெரும்புல் வெளிகளில் பெருமுழக் கிட்டனன் வைக்கோல் நிலத்தினில் வந்தொலி யெழுப்பினன்.
ஒருபுதி னம்தொடர்ந் தோடியே வந்தது செய்தி வந்தவன் செவியில் விழுந்தது; "உந்தை இறந்தனர் உன்றன தில்லம் வளர்புகழ் பெற்றவர் மரணித்து வீழ்ந்தனர் ஆதலால் செல்வாய் அவ்விடம் பார்க்க இறந்தவ ருடைய ஈமக் கிரியையை!"
குல்லர்வோ என்பான் கலர்வோ மைந்தன் கூறினன் அவன்தான் கூறினன் பதிலுரை: 170 "இறந்தா ரவரெனின் இறந்துபோ கட்டும்! எம்மகத் துள்ளது எழிலார் பொலிப்பரி அவரைப் பூமிக் கதனில் கொண்டுபோய் கல்லறை யொன்றில் கட்டிவைக் கட்டும்!"
செல்லும் போதினில் சேற்றி லிசைத்தனன் வெட்டிச் சுட்ட வெளியினி லொலித்தனன் ஒருபுதி னம்தொடர்ந் தோடியே வந்தது செய்தி வந்தது செவியில் விழுந்தது; "இல்லத்(தில்) உன்றன் சோதர னிறந்தனன் நினைஈன் றோர்பி(ள்)ளை நெடுந்துயி லாழ்ந்தனன் 180 ஆதலால் செல்வாய் அவ்விடம் பார்க்க இறந்தவ னுடைய ஈமக் கிரியையை !"
குல்லர்வோ என்பான் கலர்வோ மைந்தன் கூறினன் அவன்தான் கூறினன் பதிலுரை: "இறந்தான் அவனெனில் இறந்து போகட்டும்! அங்குள வீட்டினில் அழகிய பொலிப்பரி அவனைப் புமிக் கதனில் கொண்டுபொய் கல்லறை யொன்றில் கட்டிவைக் கட்டும்!"
சேற்றினில் நடக்கையில் சென்றனன் இசைத்து தாருவின் இடைகுழ லூதிச் சென்றனன் 190 ஒருபுதி னம்தொடர்ந் தோடடியே வந்தது செய்தி வந்தவன் செவியில் விழுந்தது: "இல்லத்(தில்) உன்றன் சோதரி யிறந்தனள் நினைஈன் றோர்பி(ள்)ளை நெடுந்துயி லாழ்ந்தனள் ஆதலால் செல்வாய் அவ்விடம் பார்க்க இறந்தவ ளுடைய ஈமக் கிரியையை!"
குல்லர்வோ என்பான் கலர்வோ மைந்தன் கூறினன் அவன்தான் கூறினன் பதிலுரை: "இறந்தா ளவளெனில் இறந்துபோ கட்டும்! எம்மிடம் வீட்டிலே இருப்பது பெண்பரி 200 அவளைப் பூமிக்கு அதனில் கொண்டுபோய் கல்லறை யொன்றில் கட்டிவைக் கட்டும்!"
எழிற்புற் றரைமேல் இசைத்துச் சென்றனன் வைக்கோல் நிலத்தில் மகிழ்ந்தொலித் தேகினன் ஒருபுதி னம்தொடர்ந் தோடியே வந்தது செய்தி வந்தவன் செவியில் விழுந்தது: "உந்தனன் பான உயர்தா யிறந்தனள் இனியஉன் தாய் இறந்தே வீழ்ந்தனள் ஆதலால் செல்வாய் அவ்விடம் பார்க்க அவளை ஊர்மக்கள் அடக்கம் செய்வதை!" 210
குல்லர்வோ என்பான் கலர்வோ மைந்தன் உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்: "ஓ,நான் அதிர்ஷ்டம் ஒன்றிலாப் பையனே இறந்தே போனதால் என்னுடை அன்னையும் திரைத்துணி செய்தவள் களைத்து ஓய்ந்தனள் வீழ்ந்தனள்மே லாடை விசித்திரம் வரைந்தவள் நூல்கநளை நீளமாய் நூற்றே வைப்பவள் நூற்புக் கழியை நொடியிழுத் தசைப்பவள்; இறுதிநே ரத்தில் இல்லைநான் அருகில் ஆவி பிரிகையில் அவளயல் நானிலை 220 மரணும் வந்ததா வன்குளிர் வந்ததால் அல்லதூண் ரொட்டி அதுஇலா தானதால்!
மனைக்கழு வட்டும் மாண்டவள் உடலினை தண்ணீர் ஜேர்மனிச் சவர்க்க()ரம் கூட்டி பின்பட் டுத்துணி **நன்குசுற் றட்டும் சணல்நூல் வண்ணத்துத் துணியில்வைக் கட்டும் செல்லட்டும் எடுத்தாங்கே சேர்பூமி அவளைப்பின் அவளைக் கல்லறை அடக்கி மூடட்டும் புலம்பலின் ஒலியொடு புவியுள்ஏ கட்டும் இறங்கட்டும் கல்லறை இனியபாட் டிசையொடு 230 இல்லத்துக் கினும்நான் ஏகிடு நிலையிலை திருப்பிக் கொடுபட்ட திலையுந் தோக்கினும் வீழ்த்தவும் படவிலை வெந்தீ மானுடன் அழிக்கவும் படவிலை அதிகெடு மானுடன்."
இசைத்த படியே ஏகினன் சமர்க்கு உந்தோநாட் டுக்கு உவகையோ டேகினன் உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்: "ஓ,முது மனிதனே, உயர்மா தெய்வமே! எனக்கொரு வாள்இங் கினிது தருவையேல் அதிலும் சிறப்பாம் அலகுள ஒன்றினை 240 ஒருமுழக் குழுவுக் குரைக்கும் அதுவகை ஒருநூறு பேர்க்கு உறுநிகர் நின்றிடும்."
பெற்றனன் ஒருவாள் நச்சிய வாறே அனைத்திலும் சிறந்த அலகு படைத்ததை அதனால் ஓரினம் அனைத்தும் வீழ்த்தினன் உந்தமோ என்பான் உறுகூட் டழித்தனன்; மனைகளை எரித்து மாற்றினான் சாம்பராய் அழித்து அனைத்தையும் ஆக்கினன் துகள்துகள்; கற்களை அடுப்பங் கரையிலே விட்டனன் முற்றத்து விட்டனன் முதுஉயர் பேரியை. 250
குல்லர்வோ என்பான் கலர்வோ மைந்தன் இப்போ திரும்பினன் இல்லம் நோக்கி கால மாகிய கவின்பிதா வசிப்பிடம் பெற்றவர் வாழ்ந்த பெருந்தோட் டவெளி; வந்ததும் வெற்று வசிப்பிடம் கண்டனன் திறந்ததும் கண்டனன் தெரிபாழ் இல்லம்; அணைத்திட ஒருவரும் அங்கே வந்திலர் இருகரத் தேற்க எவருமே யங்கிலர்.
அடுப்புக் கரியில் அவன்கை வைத்தனன் அடுப்பின் கரியோ அதிகுளிர்ந் திருந்தது; 260 அங்கவன் வந்ததும் அறிந்தே கொண்டனன் அன்னையும் உயிரோ டங்கிலை யென்பதை.
கையை நுழைத்துக் கணப்பில் பார்த்தனன் கற்கள் குளிராய்க் கணப்பில் இருந்தன அங்கவன் வந்ததும் அறிந்தே கொண்டனன் தந்தை உயிரொடு தானிலை யென்பதை.
விழிகளை வலம்வர விட்டனன் நிலத்தில் படர்தரை பெருக்கப் படாமல் இருந்தது அங்கவன் வந்ததும் அறிந்தே கொண்டனன் சகோதரி உயிரொடு தானிலை யென்பதை. 270
பார்தனன் நீர்த்துறைப் பக்கம் சென்று தோணிகள் எதுவுமே துறையினில் இல்லை அங்கவன் வந்ததும் அறிந்தே கொண்டனன் சகோதரன் உயிரொடு தானிலை யென்பதை.
அவனங் கப்போ அழவே தொடங்கினன் ஒருநாள் அழுதனன் இருநாள் அழுதனன் இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே: "ஓ,அன் பான உயர்ந்தஎன் அன்னாய்! எனக்காய் இங்குநீ எதனை விட்டனை நீடுமிப் பூமியில் நீவாழ் காலம்? 280
ஆயினும் அன்னாய் அதைநீ கேட்டிலை விம்மிநான் உந்தன் விழிகளில் அழுகையில் புலம்பிடும் வேளையுன் புருவத்தி லேநான் கூறியுன் சிரத்தில் குறைமுறைப் படுகையில்."
கல்லறை யிருந்து நல்லதாய் எழுந்தனள் மண்ணின்கீ ழிருந்து நன்னினை வுறுத்தினள்: **" 'முஸ்தி' நாயினை விட்டுச் சென்றுளேன் வேட்டைக் கதனுடன் வெளிச்செல லாமதால்; கூடஉன் நாயினைக் கொண்டுநீ சென்றிடு காட்டினுள் அங்குநீ வேட்டைக்(கு) ஏகிடு 290 அடர்ந்த அடவியின் அதனுட் புறம்செல் வனத்தின் வனிதையர் வாழிடத் துக்கு நீல்நிறப் பெண்கள் வாழ்முற் றத்தே தேவ தாருவின் செறிகோட்(டை) எல்லை ஆகா ரப்பொருட்கள் அங்கே பெறற்கு வனத்தின் ஆடலை தினம்நா டிப்பெற!"
குல்லர்வோ என்பான் கலர்வோ மைந்தன் கூடவே தன்நாய் கொண்டே சென்றனன் தெருவின் வழியே சென்றான் நடந்து அடர்ந்த அடவியை அடைதற் காகவே 300 சிறுதொலை அங்ஙனம் சென்றிடும் நேரம் சிறுதொலை பாதையில் அடிவைத் தேகையில் அந்தத் தீவதன் அகலிடம் வந்தனன் நிகழ்ச்சி நடந்தஅந் நிலையம் வந்தனன் பாவையின் கற்பைப் பறித்த இடத்தே தன்தாய் ஈன்றளைத் தான்கெடுத் தவிடம்.
அழுதுகொண் டிருந்தாங் கெழிலார் புல்நிலம் புலம்பிக்கொண் டிருந்தது புலர்இன் வனவெளி வருந்திக்கொண் டிருந்தது வளரிளம் புற்கள் பொழிந்தன கண்ணீர் புல்வெளி மலர்கள் 310 பாவையின் கற்பைப் பறித்தகா ரணத்தால்
தன்தாய் ஈன்றலைத் தானே கெடுத்ததால் இளம்புல் எதுவும் இலையே முளைத்ததும் வளர்ந்ததே யில்லை வளர்புல் வெளிமலர் எழுந்ததே யில்லை எழியஅத் தலத்தில் அந்தக் கொடிய அகல்நிலப் பரப்பிலே பாவையின் கற்பைப் பறித்த இடத்திலே தன்தாய் ஈன்றளைக் கெடுத்தவத் தரையிலே.
குல்லர்வோ என்பான் கலர்வோ மைந்தன் உருவினன் கடிதில் உயர்கூ ரியவாள் 320 அதனைப் பார்த்தனன் அதனைத் திருப்பினன் அதனைக் கேட்டனன் அதனை உசாவினன்; அந்தவாள் விருப்பை அவனே கேட்டனன் அவ்விதம் அதற்கு அமைந்ததா எண்ணம் குற்றம் புரிந்த கொடுந்தசை யுண்ண பாவம் புரிந்த சோரியைப் பருக.
மனிதனின் மனதை வாளும் அறிந்தது நாயகன் நினைவை நல்வாள் உணர்ந்தது இந்தச் சொற்களில் இயம்பிற் றதுவிடை: "நச்சிய அதனை நான்ஏன் உண்ணேண் 330 குற்றம் புரிந்த கொடுந்தசை ஏனுணேன் பாவக் குருதியை பருகேன் ஏன்நான்? தனிக்குற் றமிலாத் தசையையும் உண்பேன் கொள்பாவ மிலாக் குருதியும் குடிப்பேன்."
குல்லர்வோ என்பான் கலர்வோ மைந்தன் முழுநீல் காலுறை முதியவன் பிள்ளை வாளின் பிடியை வயலுள் தள்ளினன் பசும்புற் றரையில் பாய்ச்சினன் கைப்பிடி மார்புக் கெதிராய் வாட்கூர் திருப்பினன் தன்னைக் கூர்மேல் தானே செலுத்தினன் 340 அவ்விதம் இறப்பினை அடைந்தனன் அவனே தன்மர ணத்தினைத் தழுவிக் கொண்டனன்.
இளைஞன் ஒருவனின் இறப்புமற் றிதுவே நாயகன் குல்லர்வோ நாடிய மரணம் நாயகன் ஒருவனின் நவில்கடை முடிவு உயர்பாக் கியமில் ஒருவனின் மரணம்.
முதிய வைனா மொயினனப் போது இறந்தான் அவனென அறிந்தஅவ் வேளை இறந்தான் குல்லர்வோ என்பதைக் கேட்டதும் உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்: 350 "வருங்கா லம்வாழ் மக்களே வேண்டாம் கோணலாய்ப் பிள்ளையை பேணலும் வேண்டாம் மூடத் தனமாய்த் தாலாட்(ட) யாரும் எவரும் அந்நியர் இயைதுயி லாக்க! கோணலாய் வளர்த்த குமாரன் எப்போதும் மூடத் தனமாய்த் தாலாட் டும்சிறான் விடயம் பொதுவாய் விளங்கவே மாட்டான் மனிதனின் மனதை மற்றவன் பெற்றிடான் வயோதிபம் வரையும் வாழ்ந்தா லுமவன் உரமுறும் உடலை உடைய னாயிடினும்." 360
பாடல் 37 - பொன்னிலும் வெள்ளியிலும் மணமகள் *
அடிகள் 1-162 : இல்மரினன் தனது இறந்த மனைவிக்காக வெகுகாலம் அழுகிறான். பின்னர் மிகவும் பிரயாசைப்பட்டுப் பொன்னிலும் வெள்ளியிலும் - ஆனால் உயிர் மூச்சு இல்லாத - ஒரு மணமகளை உருவாக்குகிறான்.
அடிகள் 163-196 : இரவிலே தனது பொன் மணமகளின் அருகில் உறங்குகிறான். அந்தப் பொன்னுருவின் எந்தப் பக்கமாய் அவன் உறங்குகிறானோ அந்தப் பக்கம் குளிராய் இருப்பதைக் காலையில் உணருகிறான்.
அடிகள் 197-250 : இல்மரினன் அந்தப் பொன் மணமகளை வைனாமொயினனுக்குக் கொடுக்கிறான். வைனாமொயினன் அதனை ஏற்க மறுத்து, அதிலிருந்து வேறு பயனுள்ள பொருட்களைச் செய்யும்படி அல்லது பொன்னை விரும்பக்கூடிய மக்கள் வாழும் வேறு நாடுகளுக்கு அனுப்பும்படி கூறுகிறான்.
அந்தக் கொல்லன் அவ்வில் மரினன் அழுதான் மனைவிக் காய்முழு மாலையும் அழுதான் இரவிலும் அவன்துயி லின்றியே அழுதான் பகலிலும் அவனுண் ணாமல் புலம்பினன் எழுந்து புலர்வை கறையில் எறிந்தனன் பெருமூச் செல்லாக் காலையும் இளமைப் பெண்ணவள் இறந்தே போனதால் கல்லறை அழகியைக் கட்டி விட்டதால்.
அவனது கையில் அசைந்ததே யில்லை செப்பினில் செய்த சுத்தியல் அலகு, 10 ஒலியெழ வில்லை உழைக்கும் தொழில்தலம் கடந்து முடிந்ததோர் கால மாதமாய்.
கொல்லன்இல் மரினன் கூறினன் இவ்விதம்: "அபாக்கியப் பைய(ன்)நான் அறிந்திலன் எதையும் எப்படி இருப்பது எங்ஙனம் வாழ்வது; இரவிலே உட்கார்ந் திருப்பதா துயில்வதா நீண்டதோ இரவு நேரமோ துயரம் நிறைந்தது தொல்லை குறைந்தது உடற்பலம்.
என்மாலை வேளைகள் ஏக்கம் நிறைந்தவை என்காலை வேளைகள் எல்லாம் மனத்துயர் 20 இரவில் இருப்பது இன்னல் மட்டுமே துயில்விட் டெழுவது துன்பம் அதைவிட எழில்மா லைப்பொழு(து) **ஏக்கம் கொண்டிலன் வருகாலை வேளை மனத்துயர் கொண்டிலன் மற்றைய போதும் மனத்துயர் கொண்டிலன்; அன்புக் குரியளால் அடைந்தேன் ஏக்கமே மனதுக் கினியளால் மனத்துயர் பெற்றேன் கரும்புரு வத்தளால் கடுந்துயர் கொண்டுளேன்.
இங்கே இப்போ இத்தகு நாட்களில் மனச்சோர்(பு) மட்டும் மனத் தெழுகிறது 30 நள்ளிராத் தோன்றும் நனவிலாக் காட்சிகள் கைதொட்ட இடத்தில் காண்பது வெறுமை கரம்பட்ட இடத்தில் காண்பது பொய்மை இடுப்பின் கீழே இரண்டு புறத்திலும்."
கோதையில் லாமல் கொல்லன் வாழ்ந்தனன் வாழ்க்கைத் துணையிலா வயோதிப மடைந்தனன்; மாதமோர் இரண்டு மூன்றுமா யழுதான் ஆமப்பா, அதன்மேல் நாலாம் மாதம் பொன்னைக் கடலில் பொறுக்கியே யெடுத்தான் அலையில் கொஞ்சம் அள்ளினான் வெள்ளி; 40 மரத்துண்(டு) சிலதை மற்றவன் சேர்த்தான் மரத்துண்(டு) சறுக்கு வண்டிமுப் பதிலாம்; எரித்து மரத்தைக் கரித்துண் டாக்கி கொல்லுலை கரித்துண் டுள்ளே திணித்தான்.
தன்னிடத் திருந்த தங்கம் எடுத்தான் அத்தொடு வெள்ளியும் அவன்தேர்ந் தெடுத்தான் திகழ்இலை யுதிர்ருதுச் செம்மறி அளவிலே கடுங்குளிர் ருதுமுயல் கனத்தின் தரத்திலே தங்கத்தை வெப்பத் ததனுள் திணித்து வெள்ளியும் வைத்தான் வியனுலைக் களத்துள் 50 அடிமைகள் கொண்டு அங்கே செய்தனன் அழுத்தலைச் செய்தான் அக்கூ லிகளால்.
அடிமைகள் ஊதினர் அடிமைகள் விசிறினர் அழுத்தலைச் செய்தனர் அங்கடை கூலிகள் கையுறை எதுவும் கையிலில் லாமல் எவ்வித முக்கா(டும்) இன்றியே தலையில்; அவனே கொல்லன் அவ்வில் மரினன் கொல்லுலைக் கருமமாய்க் கூடவே இருந்தனன் தங்கத் தோருருத் தான்பெறற் காக வெள்ளியில் மணமகள் வேட்டெடுப் பதற்காய். 60
அடிமைகள் ஒழுங்காய் அங்கூத வில்லை அழுத்தவும் இல்லை அக்கூ லிகளே அந்தக் கொல்லன் அவ்வில் மரினன் உலைக்களம் தானே ஊதுதல் செய்தான்; ஒருமுறை ஊதினான் இருமுறை ஊதினன் அவ்விதம் மூன்றாம் முறையுமாய் ஊதினன் எட்டி உலைக்களத் தின்உட் பார்த்தான் கொல்லுலை விளிம்பைக் கூர்ந்தவன் பார்த்தான் உலைக்களத் தென்ன உருக்கொ(ண்)டு வருமென ஊடுரு வியெது ஊதுலை வருமென. 70
ஒருசெம் மறியா டுதித்தது உலையிலே உலையிலே இருந்தது வந்ததூ டுருவி தங்கத்தோ(ர்) ரோமம் தனிச்செப்(பில்) இ(ன்)னொன்று வெள்ளியில் மூன்றாம் விதரோம மிருந்தது; அதற்காய் ஏனையோர் அதிகளி கொண்டனர் ஆயின்இல் மரினனோ அதாற்களி அடைந்திலன்.
கொல்லன்இல் மரினன் கூறின்ன் இவ்விதம்: "ஓநாய் ஒன்றே உனையெதிர் பார்த்திடும் எதிர்ப்பார்த் தேன்பொன் னில்வாழ் துணையை இருந்தேன் காத்துநான் இணையொன்(று) வெள்ளியில்." 80
அதன்பின் கொல்லன் அவன்இல் மரினன் செம்மறி ஆட்டைச் சேர்த்தனன் நெருப்பில் மேலும் கொஞ்சம் மிகுபொன் னிட்டான் நிறையும் வரையும் நிறைத்தான் வெள்ளி ஊதுதல் அடிமைகள் உதவியால் செய்தான் அழுத்தலைச் செய்தான் அக்கூ லிகளால்.
அடிமைகள் ஊதினர் அடிமைகள் விசிறினர் அழுத்தலைச் செய்தனர் அங்கடை கூலிகள் கையுறை எதுவும் கையிலில் லாமல் எவ்வித முக்கா(டும்) இன்றியே தலையில்; 90 அவனே கொல்லன் அவ்வில் மரினன் கொல்லுலைக் கருமமாய்க் கூடவே இருந்தனன் தங்கத் தோருருத் தான்பெறற் காக வெள்ளியில் மணமகள் வேட்டெடுப் பதற்காய்.
அடிமைகள் ஒழுங்காய் அங்கூத வில்லை அழுத்தவும் இல்லை அக்கூ லிகளே அந்தக் கொல்லன் அவ்வில் மரினன் உலைக்களம் தானே ஊதுதல் செய்தான்; ஒருமுறை ஊதினான் இருமுறை ஊதினன் அவ்விதம் மூன்றாம் முறையுமாய் ஊதினன் 100 எட்டி உலைக்களத் தின்உட் பார்த்தான் கொல்லுலை விளிம்பைக் கூர்ந்தவன் பார்த்தான் உலைக்களத் தென்ன உருக்கொ(ண்)டு வருமென ஊடுரு வியெது ஊதுலை வருமென.
உலையிருந் துதித்தது ஒருபரிக் குட்டி ஊடுரு வியதது ஊதுலை யிருந்து தங்கப் பிடர்மயிர் தலையோ வெள்ளி காற்குளம் பனைத்தும் கவின்செம் பானவை; அதற்காய் ஏனையோர் அதிகளிகொண்டனர் ஆயின்இல் மரினனோ அதாற்களி அடைந்திலன். 110
கொல்லன்இல் மரினன் கூறினன் இவ்விதம்: "ஓநாய் ஒன்றே உனையெதிர் பார்த்திடும் எதிர்ப்பார்த் தேன்பொன் னில்வாழ் துணையை இருந்தேன் காத்துநான் இணையொன்(று) வெள்ளியில்."
அதன்பின் கொல்லன் அவன்இல் மரினன் குதிரைக் குட்டியைக் கொடுகனல் தள்ளினன் மேலும் கொஞ்சம் மிகுபொன் னிட்டான் நிறையும் வரையும் நிறைத்தான் வெள்ளி அடிமைகள் கொண்டு அங்கூதல் செய்தனன் அழுத்தலைச் செய்தான் அக்கூ லிகளால். 120
அடிமைகள் ஊதினர் அடிமைகள் விசிறினர் அழுத்தலைச் செய்தனர் அங்கடை கூலிகள் கையுறை எதுவும் கையிலில் லாமல் எவ்வித முக்கா(டும்) இன்றியே தலையில்; அவனே கொல்லன் அவ்வில் மரினன் கொல்லுலைக் கருமமாய்க் கூடவே இருந்தனன் தங்கத் தோருருத் தான்பெறற் காக வெள்ளியில் மணமகள் வேட்டெடுப் பதற்காய்.
அடிமைகள் ஒழுங்காய் அங்கூத வில்லை அழுத்தவும் இல்லை அக்கூ லிகளே 130 அந்தக் கொல்லன் அவ்வில் மரினன் உலைக்களம் தானே ஊதுதல் செய்தான்; ஒருமுறை ஊதினான் இருமுறை ஊதினன் அவ்விதம் மூன்றாம் முறையுமாய் ஊதினன் எட்டி உலைக்களத் தின்உட் பார்த்தான் கொல்லுலை விளிம்பைக் கூர்ந்தவன் பார்த்தான் உலைக்களத் தென்ன உருக்கொ(ண்)டு வருமென ஊடுரு வியெது ஊதுலை வருமென.
உதித்தனள் ஒருபெண் உலையினி லிருந்து ஒருபொற் கூந்தலாள் ஊதுலை யிருந்து 140 தலையோ வெள்ளி தலைமயிர் தங்கம் அவளது உடலோ அழகில் மிளிர்ந்தது; அதற்காய் ஏனையோர் அதிதுய ருற்றனர் ஆயின்இல் மரினனோ அடைந்திலன் துயரம்.
அதன்பின் கொல்லன் அவ்வில் மரினன் தட்டியோர் பொன்னுருத் தானே யமைத்தனன் தட்டியோய் வின்றித் தானிரா வமைத்தனன் உயிர்த்திடப் பொழுதிலா துழைத்தனன் பகலும்; பாவைக் கதன்பின் ப()தங்கள் செய்தனன் செய்தனன் கால்கள் செய்தனன் கைகள் 150 ஆயினும் கால்களை அவள்மேல் உயர்த்திலள் அணைக்கவு மில்லை அவள்கரம் திருப்பி.
தன்பெண் ணுக்குச் சமைத்தான் காதுகள் ஆயினும் செவிகள் அவைகேட் டிலவே; அவ்விதம் வாயை அழகாய்ப் பொருத்தினன் உயிரோ(ட்)ட விழிகளும் உறுவெழில் வாயும் வாயோ மொழியெதும் வழங்கவு மில்லை இனிதாம் பார்வையும் இல்லை விழிகளில்.
கொல்லன்இல் மரினன் கூறினன் இங்ஙனம்: "இவளொரு சிறந்த ஏந்திழை யாவாள் 160 இவளாற் சொற்களை இயம்ப முடிந்தால் நெஞ்சோடு நல்லதோர் நீள்நா விருந்தால்."
பின்னர் தனது பெண்ணைக் கொணர்ந்தனன் அருமையாய்ச் செய்த அமளித் திரைக்குள் மென்மையாய்ச் செய்த வியன்தலை யணையில் பட்டினால் இயற்றிய படுக்கையின் மீது.
அதன்பின் கொல்லன் அவ்வில் மரினன் வெப்ப மாக்கினன் விரும்பிக் குளிப்பறை சவர்க்க()ரச் சவுனா தயாரா யாக்கினன் இலைக்குச்(சித்) தூரிகை எடுத்தனன் தயாராய் 170 தொட்டி மூன்றினில் சுத்தநீ ரெடுத்தனன் அந்தப் **பறவையை அங்கே கழுவினன் நற்சுத்த மாக்கினன் நவவெண் **குருவியை பொன்னின் களிம்புகள் போகக் கழுவினன்.
கொல்லனும் அதன்பின் குளித்தான் நிறைவாய் தன்னைக் கழுவினான் தன்விருப் பளவும் நீளமாய்ப் படுத்தான் நேரிழை அருகில் அருமையாய்ச் செய்த அமளியின் திரைக்குள் உருக்கிலே செய்த உயர்கூ டாரம் இரும்பினால் செய்த இன்வலை யமைப்புள். 180
அங்கே கொல்லன் அவ்வில் மரினன் அன்றே வந்த அம்முத லிரவில் சிலபோர் வைகளைத் திண்ணமாய்க் கேட்டான் தயாரா யாக்கினான் சட்டைப் போர்வைகள் இரண்டோ மூன்றோ இருங்கர டித்தோல் ஐந்தோ ஆறு அமளி விரிப்புகள் படுப்பதற் காய்த்தன் பாவைத் துணையுடன் தனது தங்கத் தனியுரு வத்துடன்.
அப்புறம் உண்மையில் வெப்பம் இருந்தது போர்வைச் சட்டைப் புறமா யவனது; 190 ஆனால் இளம்பெண் அவளது பக்கம் தங்கத் தமைந்த தன்னுருப் பக்கம் குளிராய் வந்தது கூறுமப் பக்கம் குளிரில் கடினமாய்க் கூட விறைத்தது கடலின் உறைபனிக் கட்டியா யானது திண்மைப் பாறையாய்ச் சேர்ந்திறு கிற்று.
கொல்லன்இல் மரினன் கூறினன் இவ்விதம்: "இதுவோ எனக்கு ஏற்றது அல்ல; வைனோ நாடு வனிதையைக் கொ(ண்)டுபோய் அ(வ்)வைனா மொயினற் காதர வாக்கலாம் 200 அவன்முழங் காலில் ஆயுள் துணையாய் அவனது அணைப்பில் அமையக் கோழியாய்.
வைனோ நாடு வனிதையைக் கொணர்ந்தான் அங்ஙனம் அவ்விடம் அடைந்ததன் பின்னர் உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்: "ஓகோ, முதிய வைனா மொயின! இதோஉனக் கிங்கோர் ஏந்திழை யிருக்கிறாள் உனைக்கவ னிக்கவோர் உயர்எழில் மங்கை வீண்பேச் சுரைக்கும் வியன்வா யுளளலள் அகலமா யிதழ்கள் அமைந்தவ ளல்லள்." 210
நிலைபெறும் முதிய வைனா மொயினன் உருவ மீதுதன் உறுவிழி வைத்தனன் தங்கத்து மீதுதன் கண்கள் செலுத்தினன் உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்: "எதற்காய் இதனை என்னிடம் கொணர்ந்தாய் பொன்னிலே புனைந்தவிப் புதுமா(ய) **வுருவை?"
கொல்லன்இல் மரினன் கூறினன் இவ்விதம்: "வேறு எதற்கு? மிகுநலத் துக்கே! ஆயுள்நாள் துணையாய் ஆகநின் முழங்கால் ஒருகோழி யாக உன்அணைப் பினிலே." 220
முதிய வைனா மொயினன் மொழிந்தான்: "ஓ,நற் கொல்லஎன் நேசச் சோதர! தீக்குள் நீயே திணிப்பாய் நின்பெண் எல்லா விதமாம் இயல்பொருள் செய்வாய் அல்லது எடுத்து அகல்நா டிரஷ்ஷியா ஜேர்மனி நாட்டுக்(கு) நீநின் உருவினை பணமுளோர் போட்டி போடுவர் மணக்க உயர்ந்தோர் பெண்ணுக்(கு) உறுபோர் புரிவர்; எனது இனத்துக் கிதுஇணை யல்ல எனக்கே கூட இதுபொருந் தாது 230 தங்கத் தானதோர் தகுபெண் எடுப்பது ஆம்வெள்(ளி) உருவுக் கக்கறை கொள்வது."
அங்ஙனம் தடுத்தான் அ(வ்)வைனா மொயினன் மணப்பெணைத் தவிர்த்தான் *அமைதிநீர் மனிதன் வளரும் தலைமுறை மனிதரைத் தடுத்தான் வளர்ந்து வருவோர் வழியினைத் தவிர்த்தான் தங்கத் துக்காய்த் தலைவணங் குதலை வெள்ளிக் காக வீண்தடு மாறலை; இனிவரும் சொற்களில் இவ்விதம் மொழிந்தான் இந்த மொழிகளில் இவ்விதம் மொழிந்தான்: 240 "பாக்கிய மற்ற பையன்காள், வேண்டாம்! இப்போ வளர்ந்துயர் இகல்வீ ரர்களே! செல்வந்த ராகநீர் திகழ்ந்த போதிலே அல்லது செல்வமற் றமைந்த போதிலும் என்றுமே உங்கள் எவ்வாழ் நாளிலும் பொன்னிலாத் திகழும் பொற்பொழு தெல்லாம் தங்கத்தி லான தையலர் எடாதீர் கொளாதீர் அக்கறை வெள்ளி உரு(வு)க்கு தங்கத் தொளியோ தவழ்குளி ரானது வெள்ளியின் மினுக்கம் மிகுசீ தளமாம்." 250
பாடல் 38 - வட நாட்டிலிருந்து இல்மரினனின் புதிய மணமகள் *
அடிகள் 1-124 : இல்மரினன் வடநாட்டுக்குச் சென்று தனது முன்னாள் மனைவியின் தங்கையைத் தனக்கு மணம் செய்து தரும்படி கேட்கிறான். ஆனால் அவனுக்கு ஓர் இகழ்ச்சியான மறுமொழியே கிடைக்கிறது. அதனால் அவன் கோபமடைந்து பெண்ணைக் கவர்ந்து வீடு நோக்கிப் புறப்படுகிறான்.
அடிகள் 125-286 : அந்தப் பெண் வழியில் இல்மரினனை அவமதித்துப் பேசியதால் அவன் சினம் கொண்டு அப்பெண்ணைக் கடற்பறவை ஆகும்படி சபித்துப் பாடுகிறான்.
அடிகள் 287-328 : இல்மரினன் வீட்டுக்குத் திரும்பி வந்து சம்போவைச் செய்து கொடுத்ததால் வடநாட்டு மக்கள் எவ்வளவு மகிழ்வுடன் வாழ்கிறார்கள் என்பதையும் மணப்பெண் பெறும் பொருட்டுத் தான் வடநாட்டுக்குச் சென்று தோல்வி அடைந்ததையும் வைனாமொயினனுக்குக் கூறுகிறான்.
அப்போ(து) கொல்லன் அவன்இல் மரினன் கவினழி வில்லாக் கைவினைக் கலைஞன் தான்தொலை எறிந்தனன் தங்கப் பதுமையை வெள்ளியி லான வியன்பெண் உருவை அம்பரிக் குட்டிக் கணிகள் சூட்டினன் மண்ணிறப் புரவி வண்டிமுன் நின்றது அவனே ஏறி அமர்ந்தனன் வண்டியில் வண்டியில் ஏறி வசதியா யமர்ந்தனன்; எடுத்தனன் முடிவு எழுந்தே ஏகிட அத்துடன் எண்ணம் அவனும் கொண்டனன் 10 வடநா டேகி வாஞ்சையாய்க் கேட்க வடபுலம் வாழும் வனிதைமற் றவளை.
ஒருநாட் பயணம் ஒழுங்காய் நடந்தது இருநாட் பயணம் இனிதாய் முடிந்தது மூன்றா வதுநாள் முன்வரு போதினில் வந்து சேர்ந்தனன் வடபால் முற்றம்.
லொவ்ஹி என்பவள் வடபுலத் தலைவி முற்றப் பரப்பினில் முன்தான் வந்தாள் அங்கு வந்துரை யாடத் தொடங்கினள் அடுத்துத் திரும்பினள் அவள்வின வற்காய் 20 எங்ஙனம் தன்மகள் இருக்கிறாள் என்று இனியவள் எவ்விதம் இருக்கிறாள் என்று மணாளன் வீட்டில் மருமக ளாக மாமியார் இல்லில் மனைவியே யாக.
அந்தக் கொல்லன் அவ்வில் மரினன் தாழ்ந்த தலையுடன் வீழ்ந்த மனத்துடன் தொய்ந்து சரிந்த தொப்பியை அணிந்து உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்: "என்றன் மாமியே, இப்போ(து) வேண்டாம்! வேண்டாம் அதுசார் வினவுதல் இப்போ(து) 30 எங்ஙனம் வாழ்கிறாள் என்பதை உன்மகள் எவ்விதம் இருக்கிறாள் என்பதை உன்மகள்! மரணம் ஏலவே வாய்க்கொண்ட தவளை வந்து சேர்ந்தது வன்கொடும் முடிவு இருக்கிறாள் புவியுள் என்சிறு பழமவள் பசும்புற் றரைக்குளே படுப்பளென் அழகி கரும்புரு வத்தள்புற் களின்நடு வினிலே வெள்ளி நிகர்த்தவள் வைக்கோல் மத்தியில்.
அடுத்தஉன் மகளுக் காகநான் வந்துளேன் உன்இளம் பெண்ணுக்(கு) ஓடியே வந்தேன்: 40 அன்புஎன் மாமியே, அவளைநீ தருவாய், அடுத்த உன்மகளை அனுப்புவாய் என்னொடு, மனைவிஎன் முந்தியள் வாழ்ந்தஅவ் விடத்தே அவளுடைச் சோதரி அமர்ந்தஅவ் விடத்தே."
லொவ்ஹி என்பவள் வடபுலத் தலைவி உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்: "அதிர்ஷ்டம் அற்றநான் அடாச்செயல் செய்தேன் பாக்கியம் அற்றநான் பழிபெரி தாற்றினேன் வாக்களித் தென்மகள் வழங்கிய நேரம்நான் தவமகள் உன்னிடம் தந்திட்ட போதிலே 50 உறங்கவே தந்தேன் உளஇளம் வயதிலே அழகுசெங் கதுப்பினாள் அழியவே விட்டேன்: ஓநாய் வாய்க்குள் ஒப்படைத் தாற்போல் கத்தும் கொடிய கரடியின் அலகினுள்.
இப்போ நான்தரேன் இரண்டாம் மகளை அடுத்த மகளையும் அனுப்புதற் கில்லைநான் உன்றன் குப்பை ஒட்டடை பெருக்க சுரண்டி எடுத்திடத் துகள்கள்ஒட் டியதை; அதனிலும் என்மகள் அவளைக் கொடுக்கலாம் என்றன் உரமுறும் எழில்பிள்ளை யிடலாம் 60 இரைந்து பாயுமோர் இகல்நீர் வீழ்ச்சியில் புகைந்து சுழிக்குமோர் புகுநீர்ச் சுழியில் மரண உலகின் **வளமீன் வாய்க்குள் துவோனிக்கோ லாச்சித் தொல்மீன் பற்களில்."
அதன்பின் கொல்லன் அவ்வில் மரினன் தன்வாய் கோணித் தலையைத் திருப்பி கறுத்தத் தாடியைக் கையால் முறுக்கி தனது சுருண்ட தலையினை யசைத்தான்; துணிவாய்த் தானே தொடர்ந்தில் புகுந்து கூரையின் கீழே கொண்டே நன்நடை 70 உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்: "என்னிடம் வருவாய் இப்போ பெண்ணே! உனது சகோதரிக் குரிய இடத்தே மனைவிஎன் முந்தியள் வாழ்ந்த இடத்தே ரொட்டி- தேன் சேர்ந்ததைச் சுட்டே யெடுக்க 'பீர்'ப்பா னத்தைப் பின்வடித் தெடுக்க!"
பெருநிலத் திருந்தொரு பிள்ளைபா டிற்று பாடிய தோடு பகர்ந்தது இவ்விதம்: "எம்கோட்(டை) யிருந்துபோ, எதும்பய னற்றவா! அந்நியோய், யி(வ்)வாயி லிருந்தே யகல்வாய்! 80 இக்கோட்(டை) பகுதியொன் றிடித்தே முடித்தனை கோட்டையைச் சிறிதே கொடிதா யழித்தனை முன்னொரு முறைநீ வந்தநே ரத்தில் அகல்இக் கதவுநீ அடைந்தநே ரத்தில்.
பெண்நீ, சகோதரி, பேசுதல் கேட்பாய்! மணமகன் கண்டு மயங்கிட வேண்டாம் மாப்பிளை வாயில் வருமொழி கேட்டு அவனது பாத அழகினைப் பார்த்து! மாப்பிளை முரசு ஓனாய் முரசு நரியின் வளைந்த நகங்கள் பையிலே 90 கக்கத் திருப்பவை கரடியின் நகங்கள் குருதியுண் போரின் கொலைவாள் இடுப்பில் அதனால் சீவுவார் அழகிய உன்தலை முதுகை வெட்டி முதற்கிழித் திடுவார்."
பெண்ணவள் தானே பேசினள் இவ்விதம் இல்மரி னன்எனும் கொல்லன் தனக்கு: "புறப்பட் டுன்னுடன் வரற்குநா னில்லை அடாச்சிறு மதியரில் அக்கறை யெனக்கிலை; கொடிதுமுன் முடித்த கோதையைக் கொன்றனை அழகென் சோதரி அழித்தே மாய்த்தனை 100 அங்ஙனம் என்னையும் அழிக்க முயலுவாய் என்னையும் அவ்விதம் என்றுமே மாய்க்கலாம்; பாரப்பா இந்தப் பாவையும் இப்போ(து) எதிர்பார்த் திருக்கிறாள் இனியகீர்த் தியனை அழகார் உடலுறும் அருந்தரச் சோடியை சுந்தரன் ஒருத்தனின் வண்டியை நிறைத்திட மிகமிகச் சிறப்பாம் விரும்பிட மடைந்திட இகமதில் மிகஉயர் இருப்பிடம் சேர்ந்திட அல்லஓர் கொல்லனின் அக்கரி இல்லம் மூடன் ஒருவனின் மூள்அன லிடமல." 110
அந்தக் கொல்லன் அவ்வில் மரினன் கவினழி வில்லாக் கைவினைக் கலைஞன் தன்வாய் கோணித் தலையைத் திருப்பி கறுத்தத் தாடியைக் கையால் முறுக்கினன்; அக்கணத் துடனே அரிவையைப் பற்றினன் இருகரம் வளைத்து இறுகப் பிடித்தனன் பனிப்புயல் போல பாய்ந்தனன் வெளியே சறுக்கு வண்டியில் மிடுக்கோ டேறினன் அரிவையை வண்டி அதனுள் திணித்தனன் வனிதையைத் திணித்து வண்டியுள் அடைத்தனன் 120 அவனே புறப்பட லாயின னுடனடி அவன்புறப் படற்கு ஆயத்த மாயினன் பரிக்கடி வாளத் தொருகை இருந்தது மறுகை மங்கையின் மார்புக் காம்பினில்.
காரிகை அழுதனள் கத்திப் புலம்பினள் உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்: **"சிறுபழத் துக்குச் சென்றேன் சதுப்பு **சேம்பங் கிழங்குக் கேகினன் சேற்றிடை தொலைவே னங்குநான் துடிக்குமோர் கோழியாய் அகாலத் திறப்பேன் அங்கொரு பறவையாய். 130
கொல்லஇல் மரின, சொல்லும் மொழிகேள்! இருப்பையேல் விடுவியா திங்கிருந் தென்னை வண்டியை உதைப்பேன் துண்டுதுண் டாக சறுக்குவண் டியினை நொருக்குவேன் துகளாய் என்முழங் காலால் இடிப்பேன் பொடிப்பட காலால் அடித்துக் கடுந்துக ளாக்குவேன்."
அந்தக் கொல்லன் அவ்வில் மரினன் உரைத்தான் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்: "அதனால் தான்கொல் லனின்ரதப் புறங்கள் இரும்பைக் கொண்டு இயற்றப் பட்டது 140 தாங்கி உதைகளைத் தப்புதற் காக புத்தெழிற் கன்னியின் போரினைத் தாங்க."
காரிகை அப்போ கத்திப் புலம்பினள் அம்செப்பு **வாரணி அவள்முறை யிட்டனள் விரல்களைப் பின்னித் திருப்பி முறுக்கினள் உடன்தன் கரங்களை உதறிப் பார்த்தனள் உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்: "இருப்பையேல் விடுவியா திங்கிருந் தென்னை ஆழிமீ னாயெனை யாக்கிடப் பாடுவேன் ஆழவெண் மீனாய் அலையில்மா றிடுவேன்." 150
அந்தக் கொல்லன் அவ்வில் மரினன் உரைத்தான் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்: "அவ்விடம் உன்னால் அடைந்திட முடியா கோலாச்சி மீனாய்க் குமரிபின் தொடர்வேன்."
காரிகை அப்போ கத்திப் புலம்பினள் அம்செப்பு வாரணி அவள்முறை யிட்டனள் விரல்களைப் பின்னித் திருப்பி முறுக்கினள் உடன்தன் கரங்களை உதறிப் பார்த்தனள் உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்: "இருப்பையேல் விடுவியா திங்கிருந் தென்னை 160 அடவியுட் சென்று அங்கே மறைவேன் **கீரியாய்ப் பாறைக் கீழ்க்குழி புகுவேன்."
அந்தக் கொல்லன் அவ்வில் மரினன் உரைத்தான் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்: "அவ்விடம் உன்னால் அடைந்திட முடியா **நீர்நாய் வடிவாய் நின்பின் தொடர்வேன்."
காரிகை அப்போ கத்திப் புலம்பினள் அம்செப்பு வாரணி அவள்முறை யிட்டனள் விரல்களைப் பின்னித் திருப்பி முறுக்கினள் உடன்தன் கரங்களை உதறிப் பார்த்தனள் 170 உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்: "இருப்பையேல் விடுவியா திங்கிருந் தென்னை மேகப்புள் ளாய் உயரமேற் பறப்பேன் மேகப் பின்புறம் மிகமறைந் திருப்பேன்."
அந்தக் கொல்லன் அவ்வில் மரினன் இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே: "அவ்விடம் உன்னால் அடைந்திட முடியா கழுகுரு வெடுத்துக் கன்னிப்பின் தொடர்வேன்."
அதன்பின் பயணம் அமைந்தது சிறுதொலை பாதையில் கொஞ்சம் பகர்தொலை கழிந்தது 180 அப்போ குதிரை நிமித்திற் றதன்செவி தழைத்ததன் செவிதாம் பரபரப் பாயின.
ஒண்டொடி தலையை உயர்த்திப் பார்த்தனள் ஒருகா லடித்தடம் உறுபனிக் கண்டனள் இவ்வா றுசாவினள் இவ்வா றியம்பினள்: "இப்போ தோடிய தெதுவாம் குறுக்காய்?"
கொல்லனில் மரினன் கூறினன் இவ்விதம்: "இப்போ குறுக்காய் ஏகிய ததுமுயல்."
பெருமபாக் கியவதி பெருமூச் செறிந்தனள் பெருமூச் செறிந்தனள் பெரிதும் சோர்ந்தனள் 190 உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்: "ஐயகோ, எளியதோர் பிறப்பா யினன்நான் நன்றிருந் திருக்கும் நானிவ்வா றிருந்தால் சிறப்பிருந் திருக்கும் செயலிவ்வா றிந்தால் விரைமுயல் வழித்தட மீதிருந் திருந்தால் **'வளைந்தகால்' சுவட்டின் வயமிருந் திருந்தால் மணஞ்செய வருமிவன் வண்டியி லிலாமல் மிகச்சுருங் குமுகன் மெத்தையி லிலாமல் ஏனெனில் முயல்ரோமம் இதில்மிக நன்று வியன்முயல் வாயோ மேலும் சிறப்பு." 200
அந்தக் கொல்லன் அவ்வில் மரினன் தன்இதழ் கடித்துத் தலையைத் திருப்பி தொடர்ந்து வண்டியைத் துடிப்பாய்ச் செலுத்தினன்; பாதையில் கொஞ்சம் பகர்தொலை கழிந்தது குதிரை மீண்டும் செவிநிமிர்த் திற்று தழைத்ததன் செவிதாம் பரபரப் பாயின. ஒண்டொடி தலையை உயர்த்திப் பார்த்தனள் ஒருகா லடித்தடம் உறுபனிக் கண்டனள் இவ்வா றுசாவினள் இவ்வா றியம்பினள்: "இப்போ தோடிய தெதுவாம் குறுக்காய்?" 210
கொல்லனில் மரினன் கூறினன் இவ்விதம்: "இப்போ குறுக்காய் ஏகிய ததுநரி."
பெருமபாக் கியவதி பெருமூச் செறிந்தனள் பெருமூச் செறிந்தனள் பெரிதும் சோர்ந்தனள் உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்: "ஐயகோ, எளியதோர் பிறப்பா யினன்நான் நன்றிருந் திருக்கும் நானிவ்வா றிருந்தால் சிறப்பிருந் திருக்கும் செயலிவ்வா றிந்தால் ஒருநரி(யின்) வண்டியில் சவாரிசெய் திருந்தால் இருந்தால் ஓய்விலா விரைந்திடும் வண்டி 220 மணஞ்செய வந்தவன் வண்டியி லிலாமல் மிகச்சுருங் குமுகன் மெத்தையி லிலாமல் ஏனெனில் **ஓரியின் ரோமம்மிக் குகந்தது நரியதன் வாயோ நனிமேற் சிறப்பாம்."
அந்தக் கொல்லன் அவ்வில் மரினன் தன்இதழ் கடித்துத் தலையைத் திருப்பி தொடர்ந்து வண்டியைத் துடிப்பாய்ச் செலுத்தினன்; பாதையில் கொஞ்சம் பகர்தொலை கழிந்தது குதிரை மீண்டும் செவிநிமிர்த் திற்று தழைத்ததன் செவிதாம் பரபரப் பாயின. 230 ஒண்டொடி தலையை உயர்த்திப் பார்த்தனள் ஒருகா லடித்தடம் உறுபனிக் கண்டனள் இவ்வா றுசாவினள் இவ்வா றியம்பினள்: "இப்போ தோடிய தெதுவாம் குறுக்காய்?"
கொல்லனில் மரினன் கூறினன் இவ்விதம்: "இப்போ குறுக்காய் ஏகிய தோநாய்."
பெருமபாக் கியவதி பெருமூச் செறிந்தனள் பெருமூச் செறிந்தனள் பெரிதும் சோர்ந்தனள் உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்: "ஐயகோ, எளியதோர் பிறப்பா யினன்நான் 240 நன்றிருந் திருக்கும் நானிவ்வா றிருந்தால் சிறப்பிருந் திருக்கும் செயலிவ்வா றிந்தால் இளைத்தோ டோ நாய் வழித்தடத் திருந்தால் **'நீள்முக'த் தடிசுவட் டிலேயிருந் திருந்தால் மணஞ்செய வந்தவன் வண்டியி லிலாமல் மிகச்சுருங் குமுகன் மெத்தையி லிலாமல் ஏனெனில் ஓநாய் ரோமம்மிக் குகந்தது ஓநாய் வாயோ உயர்மேற் சிறப்பாம்."
அந்தக் கொல்லன் அவ்வில் மரினன் தன்இதழ் கடித்துத் தலையைத் திருப்பி 250 தொடர்ந்து வண்டியைத் துடிப்பாய்ச் செலுத்தினன்; இரவில் புதிதாம் எழிலூ ரடைந்தனன்.
வழிச்செல வதனில் வந்த களைப்பினால் அங்கே கொல்லன் அமைதியாய்த் துயின்றான் பெண்ணையின் னொருவன் **புன்னகை யூட்டினன் அவளது கொழுநன் அறத்துயில் நேரம்.
அதன்பின் கொல்லன் அவன்இல் மரினன் காலைநல் நேரம் கண்விழிப் புற்றதும் தன்வாய் கோணித் தலையைத் திருப்பி கறுத்தத் தாடியைக் கையால் முறுக்கினன்; 260 கொல்லன்இல் மரினன் கூறினன் இவ்விதம் நினைத்து அவனே உரைத்தான் இப்படி: "இப்போ தேநான் இசைக்கத் தொடங்கவா? இத்தகை மணப்பெ(ண்)ணை இப்போ பாடவா வனத்துக் காக வனத்ததன் சொந்தமாய் அல்லது புனலுக் காய்ப்புனற் சொந்தமாய்? வனத்தின் சொந்தமாய் வனிதையைப் பாடேன் ஏனெனில் வனத்துக் கின்னல்உண் டாகும், புனலதன் சொந்தமாய்ப் பூவையைப் பாடேன் புனலிலே மீனினம் போகும் ஒதுங்கியே; 270 வெவ்வாள் அலகதால் விரைந்தே வீழ்த்துவேன் அரிந்தென் வாளால் அழித்தே விடுவேன்."
வாளும் மனிதனின் வார்த்தையை அறிந்தது நாயகன் சொல்லை நன்றாய் உணர்ந்தது உரைத்தது ஒருசொல் உரைத்தது இவ்விதம்: "என்னைப் படைத்தது இதற்கா யல்ல மாதரைக் கொன்று மாய்ப்பதற் கல்ல எளிய பிறவியை ஒழிப்பதற் கல்ல."
அந்தக் கொல்லன் அவ்வில் மரினன் இப்போ துண்மையாய் எழுந்தான் பாட 280 கோபம் கொண்டு கூறத் தொடங்கினன் பாடினன் **கடலின் பறவையாய்த் தன்பெண்ணை உயர்ந்த பாறையில் ஓய்ந்துபோய்த் தங்க நீர்க்கற் பாறையில் நின்றுகீச் சிட்டிட கடல்முனைப் பரப்பில் கத்தியே திரிய காற்றின் மோதலில் கலங்கித் திரிய.
அதன்பின் கொல்லன் அவன்இல் மரினன் தனது வண்டியில் தானே ஏறி வண்டியைச் செலுத்திச் சென்றனன் தொடர்ந்து தாழ்ந்த தலையுடன் வீழ்ந்த மனத்துடன்; 290 தன்சொந்த நாடு தான்பய ணித்தனன் தானே பழகிய நாட்டைவந் தடைந்தனன்.
நிலைபெறும் முதிய வைனா மொயினன் சந்திக்க வந்தனன் தான்பா தையின்முன் வந்ததும் இவ்விதம் வார்த்தை தொடங்கினன்: "சகோதர, கொல்ல தகைஇல் மரின! உள்ளனை எதற்கு உறுதுயர் மனத்துடன் உயர்ந்த தொப்பிஏன் உற்றது சரிவாய் வடபால் நிலத்தி லிருந்தே வருகையில் வடபால் நிலத்தவர் வாழ்வெலா மெப்படி?" 300
கொல்லன்இல் மரினன் கூறினன் இப்படி: "எத்தகு வாழ்வு இருப்பது வடபுலம் அங்கே சம்போ அரைக்கிற தென்றும் சுடரும் மூடியும் சுழன்றே வருவதாம் உண்பதற் காக ஒருநாள் அரைக்கும் விற்பனைக் காக மறுநாள் அரைக்கும் சேமிக்க மனையில் திகழ்மூன் றாம்நாள்.
நானே சொன்னதை நவில்வேன் திரும்ப சொன்னதை மீண்டும் சொல்வேன் ஒருமுறை எத்தகு வாழ்வு இருப்பது வடபுலம் 310 சம்போ அங்கே தானிருப் பதனால்! அங்கே உழுவார் அங்கே விதைப்பார் வளரும் அனைத்து வகைகளும் உளவே என்றென்று மங்கே இருப்பது அதிர்ஷ்டம்."
முதிய வைனா மொயினன் மொழிந்தான்: "சகோதர, கொல்ல தகைஇல் மரின! எங்கே விட்டனை இளம்உன் மனைவியை எவ்விடத் தில்உன் எழிலார் மணப்பெண் வெறும்கை யுடனே மீண்டிங் குற்றனை வந்து சேர்ந்தனை வனிதையில் லாமல்?" 320
அந்தக் கொல்லன் அவ்வில் மரினன் உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்: "அந்தப் பெண்ணை அப்படிப் பாடினேன் கடலின் பாறையில் ஒருகடற் பறவையாய்; கத்தித் திரிகிறாள் கடற்பு(ள்)ளாய் இப்போ கூவித் திரிகிறாள் குரைகடற் பறவையாய் நீர்க்கற் பாறையில் கீச்சிட்ட டலைகிறாள் பாறைக் குன்றில் படர்கிறாள் அலறி."
பாடல் 39 - வடநாட்டின் மீது படையெடுப்பு *
அடிகள் 1-330 : வடநாட்டுக்குச் சென்று சம்போவை அபகரித்துக் கொண்டு வரத் தன்னுடன் வருமாறு வைனாமொயினன் இல்மரினனைக் கேட்கிறான். இல்மரினன் சம்மதித்ததால் படகில் வடநாட்டுக்குப் புறப்படுகின்றனர்.
அடிகள் 331- 426 : வழியில் சந்தித்த லெம்மின்கைனன் அந்த இருவரது பயண நோக்கத்தை அறிந்து தானும் அவர்களுடன் செல்ல முன் வருகிறான். அவனை அவர்கள் ஏற்றுக் கொண்டதால் மூன்று தோழர்களும் பயணத்தைத் தொடருகின்றனர்.
நிலைபெறும் முதிய வைனா மொயினன் இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே: "ஓகோ, கொல்ல உயர்இல் மரின! வடநாட் டுக்குப் புறபட் டேகுவோம் நல்லசம் போவை நாமே பெறற்கு பிரக()ச மூடியைப் பெரிதும் பார்க்க!"
அந்தக் கொல்லன் அவ்வில் மரினன் உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்: "சம்போ என்பதை நாம்பெறற் கில்லை சுடரும் மூடியும் கொணருதற் கில்லை 10 இருள்நிறை வடபால் இயைநிலத் திருந்து செறிபுகார் நாடாம் சரியொலா விருந்து; எடுத்தெழிற் சம்போ ஏகவும் பட்டது ஒளிரும் மூடியும் உடன்போ யடைந்தது வடநிலக் குன்றின் மணிமுக டதன்மேல் செப்பினா லமைந்த செம்மலைக் குள்ளே பூட்டினள் ஒன்பது புட்டுகள் போட்டு; இறங்கின ததைச்சூழ்ந்(து) இகல்வல் வேர்கள் ஒன்பது மடங்கிலோர் **ஆறடி யாழம்; அன்னையாம் பூமியில் அதிலொன் றிறங்க 20 மற்றவேர் நீர்க்கரை வழிமருங் கிறங்க மூ(ன்றா)ம்வேர் சென்றது முதுவில் மலைக்குள்."
முதிய வைனா மொயினன் மொழிந்தான்: "சோதரக் கொல்ல, துணைச்சோ தரனே! வடபுல நாடு புறப்பட் டேகுவோம் அச்சம் போவை அடைதற் கேநாம் கப்பல் ஒன்றைக் கட்டுவோம் பெரிதாய் எடுத்துவந் திடலாம் அதிற்சம் போவை ஒளிரும் மூடியும் உடனே கொணரலாம் வடநிலக் குன்றதன் மணிமுகட் டிருந்து 30 செப்பினால் இயைந்தசெம் மலைகளி லிருந்து பூட்டிய ஒன்பது பூட்டினி லிருந்து."
கொல்லன்இல் மரினன் கூறினன் இவ்விதம்: "படர்தரைப் பயணம் பாதுகாப் பானது பிசாசுபோ கட்டும் பெருங்கடல் மீது இகல்அகல் ஆழியில் இறப்புவந் திடட்டும்! சுழற்காற் றங்கே சுற்றிய டிக்கும் புயற்காற் றங்கே புறமெடுத் தெறியும் விரல்கள் துடுப்பை மிகவலிந் திழுக்கும் தொடும்உள் ளங்கை **தண்டைப் பிடிக்கும்." 40
முதிய வைனா மொயினன் மொழிந்தான்: "படர்தரைப் பயணம் பாதுகாப் பானது பாதுகாப் பானதும் படுகடி தானதும் அத்துடன் சுற்றிய அதிதொலைப் பயணம்; மகிழ்ச்சியைத் தருவது வலிக்குநீர்த் தோணி அசைந்து மரக்கலம் அலைமிதந் தகல்வது பரந்தநீர்ப் பரப்பை **பளீச்சிடச் செய்வது தெளிந்தநீர்க் கடலில் செலுத்துதல் கப்பல்: காற்றுப் படகுதா லாட்டிச் செல்லும் அலைகள் தோணியை அசைத்துச் செலுத்தும் 50 மேல்காற் றூர்ந்து மெதுவாய் நகர்த்த தென்காற் றதனைச் செலுத்தும் முன்னே அதுவும் அவ்விதம் அமைவத னாலே உண்மையில் நீகட லோடியே யல்ல ஆதலால் தரைவழி யாகலாம் பயணம் நீர்க்கரைப் பக்கமாய்ப் போராடிச் செல்லலாம்.
எனக்கொரு புதுவாள் இனிதடித் தெடுப்பாய் தீப்பொறி யலகு திகழ்வாள் செய்வாய் வேட்டை நாய்களை ஓட்டுவேன் அதனால் விரட்டி அடிப்பேன் வியன்வட புலவினம் 60 சம்போ பெறற்குச் சாரும் சமயம் குளிர்ந்தவக் கிராமம் குறுகும் பொழுது இருள்நிறை வடபால் இயைநிலத் தாங்கே செறிபுகார் நாடாம் சரியொலா விடத்து."
அப்போ(து) கொல்லன் அவன்இல் மரினன் கவின்அழி வில்லாக் கைவினைக் கலைஞன் இரும்பைத் திணித்தான் விரும்பி நெருப்பில் கொஞ்ச உருக்நக் கொடுங்கன லுள்ளே கைப்பிடி யளவு கனகமும் போட்டான் விரிகை யளவு வெள்ளியும் சேர்த்தான் 70 ஊதுதல் அடிமைகள் உதவியால் செய்தான் அழுத்தலைச் செய்தான் அக்கூ லிகளால்.
அடிமைகள் ஊதினர் அடிமைகள் விசிறினர் கூலிக்கு வந்தோர் குறைவிலா தழுத்தினர்: இரும்பும் கூழாய் இளகியே வந்தது உருக்கும் களியாய் உருகியே வந்தது வெள்ளியும் நீராய் மின்னலா யிற்று தங்கம் அலையாய்த் தான்கொதித் திட்டது.
அதன்பின் கொல்லன் அவன்இல் மரினன் லகவின் அழிவில்லாக் கைவினைக் கலைஞன் 80 எட்டி உலைகளத் தின்உட் பார்த்தான் கொல்லுலை விளிம்பைக் கூர்ந்தவன் பார்த்தான்: வாளொன்று பிறந்து வந்தததைக் கண்டனன் உருவாகி வந்ததை உயர்பொன் முனையுடன்.
அந்தப் பொருளை அனலிருந் தெடுத்தான் நல்லஅப் பொருளை நனிகரத் தெடுத்தான் பட்டடைக் **கற்குப் படும்உலை யிருந்து சம்மட்டி **கட்குத் தகுசுத்தி யற்கு விரும்பிய வாறே வெளிர்வாள் தட்டினன் அதிமிகச் சிறந்த அலகுறும் வாளினை 90 தங்கத்தி னாலே தகுமுருப் பெற்றனன் அலங்க()ரம் வெள்ளி யதனால் செய்தனன்.
நிலைபெறும் முதிய வைனா மொயினன் அவ்விடம் வந்தனன் அதனைப் பார்க்க தீப்பொறி அலகு திகழ்வாள் எடுத்தனன் தனது வலக்கரம் தானே பெற்றனன் அதனைப் பார்த்தனன் அதனைத் திருப்பினன் உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்: "மலர்ந்தஇவ் வாளொரு மனிதனுக் கேற்றதா தரித்திருப் போற்குத் தகுந்ததா இவ்வாள்?" 100
ஆம்,ஒரு மனிதனுக் கதியுகப் பிவ்வாள் தரித்திரிப் போற்குத் தகுந்தது இவ்வாள் ஏனெனில் அதன்முனை எழில்நிலாத் **திகழ்ந்தது வாளின் பக்கம் வயங்கினன் கதிரோன் வியன்கைப் பிடியிலே விண்மீன் மின்னின அலகினில் பரியொன் றழகாய்க் கனைத்தது குனிந் தொருபுனை குமிழ்கத் திற்று உறையில் நாய்நின் றுரக்கக் குரைத்தது.
அதன்பின் சுழற்றினன் அவனது வாளை இரும்பினா லான இகல்மலை வெடிப்பில் 110 இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே: "இப்போ இங்கே இந்தநல் வாளினால் வெற்பையும் கூட வெட்டிப் பிளப்பேன் பாறையைக் கிழித்துப் பகுப்பிரண் டாக்குவேன்."
அவனே கொல்லன் அவ்வில் மரினன் உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்: "எங்ஙனம் நானும் இலாதோன் பாக்கியம் எதனால் ஏழை என்னைக் காப்பேன் கவச மிடுவேன் கவின்வா ரமைப்பேன் அகல்நிலம் நீரின் அபாயத் திருந்து? 120 கவச மிட்டே கடிதெனை மூடவா இரும்புச் சட்டையை ஏற்றணிந் திடவா உருக்குப் பட்டியால் உடன்மூ டிடவா? கவச(த்தில்) மனிதன் கடினமாய் இருப்பான் இரும்புச் சட்டை ஏற்றது அதனிலும் உருக்குப் பட்டி உறுவலு அதிகம்."
புறப்படப் போகும் பொழுதும் வந்தது வெளிப்புறப் பாட்டு வேளையும் வந்தது முதிய வைனா மொயினன் முதல்வன் அடுத்தவன் கொல்லன் அவன்இல் மரினன் 130 ஒருபரி பெறவே உடன்புறப் பட்டனர் சணல்பிடர்ப் **புரவியைத் தாமே தேடினர் ஒருவரு டப்பரிக்(குக்) கடிவளம் பட்டியில் துரகத் தணிகலன் தோள்களில் இருந்தன இருவரும் தேடினர் இகல்பரி ஒன்றினை தளிர்மரத் தூடாய்த் தலையினைப் பார்த்தனர் எங்ஙணும் கவனமாய் ஏகியே தேடினர் நீல நிறத்து நீள்வனம் சுற்றியே; பொழிலொன் றினிலே புரவியைக் கண்டனர் **தாருவின் நடுவினில் சணற்பிடர்ப் புரவியை. 140
நிலைபெறும் முதிய வைனா மொயினன் அடுத்தவன் கொல்லன் அவ்வில் மரினன் அழுத்திப் புட்டினர் அம்பொற் றலையணி ஒருவரு டப்பரிக் குறுவாய்க் கடிவளம் அதன்பின் பயணம் அவர்கள் தொடங்கினர் நீர்க்கரை யோரமாய் நிகர்இரு மனிதரும் கேட்டதோர் அழுகுரல் நீர்க் கரையிருந்து படகுத் துறைமுறைப் பாடது கேட்டது.
நிலைபெறும் முதிய வைனா மொயினன் உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்: 150 "அங்கொரு அரிவை அழுதுகொண் டிருக்கிறாள் கோழியொன் றழுது குமைகிற தங்கே எதுவெனப் பார்க்கவங் கேகிட லாமா அருகிலே சென்று ஆராய லாமா?"
அவனே அருகில் அடிவைத் தேகினன் பக்கம் சென்றனன் பார்ப்பதற் காக; அழுதுகொண் டிருப்பது அரிவையு மல்ல குரல்கொடு புலம்புதல் கோழியு மல்ல; அதுஒரு தோணி அழுதுகொண் டிருந்தது முன்ஒரு படகு முறைப்பா டிட்டது. 160
முதிய வைனா மொயினன் மொழிந்தான் படகின் பக்கம் படர்ந்ததும் கேட்டான்: "எதற்கு அழுகை இரும்மரப் படகே **உகைமிண்டுப் படகே உன்முறைப் பாடேன் பலகையால் படைக்கப் பட்டதால் அழுகையா உகைமிண் டுரமாய் உற்றதால் அழுகையா?"
மரத்தின் படகு வருபதில் சொன்னது உகைமிண்டுப் படகு உரைத்தது இவ்விதம்: "படகின் விருப்பம் பாய்புனற் செல்வது உருகு**தார் புசிய உருளையி லிருந்து 170 காரிகை விரும்புவள் கணவனின் வீடே பிறந்த இல்லமே உயர்ந்ததா யிருப்பினும்; ஏழைப் படகுநான் அழுகிறேன் அதற்காய் துயர்ப்பட்ட தோணி முறைப்படு கின்றேன் அழுகிறேன் புனல்எனைச் செலுத்துவோற் காக அழுகிறேன் ஓட்டுவோற் காய்அலை களில்எனை.
எனைக்கட் டியபொழு தியம்பப் பட்டது எனைச்செய்த போது இசைக்கப் பட்டது போர்க்கப்ப லொன்று ஆக்கப் படு(கிற)தென அமர்க்கப்ப லொன்று அமைக்கப் படு(கிற)தென 180 என்னை நிறைத்து இரும்பொருள் கொணர நிறையத் திரவியம் நிரப்பி வரவென; போருக்கு நானோ போனதே யில்லை பயணித்து நான்பொருள் பலகொணர்ந் ததுமிலை.
தரங்கெட்ட வேறு சரியிலாப் படகெலாம் என்றுமே போருக் கேகின் றனவே அமருக்கு நகர்ந்து அவைசெல் கின்றன, பயணிப்பு மும்முறை படர்கோ டையிலே நிறையப் பணத்தை நிரப்பிக் கொணர நிறையத் திரவியம் நிரப்பிக் கொணர; 190 நானோ திறமையாய் நன்கமை படகு பலகையோர் நூறினால் படைத்தநற் படகு கழிவுத் துண்டில்நான் **உழுத்துப் போகிறேன் நிதம்செதுக் கியவிடம் நீண்டே கிடக்கிறேன்; மிகக் கேவலமாய் விளைநிலப் புழுக்கள் வளையப் பட்டியில் வசித்திடு கின்றன காற்றினிற் பறக்கும் கடுங்கொடும் பறவைகள் கூடுபாய் மரத்தில் கொண்டமைக் கின்றன தனிவனம் வாழும் தவளைகள் கூட தொடுமுன் அணியத்தில் துள்ளித் திரிவன; 200 இருந்திருக் கும்இரு மடங்கிதில் நன்றாய் இரண்டு மூன்று மடங்குநன் றாகும் மலையில்ஊ சியிலை மரமா யிருந்தால் தேவதா ராகச் செழும்புற் றரையில் ஒருஅணில் ஓடி உலாவரக் கிளைகளில் குட்டிநாய் தரையில் சுற்றியே வரற்கு."
நிலைபெறும் முதிய வைனா மொயினன் இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே: "அருமரப் படகே அழுதிடல் வேண்டாம் உகைமிண்டுப் படகே உழன் றரற்றாதே 210 போர்க்கு விரைவில் போவாய் பயணம் நகர்ந்து சமர்க்கு நன்குசெல் வாய்நீ.
இறைவனின் படைப்பாய் இருந்தால் தோணிநீ, ஆண்டவன் படைப்பாய் அளிப்பவர் கொடையாய், முன்னணி யத்தை முகிழ்புனல் செலுத்து பக்கத்தை அலையின் பக்கமாய் திருப்பு கைமுட்டி எதுவும் கடிதுனைத் தொடாமல் கரங்கள் எதுவும் கடந்துனிற் படாமல் வன்தோள் எதுவும் வழிகாட் டாமல் படுபுயம் எதையும் பயன்படுத் தாமல்." 220
மரத்தின் படகு மறுமொழி சொன்னது உகைமிண்டுப் படகு உத்தரம் சொன்னது: "என்வேறு பெரிய இனத்தால் முடியா என்சகோ தரப்பட கெதாலும் முடியா தள்ளப் படாமலே தண்புனற் செல்வது அனுப்பப் படாமலே அலைகளிற் போவது கைமுட்டி கொண்டு கடிது தொடாமல் திகழ்புயம் கொண்டு திருப்பப் படாமல்."
முதிய வைனா மொயினன் மொழிந்தான்: "தண்புனல் நான்உனைத் தள்ளியே விட்டால் 230 மகிழ்ந்தோட முடியுமா வலிக்கப் படாமலே இடும்துடுப் புதவி எதுவும் இன்றியே துளியும் தண்டு வலித்தலே யின்றி பாயிலே காற்றுப் படியா திருக்கையில்?"
மரத்தின் படகு மறுமொழி சொன்னது உகைமிண்டுப் படகு உத்தரம் சொன்னது: "என்வேறு பெரிய இனத்தால் முடியா எந்தன் குழுவெவ ராலும் முடியா விரல்வலிக் காமல் விரைந்ததே யில்லை இடுதுடுப் புதவி எதுவும் இன்றியே 240 துளியும் தண்டு வலித்தலே யின்றி பாயிலே காற்றுப் படியா திருக்கையில்."
நிலைபெறும் முதிய வைனா மொயினன் இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே: "மகிழ்ந்தோட முடியுமா வலிக்கப் பட்டால் உறுதுடுப் புதவியும் உனக்கே யிருந்தால் தொடர்ந்து தண்டு வலித்தல்**நிற் கிருந்தால் பாயிலே காற்றுப் படிந்துகொண் டிருந்தால்?"
மரத்தின் படகு மறுமொழி சொன்னது உகைமிண்டுப் படகு உத்தரம் சொன்னது: 250 "நிச்சயம் எனது மற்ற இனத்தவர் எனது சகோதர எழிற்பட கெல்லாம் உறுவிரல் வலிக்கையில் ஓடிச் சென்றன இடுத்துடுப் புதவிகள் இருந்த போதிலே தண்டு வலித்தல் தான்தொடர்ந் திருக்கையில் பாயிலே காற்றுப் படிந்துகொண் டிருக்கையில்."
முதிய வைனா மொயினன் அதன்பின் வருபரி தரையில் மணலில் விட்டனன் கழுத்துப் பட்டியை கட்டினன் மரத்தில் கடிவா ளத்தைக் கட்டினன் கிளையில் 260 தண்ணீ ருக்குள் தள்ளினன் தோணி படரலை மிதந்த படகைப் பாடினன் பெருமரப் படகைப் பின்னர் கேட்டனன் உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்: "படுவலி வளையப் பட்டியின் படகே! உரமாம் உகைமிண் டுயர்மரப் படகே! பொருள்நிறைத் தேகப் பொருத்தமா யிருப்பையா பார்வைக்கு நன்றாய்ப் படுவது போலவே?"
மரத்தின் படகு மறுமொழி சொன்னது உகைமிண்டுப் படகு உத்தரம் சொன்னது: 270 "ஆமப்பா பொருள்பெயற் காவேன் நன்றுநான் விரிகீழ்த் தளத்திடம் விசாலமா யுள்ளது இருந்தே வலிக்கலாம் இகல்சத நாயகர் ஆயிரம் பேரும் அமர்ந்தே செல்லலாம்."
முதிய வைனா மொயினன் அதன்பின் பாடல்கள் அமைதியாய்ப் பாடத் தொடங்கினான், பாடினன் முதலிலோர் பக்கமே நிறைய சிறந்த தலைகொள் சீர்மண வாளரை, சிறந்த சிரங்களும் சீருரக் கரங்களும் உயர்கா லணியுறும் உயர்வாம் மக்களை; 280 பாடினான் பின்மறு பக்கமும் நிறைய ஈய அணிகொள் எழில்தலைப் பெண்களை, ஈய அணித்தலை, எழிற்செப்பு **வார்கள், பொன் விரலுடைய புத்தெழிற் பெண்களை.
மேலும் பாடினன் வைனா மொயினன் குறுகிய புறமெலாம் நிறையவே மக்களை அவர்கள் அனைவரும் அதிமுது மாந்தராம் அங்கே வாழ்நாள் அனைத்திலு மிருக்க இருந்தது கொஞ்ச இடமே அதன்பின் வந்த முதன்மை வளஇள மகார்க்கு. 290
அவனே சுக்கான் பக்கமா யமர்ந்தான் பின்னால் மிலாறுவின் முன்னணி யத்தின் கப்பலைப் போக விட்டனன் முன்னே உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்: "ஓடுக படகே, ஒருமர மிலாவிடம், தோணியே, செல்வாய் தொடுநீர்ப் பரப்பிலே, செல்வைநீ கடல்மேல் திகழ்குமி ழியைப்போல அலையில்நீ ராம்பல் மலர்களைப் போலநீ!"
துடுப்பைமாப் பிள்ளைகள் தொடுத்து வலிக்கவும் அரிவையர் வெறுமனே அமரவும் செய்தனன்; 300 வலித்தனர் மாப்பிள்ளை வளைந்தன துடுப்புகள் எதுவுமே பயணத் தில்லைமுன் னேற்றம்.
வனிதையர் துடுப்பை வலிக்கச் செய்தனன் மாப்பிள்ளை அமர வைத்தனன் வாளா; வலித்தனர் பெண்கள் வளைந்தன விரல்கள் எதுவுமே பயணத் தில்லைமுன் னேற்றம்.
மாற்றினன் முதியரை வலிக்கத் துடுப்பு அதனைப் பார்க்க இளைஞரை வைத்தனன் முதியோர் வலித்தனர் முன்தலை நடுங்கின இன்னமும் பயணத் தில்லை முன்னேற்றம். 310
அதன்பின் கொல்லன் அவன்இல் மரினன் அமர்ந்தனன் துடுப்பை அவனே வலிக்க ஓடிற் றிப்போ உயர்மரப் படகு படகோ டிற்றுப் பயணம் விரைந்தது துடுப்புநீர்த் தெறிப்பொலி தொலைவில் கேட்டது உகைமிண் டோ சையும் உயர்தொலைக் கேட்டது.
அங்கே இதமாய் அவனும் வலித்தனன் அசைந்தன குறுக்கிடம் வளைந்தன பக்கம் மோதிப் பொருதின **பேரித் துடுப்புகள் காட்டுக் கோழியாய்க் கத்தின பிடிகள் 320 கருங்கோழி போலக் கத்தின அலகுகள் அன்னமாய்த் தொடராய் அலறிற்று முன்னணி(யம்) கதறிற் றண்டங் காக்கைபோல் பின்னணி(யம்) தொடர்வாத் தைப்போல் உகைமிண் டிரைந்தது.
முதிய வைனா மொயினன் அவன்தான் அப்பய ணத்தில் அதிவிரை வேகினன் சிவப்புப் படகின் சுக்கான் திகழ்புறம் பெருந்துடுப் புக்கு அரும்பொறுப் பாகி பயணப் போதிலே பட்டதோர் **கடல்முனை வறியதோர் கிராமம் வளர்விழித் தெரிந்தது. 330
அஹ்தி என்பான் கடல்முனை வசிப்பவன் அதன்கை வளைவில் அமர்தூர நெஞ்சான் தூர நெஞ்சினன் மீனிலா தழுதனன் ரொட்டி யிலாத் தூரநெஞ்(சான்) சழுதான் அஹ்தியின் குடிலோ அதுமிகச் சிறியது இக்குறும் பனின்நிலை ஏழ்மையே யானது.
செதுக்கிட லாயினன் திகழ்பட கின்புறம் ஒருபுதுப் படகின் **ஓடக் கட்டையை நீள்பசி யுடையவந் நேர்கடல் முனையில் வறுமையே மிக்கஅக் கிராமக் கரையில். 340
அவனது காதுகள் அதிகூர் மையன கண்களோ இன்னும் கனகூர் மையன வடமேற் பக்கமார் வருவிழி செலுத்தினன் செங்கதி ரோன்கீழ் சென்னியைத் திருப்பினன் வானவில் ஒன்றை வளர்தொலைக் கண்டனன் அதற்குமப் பாலொரு அருஞ்சிறு முகிலை.
அதுவொரு வானவில் லல்லவே யல்ல ஒருசிறு முகில்தனு முள்ளதங் கல்ல ஓடிப் படருமோர் ஓடந் தானது பயணித்தே செலும் படகே தானது 350 தெளிந்த கடலதன் செறிவிரி பரப்பில் திறந்து பரந்த திகழ்நீர்ப் பரப்பில் இருந்தனன் உயர்ந்தவன் இணையில்பின் அணியம் தோன்றெழில் மானுடன் துடுப்பின் பக்கமும்.
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்: "அந்தப் படகைநான் அறிந்ததே யில்லை கண்டதே யில்லையிக் கவின்சீர்ப் படகை பின்லாந் திருந்து முன்வரு கிறதது கிழக்கி லிருந்ததன் துடுப்பசை கிறது நோக்கிநிற் கிறதுசுக் கான் வட மேற்கை." 360
உரத்துக் கத்தினான் உளபலம் மட்டும் அவனே கத்தினான் அவனே கூவினான் கடல்முனை நுனியிலே கத்தினான் நின்றே செங்கன்ன முடையோன் செறிநீர்க் குறுக்காய்: "எவரது படகு இரும்நீர்ச் செல்வது? எவரது கப்பல் எறிதிரை மிதப்பது?"
படகின் மனிதர் பகர்ந்தனர் இவ்விதம் அத்துடன் அரிவையர் அளித்தனர் மறுமொழி: "யாரப் பாநீ நளிர்வனம் வசிப்பவன் செறிகான் மரத்திடைத் திரியும் நாயகன், 370 இந்தப் படகைநீ இனிதறிந் திலையா? வைனோ நாட்டின் வன்பட குணர்ந்திலை? வன்சுக் கானமர் மானுட னறிந்திலை? துடுப்பின் பக்கத் திருப்பொனைத் தெரிந்திலை?"
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்: "சுக்கான் பிடிப்பவன் இப்போ தறிகிறேன் காண்கிறேன் துடுப்புக் காரனைக் கூட நிலைபெறும் முதிய வைனா மொயினன் சுக்கான் பிடிப்பவன் நிச்சய மவனே துடுப்பை வலிப்பவன் துரிதஇல் மரினன்; 380 மனிதர்காள், ஆயினும் வழிச்செலல் எங்கோ பயணம் எவ்விடம் பயணநா யகர்காள்?"
முதிய வைனா மொயினன் மொழிந்தான்: "கடற்பிர யாணம் வடபுலம் நோக்கி உயர எழுந்திடும் நுரைகளை நோக்கி நுரைத்து எழுகின்ற அலைகளை நோக்கி; முயன்றுசம் போபெறும் முயற்சிமேற் கொள்ள ஒளிரும் மூடியை உவந்தே பார்த்திட வடநிலக் குன்றின் மணிமுக டதன்மேல் செப்பினா லமைந்த செம்மலைக் குள்ளே." 390
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்: "ஓகோ, முதிய வைனா மொயினனே! என்னையும் ஏற்பா யிங்கொரு மனிதன்நான் மூன்றாம் நாயக னாய்முனைந் திருப்பேன் சம்போ பெறற்குத் தான்செல லானால் பிரகாச மூடியும் கொணர்வதா யிருந்தால், என்னையும் அத்துடன் எண்ணலாம் மனிதனாய் போரொன்று நேர்ந்து பொருபங் கேற்பதேல் என்கரங் களுக்குநான் இடுவேன் கட்டளை ஆணையும் இடுவேன் அகல்என் தோட்கும்." 400
நிலைபெறும் முதிய வைனா மெயினன் மனிதனைச் சேர்த்தான் வளர்தன் பயணம் எடுத்தான் குறும்பனை இனிதுதன் தோணியுள்; குறும்பன் லெம்மின் கைனன் அவனே அவ்விடம் வந்தனன் அதிவிரை நடையில் தோணியில் ஏறத் தொடங்கினன் விரைவாய் தன்னுடன் பலகையும் தான்சில கொணர்ந்தான் வைனா மொயினனின் வன்தோ ணியினுள்.
முதிய வைனா மொயினன் மொழிந்தான்: "என்றன் தோணியில் இருப்பன மரங்கள் 410 படகில் போதிய பலகைகள் உள்ளன திறமிகு தரத்தில் நிறையவே உள்ளன ஏனிங்கு வைத்தனை ஏற்றஉன் பலகை ஏன்அதி கரித்தாய் இப்பட கின்நிறை?"
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்: **"கவனிப்புப் படகைக் கவழ்க்கமாட் டாது **வைக்கோற்போ ராதாரக் கட்டைசிந் தாது; வடபுலக் கடலில் வழக்கமாய் நிகழ்வது படகின் பலகையைப் படர்கால் கேட்பது கேட்பது எதிர்கால் ஓடப் பக்கமே." 420
முதிய வைனா மொயினன் மொழிந்தான்: "அதனா லேதான் அமர்க்கெழும் தோணியின் நெஞ்சுநல் லிரும்பால் நிமிர்த்தப் பட்டது முன்னணி உருக்கால் மூட்டப் பட்டது அதனைக் காற்றுவந் அடித்தேகா திருக்க எடுத்தெறி யாது இருக்கவந் ததைப்புயல்."
பாடல் 40 - வைனாமொயினனின் கந்தலே என்னும் யாழ் *
அடிகள் 1 - 94 : சம்போவைப் பெறுவதற்கு வந்த பயணத்தின் போது படகு ஒரு நீர்வீழ்ச்சியின் கீழ் வந்து ஒரு பெரிய கோலாச்சி மீனின் முதுகில் தடைபட்டு நிற்கிறது.
அடிகள் 95 - 204 : அவர்கள் அந்த மீனைக் கொன்று அதன் பெரும் பகுதியைத் தோணிக்குள் எடுத்து உணவு சமைத்து உண்கிறார்கள்.
அடிகள் 205 - 342 : அந்த மீனின் அலகு எலும்பிலிருந்து வைனாமொயினன் 'கந்தலே' என்னும் ஒரு யாழிசைக் கருவியைச் செய்கிறான். அந்த யாழை மீட்டப் பலர் முயன்று தோற்று தோல்வி அடைகிறார்கள்.
நிலைபெறும் முதிய வைனா மொயினன் பின்னர் விரைவாய்ப் பெரும்பட கோட்டினன் காணுமந் நீண்ட கடல்முனை யிருந்து வறிய கிராம வல்லொலி யிருந்து; பாடிக்கொண்டே படர்ந்தனன் நீரில் அகழ்மகிழ் வோடு அலையில் சென்றனன்.
கடல்முனை நுனியில் கன்னியர் இருந்தனர் கண்டனர் இவனைக் காதில் கேட்டனர்: "கடலிலே செல்வது களிப்புடன் எதனால் படர்அலை மீது பாடலும் எதற்கு 10 முன்னரைக் காட்டிலும் மூண்டபேர் மகிழ்ச்சி ஏனைய பாட்டிலும் இணையிலாப் பாட்டு?"
முதிய வைனா மொயினன் சென்றனன் தரைநீர்ப் பக்கமாய் ஒருநாள் சென்றனன் சேற்று நீரிலே சென்றனன் அடுத்த நாள் மூன்றாம் நாள்நீர் வீழ்ச்சிநீர்ச் சென்றனன்.
குறும்பன் லெம்மின் கைனனு மாங்கே மந்திரச் சொல்சில மனதினில் நினைத்தான் நேராய் இரைந்துபாய் நீர்வீழ்ச் சிப்புறம் புனித அருவிநீர்ப் புகுசுழிப் புறத்தே; 20
இனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னான் இந்த மொழிகளில் இவ்விதம் மொழிந்தான்: "நிறுத்து, நுரைப்பதை நீர்வீழ்ச் சியேநீ! விறலுடை நீரே நிறுத்து, பெருக்கம்! நீரின் நங்கையே, நிமிர்நுரைப் பெண்ணே! நீர்இரைந் தோடும் நெடுங்கல் லமர்க! நீர்இரைந் தோடும் பாறைக்கு வருக! புயங்களால் அணைத்து புனல்அலை நிறுத்து! கரங்களால் அவற்றைக் கட்டி யமர்த்து! கையினால் நுரையைக் கட்டுப் படுத்து! 30 படருமென் மார்பவை பாயா திருக்க! சென்னியில் தண்ணீர் தெறியா திருக்க! அலையின் அடிவாழ் அரும்முது மாதே! வருபுனல் நுரையில் வாழும் பெண்ணே! நுரையின் மேற்கரம் வரமே லெழுவாய் அலைகளை மார்புடன் தழுவி எழுவாய் நீரின் நுரையை நேரொன் றமைக்க நுரையுள திரையை நல்வழி நடத்த நவையற் றோரை அவைதாக் காமல் பிழையற் றோரைப் பெரிதுருட் டாமல்! 40 ஆற்றின் நடுவில் அமைந்த கற்களும் நீர்நுரைத் தோடும் நிமிர்ந்துயர் பாறையும் தத்தம் நெற்றியைத் தாழ்த்தி நிற்கட்டும் குனிந்து தலைகளை நனிதாழ்த் தட்டும் செந்நிறப் படகு செல்லும் பாதையில் **தாருண் தோணி தான்போம் வழியில்!
இதுவும் போதா தின்னமு மென்றால், **சிலைவலு மகனே, திகழ்கற் றலைவா! துளைகரு வியாலொரு துவாரம் அமைப்பாய் துறப்பணம் கொண்டொரு தொடுபுழை யமைப்பாய் 50 நீர்வீழ் பாறையின் நேர்நடு விடத்தில் கொடிய பாறையின் இடமொரு பக்கம் தடையெது மின்றிப் படகது சென்றிட சேதம தின்றியே சென்றிடத் தோணி!
இதுவும் போதா தின்னமு மென்றால், தண்ணீர்த் தலைவனே, தண்ணீர் வாழ்வோய்! பாறைகள் அனைத்தையும் பாசிக ளாக்கு மாற்றுதோ ணியைக்கோ லாச்சியின் **நுரைப்பை நடுவாய்ப் படகு நகர்ந்திட நுரையில் உயர்ந்தெழும் அலைகளின் ஊடாய்ப் போக! 60
நீர்வீழ்ச் சியில்வாழ் நேரிழாய், கேட்பாய்! அருவியின் அருகே அமர்ந்துள்ள கன்னி! நூலொன்று சிறப்பாய் நூற்பா யிப்போ சிறப்பு மிகுந்திடும் சணற்பந் திருந்து நீரினுட் செலாவாய் நினதுநூ லுடனே நீல்நிற நூலுடன் நிமிர்அலைச் செல்வாய் அந்நூல் வழியாய் எம்பட கேகிட தாருண் மார்புறு தனிப்பட கேக சராசரி அறிவே தானுள மனிதனும் அன்னிய னாயினும் அவ்வழிச் செல்ல! 70
துடுப்பின் தலைவியே, தூயஅன் புடையளே! இன்துடுப் பதனை நின்கரத் தெடுப்பாய் அதாற்சுக் கானை அரிங்கைப் பிடிப்பாய் மயக்கும் அருவியின் வழியூ டேகிட லாப்புமாந் திரீகனின் இக்குடில் கடந்து மந்திர வாதியின் வன்சா ளரக்கீழ்!
இதுவும் போதா தின்னமு மென்றால், ஓ,முது மனிதா, உயர்சொர்க் கநாதா! சுக்கான் தாங்கு தொடர்ந்துன் வாளினால் உருவிய வாளால் ஊக்கமாய் நடத்து 80 பயணித் தேகப் பருமரப் படகு தாருவின் படகு தான்தொடர்ந் தேக!"
முதிய வைனா மொயினன் அவன்தான் செலுத்தினன் விரைவாய்ச் செல்பட கெதிரே நீர்ப்பா றைநடு நேராய்ச் செலுத்தினன் செலுத்தினன் உயர்ந்து செறிநுரை நீர்நடு மரப்பட கிடையில் வந்துநிற் கவுமிலை தகுமறி ஞனின்கலம் தட்டவு மிலைத்தரை.
அந்த இடத்தே அவன்வந் தடைந்ததும் அகன்று பரந்த அந்நீர்ப் பரப்பிலே 90 நிறுத்திற் றோடம் நிகழ்ந்ததன் ஓட்டம் விரைந்தே குவதை விட்டது படகு; தரைதட்(டி) இறுகித் தங்கிற் றோடம் ஓடம் நின்றது ஓரசை வின்றியே.
அந்தக் கொல்லன் அவ்வில் மரினன் குறும்பன் லெம்மின் கைனன் அடுத்தவன் அழுத்தினன் வலிக்கும் ஆழ்கடல் துடுப்பை தாருவின் துடுப்பைத் தண்ணீர் அலையில் தடைபட்ட படகைத் தள்ளும் முயற்சியில் இறுகிய தோணியை இளக்கும் முயற்சியில்; 100 ஆயினும் படகு அதுவிரைந் திலது மரத்தின் படகு வழிநடந் திலது.
நிலைபெறும் முதிய வைனா மொயினன் உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்: "ஓ,நீ குறும்பா, லெம்பியின் மைந்தா! சாய்ந்தொரு பக்கம் பார்ப்பாய் அப்புறம் தடைபடு தோணி தரித்தது எதிலென எதிலே யோடம் இறுகிநிற் கிறதென விரிந்து பரந்தவிவ் வியன்நீர்ப் பரப்பில் நீண்டு கிடக்கும் நெடுநீர்ப் பரப்பில் 110 அதுஎது கல்லா அல்லது கட்டையா அல்லது வேறெதும் அடைவழித் தடையா?"
குறும்பன் லெம்மின் கைனன் அவனே சற்றுப் பார்க்கத் தானே திரும்பினன் படகின் கீழ்ப்புறம் பார்வையைச் செலுத்தினன் உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்: "படகு தடையுறல் பாறையில் அல்ல பாறையி லல்ல படுமரத் தல்ல தோணிகோ லாச்சி மீனின் தோளிலே நீர்நாய் ஒன்றதன் நீள்வளை முதுகிலே." 120
நிலைபெறும் முதிய வைனா மொயினன் உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்: "ஆற்றிலே இருக்கும் அதுவெது என்றால் கோலாச்சி யாகலாம் கட்டையா யிருக்கலாம்; இருக்கிறோம் கோலாச்சி இரும்தோள் என்றிடில் நீர்நாய் வளைந்த நீள்முது கினிலெனில் நீரினை வாளால் நேராய்க் கிழித்திடு பிளந்திரு துண்டாய்ப் பெயர்த்திடு பெருமீன்!"
குறும்பன் லெம்மின் கைனன் அவனே பையன் செந்நிறப் படுபோக் கிரிபின் 130 பட்டியி லிருந்து பருவா ளுருவினன் எலும்பை **அழிப்பதை இகல்பக் கத்திருந்(து); நீரினை வாளால் நேராய்க் கிழித்தனன் பக்கத் தின்கீழ்ப் பாய்ச்சி இழுத்தனன் அப்போ நீரில் அவனே வீழ்ந்தனன் அலைகளின் அடியில் ஆழ்ந்தே சென்றனன்.
அதன்பின் கொல்லன் அவன்இல் மரினன் வீரனின் தலைமயிர் மீதிலே பற்றி **வேலையி லிருந்து மேலே தூக்கினன் இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே: 140 "அனைவரும் மானுடர் ஆக்கப் பட்டனர் தாடி உடையராய் ஆக்கப் பட்டனர் உன்னிப் பார்த்தால் ஒருநூ றாகலாம் ஆயிர மாகவும் அதுநிறை வாகலாம்."
பட்டியி லிருந்து பருவா ளுருவினன் உறையினி லிருந்து உயரிரும் பலகினை அதனால் மீனை அறைந்தான் ஓங்கி படகின் பக்கமாய்ப் பலமாய் வீசினன்: உடைந்தது துகளாய் உடனே அவ்வாள் உணர்ந்ததா யில்லை உறுமீன் எதையும். 150
நிலைபெறும் முதிய வைனா மொயினன் இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே: "மனிதரில் பாதியும் வாய்த்தில துன்னிடம் வீரனில் மூன்றிலோர் பங்குமே யிலையே. அவசியம் எனஒன் றாயிடும் பொழுதில் நனிமா னுடன்மனம் நாடிடும் போதில் அப்போ மனமும் அலைந்தெங் கோபோய் கவனமும் சிதறிக் கடந்துசெல் லலுமுள."
அப்போ(து) வாளை அவனே உருவினன் கடுங்கூர் அலகைக் கையிற் பற்றினன் 160 திணித்தனன் வாளைச் செறிகட லுக்குள் பக்க வழியாய்ப் பணித்ததைக் கொணர்ந்தான் வாள்கோ லாச்சி வன்தோட் புதைத்தான் நீர்நா யதனின் நீள்வளை முதுகில்.
தைத்தது வேகமாய்த் தனிவாள் இறங்கி மூச்சுப் புழையில் மூர்க்கமாய்ச் சென்றது; முதிய வைனா மொயினன் அதன்பின் உயரத் தூக்கி உறுமீன் கொணர்ந்தான் நீரிருந் திழுத்தான் நெடுங்கோ லாச்சியை இரண்டாய் உடைத்தனன் இருங்கோ லாச்சிமீன் 170 அடியினில் தாழ்ந்தது அம்மீன் வாலோ அதன் தலைப்பக்கம் மிதந்தது படகில்.
அதன்பின் படகும் அகன்றிட முடிந்தது தடையி லிருந்தது தான்விடு பட்டது; நிலைபெறும் முதிய வைனா மொயினன் பாறைத் தீவிடைப் படகைக் கொணர்ந்து கரைமருங் கதனைக் கட்டி நிறுத்தினன் அதனைப் பார்த்தனன் அதனைத் திருப்பினன் கோலாச் சிமீன் கொழுந்தலைப் பக்கம் இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே: 180 "மாப்பிள்ளை மாரில் வளர்முதிர் வெவரோ அவர்கோ லாச்சியை அரியத் தகுந்தவர் மீனைக் கூறு போடத் தகுந்தவர் சென்னியைத் துண்டாய்ச் சீவிட வல்லவர்."
படகின் மனிதர் பகர்ந்தனர் இவ்விதம் பக்கத் திருந்த பாவையர் கூறினர்: "மீனைப் பிடித்தவர் வியன்கரம் இனியவை மீனைக் கொண்டவர் விரல்களும் புனிதம்."
நிலைபெறும் முதிய வைனா மொயினன் உருவினன் கத்தியை உறையினி லிருந்து 190 குளிர்ந்த இரும்பைக் கூட்டினி லிருந்து கோலாச் சிமீன் கொண்டதாற் பிளந்தான் வெட்டினன் துண்டு துண்டதாய் மீனை இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே: "அரிவையில் இளமையாய் ஆனவள் எவளோ அவளே மீனை ஆக்கத் தகுந்தவள் காலை உணவாய்க் களித்துண் பதற்காய் மீனுள்ள நண்பகல் வேளை உணவாய்."
மெல்லியர் வந்தனர் மீனைச் சமைக்க போட்டியாய் விரைந்து போந்தனர் பதின்மர் 200 அதன்பின் மீனும் ஆக்கி முடிந்தது காலை உணவாய்க் களித்துணற் காக; சிற்சில எலும்புகள் கற்களில் கிடந்தன இன்னும் சிற்சில இருந்தன பாறையில்.
நிலைபெறும் முதிய வைனா மொயினன் அங்கே வந்து அவற்றைப் பார்த்தான் அவற்றைப் பார்த்தான் அவற்றைத் திருப்பினான் உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்: "இவற்றி லிருந்து எவற்றைச் செய்யலாம் இக்கோ லாச்சி மீனின் எயிற்றினில் 210 இந்த அகன்ற அலகின் எலும்பில் கொல்லனின் கருமக் கூடத் திருந்தால் கைவினை யாளனின் செய்தலத் திருந்தால் கைதேர் கலைஞனின் கையில் இருந்தால்?"
கொல்லன்இல் மரினன் கூறினன் இங்ஙனம்: "வெறுமையி லிருந்து எதுவும் வராது கருவி வராதுமீன் எலும்பினி லிருந்து கொல்லனின் கருமக் கூடத் திருப்பினும் கைவினை யாளனின் செய்தலத் திருப்பினும் கைதேர் கலைஞனின் கையில் இருப்பினும்." 220
நிலைபெறும் முதிய வைனா மொயினன் இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே: "இதனிலே யிருந்து ஏதேனும் வரலாம் மீனெலும் பிருந்து விளையலாம் *கந்தலே இயற்றத் தெரிந்தவர் எவரெனு மிருந்தால் எலும்பிசைக் கருவிகள் இயற்றத் தெரிந்தால்."
செய்ய வல்லவர் செய்யமுன் வராவிடம் இல்லாத போதினில் இயற்றத் தெரிந்தவர் எலும்பிசைக் கருவி இயற்றத் தெரிந்தவர், நிலைபெறும் முதிய வைனா மொயினன் 230 தானே செய்பவன் ஆகமுன் வந்தனன் இயற்றத் தெரிந்தவன் இடத்தைப் பெற்றனன் கோலாச் செலும்பு கொண்டுயாழ் செய்தனன் என்றுமே நிலைக்கும் இசையமு தீந்தனன்.
கந்தலே கீழ்ப்புறம் எந்தவா றமைந்தது? பெரியகோ லாச்சியின் பெருமல கெலும்பினால்; கந்தலே முளைகள் எந்தவா றமைந்தன? கோலாச் சிமீனின் கூரிய பற்களால்; கந்தலே நரம்புகள் எந்தவா றமைந்தன? வீரிய மடக்கிய **விறற்பிசா சுரோமமால். 240
இப்போ(து) யாழும் இனிதுருப் பெற்றது தயார்நிலை பெற்றதாய்த் தவழ்ந்தது கந்தலே பெரியமீன் எலும்பிலே பிறந்தநல் யாழது மீனல கெலும்பிலே விளைந்தயாழ் கந்தலே.
இளமை மானுடர் எழுந்தே வந்தனர் விவாக மாகிய வீரரும் வந்தனர் வாலிபக் காளைகள் மற்றாங்கு வந்தனர் சிறிய பெண்களும் சிறப்புடன் வந்தனர் இளங்கன் னியரொடு இதமுது மனைவியர் மத்திம வயதுறு மங்கையர் வந்தனர் 250 கந்தலே யாழினைக் காண்பதற் காகவே யாழிசைக் கருவியை ஆய்ந்திடற் காகவே.
நிலைபெறும் முதிய வைனா மொயினன் இளையோர்க் கியம்பினன் முதியோர்க் கியம்பினன் மத்திம வயதுள மக்களுக் கியம்பினன் விரல்களால் யாழினை மீட்டவே இயம்பினன் எலும்பினால் ஆகிய நரம்பிசைக் கருவியை கழிவுமீ னெலும்பெழும் கந்தலே யாழினை.
இசைத்தனர் இளையோர் இசைத்தனர் முதியோர் மத்திம வயதுதுறு மக்களும் இசைத்தனர் 260 வாலிபர் இசைத்தனர் வளைந்தன விரல்கள் முதியவர் இசைத்தனர் முன்தலை நடுங்கின இன்பம் இன்பமாய் இயையவே யில்லை யாழிசை இசையாய் நலம்தர வில்லை.
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்: "அரைகுறைப் புத்தி யமைந்தபை யன்கள்நீர் அத்துடன் மூடத் தனமமை மங்கையர் மற்றயோர் எளிய குணமுடை மக்கள். உங்களில் இசைப்பவர் ஒருவரு மில்லை சரியாய் இசைக்கத் தகுந்தவர் இல்லை; 270 என்னிடம் யாழை எடுத்துவா ருங்கள் கந்தலே யாழைச் சுமந்துவா ருங்கள் என்முழங் கால்கள் இரண்டின் மீதினில் என்விரல் பத்தின் இயைந்திரு நுனியில்!"
குறும்பன் லெம்மின் கைனன் பின்னர் கரங்களில் பெற்றனன் கந்தலே யாழை இருந்தது அவனுக் கிசைநலம் அருகில் யாழது விரல்களின் கீழே இருந்தது; தொடங்கினன் ஏற்றத் தொடுயாழ்ச் சுருதியை திருப்பினன் சுற்றித் திகழ்கந் தலேயாழ் 280 ஆயினும் யாழினில் இசையெழ வில்லை இசைநலம் எதுவும் ஏற்பட் டிலதே.
முதிய வைனா மொயினன் மொழிந்தான்: "இந்த இளைஞரில் எவருமே இல்லை எவருமே இல்லை இதில்வளர் வோரில் எவருமே இல்லை இம்முதி யோரிலும் இந்த யாழினை இசைக்கத் தெரிந்தவர் இசையின் பம்படைத் தின்பம் தருபவர்; ஒருக்கால் வடபுலம் உளோரால் முடியலாம் இந்த யாழினில் இசையினை எழுப்ப 290 இசையின் பம்படைத் தின்பம் நல்கிட இதனை வடபால் இருக்குநா டனுப்பினால்?"
வடபால் நிலத்துக் குடன்யாழ் அனுப்பினன் சரியொலா வுக்குத் தன்யாழ் கொணர்ந்தனன் வடபுல நிலத்தினர் வாலிபர் இசைத்தனர் வாலிபர் இசைத்தனர் வனிதையர் இசைத்தனர் மனிதர்கள் இசைத்தனர் மனைவிய ருடனே கோதையர் இசைத்தனர் கொழுனரோ டிசைத்தனர் தம்தம் வீட்டின் தலைவியர் இசைத்தனர் இவ்விதம் திருப்பினர் அவ்விதம் முயன்றனர் 300 வாசிக்க முயன்றனர் வலியதம் விரல்களால் விரல்களோர் பத்தின் உகிர்களா லிசைத்தனர்.
வடபுலம் வாழும் வாலிபர் இசைத்தனர் மற்றெல் லாவகை மக்களும் இசைத்தனர் எனினும் இன்பம் இன்பமா யிலையே சுருதியும் அங்கு சுத்தமா யிலையே: ஒன்றுடன் ஒன்று நரம்புகள் சிக்கின பரியதன் **சடைமயிர் பின்னியே முறுகின ஓசையும் அவலமா யுடனெழ லானது குறித்தயாழ்க் கருவியும் கோரமா யொலித்தது. 310
மூலையில் துயின்றனன் பார்வை யிழந்தவன் வயோதிபன் ஒருவன் மனையெடுப் போரமாய் அடுப்பரு குறங்கிய அவனாங் கெழுந்தனன் அடுக்களைப் பக்கமாய் அமர்ந்தவன் உரைத்தனன் உறங்கிய இடத்திலே உறுமத் தொடங்கினன் மூலையில் கிடந்தோன் முனகத் தொடங்கினன்: "நிறுத்துக இசைப்பதை நிறுத்துக ஒலிப்பதை, ஒழிக்குக, இத்தொடு உடனே நிறுத்துக, உளஎன் செவிகளை ஊடறுத் தேகிற(து) தலையைத் துளைத்துத் தருகின் றதுதுயர் 320 உரோமம் சிலிர்த்து உயர்ந்தெழு கின்றது நெடும்பொழு துறக்கம் நிறுத்திவைக் கின்றது.
பின்லாந்து மக்களின் பேரிசைக் கருவி இசைநலம் எழுப்ப இயலாதே விடின் தாலாட் டித்துயில் தராத வேளையில் ஓய்வாய் இருத்தற் குதவாப் போதினில் தூக்கி வீசுக தொடர்புனல் அதனை அலைகளின் அடியில் ஆழத் திடுக அல்லது மீண்டும் அதையெடுத் தேகுக யாழினைத் திருப்பி நனியனுப் பிடுக 330 அதனைப் படைத்த அம்மா னுடன்கரம் அதனை இசைக்கும் அம்மா னுடன்விரல்."
யாழிசைக் கருவிதன் நாவால் நவின்றது சொற்களில் கந்தலே சொல்லிய திவ்விதம்: "இரும்நீர் செல்நிலை இன்னமும் நானிலை நீரலை மூழ்கிடும் நிலையிலும் நானிலை இசைப்பவன் கைகளில் இசையினைத் தருவேன் முயலொரு வற்கு மூட்டுவேன் இசைநலம்."
கொண்டே சென்றனர் குறித்ததைக் கவனமாய் அழகாய் அதனை அவர்சுமந் தேகினர் 340 அதனைப் படைத்த அம்மா னுடன்கரம் இயற்றிய மனிதனின் இயைமுழங் காற்கே.
பாடல் 41 - வைனாமொயினன் கந்தலே என்னும் யாழை இசைத்தல் *
அடிகள் 1 - 168 : வைனாமொயினன் கந்தலே என்னும் யாழை இசைக்கிறான். அந்த இசையைக் கேட்க ஆகாயம் நிலம் நீர் ஆகியவற்றில் வாழும் சகல உயிரினங்களும் விரைந்து வந்து கூடுகின்றன.
அடிகள் 169 - 266 : யாழிசையைக் கேட்ட எல்லோரது இதயங்களும் நிறைகின்றன. அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் வடிகிறது. வைனாமொயினனின் கண்களில் இருந்தும் கண்ணீர் வடிகிறது; அங்ஙனம் வழிந்த கண்ணீர் தண்ணீருள் வீழ்ந்து அழகான நீலநிற முத்துகளாக மாறுகின்றன.
நிலைபெறும் முதிய வைனா மொயினன் என்றுமே நிலைத்த இசைப்பா டகனவன் ஆயத்தம் செய்தனன் அரியதன் விரல்களை தேய்த்துப் பெருவிரல் ஆயத்த மாயினன்; களிப்பு என்னும் கல்லில் அமர்ந்தனன் பாடல் என்னும் பாறையில் இருந்தனன் வெள்ளியில் ஆன வியன்வரை முடியினில் தங்கத்தில் ஆன தனிக்குன் றுச்சியில்.
விரல்களை வைத்தனன் வியன்யாழ்க் கருவியில் வளைந்த கருவியை முழங்காற் றிருப்பினன் 10 கந்தலே யாழைக் கரங்களின் கீழே உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்: "இப்போ வந்தெல் லோரும் கேட்கலாம் முன்னொரு போதும் முயன்றுகே ளாதவர் நித்தியப் பாடலின் நிறைந்தவின் பத்தை கந்தலே யாழதன் கனிவாம் ஓசையை."
முதிய வைனா மொயினன் அதன்பின் மீட்டத் தொடங்கினன் வியனெழில் யாழை கோலாச்சி **என்பின் குணயாழ்க் கருவியை கடல்மீன் எலும்பின் கந்தலேக் கருவியை; 20 விரைவாய் எழுந்தன விரல்கள் அனைத்தும் பெருவிரல் அசைந்தது பிறந்தயா ழதன்மேல்.
இன்பமிப் போது இன்பமாய் மலர்ந்தது ஆனந்த மிப்போ ஆனந்த மானது இன்பிசை யிப்போ இன்பிசை யானது பாடல்கள் நிறைந்த பாடல்களாகின; கோலாச்சி எயிறுகள் குணவிசை யெழுப்பின மீனதன் வாலும் மிகுவொலி தந்தது புரவியின் சடைமயிர் புதுப்பண் இசைத்தது குதிரையின் உரோமம் கொழுமிசை தந்தது. 30
முதிய வைனா மொயினன் இசைத்தனன் அங்கே காட்டில் அமர்ந்தொன் றில்லை நான்கு கால்களில் நனிவிரை பிறவிகள் தொடுகால் ஊன்றித் துள்ளித் திரிபவை வனப்பிசை கேட்டு மகிழ வராதவை இன்னிசை கேட்டு இன்புற வராதவை.
அணில்கள் ஓடின அடைந்தன ஓடி தளிருள கிளையால் தளிருள கிளைக்கு கூடின **கீரிகள் கூடிச் சேர்ந்தன வேலிக்கு வந்தன வேலியில் அமர்ந்தன 40 பாய்ந்தது **எருது பசும்புல் மேட்டில் துள்ளின **சிவிங்கிகள் துள்ளி மகிழ்ந்தன.
உடன்சதுப் புறங்கிய ஓநாய் எழுந்தது நிமிர்ந்தது புற்றரை மேல்நிலக் கரடி **தேவ தாருவின் செழுங்குகை யிருந்து **தாரு மரத்துத் தனிப்புத ரிருந்து; ஓநாய் நெடுந்தொலை ஓடியே வந்தது அம்புதர்க் கரடி அலைந்தே திரிந்தது கடைசியாய் வேலியில் கரடி யமர்ந்தது வாயின் கதவவை வரிசையாய் இருந்தன; 50 வேலி ஒடிந்து வீழ்ந்தது பாறையில் காட்டு வெளியில் கதவம் கவிழ்ந்தது; அனைத்தும் **தாரு அணிமரத் தேறின அதன்பின் தேவ **ரதாருவில் மாறின இசையைக் கேட்டு இன்புறற் காக இசையின் பத்தை இனிதே நுகர.
தப்பியோ லாவின் தரமுடைத் தலைவன் அவனே வனங்களின் அதிபதி யாவான் தப்பியோ இனத்தைச் சார்ந்தமாந் தர்க்கெலாம் வாலிபர் வனிதையர் வகையிரு பாற்கும், 60 முதுகுன் றேறி முடிக்குச் சென்றனன் மங்கள இசையை மனத்தனு பவிக்க; அவளே வனங்கள் அனைத்தின் தலைவி தப்பியோ லாவின் தரமுறு மனைவி நீலக் காலுறை நெடிதணிந் திருந்தனள் சிவப்புச் சரிகையைச் சீராய்ச் சூடினள்; மிலாறுவின் கூனிய வியன்கிளைத் தாவினள் வேறொரு **மரத்தின் மிளிர்வளை விருந்தனள் கந்தலே யாழின் கனிவிசை கேட்க மங்கள இசையை மனமனு பவிக்க. 70
நீலவா னத்து நீந்துபுள் ளினமெலாம் இரண்டு சிறகுள எல்லாப் பறவையும் வந்தன பறந்து வான்மிசைச் சுழன்று விரைவாய் வந்தன வேகம் கொண்டன இசையினைக் கேட்டு இன்புறற் காக இசையின் பத்தை இனிதே நுகர.
வீட்டிலே கழுகுகள் கேட்டபோ தினிலே பின்லாந்து நாட்டின் பேரின் னிசையினை குஞ்சுகள் னைத்தையும் கூட்டினில் விட்டே தாமே பறந்து தனித்துச் சென்றன 80 இனிய நாயகன் இன்னிசை கேட்க வைனா மொயினனின் வனப்பிசை கேட்க.
உயரத் திருந்து பறந்தது கழுகு கருடன் கருமுகிற் கணத்தினூ டாக எறியலை யடியி லிருந்து**வாத் துக்கள் உறையாச் சேற்றிருந் துயரன் னங்கள்; வந்தன சிறிய வன்னப் **பறவைகள் கத்திக் கீச்சிடும் கானக் குருவிகள் நூற்றுக் கணக்கில் நுண்சிறு **குருவிகள் **வானம் பாடிகள் வருமோ ராயிரம் 90 விண்ணிலே நின்று மிகுகளிப் புற்றன அவனது தோள்களில் அடித்துப் பறந்தன இன்னிசை தந்தையார் எழுப்பிய போதினில் வைனா மொயினன் இன்னிசை தருகையில்.
காற்றில் இயற்கைக் கடிமக ளவளே காற்றின் பாவையர் கன்னியர் அத்துடன் இசையின் பத்தை இனிதே நுகர்ந்தனர் கந்தலே யாழைக் காதால் களித்தனர் ஒருசிலர் வானத் தொண்வளை விருந்தனர் வானவில் மீதிலும் மற்றுளர் அமர்ந்தனர் 100 ஒருசிலர் இருந்தனர் சிறுமுகில் மேலே செந்நிற வனப்பொடு மின்னிய கரைதனில். நிலவின் மகளவள் நிதஎழிற் கன்னி சிறப்பு மிகுந்த செங்கதிர் மகளவள் தாங்கி யிருந்தனள் தான்நெச வச்சை ஏந்தி யிருந்தனள் **ஊடிழைக் கயிற்றை நெய்துகொண் டிருந்தனர் நிகரில் பொற்றுணி செய்துகொண் டிருந்தனர் சிறந்தவெள் ளித்துணி செந்நிற முகிலின் திகழ்மேல் விளிம்பில் வளைந்த நீண்ட வானவில் நுனியில். 110
அவர்கள் அதனைக் கேட்டஅப் போதிலே இனிய இசையின் இன்னிசை யொலியை அச்சுக் கைப்பிடி யதில்நழு விற்று வழுவிற்(று) நுனாழி வலியகை யிருந்து அறுந்து வீழ்ந்தன அம்பொன் இழைகள் ஒடிந்தது வெள்ளி ஊடிழைக் கயிறு.
இல்லை அங்கே எந்தப் பிறவியும் இல்லைநீர் வாழ்வன எதுவுமே அங்கு ஆறு **சிறகில் அசையும் பிராணிகள் சிறந்த மீனினக் கணங்கள் எதுவுமே 120 மகிழ வராதவை வனப்பிசை கேட்டு இன்புற வராதவை இசைநலம் கேட்டு.
நீந்திச் சென்றன நெடுங்கோ லாச்சிமீன் நன்றாய் நகர்ந்துநீர் நாய்கள் வந்தன வஞ்சிரம் நீந்தி வந்தன பாறையில் ஆழத் திருந்துவெண் ணணிநிற மீன்களும்; வந்தன **சிறுமீன் வந்தன **வெண்மீன் **சிறுமீன் தம்மொடு மறுமீன் வந்தன நாணற் புற்கரை நனிநேர் வந்தன நகர்ந்திடம் பெற்றன நளிர்நீர்க் கரையில் 130 வைனோ பாடலை மகிழ்வுடன் கேட்க மங்கள இசையை மனமனு பவிக்க.
அஹ்தோ என்பான் அலைகளின் அரசன் புற்றாடி யுடையோன் பொலிநீர்த் தலைவன் நீரின் மேற்புறம் நேராய் வந்தனன் ஏறி அமர்ந்தனன் எழில்நீர் ஆம்பலில் அங்கே கேட்டனன் அருமிசை யின்பம் இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே: "இதுபோல் முன்நான் எங்கும் கேட்டிலன் வளருமிவ் வென்றன் வாழ்நாள் முழுதும் 140 வைனா மொயினன் வழங்கிய இசையினை நிலைபெறும் பாடகன் நிகரில் இசைநலம்."
வளர்சகோ தரியவர், வாத்தின் **சக்திகள் நாணல் புற்களின் நல்மைத் துனிகள், கூந்தலை வாரிக் கொண்டிருந் தனர்தாம் குழலைச் சீவிக் கொண்டிருந் தனர்தாம் வெள்ளிப் பிடிகொள் வியன்வா ரியினால் பொன்னிலே செய்த பொற்சீப் பதனால்; அந்நிய மானதோர் அழகொலி கேட்டனர் இனிதாய் எழுந்த இசையினைக் கேட்டனர்: 150 சீப்பு நழுவிச் செறிபுனல் விழுந்தது வாரி வழுவி வளர்அலை மறைந்தது வாரப் படாமலே வறுங்குழ லிருந்தது பைங்குழல் சீவுதல் பாதியில் நின்றது.
தண்ணீ ருக்குத் தலைவியும் தானே கோரைநல் மார்பு கொண்ட காரிகை இப்போ தெழுந்தனள் இருங்கட லிருந்து அலைகளின் அடியிருந் தவளே வந்தனள் கோரைப் புற்களின் குவைமேல் மிதந்தனள் ஒருநீர்ப் பாறைக் குடனே விரைந்தனள் 160 கேட்பதற் காயக் கிளர்ந்தெழு மோசை வைனா மொயினன் வழங்கிய இசையை ஏனெனில் அவ்விசை இனியஅற் புதமாம் இசைத்த இசையும் இனிமையா னதுவாம்; அங்கே அவளும் அமைதியா யுறங்கினள் பாறையில் வயிறு படியத் தூங்கினள் ஒருபிர காசப் பெருங்கல் மேற்புறம் தடித்த பாறைத் தன்ஒரு பக்கமாய்.
முதிய வையினா மொயினனு மாங்கே இசைத்தான் ஒருநாள் இசைத்தான் இருநாள் 170 எந்த வீரனும் எங்குமே யில்லை எவனும் வல்லான் என்பவன் இல்லை மனிதனு மில்லை மங்கையு மில்லை இல்லைப் பின்னிய கூந்தலார் எவருமே யாருமே இல்லை யழத்தொடங் காதோர் ஒருவரு மில்லை யுள்ளுரு காதோர் அழுதனர் இளைஞர் அழுதனர் முதியர் மணம்முடி யாத மனிதரும் மழுதனர் மணம்முடித் திருந்த மனிதரும் மழுதனர் பாதி வளர்ந்த பையல்கள் அழுதனர் 180 பையன் அழுதனர் பாவையர் அழுதனர் சிறிய பெண்களும் சேர்ந்தே அழுதனர் ஏனெனில் அவ்விசை இனியஅற் புதமாம் முதியோன் இசையும் முழுஇனி மையதாம்.
வைனா மொயினனாம் மனிதனி னிடத்தும் கண்களிலி ருந்து கண்ணீர் வீழ்ந்தது விழிகளி லிருந்து விழிநீர் வழிந்தது உருண்டது நீர்த் துளி உருண்டு வீழ்ந்தது பழம்சிறு **பழத்திலும் பருமன் உள்ளது பயற்றம் **விதையிலும் தடிப்ப மானது 190 வனக்கோழி முட்டையின் வட்டமா யானது பெரியது தூக்கணங் குருவித் தலையிலும்.
விழிகளி லிருந்து விழிநீர் வீழ்ந்தது ஒன்றுபின் ஒன்றாய் ஓடி வடிந்தன ஓடி வடிந்தன உதிர்ந்தன கதுப்பினில் அவனது அழகிய வதனத் துதிர்ந்தன அவனது அழகிய வதனத் திருந்து அகன்ற அவனது தாடையில் வீழ்ந்தன அகன்ற அவனது தாடையி லிருந்து பருத்த அவனது மருமத் துதிர்ந்தன 200 பருத்த அவனது மருமத் திருந்து உரத்த முழங்கா லுற்றே யுருண்டன உரத்த முழங்கா லுற்றதி லிருந்து சிறப்பா யமைந்த சீர்பதம் வீழ்ந்தன சிறப்பா யமைந்த சீர்பதத் திருந்து பாதத் தின்கீழ்ப் படிமிசை வீழ்ந்தன ஐந்து கம்பளி அருஞ்சட் டையூடாய் ஆறு பொன்னின் அகல்வார் ஊடாய் ஏழுநீல் மார்பு எழிற்சட் டையூடாய் எட்டுகைப் பி(ன்)னல்மேற் சட்டைக ளூடாய். 210
உருண்டது நீர்த்துளி உருண்டே வீழ்ந்தது முதிய வைனா மொயினனி லிருந்து நீலக் கடலதன் நீள்கரை யோரம் நீலக் கடலின் நீள்கரை யிருந்து தெளிந்த நீரதன் திகழா ழத்து கறுத்தச் சேற்றின் கடுமூற் றின்மேல்.
முதிய வைனா மொயினன் அதன்பின் இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே: "இங்குள இளைஞர் இடையிலே உளரா இங்குள அழகிய இளைஞர் மத்தியில் 220 இந்த மாபெரும் இனத்தவர் மத்தியில் உயர்பிதா வழிவரு புதல்வர்கள் மத்தியில் என்விழித் துளியெடுத் திணைப்பவர் ருளரா தெளிந்த நீரதன் திகழடி யிருந்து?"
இவ்வித மங்குள இளைஞர் கூறினர் முதிய மனிதரும் மொழிந்தனர் மறுமொழி: "இந்த இளைஞரில் எவருமே யில்லை இங்குள அழகிய இளைஞரி லில்லை மாபெரு மினத்தவர் மத்தியி லில்லை உயர்பிதா வழிவரு புதல்வரி லில்லை 230 உன்விழித் துளிகளை ஒருங்குசேர்ப் பவர்கள் தெளிந்த நீரதன் திகழடி யிருந்து."
முதிய வைனா மொயினன் மொழிந்தான் உரைத்தான் அவனே உரைத்தான் இவ்விதம்: "என்கண் ணீரை எவரெனும் கொணர்ந்தால் பொறுக்கிச் சேர்த்தால் பொழிவிழித் துளிகளை தெளிந்த நீரதன் திகழடி யிருந்து இறகுமே லாடை என்னிடம் பெறுவர்."
**அண்டங் காகம் அடித்துவந் ததுசிறை முதிய வைனா மொயினன் மொழிந்தான்: 240 "காக்கையே என்றன் கண்ணீர் கொணர்வாய் தெளிந்த நீரதன் திகழடி யிருந்து! இறகு மேலாடை ஈவேன் உனக்கு." ஆயினும் காகம் அதுபெற் றிலது.
நீல்நிற வாத்து நின்றதைக் கேட்டது ஆதலால் நீல்வாத் தங்கே வந்தது முதிய வைனா மொயினன் மொழிந்தான்: "நீல்நிற வாத்தே நீயோ அடிக்கடி அலகுடன் அடியில் ஆழ்வது முண்டு தண்ணீர் மூழ்கித் தவழ்வது முண்டு; 250 எனவே சேர்த்துவா என்னுடைக் கண்ணீர் தெளிந்த நீரதன் திகழடி யிருந்து! தருவேன் உனக்குநான் தரமாம் வெகுமதி இறகுமே லாடையை என்னிடம் பெறுவாய்."
விரிநீர் பொறுக்க விரைந்தது வாத்து வைனா மொயினனின் கண்ணீர்த் துளிகளை தெளிந்த நீரதன் திகழ்அடி யிருந்து சேற்றின் கறுத்த ஊற்றின் மேற்புறம்; கடலினி லிருந்து கண்ணீர் எடுத்தது வைனாவின் கைக்கு வாத்துக் கொணர்ந்தது: 260
அவைவேறு பொருள்களா யாகி யிருந்தன அழகாம் பொருட்களாய் அவைவளர்ந் திருந்தன முத்துக்க ளாயவை முற்றி இருந்தன நித்தில மாயவை நேர்ந்தே யிருந்தன அரசரை மேன்மை ஆக்குதற் காக மன்னரை என்றுமே மனமகிழ் விக்க.
பாடல் 42 - வடநாட்டிலிருந்து சம்போவைத் திருடுதல் *
அடிகள் 1-58 : மூன்று நாயகர்களும் வடநாட்டுக்கு வந்ததும், சம்போவில் பங்கு பெறத் தாம் வந்திருப்பதாகவும், அது தவறினால் பலாத்காரமாகச் சம்போ பெறப்படும் என்றும் வைனாமொயினன் அறிவிக்கிறான்.
அடிகள் 59 - 64 : வடநாட்டுத் தலைவி சமாதானமாகவோ பலாத்காரமாகவோ சம்போவை இழக்க விரும்பவில்லை. அதனால் வைனாமொயினன் குழுவினரை எதிர்க்க வடநாட்டு மக்களை அழைக்கிறாள்.
அடிகள் 65 - 164 : வைனாமொயினன் தனது கந்தலே என்னும் யாழை எடுத்து இசைத்து வடநாட்டு மக்கள் அனைவரையும் உறக்கத்தில் ஆழ்த்துகிறான். அதன்பின் வைனாமொயினன் தன் தோழர்களுடன் சம்போ இருந்த மலைக்குச் சென்று சம்போவைப் பெயர்த்தெடுத்துத் தனது தோணிக்குக் கொண்டு செல்கிறான்.
அடிகள் 165 - 308 : சம்போவுடன் மகிழ்ச்சியுடன் தமது வீடு நோக்கி புறப்படுகின்றனர்.
அடிகள் 309 - 562 : மூன்றாம் நாளில் வடநாட்டுத் தலைவி கண் விழித்து சம்போ அபகரிக்கப்பட்டதை அறிகிறாள். தான் திருடர்களைத் தொடர்வதற்காக அவர்களைத் தடுத்து நிறுத்தக் கடும் பனிப் புகாரையும் பெரும் காற்றையும் வேறு தடைகளையும் வடநாட்டுத் தலைவி உண்டாக்குகிறாள். இந்தத் தடைகளின்போது வைனாமொயினனின் யாழ் கடலில் விழுந்து மறைகிறது.
நிலைபெறும் முதிய வைனா மொயினன் அடுத்தவன் கொல்லன் அவனில் மரினன் குறும்பன் லெம்பியின் மகன்மூன் றாமவன் அவன்தான் அழகிய தூர நெஞ்சினன் தெளிந்த கடலில் எழுந்தே சென்றனர் பரந்த திரைகளில் பயணம் செய்தனர் அந்தக் குளிர்ந்த அகலூ ருக்கு இருண்டு கிடந்த இரும்வட புலத்தே மனிதரை உண்ணும் அம்மண் ணுக்கு வீரர் ஆழ்ந்திடும் வியன்பகு திக்கு. 10
யாரப்பா வலிப்பவன் ஆவான் துடுப்பை? முதல்வன் கொல்லன் அவன்இல் மரினன் அவனே வலிப்பவன் ஆவான் துடுப்பை அமர்வான் முன்புறம் அவனே துடுப்பில் குறும்பன் லெம்மின் கைனன் அடுத்தவன் அமர்வான் பின்புறம் அவனே துடுப்பில்.
நிலைபெறும் முதிய வைனா மொயினன் அவனே சுக்கான் பக்கம் அமர்ந்தான் விரைவாய்ப் படகை மிகமுன் செலுத்தினன் திரைகளைக் கிழித்துச் சென்றான் முன்னே 20 உயர்ந்த நுரைகளின் ஊடாய்ச் சென்றனன் வெண்ணுரை முடியுறும் வெள்ளலை யூடாய் வடபுலப் படகு வன்துறை நோக்கி தான்முன் அறிந்த தரிப்பிடம் நோக்கி.
அவர்கள் அவ்விடம் அடைந்த போதினில் முடித்த நேரம் முயல்தம் பயணம் தோணியை இழுத்தனர் தொடர்தரைப் பக்கமாய் தாருண் மார்புள தகுமப் படகை உருக்கினால் இயற்றிய உருளைகள் மீது செம்பினா லாகிய திகழ்பட குத்துறை. 30
அவ்விட மிருந்து அவர்இல் வந்தனர் விரைந்து சென்றனர் மிகநேர் உட்புறம்; வடபுலத் தலைவி வருமா றுசாவினாள் அவள்பார்த் துசாவினாள் அப்புது வரவினர்: "உங்களின் செய்திகள் உளஎவை மனிதரே வீரரே புதினம் ஏதேனும் உளவோ?"
நிலைபெறும் முதிய வைனா மொயினன் அதற்கு மாங்கே அளித்தான் மறுமொழி: "மனிதரின் செய்திகள் இனியசம் போவாம் வீரரின் புதினம் மிக்கொளிர் மூடியாம் 40 சம்போ(வில்) பங்குறத் தான்நாம் வந்துள்ளோம் படரொளிர் மூடியைப் பார்க்கவும் வந்துள்ளோம்."
அவளே வடநிலத் தலைவியப் போது உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்: "குளிர்கான் கோழியீர் கூறாய்ப் பகிர்வதும் படர்மூ வர்க்கணில் பகுப்பது மிலையே; நன்றுதான் சம்போ நன்கிரைந் தொலிப்பதும் நன்றுதான் கடைவதும் நின்றொளிர் மூடி வடநிலக் குன்றதன் மணிமுக டதன்மேல் செப்பினால் இயைந்தசெம் மலைகளுக் குள்ளே 50 இங்குநான் இருப்பது நன்றத னாலே மாபெரும் சம்போ வதன்காப் பாளாய்."
நிலைபெறும் முதிய வைனா மொயினன் உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்: "ஒருபங் கினைநீ உகந்தளி யாயேல் அச்சம் போவின் அடுத்த பாதியை அனைத்தையும் நாங்கள்அகல்வோம் எடுத்து எடுத்தகன் றேற்றுவோம் எங்கள் தோணியில்."
லொவ்ஹி என்பவள் வடநிலத் தலைவி கண்டனள் அவ்வுரை கனமிகக் கொடியதாய் 60 அழைத்தனள் வடபுலம் அனைத்தையும் ஒன்றாய் வாளுடன் அழைத்தனள் வல்லிள மனிதரை அழைத்தனள் வீரரை அரும்படைக் கலத்தொடு வைனா மொயினனின் வன்தலை குறித்து.
நிலைபெறும் முதிய வைனா மொயினன் கந்தலே யாழினைக் கையினி லெடுத்தனன் தானே அமர்ந்தனன் தனியிசைப் பதற்காய் இனிதாய் யாழை இசைக்கத் தொடங்கினன்; அனைவரும் நின்றனர் அவ்விசைக் கேட்க இசையின் பத்தை இரசிக்க நுகர்ந்து 70 மானுடர் நல்ல மனநிலை கொண்டனர் வனிதையர் சிரித்த வாயுட னிருந்தனர் வீரர் இருந்தனர் விழிகளில் நீருடன் பையன்கள் **முழங்காற் படியினி லிருந்தனர்.
மக்களைக் களைக்க வைத்தனன் அவனும் இளைக்க வைத்தனன் எல்லாரையு மவன் கேட்டே யிருந்தவர் கீழ்த்துயில் வீழ்ந்தனர் பார்த்தே யிருந்தவர் பகருணர் விழந்தனர் உறங்கினர் இளையோர் உறங்கினர் முதியோர் வைனா மொயினனின் வனப்பிசை கேட்டு. 80
விவேகி வைனா மொயினனப் போது நிலைபெறும் மாய நெறியறி முதல்வன் பையினுக் குள்ளே கையினை விட்டனன் துளாவித் தடவினன் தொடுபைக் குள்ளே தூக்க ஊசிகள் தூக்கினன் கையினில் துயிலை அவர்கள் துணைவிழிப் பூசினன் கொள்கண் இமைகளைக் குறுக்காய்ச் சேர்த்தனன் கொழுங்கண் மடல்களைக் கோர்த்துப் பூட்டினன் அங்கே களைப்பாய் ஆனமாந் தர்க்கு சோர்ந்துபோ யிருந்தவத் துவள்மனி தர்க்கு; 90 ஆழ்த்தினன் நீண்ட உறக்கத் தவர்களை நீண்ட நேரம் நித்திரை யாக்கினன் ஆங்கு வடநாட் டனைத்துக் குடும்பமும் அத்தனை கிராமத் தம்மக் களையும்.
சம்போ பெறற்குத் தானெழுந் தேகினன் சென்றனன் பார்க்கத் திகழ்ந்தொளிர் மூடியை வடநிலக் குன்றதன் மணிமுக டதன்மேல் செப்பினால் இயைந்தசெம் மலைகளுக் குள்ளே பூட்டிய ஒன்பது பூட்டுகட் கப்பால் பூட்டிய பத்தாம் பூட்டுக்கு மப்பால். 100
முதிய வைனா மெயினனு மங்கே மென்மையாய் அதன்பின் வியனிசை தொடங்கினன் செப்பினால் இயைந்தசெம் மலைகளின் வாயிலில் கல்லினால் ஆனகற் கோட்டையின் பக்கலில்: அப்போ(து) கதவுகள் அசைந்தன கோட்டையில் இரும்புப் பிணையல்கள் எல்லாம் ஆடின.
அவனே கொல்லன் அவ்வில் மரினன் இருந்தனன் அங்கே இரண்டாம் மனிதனாய் பூட்டுகள் மீது பூசினன் வெண்ணெயை பிணையல்கள் மீது பெய்தனன் கொழுப்பை 110 கதவுகள் சத்தம் காட்டா திருக்க ஒலியைப் பிணையல்கள் ஊட்டா திருக்க; விரல்களைப் பூட்டுள் விட்டுத் திருப்பினன் தாளையும் மெதுவாய்த் தளர்த்தத் தொடங்கினன்; அப்போ(து) துண்டுதுண் டாயின பூட்டுகள் திறந்து விரிந்தன செம்பலக் கதவுகள்.
முதிய வைனா மொயினனு மதன்பின் இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே: "ஓ, நீ குறும்பா, லெம்பியின் மைந்தா, எனது நண்பரில் இனிதுயர் நண்பன் 120 எடுக்கச் சம்போ ஏகுவை உள்ளே பிரகாச மூடியும் பெறற்குச் செல்வாய்."
குறும்பன் லெம்மின் கைனனப் போது அதாவது அழகிய தூர நெஞ்சினன் ஆணை யிடுமுன் ஆயத்த மாகினன் தயார்நிலை பெற்றனன் தானே தூண்டுமுன் சம்போ பெறற்குத் தான்உட் சென்றனன் பிரகாச மூடி பெறற்கே ஏகினன் சென்றதும் அவ்விடம் செப்பினன் இங்ஙனம்: செல்கையில் வீம்புரை செப்பினன் இவ்விதம்: 130 "என்னுள் இருப்பவன் எவ்வகை மனிதன் மனுமுதல் வோனின் மைந்தனி னுள்ளே சம்போ தூக்குதல் தான்நிகழ் இப்போ திருப்புதல் நிகழும் திகழ்ஒளிர் மூடியும் வலப்புற என்றன் வன்கா லுதவியால் தொடுதலைக் காலணிக் குதியால் செய்தலால்."
அப்போது லெம்மின் கைனன் தூக்கினன் அப்போ தூக்கினன் அப்போ திருப்பினன் சம்போ வைக்கைத் தழுவிப் பெயர்த்தனன் நிலத்தில் முழங்கால் அழுத்திப் பெயர்த்தனன்: 140 ஆயினும் சம்போ அசைந்திட வில்லை பிரகாச மூடி பெயரவு மில்லை; ஏனெனில் வேர்விட் டிருந்தன வேர்கள் ஒன்பது மடங்கிலோர் **ஆறடி ஆழம்;
வடநிலத் தொருநல் வல்லெரு திருந்தது உரம்பெறு முடலோ டுலவிய தெருது அதன்விலாப் பக்கம் அதிவலு வுடையது தரமா யமைந்தன தசைநார் அதற்கு அதன்கொம் புகளோ ஆறடி நீளம் வாய்க்கட்(டுத்) தடிப்பம் வரும்ஒன் பதடி. 150
எருதைப் புற்றரை யிருந்தே கொணர்ந்தனர் வயற்கரை யிருந்து கலப்பையும் கொணர்ந்தனர் சம்போ வேர்களை தாம்அதால் உழுதனர் பிரகாச மூடியின் பெருந்தளை உழுதனர் அப்போ சம்போ அசைந்தது மெதுவாய் பிரகாச மூடியும் பின்னர் நகர்ந்தது.
முதிய வைனா மொயினன் அதன்பின் அடுத்தவன் கொல்லன் அவன்இல் மரினன் குறும்பன் லெம்மின் கைனன்மூன் றாமவன் வியன்பெரும் சம்போ மேலே தூக்கினர் 160 வடநிலக் குன்றதன் மணிமுக டிருந்து செப்பினால் இயைந்தசெம் மலைகளி லிருந்து தங்கள்தோ ணிக்குத் தாமெடுத் தேகினர் கப்பலின் உள்ளே கவனமாய் வைத்தனர்.
தம்பட குக்குச் சம்போ பெற்றனர் படரொளிர் மூடியைப் பக்கத் திருத்தினர் தள்ளித் தோணியைத் தண்ணீர் விட்டனர் அலையினில் பலகைநூ றாலமை படகை; புனல் தெறித்திடவே போனது படகு அதன்பெரும் பக்கம் அலையினிற் சென்றது. 170
இவ்விதம் கொல்லனில் மரினன் கேட்டனன் உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்: "எங்குசம் போவை எடுத்துச் செல்லலாம் எவ்வழிக் கொண்டு ஏகலாம் அதனை இந்தத் தீய இடங்களி லிருந்து அதிர்ஷ்டமில் இவ்வட அகல்நா டிருந்து?"
நிலைபெறும் முதிய வைனா மொயினன் உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்: "அங்குசம் போவை எடுத்துச் செல்லலாம் செல்லலாம் அத்துடன் திகழொளிர் மூடியும் 180 புகார்படி கடலதன் புணர்முனை நுனிக்கு செறிபனிப் புகாருள தீவதன் கரைக்கு அங்கே இருப்பது அதிர்ஷ்டம் ஆகலாம் அத்துடன் என்றும் அங்கே யிருக்கலாம்; இனியதோர் சிறுஇடம் இருக்கிற தங்கு உண்மையில் மிகவும் உகந்த சிறுவிடம் அடிபிடி யில்லை அயில்வது மில்லை மானுடர் வாள்களின் மோதலு மில்லை."
முதிய வைனா மொயினன் அதன்பின் அகன்றான் வடநிலம் அதிலே யிருந்து 190 நல்மன நிலையில் நனிபய ணித்தான் உரியநாட் டுக்கு உவகையோ டேகினன்; இவ்விதம் பின்னர் இயம்பினன் அவனே "படகே திரும்புவாய் வடநா டிருந்து வீட்டினை நோக்கி விரைவாய்த் திரும்புவாய் பிறநாட் டின்திசை பின்புற மிருக்க.
மாருதம் தோணியை ஆராட் டிச்செல் தண்ணீர் படகைத் தாலாட் டிச்செல் வலிக்கும் துடுப்புக்(கு) வழங்குக உதவி தொடர்துடுப் புக்கு தொடர்ந்தளி ஆறுதல் 200 அகன்று பரந்த அந்நீர்ப் பரப்பில் திறந்து பரந்த திகழ்நீர்ப் பரப்பில்.
இந்தத் துடுப்புகள் இருந்தால் சிறியதாய் துடுப்பை வலிப்பவர் அடைந்தால் தளர்ச்சி சுக்கான் பிடிப்பவர் தோன்றினால் சிறியராய் பெரும்பட கோட்டுவோர் பிள்ளைக ளானால் உன்றன் துடுப்புகள் உதவுவீர், அஹ்தோ! உயர்நீர்த் தலைவனே, உன்றன் படகினை! தருவீர் புதியவை, தருவீர் சிறந்தவை, உரமிகு மின்னொரு தரத்துடுப் பருள்வீர், 210 அமர்வீர் துடுப்புகள் அருகினில் நீரே துடுப்புகள் வலித்தலைத் தொடருவீர் நீரே உயர்மரப் படகினை ஓடிட வைப்பீர் இரும்பின் சுக்கான் இயக்குவீர் நீரே உயர்ந்த அலையின் ஊடாய்ச் செலுத்துக வெண்ணுரை முடியுறும் விரியலை யூடாய்!"
முதிய வைனா மொயினன் அதன்பின் விரைவாய் முன்னே வியன்பட கோட்டினன் அவனே கொல்லன் அவ்வில் மரினன் குறும்பன் லெம்மின் கைனன் அடுத்தவன் 220 துடுப்பை வலித்துத் தொடர்ந்தாங் கேகினர் வலித்தனர் துடுப்பை வலித்துச் சென்றனர் தெளிந்த கடலின் செறிநீ ரதன்மேல் பரந்து விரிந்த படரலை களின்மேல்.
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்: "முன்னொரு காலம் என்வாழ் நாளில் வலித்திடத் துடுப்பு வளநீர் இருந்தது பாடிடக் கதைகளும் பாடகர்க் கிருந்தன ஆயினும் இல்லை ஆம்இந் நாட்களில் என்றுமே கேட்பது இல்லையே நாங்கள் 230 படகிலே மந்திரப் பாடல்கள் இல்லை இசைத்தலைக் கேட்பதும் இல்லை யலைகளில்."
நிலைபெறும் முதிய வைனா மொயினன் உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்: "படகிலும் மந்திரப் பாடலக்ள் இல்லை இசைத்தலைக் கேட்பதும் இல்லை யலைகளில்; மக்களைச் சோம்பலாய் மாற்றிடும் பாடல்கள் துடுப்பு வலித்தலில் கொடுத்திடும் தாமதம்; பொன்னாம் பகலதும் போய்விடும் வெறிதாய் அற்புத மாயிரா அகன்றிடும் நடுவில் 240 இந்த அகன்ற இருநீர்ப் பரப்பிலே பரந்து விரிந்து படரலை களின்மேல்."
குறும்பன் லெம்மின் கைனன் அவனே உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்: "எப்படி யிருப்பினும் இப்பொழு திழியும் அழகிய பகலும் அவ்வா றகலும் இரவும் விரைவாய் எதிரே வந்திடும் மாலைப் பொழுதும் வந்திடும் முன்னே பாடா திருப்பினும் பதிவாழ் பொழுதே என்றும் இசையா திருப்பினும் மனதில்." 250
முதிய வைனா மொயினன் சென்றான் நீல நிறத்து நெடுமுயர் கடலினில் சென்றான் ஒருநாள் சென்றான் இருநாள் சென்றா னப்பா மூன்றாம் நாளிலும் குறும்பன் லெம்மின் கைனனப் போது இரண்டாம் முறையாய் இவ்வா றுரைத்தான்: "வைனா மொயினநீ பாடா துளதேன்? இசையா(த) தெதற்கு **இந்ந(ன்)னீர் மனிதனே? நல்லசம் போநீ நன்கடைந் திப்போ செல்கிறாய் அல்லவா திசைசரி யானதில்? 260
நிலைபெறும் முதிய வைனா மொயினன் சரியாய் அவன்தான் சாற்றினன் மறுமொழி: "பாடல்கள் பாட படர்ந்தில நேரம் களித்து மகிழவும் காலம் வந்தில; பாடல்கள் பாடப் படர்சரி நேரமும் களித்து மகிழக் கனித்திடு காலமும் கண்களில் சொந்தக் கதவுகள் பட்டிடும் சொந்தக் கதவுகள் ஒலித்திடும் நேரமே!"
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்: "சுக்கான் பிடிப்பது தொடர்நதுநா னானால் 270 என்னால் இயன்றள வினிற்குப் பாடுவேன் வலுவுள வரையில் குயிலாய்க் கூவுவேன்; இன்னொரு நேரம் இயலா தாகலாம் இவ்வள(வு) சக்தியு மிலாமற் போகலாம் பாடுவ தாகநீ பகர்ந்திடா திருப்பின் தொடங்குவேன் பாடல் தொடர்ந்துநா னிப்போ."
குறும்பன் லெம்மின் கைனனு மங்கே அவனே அழகிய தூர நெஞ்சினன் உறுவா யசைத்து ஒழுங்கு படுத்தினன் ஆயத்த மாக்கினன் அமைத்தே இசையை; 280 இசையை யமைத்தனன் இராக மெடுத்தனன் கொடுபலத் தெளியவன் கூவத் தொடங்கினன் கத்தத் தொடங்கினன் கடுங்கொடுங் குரலில் காய்ந்த தொண்டையால் கதறத் தொடங்கினன்.
குறும்பன் லெம்மின் கைனன் பாடினன் தூர நெஞ்சினன் பேர்குரற் கத்தினன் தன்வா யசைந்தது தாடியா டிற்று தனிஅவன் முகத்துத் தாடைகள் நடுங்கின; தொடங்கவன் பாடல்கள் தொலைவிலும் கேட்டன கேட்டது உளறல் நீர்த்துறைக் கப்பால் 290 ஆறு கிராமம் அனைத்திலும் கேட்டது கடல்கள்ஓ ரேழுக் கப்பால் கேட்டது.
கொக்கொன்று வந்து கட்டையி லமர்ந்தது இருந்தது உச்சியில் ஈரத்து மேட்டில் எண்ணிக்கொண் டிருந்தது இணைவிரல் நகங்கள் செய்தது முயற்சி செழுங்கால் உயர்த்த; அதனுளத் தப்போ அச்சம் எழுந்தது லெம்மின் கைனன் நிகழ்த்தும் பாடலால்.
நிறுத்திய ததன்செயல் நேராய்க் கொக்கது அச்சத் தாற்கொடி தலறத் தொடங்கிய(து) 300 உடனே எழுந்தது உயரப் பறந்தது பறந்தது நோக்கிப் படர்வட பால்நிலம்; அவ்விடம் அப்புள் அடைந்ததன் பின்னர் சதுப்பில் வடக்கே சார்ந்ததன் பின்னர் அதுபினும் கொடிதாய் அலறிக் கிடந்தது அவலக் குரலில் அதுகத் தியது: அவ்விதம் வடக்கை அப்புள் எழுப்பிய(து) சக்தி - கொடியதைத் தான்துயி லெழுப்பிய(து).
அந்த வடநிலத் தலைவி எழுந்தாள் நீண்டநே ரத்து நித்திரை விட்டே 310 உயர்மாட் டுத்தொழு வுட்புறம் சென்றனள் களஞ்சியக் கூடம் காண்பதற் கோடினள் கால்நடை யாவும் கவனமாய் நோக்கினள் சரிபிழை பார்த்தனள் தன்சொத் துடைமைகள்: கால்நடை எதுவும் காணா(து) போயில பொருள்பண் டங்கள் போகா திருந்தன.
பின்னர் பாறையின் குன்றவள் போயினள் செப்பினால் இயைந்த செம்மலைக் கதவகம் வந்து சேர்ந்ததும் வருமா றுரைத்தனள்: "ஐயகோ, பாவிநான், ஆனஎன் வாழ்நாள், 320 எவனோ அன்னியன் இங்குவந் துற்றனன் அனைத்துப் பூட்டையும் அவன்நொருக் கிட்டனன் கோட்டைக் கதவுகள் கொடுமசைப் புண்டன இரும்புத் தாள்கள் இங்குடை பட்டன கொண்டுசெல் பட்டதா சம்போவிங் கிருந்து அனுமதி யின்றியே அகற்றிடப் பட்டதா?"
ஆம்,அங் கிருந்து சம்போ அகன்றது பட்டொளிர் மூடியும் பறிபோய் விட்டது வடநிலக் குன்றதன் மணிமுகட் டிருந்து செப்பினால் இயைந்தசெம் மலைகளி லிருந்து 330 பூட்டிய ஒன்பது பூட்டுகட் கப்பால் பூட்டிய பத்தாம் பூட்டுக்கு மப்பால்.
லொவ்ஹி என்பவள் வடநிலத் தலைவி கொண்டனள் அதனைக் கொடியதா யவளும் தனது சக்திகள் தளர்வதை யுணர்ந்தாள் தனததி காரம் தவறுதல் கண்டாள் *புகார் மகளவளைப் பிரார்த்தனை செய்தனள்: "பனிப்புகார்ப் பெண்ணே, பனிப்புகைப் பாவாய்! உன்றன் முறத்தினால் உடன்புகார் பரப்பு மூடு பனியினால் முற்றிலும் நிரப்பு 340 பனிப்பட லத்தை இறக்குசொர்க் கத்தால் வானத் திருந்து வரட்டும்மூ டிடுபனி தெளிந்த கடலதன் செறிவிரி பரப்பில் திறந்து பரந்த திகழ்நீர்ப் பரப்பில் வைனா மொயினனின் வழிதனைத் தடுக்க அமைதிநீர் மனிதன் அகல்வதைத் தடுக்க. இதுவும் போதா தின்னமு மென்றால் **முதியவன் மைந்தா, முனைகட **லரக்கனே! இருங்கட லிருந்துன் பெருந்தலை யுயர்த்து அலைகளி லிருந்து அருஞ்சிரம் தூக்கு 350 கலேவா மக்களைக் கடற்கீழ் வீழ்த்து அமைதிநீர் மனிதரை அடியினில் ஆழ்த்து கட்டோ டழிப்பாய் கடுங்கொடு மனிதரை ஆழியின் ஆழத் தலைகளின் கீழே சம்போவைக் கொணர்வாய் தகுவட பால்நிலம் அதுகீழ் விழாது அமர்ந்திடப் படகில்.
இதுவும் போதா தின்னமு மென்றால் ஓ, முது மனிதனே, உயர்மா தெய்வமே! வானத்தில் வாழும் மாபொன் அரசனே! ஆட்சியை நடத்தும் வெள்ளிஆ ளுனனே! 360 கால நிலையினைக் கடுங்கொடி தாக்கு எழுப்பு பாரிய இகல்கால் சக்தியை காற்றை ஆக்கு கடுந்திரை அனுப்பு நேராய் அந்த நெடும்பட கெதிராய் வைனா மொயினனின் வழிதனைத் தடுக்க அமைதிநீர் மனிதனின் அகல்போக் கடைக்க. பனிப்புகார்ப் பெண்ணவள் பனிப்புகை பாவை பரவையின் மீது பனிப்புகார் உயிர்த்தனள் பனிப் படலத்தைப் பவனம் பரப்பினள் முதிய வைனா மொயினனைத் தடுத்தனள் 370 மூன்று இரவுகள் முழுமையா யங்கே நீல நிறத்துக் நெடுங்கடல் நடுவே போக்கிடம் நோக்கி போகவொண் ணாமல் எவ்விடம் நோக்கியும் ஏகவொண் ணாமல்.
மூன்று இரவுகள் முழுமையா யாறினன் நீல நிறத்து நெடுங்கடல் நடுவே முதிய வைனா மொயினன் மொழிந்தான் இயம்பினன் அவனே இயம்பினன் இவ்விதம்: "தாழ்வுறும் மனிதர்த் தானும் நிகழா(து) சோம்பல்மா னிடருக்குத் துளியும் நடவா(து) 380 அடர்பனிப் புகாரிலே ஆழ்ந்து போவது பனிப் படலத்தில் பட்டுத் தோற்பது."
நெடுவாள் எடுத்து நீரைக் கிழித்தனன் வாளினை ஓங்கி வன்கட லறைந்தனன் சென்ற வாள் வழியில் மலர்த்தேன் தெறித்தது வாள்கிழிப் பிடத்தில் வருநறை பறந்தது பனிப்புகார் எழுந்தது நனிவான் நோக்கி பனிப்புகை சென்றது பரந்துவிண் நோக்கி பனிப்புகா ரின்றிப் பரவை இருந்தது கவிழ்பனிப் புகாரிலாக் கடலலை இருந்தது 390 பரவை பரந்து பெரிதாய் விரிந்தது பூமியும் அதனால் பொலிந்தது பெரிதாய்.
காலம் சற்றுக் கரைந்துசென் றிட்டது கணநே ரம்சில கடந்தே முடிந்தது அப்போ(து) கேட்டது அங்கோர் பெருமொலி சிவப்பு நிறத்தின் திகழ்பட கோரமாய் திரைநுரை எழுந்தது பறந்தது உயர வைனா மொயினனின் வன்பட கெதிராய்.
அங்கே கொல்லன் அவ்வில் மரினன் அதிகம் பயந்தனன் அச்சம் கொண்டனன் 400 வதனத்(தில்) இரத்தம் வரண்டு காய்ந்தது கன்னம் செந்நிறம் காணா தொழிந்தது; கம்பளிப் போர்வையால் கவின்தலை சுற்றினன் இருசெவிப் பக்கமும் இழுத்தே விட்டனன் அதனால் முகத்தை அழகாய் மூடினன் இருவிழி சீராய் இன்னும் மறைத்தனன்.
முதிய வைனா மொயினன் அவன்தான் பக்கம் திரும்பிப் பார்த்தனன் தண்ணீர் படகின் பக்கமாய்ப் பார்வை செலுத்தினன் அதிசய மானது அவன்எதோ கண்டனன்: 410 ஆழி அரக்கனாம் அதிமுதி யோன்மகன் சிவப்பு நிறத்துத் திகழ்பட கோரம் பரவையி லிருந்துதன் பெருந்தலை உயர்த்தினன் அலைகளி லிருந்துதன் அருஞ்சிரம் தூக்கினன்.
நிலைபெறும் முதிய வைனா மொயினன் அவனைப் பிடித்தனன் அவன்செவி பற்றி உறும்செவி பிடித்தே உயரத் தூக்கினன் அவனை வினவினான் அவனுக் குரைத்தான் உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்: "முதியவன் மைந்தா, முனைகட லரக்கனே! 420 எதற்குக் கடலி லிருந்துநீ எழுந்தாய் எதற்கு அலைகளில் இருந்துநீ வந்தாய் மனித இனத்தின்முன் வந்தது எதற்கு அதிலும் கலேவாவின் தனையன்முன் வந்தாய்?"
முதியவன் மைந்தனாம், முனைகட லரக்கன் மனதிலே அதனால் மகிழ்ச்சி கொண்டிலன் ஆயினும் அகத்தில் அச்சமும் கொண்டிலன் அத்துடன் மறுமொழி அவன்எதும் தந்திலன்.
நிலைபெறும் முதிய வைனா மொயினன் அடுத்தும் கவனமாய் அவனும் கேட்டான் 430 உசாவினன் மும்முறை உரத்த குரலிலே "முதியவன் மைந்தா, முனைகட லரக்கனே! எதற்குக் கடலில் இருந்துநீ எழுந்தாய் எதற்கு அலைகளில் இருந்துநீ வந்தாய்?"
முதியவன் மைந்தனாம், முனைகட லரக்கன் மூன்றாம் வினவிய முறையின் போதினில் மறுமொழி யாக வழங்கினன் ஒருசொல்: "இதற்குக் கடலில் இருந்துநான் எழுந்தேன் இதற்கு அலைகளில் இருந்துநான் வந்தேன்: என்றன் நெஞ்சினில் இருந்தது இதுதான் 440 கலேவா இனத்தைக் கட்டோ டழிப்பது ஏற்றுச் சம்போ ஏகுதல் வடபுலம்; என்னைநீ அலைகளில் இட்டால் இப்போ இந்த எளியோன் உயிரைநீ ஈந்தால் மற்றொரு தடவைநான் வரவே மாட்டேன் மானுட இனத்துமுன் வரவே மாட்டேன்."
முதிய வைனா மொயினனப் போது அலைகளில் வீசினன் அவ்வெளி யோனை இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே: "முதியவன் மைந்தா, முனைகட லரக்கனே! 450 இருங்கட லிருந்துநீ எழுதலும் வேண்டாம் திரைகளி லிருந்துநீ வருதலும் வேண்டாம் மானுட இனத்துமுன் வரவே வேண்டாம் இந்நாள் இருந்து இனிவர வேண்டாம்!"
அந்தநாள் தொடங்கி அதன்பின் என்றும் எழுந்ததே இல்லை இருங்கட லரக்கன் மானுட இனத்துமுன் வரவே யில்லை சந்திர சூரியர் தாமுள வரையிலும் நற்பகற் போது நனிவரு வரையும் வானம் மகிழ்வுடன் வயங்கும் வரையிலும். 460
முதிய வைனா மொயினன் பின்னர் தனது கப்பலைத் தான்முன் செலுத்தினன் காலம் சற்றுக் கரைந்துசென் றிட்டது கணநே ரம்சில கடந்தே முடிந்தது மானிட முதல்வன், மாபெருந் தேவன், அவரே வானகம் அனைத்தின் தந்தை காற்றினை வீசக் கட்டளை யிட்டனர் கொடிய காற்றுக் கொடிதாய் எழவே.
எழுந்தது காற்று எழுந்துவீ சிற்று கொடிய காற்றுக் கொடிதா யெழுந்தது 470 மேற்புறக் காற்று மூர்க்கமாய் வந்தது வடமேற் காற்று வன்மையாய் வந்தது தென்புறக் காற்றும் வன்மமா யெழுந்தது கீழ்க்கால் கொடிதாய் கிளர்ந்துகூ வியது கோரமாய் தென்கீழ்க் காற்று மொலித்தது உரத்தொலி இட்டது வடக்குக் காற்று.
மரங்களின் இலைகளை வன்கால் பறித்தது ஊசி(யி)லை மரங்கள் உளஇலை இழந்தன புதர்ச்செடி யாவும் பூக்களை இழந்தன புல்லினம் யாவும் நற்றாள் இழந்தன 480 கருஞ்சே றுயர்ந்து கடல்மேல் வந்தது தெளிந்து பரந்த திகழ்தண் ணீர்மேல்.
கொடுங்காற் றப்போ கடுமையா யெழுந்தது அலைகள் எழுந்து அடித்தன படகை கோலாச்சி எலும்பைக் கொண்டயாழ் எடுத்தன மீனெலும் பினிலமை வியன்கலந்த லேயை வெல்லமோ மக்களின் நல்லமைக் காக அஹ்தோவின் நிலைபே றானஇன் பினுக்காய்; அஹ்தோ அதனை அலைகளில் கண்டனன் அஹ்தோவின் பிள்ளைகள் அதைத்திரை கண்டனர் 490 நல்லிசைக் கருவியை நன்கவ ரெடுத்தனர் எடுத்துக் கொண்டதை இல்லத் தேகினர்.
முதிய வைனா மொயினனுக் காங்கே கண்களில் துயரால் கண்ணீர் வந்தது இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே: "என்றன் படைப்பு இவ்விதம் போனதே போனதே என்றன் ஆசையாழ்க் கருவி நிலைக்குமென் னின்பம் நேராய்த் தொலைந்ததே இதனிலும் சிறந்தது இனிக்கிடைக் காது என்றுமே இந்த இகதல மீதிலே 500 கோலாச்சி பல்லில் கொண்டபே ரின்பம் மீனதன் எலும்பில் விளைந்த இன்னிசை."
அவனே கொல்லன் அவ்வில் மரினன் மதிலே பெரிய மனத்துயர் கொண்டான் உரைத்ததான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்: "ஐயகோ வாழ்நாள் அதிர்ஷ்டம் அற்றநான் இந்தக் கடல்களில் இவ்விதம் வந்தேன் திறந்து பரந்த திகழ்நீர்ப் பரப்பில் காலடி வைத்தேன் கடும்சுழல் மரத்தில் நடுங்கும் மரத்து நகர்பட கதனுள் 510 காற்றினை என்தலை மயிரும் கண்டதே என்சிகை பயங்கர இக்கால் நிலையை கண்டதென் தாடியும் கடுந்தீ நாட்களை கண்டு கொண்டதிக் கடுந்தண் ணீரிலே; ஒருவன் அரிதிலும் அரிதாய்க் காணலாம் இதுபோற் காற்றை இதன்முன் நாட்களில் இவ்வள வுயர்ந்த இக்கொடு மலைகளை வெண்ணுரை முடியுடை விதமாம் அலைகளை; இப்பொழு தெனக்கிக் காற்றே அடைக்கலம் கடலின் அலைகளே கருணையின் புகலிடம்." 520
நிலைபெறும் முதிய வைனா மொயினன் அப்போ திவ்விதம் அவன்சிந் தித்தான்: "எவருமே தோணியில் இங்கழ வேண்டாம் எவ்விதப் புலம்பலும் இப்பட கணுகேல்; அழுகைதுன் பத்தை அகற்றி விடாது புலம்பல் தீய நாட்களைப் போக்கா."
பின்வரும் மொழிகளில் பின்அவன் சொன்னான் உரைத்தான் அவனே உரைத்தான் இவ்விதம்: "புனலே, உன்றன் புத்திர னைத்தடு! பேரலை யே,உன் பிள்ளையை நிறுத்து! 530 அஹ்தோ, இந்த அலைகளை அடக்கு! வெல்லமோ, நீரின் **நல்லினம் அமர்த்து! தெறியா திருக்கத் திண்தோ ணிப்**புறம் **வங்கக் காலில்நீர் வந்துவீ ழாமல்.
எழுவாய் காற்றே, எழுவாய் விண்ணகம்! அடைவாய் முகில்கள் அமைந்திடு மிடத்தை உன்றன் இனத்தை உன்கூட் டத்தை உன்சொந் தத்தை உன்குடும் பத்தை! கவின்மரப் படகைக் கவிழ்த்து விடாதே ஊசி(யி)லை மரப்பட குடன்புரட் டாதே 540 காட்டு வெளிமரங் களைவீழ்த் திடுக குன்றத் தூசிக் கொழுமரம் புரட்டுக!"
குறும்பன் லெம்மின் கைனன் அவனே அவன்தான் அழகிய தூர நெஞ்சினன் உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்: "லாப்புவின் கழுகே இங்கே வருவாய் உன்றன் இறகுகள் ஒருமூன் றளிப்பாய் கழுகே மூன்று காக்கையே இரண்டு பாதுகாத் தற்குஇப் படர்சிறு படகை இப்பட கிழிந்ததன் மேற்புறம் ஆக!" 550
பலகைகள் கொஞ்சம் பார்த்தவன் சேர்த்தனன் பக்கப் படகா யத்தப் படுத்தினன் பலகைகள் மேலும் பக்கம் பொருத்தினன் ஆறடி உயரம் அதுஎழும் வரையும் உள்வரும் திரைகளை உடகன்தடுத் தற்காய் நிறுத்தத் தெறிப்பதை நேர்கல மேற்புறம்.
போதிய பலகைகள் பொருந்தின அப்போ படகிலே போதிய பக்கப் பலகைகள் மூர்க்கமாய்க் கொடிய காற்றது வீச மோதிப் பலமாய் மொய்ம்திரை தள்ள 560 நுரைதிரை யூடாய் நுழைந்துசெல் வேளை உயர்ந்தெழு மலைமீ தூர்ந்துசெல் லுகையில்.
பாடல் 43 - சம்போவுக்காக நடைபெற்ற கடற்போர் *
அடிகள் 1-22 : வடநிலத் தலைவி ஒரு போர்க் கப்பலைத் தயார் செய்து சம்போவைத் திருடியவர்களைப் பின்தொடர்கிறாள்.
அடிகள் 23 - 258 : சம்போவைத் திருடியவர்களை வடநாட்டுத் தலைவி அடைந்தவுடன், கலேவா இனத்தவருக்கும் வட நிலத்தவருக்கும் இடையே போர் மூள்கிறது. போரில் கலேவா இனத்தவர் வெல்கிறார்கள்.
அடிகள் 259 - 266 : போரில் வெற்றி பெறாத போதிலும் வடநிலத் தலைவி சம்போவைக் கப்பலில் இருந்து கடலுக்கு இழுக்கிறாள். அவ்விதம் இழுக்கும் பொழுது, அது துண்டு துண்டுகளாக உடைகிறது.
அடிகள் 267 - 304 : பெரிய துண்டுகள் கடலில் ஆழ்ந்து கடலின் செல்வங்கள் ஆகின்றன. சிறிய துண்டுகளை அலைகள் அடித்துக் கரை சேர்க்கின்றன.
அடிகள் 305 - 368 : வடநிலத் தலைவி கலேவா மாகாணம் முழுவதையும் அழிப்பதாகப் பயமுறுத்துகிறாள். அதைக் கேட்டு வைனாமொயினன் அஞ்சவில்லை.
அடிகள் 369 - 384 : வடநிலத் தலைவி சம்போவின் சிறு துண்டுகளைப் பெற்றுப் பெரும் துக்கத்துடன் வடநாட்டுக்குப் போகிறாள்.
அடிகள் 385 - 434 : வைனாமொயினன் கரையில் கிடந்த துண்டுகளைக் கவனமாகச் சேர்த்து, அவற்றை வளர்த்து, எதிர்காலத்தில் நல்ல செல்வம் உண்டாக்கலாம் என்று எதிர்பார்க்கிறான்.
லொவ்ஹி என்பவள் வடநிலத் தலைவி வடநில மக்களை மற்றொருங் கழைத்தனள் கூட்டத் தார்க்குக் குறுக்குவில் கொடுத்தனள் அனைத்துமா னிடர்க்கும் அளித்தாள் வாள்களை முடித்தனள் கட்டி வடநிலப் படகை தயார்செய் திட்டனள் சமர்க்கலம் ஒன்று.
ஏற்றினள் மனிதரை இயைந்ததன் கப்பலில் ஒழுங்காய் அமர்த்தினள் உளபோர் வீரரை, வாத்தொன் றுதன் வளரிளம் குஞ்சினை ஓதக் கடல்வாத் தொழுங்காக் குதல்போல், 10 வாளுடன் இருந்தனர் மனிதர்கள் நூற்றுவர் வில்லுடன் இருந்தனர் வீரர்கள் ஆயிரம். உயர்த்தி நிறுத்தினள் உடன்பாய் மரங்களை **பாய்தூக்(கும்) கொம்பினைப் பார்த்தனள் கவனமாய் பாய்களைக் கட்டினள் பாய்மரங் களிலே மரங்களில் கட்டினள் வன்பாய்த் துணிகளை நீண்டு கிடந்ததோர் நெடுமுகில் திரள்போல் வானில் குழுமிய மேகக் கணம்போல்; அவளும் புறப்பட லாயினள் அதன்பின் புறப்பட லாயினள் போயினள் விரைந்து 20 இறங்கச் சம்போ எடுக்கும் முயற்சியில் வைனா மொயினனின் வன்பட கிருந்து.
நிலைபெறும் முதிய வைனா மொயினன் நீலக் கடலில் நிகழ்த்தினன் பயணம் இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே படகின் சுக்கான் பகுதியி லிருந்தே: "ஓ,நீ குறும்பா, லெம்பியின் மைந்தா! எனது நண்பரில் இனிதுயர் நண்பா! ஏறு பாய்மர இகல்மேல் உச்சி பெரும்பாய் மரத்தின் அரும்நுனி யடைவாய் 30 எதிர்ப்புறக் **கவிநிலை எவ்வா றெனவறி வானப் பின்புற வகைநிலை ஆராய் திகழ்வான் தெளிவாய்ச் சீராய் உள்ளதா சீரா யுள்ளதா சீரற் றுளதா!"
குறும்பன் லெம்மின் கைனனப் போது பையன் செந்நிறப் படுபோக் கிரிபின் ஆணை யிடுமுன் ஆயத்த மாகினன் தயார்நிலை பெற்றனன் தானே தூண்டுமுன் பாய்மரக் கம்பப் படுமுச்(சி) ஏறினன் பெரும்பாய் மரத்தின் அரும்நுனி அடைந்தனன். 40
பார்த்தனன் கிழக்கே பார்த்தனன் மேற்கே பார்த்தனன் தெற்கும் படர்வட மேற்கும் வடக்குக் கரையைக் குறுக்கே பார்த்தனன் பின்வரும் மொழிகளில் பின்அவன் சொன்னான்: "எதிர்ப்புறம் கவிநிலை இருப்பது தெளிவாய் இரும்பின் புறவான் இருளா யுள்ளது: வடதிசை ஒருசிறு மழைமுகி லுள்ளது முகில்திரள் உள்ளது முன்வட மேற்புறம்."
முதிய வைனா மொயினன் மொழிந்தான்: "இங்குநீ நிச்சயம் இயம்பினை பொய்யுரை 50 அதுஒரு போதும் முகிலா யிராது இல்லைச் சாத்தியம் இருந்திட முகில்திரள் பாய்கள் கட்டிய படகே அதுவாம் மீண்டும் கவனம் ஊன்றி யதைப்பார்!"
பார்த்தனன் மீண்டும் பார்த்தனன் கவனமாய் இனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னான்: "தீவொன் றங்கே தெரிகிற(து) தொலைவில் மிகத்தூ ரத்தில் மின்னலாய்த் தெரிகிற(து) நிறைந்து **காட் டரசில் நிற்பன பருந்துகள் மிலாறுவில் புள்ளி வீழ்கான் கோழிகள்." 60
முதிய வைனா மொயினன் மொழிந்தான்: இங்குநீ நிச்சயம் இயம்பினை பொய்யுரை அவைபருந் துகளா யாகவே மாட்டா குறும்புள்ளி வீழ்கான் கோழியு மாகா வடநிலப் பையன் மாரவ ராவர் கவனமாய்ப் பார்த்திடு அதைமூன் றாம்முறை!"
குறும்பன் லெம்மின் கைனன் அவனே மூன்றாம் முறையாய் மீண்டும் பார்த்தான் இனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னான் இந்த மொழிகளில் இவ்விதம் மொழிந்தான்: 70 "வருவது வடநில வன்படகு கிப்போ துடுப்பு வளையம்நூ றமை(த்த) படகு துடுப்பில் நூற்றுவர் இருப்பவர் மனிதர் ஆயிரம் மக்கள் அருகினில் உள்ளனர்."
முதிய வைனா மொயினனப் போது உண்மை முழுவதும் உணர்ந்தே கொண்டனன் உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்: "வல்இல் மரினனே, வலிப்பாய் துடுப்பை! குறும்பன் லெம்மின் கைனனே, வலிப்பாய்! ஒன்றாய் வலிப்பீர் உளஎலா மக்களும் 80 இந்தப் படகு இனிவிரைந் தோட வேகமாய் இந்தத் தோணிமுன் னேற!"
வல்இல் மரினன் வலித்தனன் துடுப்பை குறும்பன் லெம்மின் கைனன் வலித்தனன் ஒன்றாய் வலித்தனர் உளஎலா மக்களும் தொடர்கனப் பலகைத் துடுப்புகள் வளைந்தன மோதின பேரியி லாம்உகை மிண்டு நடுங்கிற் றூசி(இ)லை நன்மரப் படகு; ஒலித்தது நீர்நாய் போல்முன் னணியம் சுக்கான் இரைந்தது தொடர்நீர் வீழ்ச்சிபோல் 90 கொதித்த தண்ணீர் குமிழிக ளாயின உருண் டோ டுற்று உயர்நுரை திரண்டு.
வீரர்கள் போட்டிபோல் விரைந்து செலுத்தினர் மனிதர்பந் தயத்தொடு வலித்தனர் துடுப்பு எனினும் பயணத் தில்லைமுன் னேற்றம் விரைந்திட வில்லை வியன்மரப் படகு பாய்விரித் தோடிய படகதன் முன்னே வடபால் நிலத்தால் வருபட கதன்முன்.
முதிய வைனா மொயினனப் போது தனக்கு அழிவு தான்வரல் உணர்ந்தான் 100 துயர்தரும் நாட்கள் தலைமேல் வருவதை சிந்தனை செய்தான் சீருற நினைத்தான் எங்ஙனம் இருப்பது எவ்விதம் வாழ்வது இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே: "இதற்கொரு தந்திரம் இன்னமும் அறிவேன் அதிசயம் கொஞ்சம் ஆக்கிநான் பார்ப்பேன்."
தீத்த(ட்)டிக் கற்களைத் தேடித் தடவினன் தீத்த(ட்)டிப் பெட்டியுள் தேடித் துழாவினன் தீத்தட்டிக் கல்லொன்று சிறிய தெடுத்தனன் சின்னஞ் சிறியதோர் தீத்தட்டிக் கல்லினை 110 அதனைத் தூக்கி ஆழியில் எறிந்தனன் அவனது இடப்புற அகல்தோள் மேலாய் இனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னான் இந்த மொழிகளில் இவ்விதம் மொழிந்தான்: "எழட்டுமோர் கடலடி இகல்கற் பாறை இரகசியத் தீவதாய் எழுந்திடட் டும்அது வந்துமோ தட்டும் வடநிலப் படகதில் பிளக்கட் டும்சதத் **துடுப்(பு)வளை(ய)ப் படகு கடற்புயல் வந்து கடிதுராய் வேளையில் திரைநுரை எழுந்து தேய்க்கும் போதினில்." 120
கடலின் பாறையாய் அதுபின் எழுந்தது மாறிநின் றதுகடல் வலியதோர் குன்றமாய் அதன்நீள் பக்கம் அமைந்தது கிழக்கே மற்றதன் குறுக்கு வடபுறம் பார்த்தது.
வடநிலப் படகு வந்தது விரைவாய் ஓடிவந் ததுவது உளஅலை நடுவே அதுவந்து மோதிற் றதுகடற் பாறையில் படகு குன்றினில் பட்டுமுட் டியது; உடைந்து பறந்தது உயர்மரப் படகு பலகைநூ றமைந்த படகு சிதைந்தது 130 கப்பலின் பாய்கள் கடலில் வீழ்ந்தன பாய்கள் அசைந்து பறந்துகீழ் வந்தன அவற்றைக் காற்று அள்ளிச் செலற்கு புயலும் எழுந்து புரட்டிச் செலற்கு.
லொவ்ஹி என்பவள் வடநிலத் தலைவி கால்களி னாலே கடல்நீர் ஓடினள் தாங்கப் படகினைத் தானவ்வா றோடினள் கப்பலைத் தூக்கிக் கடலில் நிறுத்திட; எனினும் படகை உயர்த்தினாள் இல்லை தூக்கி நிறுத்தினாள் தோணியும் இல்லை; 140 உடைந்தே போயின உடன்எலாப் பக்கமும் துடுப்பு வளையம் அனைத்தும் சிதறின.
சிந்தான செய்தாள் சீருற நினைத்தாள் இந்தச் சொற்களில் இயம்பினள் அவளே: "எவ்வகை யோசனை இதையடுத் தெழுவது எவரது உபாயம் இருப்பது முன்னே?"
அவள்தன் உருவை அதன்பின் மாற்றினள் வேறொரு விதமாய் மாற்றினள் வடிவை ஐந்தரி வாள்கள் அவள்கை எடுத்தனள் அத்துடன் தேய்ந்த ஆறுமண் வெட்டிகள் 150 அவற்றை மாற்றினள் அவளும் நகங்களாய் அவள்தன் கைகளில் அதன்பின் மாட்டினள்; உடைந்துபோய்ப் படகு கிடந்தது பாதி அவள்தன் கீழே அதனை வைத்தனள் பக்கப் பலகைகள் படர்சிறை யாக்கினள் வலிக்கும் துடுப்பை வாலாய் மாற்றினள் இருந்தனர் நூறுபேர் இணைசிற கின்கீழ் வாலின் முனையில் மற்றா யிரம்பேர் வாளுளோர் அவ்விடம் மற்றும் நூறுபேர் எய்யும் வீரர்கள் இருந்தனர் ஆயிரம். 160
அவளும் பறந்திட அகல்சிறை விரித்தனள் உயரத் தூக்கினள் உடன்தனைக் கழுகுபோல்; உயரத் தெழுந்து ஒழுங்காய்ப் பறந்தனள் அவனே வைனா மொயினனைத் தேடி; ஒருசிறை மேலே உயர்முகில் தொட்டது மறுசிறை கீழே வருநீர் பட்டது.
நீரின் அன்னை, நேரெழில் மங்கை, இந்தச் சொற்களில் இயம்பினள் அவளே: "முதிய வைனா மொயினனே! ஓ,நீ! செங்கதி ரோன்கீழ் சென்னியைத் திருப்பு 170 பார்வையை வடமேற் பக்கம் செலுத்து திரும்பிச் சற்றே திகழ்பின் புறம்பார்!"
நிலைபெறும் முதிய வைனா மொயினன் செங்கதி ரோன்கீழ் சென்னியைத் திருப்பினன் பார்வையை வடமேற் பக்கம் செலுத்தினன் சற்றே திரும்பித் தன்பின் நோக்கினன்: வடநில மாது வந்துகொண் டிருந்தனள் அதிசயப் பறவை அதுபறந் திருந்தது பார்த்தால் தோள்களைப் பறக்கும் கருடன் **இராட்சசக் கழுகுபோல் இருந்தது உடலும். 180
வைனா மொயினனை அதிசயப் படுத்தினள் பாய்மர நுனியின் பக்கமாய்ப் பறந்தனள் பாய்மரம் பெரியதன் பக்கமாய் விரைந்தனள் பாய்மர உச்சியில் மேலாய் நின்றனள்; படகு அடியில் அமிழப் பார்த்தது கப்பல் புரண்டு கவிழப் பார்த்தது.
அங்கே கொல்லன் அவ்வில் மரினன் தன்தேவ தைக்குத் தன்னையர்ப் பணித்தான் தன்இறை கருணையைத் தானே நம்பினன் இனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னான்: 190 "வலிய தெய்வமே, வந்தெமைக் காப்பாய் எழிலார் தெய்வமே, எங்களைக் காத்தருள்! பையன் தொலைந்து செல்லா திருக்க அன்னையின் பிள்ளை அழியா திருக்க படைத்தவன் படைத்த படைப்பு(க்)க ளிருந்து ஆக்கிய இறைவனின் ஆக்கத் திருந்து.
மனுமா முதல்வனே, மாபெரும் தேவே! விண்ணுல கத்து மேதகு தந்தைநீர்! அனல்உடை ஒன்றை அருள்வாய் எனக்கு அணிவாய் எனக்கு அனல்வீ சாடையை 200 அதன்கா வலிலே ஆற்றுவேன் போரை அதன்பின் நின்று அமர்நான் புரிவேன் இன்னல்என் தலைக்கு ஏற்படா திருக்க தலைமயி ருக்கு அழிவேற் படாமல் ஒளிரும் இரும்புவாள் உயர்விளை யாட்டில் உருக்கினால் ஆன உயர்கூர் வாள்முனை."
முதிய வைனா மொயினன் அவனே உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்: "ஓகோ, வடபுலத் தேசத் தலைவியே! சம்போ(வை) இப்போ சரிபங் கிடுவமா 210 புகார்படி கடலதன் புணர்முனை நுனியில் செறிபனிப் புகாருள திவதன் கரையில்?"
வடநிலத் தலைவி வருமா றுரைத்தாள்: "என்றும் பகிர்தலே இலைச்சம் போவை எளியமா னுடனே இல்லை உன்னுடன்! வைனா மொயினனே உன்னுட னில்லை!" சம்போ(வைப்) பற்றத் தானே முயன்றாள் வைனா மொயினன் வன்பட கிருந்து.
குறும்பன் லெம்மின் கைனனனு மங்கே இடுப்புப் பட்டியி லிருந்துவா ளுருவினன் 220 உருக்கினா லான உயரல குருவினன் இடப்புற மிருந்து இழுத்தான் வாளை குறிபார்த் தறைந்தனன் கொடுங்கழு கின்கால் பறவையின் பாதம் படஉரத் தறைந்தனன்.
குறும்பன் லெம்மின் கைனன் அறைந்தனன் அறைந்தனன் அத்துடன் உரைத்தனன் இவ்விதம்: "வீழ்க மானுடர் வீழ்க வாளெலாம் வீழ்க சோம்பல் மிகவுடை மனிதரும் இறகின் கீழுறும் ஒருநூற் றுவரும் பருசிறை நுனியமர் பதின்மரும் வீழ்க!" 230
வடபுல முதியவள் வருமா றியம்பினள் உச்சிப் பாய்மரத் துள்ளோள் கூறினள்: "ஓ, நீ குறும்பா லெம்பியின் மைந்தா! இழிந்தோய், எளிய ஏ, தூர நெஞ்சின! சொந்தஉன் அன்னையை விந்தைஏ மாற்றினை உன்பெற் றோர்க்கு உரைத்தனை பொய்யுரை; போர்க்களம் போகேன் என்றுநீ புகன்றனை ஆறு, பத்துக் கோடைகா லத்தில் பொன்னை விரும்பியும் போகேன் என்றனை வெள்ளி வேண்டியும் விரையேன் என்றனை." 240
நிலைபெறும் முதிய வைனா மொயினன் நிலைபெறும் மாய நெறியறி முதல்வன் எண்ணினன் கூடிய தென்றே நேரமும் தருணம் வந்ததாய்த் தானே உணர்ந்தனன்; இழுத்தனன் கடலில் இருந்தே துடுப்பினை சிந்துர மரத்தின் துண்டை அலைகளில் அறைந்தனன் அதனால் அம்முது மாதை கழுகின் சிற்சில கடும்உகிர் அடித்தனன் விழுந்தன ஏனைய **வள்ளுகிர் நொருங்கி இருந்தது ஒருசிறு எஞ்சிய விரலே. 250
பையன்கள் வீழ்ந்தனர் பருமிற கிருந்தோர் திரைகடல் வீழ்ந்து தெறித்தனர் மானுடர் சிறகுகீழ் இருந்த ஒருநூறு மாந்தரும் வாலதன் பக்க வீரரா யிரவரும் கழுகும் தானாய்க் கடிதுகீழ் வந்தது கப்பலின் வங்கக் கட்டைமோ தியது மரத்தினால் வீழும் வனக்கோ ழியைப்போல் ஊசி யிலைமரத் தொருஅணி லைப்போல்.
சம்போகைப் பற்றத் தான்முயன் றனள்பின் அவள் தன்மோதிர அணியுறும் விரலால் 260 சம்போவை அப்போ தண்ணீர்ப் போட்டனள் ஒளிரும் மூடி முழுதையும் வீழ்த்தினள் படர்செம் படகின் பக்கத் திருந்து நீல நிறத்து நெடுங்கடல் நடுவில் சம்போ உடைந்து துண்டுக ளானது ஒளிரும் மூடியும் உதிர்துணுக் கானது.
அவ்விதம் சென்றன அந்தத் துண்டுகள் சம்போவின் உடைந்த தகுபெருந் துண்டுகள் அமைதி நீரின் அடிக்குச் சென்றன கரிய சேற்றின் கனமடி சென்றன. 270 தண்ணீர்க் காயவை தாம்விடப் பட்டன அஹ்தோ இனத்துக் காம்நற் புதையலாய்; வளருமிவ் வுலகின் வாழ்நா ளிலி(ல்)லை பொன்னிலாத் திகழும் பொற்பொழு தெல்லாம் செல்வம் வேண்டிய தில்லைநீ ருக்கு நிகரிலாத் திரவியம் நீரஹ் தோவுக்(கு).
உடைந்த ஏனைய உண்மைத் துண்டுகள் மிகமிகச் சிறிய வியன்துண் டாவன விழுந்தன நீல விரிகடற் பரப்பில் பரந்த கடலின் படரலைச் சேர்ந்தன 280 காற்று அதைத்தா லாட்டிச் செல்ல கடலலை அவற்றைக் கடத்திப் போக.
அவ்விதம் கால்தா லாட்டிச் சென்றது கடலலை அவ்விதம் கடத்திச் சென்றது நீலக் கடலின் நீர்ப்பரப் பினிலே பரந்து விரிந்த படர்கட லலையில் காற்றுத் தள்ளிச் சேர்த்தது தரையில் கடலலை கடத்திக் கரையிடைச் சேர்த்தது.
நிலைபெறும் முதிய வைனா மொயினன் எறிநுரை அவற்றை எறிந்ததைக் கண்டான் 290 செறிதிரை தரையில் சேர்த்ததைக் கண்டான் கண்டனன் சேர்த்ததைக் கடலலை கரையில் சம்போவின் சிறிய தகுதுண் டுகளை பிரகாச மூடியின் சிறுதுண் டுகளை.
அதனால் அவனும் ஆனந்த முற்றான் உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்: "விதையின் முளைஅதில் இருந்துண் டாகும் நிலைபெறும் இன்பம் அதிலுரு வாகும் உழுதலி லிருந்து உறும்விதைப் பிருந்து அதிலே எல்லா அரும்வகை வளரும் 300 அதிலே குளிர்மதி அகல்நிலாத் திகழும் சிறந்த சூரியத் திகழொளி ஒளிரும் பின்லாந்து நாட்டின் பெருந்தோப் பெல்லாம் பின்லாந்து நாட்டின் நன்னில மெல்லாம்."
லொவ்ஹி என்பவள் வடநிலத் தலைவி உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்: "இதற்கொரு தந்திரம் இன்னமும் அறிவேன் அறிவேன் இன்னமும் ஒருவழி காண்பேன் உன்உழ வுக்கெதிர் உன்விதைப் புக்கெதிர் உன்கால் நடைக்கெதிர் உன்பயிர் கட்கெதிர் 310 தவழும் நின்றன் தண்மதிக் கெதிராய் ஒளிவிடும் ஆதவன் உயர்கதிர்க் கெதிராய் பாறைக் கல்லுள் பால்நிலாத் திணிப்பேன் அருணனைக் குன்று அதன்நடு மறைப்பேன் உயர்குளிர் வந்து உறையச் செய்வேன் நிறுத்திக் குளிர்நாள் நிலையினை வைப்பேன் உன்றன் உழுதலில் உன்றன் விதைத்தலில் உன்தா னியத்தில் உன்அறு வடையில் இரும்புக் குண்டு எறிமழை பொழிவேன் உருக்குத் துண்டாய் ஊற்றுவேன் மாரி 320 நன்கு வளர்ந்தஉன் நற்பயிர் மீது உன்றன் சிறந்த உயர்வயல் களின்மேல்.
கவின்பசும் புற்றரைக் கரடியை எழுப்புவேன் பெரியபற் பிராணியை நறுந்தேவ தாருவில் உன்விறல் அடக்கிய உயர்பரி அழிக்க பெண்பரி அனைத்தையும் கொன்றே முடித்திட கால்நடை யாவையும் கவிழ்த்தே வீழ்த்திட பசுவினம் முழுதையும் பரப்பிடச் சிதறி; அனைத்துமக் களையும் அழிப்பேன் நோயினால் உன்றன் இனத்தை ஒன்றிலா தொழிப்பேன், 330 என்றுமே இந்த எழில்நில வுளவரை அவர்களைப் பற்றி அவனியில் பேச்செழா(து)."
முதிய வைனா மொயினனப் போது இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே: "என்னைப் பாடி லாப்பியர் சபித்தலும் துர்யா மனிதரின் திணிப்பும் நடவா; கவிநிலைக் கட்டுமம் கடவுளி னிடத்திலும் அதிர்ஷ்டத் திறவுகோல் ஆண்டவ னிடத்துள, கடுங்கொடு மனிதர் கைகளில் அவையிலை வெறுப்பவர் விரல்களின் விறல்நுனி யிலுமிலை. 340
நல்லிறை காப்பை நாடிநான் நின்றால் கடவுளா ரிடத்தில் புகலிடம் பெற்றால் என்பயிர்ப் புழுவை இல்லா தாக்குவார் என்நிதி யிருந்து எதிரியை நீக்குவார் தானியப் பயிர்வேர் தான்கிளம் பாமல் விளைபயிர் எதுவும் வீழ்த்தப் படாமல் எனதிளம் முளைகளை எடுத்தே காமல் எனதுசெல் வங்கள் எதுவும் கெடாமல்.
நீ,வட பாலுள நிலத்தின் தலைவி, பாறையில் திணிப்பாய் படுதுய ரெடுத்து 350 குன்றிலே அழுத்துவாய் கொடுமைகள் அனைத்தையும் மலையின் முடியிலே வருநோ வேற்றுவாய் ஆயினும் என்றுமே அல்லநல் மதியை என்றுமே அந்த இரவியை அல்ல!
வந்து கடுங்குளிர் வலிதுறை யட்டும் நின்று குளிர்கவி நிலைநிலைக் கட்டும் உனக்குச் சேர்ந்த உன்னுடை முளைகளில் நீயே விதைத்த நின்னுடை விதைகளில் இரும்புக் குண்டு இயைமழை எழட்டும் உருக்குத் துண்டு மாரியூற் றட்டும் 360 உனது சொந்த உழவதன் மேலே வடபால் நிலத்து வயல்களின் மீதே!
கவின்பசும் புற்றரைக் கரடியை எழுப்பு சினமுறும் பூனையை செறிபுத ரிருந்து வளையுகிர்ப் பிராணியை வன்கா டிருந்து ஊசி(யி)லை மரத்தடி **எயிறகல் மிருகம் வடபால் நிலத்தின் வழிஒழுங் கைகளில் வடபுலக் கால்நடை நடந்துசெல் தடத்தில்."
அந்த வடநிலத் தலைவியும் அதன்பின் உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்: 370 "இப்போ தென்வலு இறங்குகிற தென்னால் வற்றி வடிந்தென் வல்லமை போகிற(து) என்றன் செல்வம் ஏகிய தாழியுள் நொருங்கிச் சம்போ நுடங்கலை வீழ்ந்தது!"
அழுதுகொண் டவள் அடைந்தனள் இல்லம் புலம்பிக் கொண்டவள் போயினள் வடநிலம், கிடைத்தவை இவையென வழுத்துதற் கில்லை முழுச்சம் போவிலும் **முயன்றில் கொணர்ந்தவை; ஆயினும் சிறிதே அவள்கொண் டேகினள் தனது மோதிரத் தனிவிர லதிலே; 380 வடநாட் டுக்கவள் கொணர்ந்தாள் மூடியை கைப்பிடி கொணர்ந்தனள் காண்சரி யோலோ; வடநிலத் ததனால் வறுமையும் வந்தது வந்தது ரொட்டியில் வாழ்வுலாப் பினிலே.
நிலைபெறும் முதிய வைனா மொயினன் அவனே கரையை அடைந்திடு நேரம் சம்போத் துண்டுகள் தம்மைக் கண்டனன் ஒளிரும் மூடியின் உடைதுகள் கண்டனன் ஓதநீர்க் கரையின் ஓரப் பகுதியில் மென்மை மணல்கள் விரவிய இடத்தில். 390
சம்போதத் துண்டுகள் தானெடுத் தேகினன் வியனொளிர் மூடியின் வேறுபல் துண்டுகள் புகார்படி கடலதன் புணர்முனை நுனிக்கு செறிபனிப் புகாருள தீவதன் கரைக்கு வளர்த்தெடுப் பதற்கு வளப்பெருக் குக்கு விளைவிப் பதற்கு விரிசெழிப் புக்கு பாரர்லித் தானியப் பருகுபீர்ப் பானமாய் **தானிய உணவாம் தட்டிய ரொட்டியாய்.
முதிய வைனா மொயினனு மாங்கே இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே: 400 "தந்தருள் கர்த்தனே, தந்தருள் இறைவனே! தந்தருள் பாக்கியம் தான்நிறை வாழ்வை என்றும் சிறப்பாய் இனிதுவாழ் வரத்தை தந்தருள் மேன்மை தான்மிகு மரணம் இப்பின் லாந்து இனிமையாம் நாட்டில் கவின்நிறைந் திடுமிக் கர்யலாப் பகுதியில்.
நிலைபெறும் தெய்வமே, நீகாப் பருள்வாய்! இனியஎம் இறைவனே, இனிக்காப் பாயிரும்! மனிதரின் தீய மனநினை வவைக்கு முதிய மாதரின் சதிநினை வவைக்கு; 410 கொடும்புவிச் சக்திகள் குப்புற வீழ்த்துவீர் புனற்சூ னியத்தரைப் புவியில்வென் றருளுவீர்.
உமது மக்களின் உறுமருங் கிருப்பீர் என்றும் பிள்ளைகட் கிருப்பீர் உதவியாய் நிசியில்எப் போதும் நிற்பீர் காவலாய் பகலிலும் தருவீர் பாதுகாப் பினையே ஒளிர்கதிர் கொடிதாய் ஒளிரா திருக்க திகழ்மதி கொடிதாய்த் திகழா திருக்க விரிகால் கொடிதாய் வீசா திருக்க பொழிமழை கொடிதாய்ப் பொழியா திருக்க 420 உறுகுளிர் வந்து உறையா திருக்க கொடிய கவிநிலை கூடா திருக்க.
இரும்பால் வேலி ஒன்றியற் றிடுவீர் கல்லால் கோட்டை ஒன்றைக் கட்டுவீர் என்றன் வதிவிடம் இதனைச் சுற்றியே என்னின மக்களின் இரண்டு பக்கமும் மண்ணிலே யிருந்து விண்ணகம் வரைக்கும் விண்ணகத் திருந்து விரிபுவி வரைக்கும் என்றுமே வாழ்விடம் எனக்கா கட்டும் புகலிட மாக புனர்காப் பாக 430 எதிரிகள் உணவை எடுத்துணா திருக்க செல்வம் பகைவர் திருடா திருக்க வளருமிவ் வுலகின் வாழ்நாள் என்றும் பொன்னிலாத் திகழும் பொற்பொழு தெல்லாம்!
பாடல் 44 - வைனாமொயினனின் புதிய யாழ் *
அடிகள் 1 - 76 : வைனாமொயினன் தனது தொலைந்த யாழைக் கடலில் தேடிப் பார்க்கிறான்; ஆனால் கிடைக்கவில்லை.
அடிகள் 77 - 334 : வைனாமொயினன் மிலாறு மரத்திலிருந்து ஒரு புதிய யாழைச் செய்து, அதனை மீட்டி, எல்லா உயிரினங்களும் இன்பம் அளிக்கிறான்.
நிலைபெறும் முதிய வைனா மொயினன் தன்மூ ளையிலே தான் சிந்தித்தான்: "இசைப்பது பொருத்தமாய் இருக்கும் இப்போ இரசித்து மகிழ்வதும் இருக்கும் நன்றாய் இப்போ வந்துள இப்புதுச் சூழ்நிலை இந்த அழகிய இனியதோட் டவெளி; ஆயினும் கந்தலே அதுதொலைந் திட்டது இன்பமும் அடியோ டில்லா தானது வாழும் மீன்களின் வதிவிடங் களுக்கு வஞ்சிரம் வாழும் வன்பா றைக்கு 10 ஆழியின் ஆழம் ஆள்பவர் கட்கு வெல்லமோ வினது மன்னுயிர் கட்கு கொணரப் போவது அதைமீண் டுமிலை அஹ்தோ மீண்டும் அதுதரு வதுமிலை.
ஓ,நீ கொல்ல, உயர்இல் மரின! முன்னரும் நேற்றும் முனைந்தே செய்தனை இன்றும் ஒன்றை இயற்றுவாய் அங்ஙனம் இரும்பிலே வாரி இனிதொன் றாக்குவாய் மூட்டுக வாரி முட்களை நெருக்கி
நெருக்கமாய் முட்கள் நீளமாய்க் கைபிடி 20 அதனால் நானும் அலைகளை வாருவேன் திரைகளை அதனால் தினம்நான் கலக்குவேன் வாரிபுற் படுகையை வைக்கோற் போராய் கரைகளைக் கூலக் கதிராய் அலசுவேன் யாழிசைக் கருவியை மீளப் பெறநான் கந்தலே என்னும் கருவியை அடைய உறையும் மீனினத் துறைவிடங் களிலே வஞ்சிரம் வாழும் வன்கற் பாறையில்!"
அந்தக் கொல்லன் அவ்வில் மரினன் கவின்அழி வில்லாக் கைவினைக் கலைஞன் 30 ஆக்கினன் வாரியை அகல்உலை இரும்பால் அதற்குச் செப்பிலே அமைத்தான் கைபிடி அதன்முன் நீளம் **அறுறூ றடியாம் அதன்கைப் பிடியோ **ஐந்நூற் றாறடி.
முதிய வைனா மொயினன் அதன்பின் எடுத்தனன் இரும்பினால் இயற்றிய வாரியை அடிவைத் தேகினன் அவன்சிறு பாதையில் செய்தனன் பயணம் சிறுதொலை தூரம் உருக்கினால் செய்த உருளையின் இடத்தே செப்பினால் செய்த செறிபட குத்துறை. 40
படகுகள் இருந்தன படகிரண் டவ்விடம் இருந்தன படகுகள் இரண்டா யத்தமாய் உருக்கினால் செய்த உருளைகள் மீதினில் செம்பினால் செய்த செறிபட குத்துறை: அவற்றிலோர் படகு அதிபுதி தானது இன்னொரு படகு இருந்தது பழையது.
முதிய வைனா மொயினன் மொழிந்தான் புகன்றனன் இருந்த புதுப்பட குக்கு: "செல்வாய் படகே தெளிபுனல் மேலே தோணியே விரைவாய் தொடர்திரை களின்மேல் 50 உன்னைக் கைகளால் உறப்புரட் டாமல் விரல்கள் வைத்து விரைந்துனைத் தொடாமல்!"
சென்றது படகு தெளிபுனல் மேலே தோணி விரைந்தது தொடர்திரை மீது; நிலைபெறும் முதிய வைனா மொயினன் தானே சுக்கான் தன்மருங் கமர்ந்தனன் கடலைப் பெருக்கிக் காணப் போயினன் அலைகளைக் கூட்டி அலசப் போயினன்; நீராம் பல்மலர் நிறைத்தொன் றாக்கினன் குப்பைகூ ளத்தைக் கொணர்ந்தனன் கரைக்கு 60 கோரைத் துணுக்குகள் வாரிக் குவித்தனன் கோரைத் துணுக்குகள் நாணல் துண்டுகள் ஆழப் பகுதிகள் அனைத்தும் வாரினன் அகல்கற் பாறைகள் அனைத்தும் வாரினன் காணவும் இல்லைக் கைப்பட வும்மிலை இயைந்தகோ லாச்சி எலும்புக் கருவியை அடியோ டிசைநலம் அழிந்தே போனது கந்தலே யாழும் காணா தொழிந்தது.
நிலைபெறும் முதிய வைனா மொயினன் இல்லம் நோக்கி எடுத்தடி வைத்தனன் 70 தாழ்ந்த தலையுடன் வீழ்ந்த மனத்துடன் உயர்ந்த தொப்பியும் உறச்சரிந் திருந்தது இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே: "இதன்மேல் என்றும் இருக்கமாட் டாது கோலாச்சி எயிற்றில் மிழற்றிய இன்னிசை மீனின் எலும்பினில் விளைந்த பண்ணிசை."
அடவியின் வெளியில் அவனே குகையில் வனத்தின் எல்லையில் வந்தநே ரத்தில் அங்கொரு மிலாறு அழுததைக் கேட்டனன் புரிசுருள் மரத்தின் புலம்பொலி கேட்டனன்; 80 அதன்பக் கத்தை அவன்சென் றடைந்தனன் அருகில் சென்றனன் அருகில் நின்றனன்.
வினவினன் இவ்விதம் விளம்பினன் இவ்விதம்: "அழகுறும் மிலாறுவே, அழுவது எதற்கு? பச்சிளம் மரமே, புலம்புதல் எதற்கு? **வெண்ப(ட்)டி மரமே, விசனமும் எதற்கு? இகல்போர்க் குன்னை எடுத்தே கிடார்கள் செருதற் கில்லைத் தேவைப் படுவதும்."
திறமாய் மிலாறு செப்பிய திப்பதில் பசுமை மரமும் பகர்ந்தது இவ்விதம்: 90 "ஆமப்பா சிலபேர் அறைவர் இப்படி சிலபேர் இப்படிச் சிந்தனை செய்வர் மற்றுநான் இங்குநல் மகிழ்வுட னிருக்கிறேன் உவகையில் திளைத்து உயிர்வாழ் கிறேனென; எளிய மரம்நான் இன்னலில் இருக்கிறேன் துன்பத் திலேதான் இன்பம் காண்கிறேன் அல்லல் நாட்களில் அகப்பட் டுழல்கிறேன் முன்மனத் துயரால் முணுமுணுக் கின்றேன்.
அழுகிறேன் எனது அறியா(மை) வெறுமைக்(கு) பயனிலா என்நிலை பார்த்துப் புலம்பினேன் 100 அதிர்ஷ்ட மற்றநான் ஆத()ர மற்றநான் அல்லலே பட்டநான் அபலையு மானநான் தீமைகள் நிறைந்தவித் தீதா மிடங்களில் திறந்து பரந்தவிச் செறிபுல் வெளிகளில்.
பேறுபெற் றவர்கள் பெருங்களி கொண்டவர் என்றுமே அவர்கள் இதையெதிர் பார்ப்பர் அழகிய கோடை ஆம்பரு வம்வர வியன்சீர்க் கோடை வெப்ப நிலைவர; ஆயினும் மடமைக் காளாம் நானோ அச்சம் கொண்டு அல்லற் படுகின்றேன்; 110 உரியஎன் பட்டை உரிக்கப் படுவதால் இலையுள கிளைகள் எடுத்திடப் படுவதால்.
அனேகமாய் என்றன் ஆம்இருள் நிலையில் பெரும்பா(உம்) என்றன் பேரிருள் நிலையில் விரைந்தே செல்லும் வசந்தப் பிள்ளைகள் எனது மருங்கே இனிதே வருவார் கிடைத்தஐங் **கத்தியால் கீறிக் கிழிப்பர் சாறுஆர் வயிற்றைத் தாம்பிளந் தகற்றுவர்; கோடைகா லத்தில் கொடிய இடையர்கள் என்வெண் பட்டியை எடுத்துச் செல்வர் 120 நீர்ப்பைக் கொன்று, நெடுவாள் உறைக் கொன்(று), இன்னொன்று சிறுபழம் எடுத்தகல் கூடைக்(கு).
அனேகமாய் என்றன் ஆம்இருள் நிலையில் பெரும்பால்(உம்) என்றன் பேரிருள் நிலையில் பெண்டிர் வருவார் என்கீழ் இருப்பார் கூடியென் பக்கம் கும்மாள மிடுவார் இலையுள கிளைகளை எடுப்பார் வெட்டி **இலைக்கட் டமைத்துக் கிளைகளை முடிப்பார்.
அனேகமாய் என்றன் ஆம்இருள் நிலையில் பெரும்பால்(உம்) என்றன் பேரிருள் நிலையில் 130 வெட்டி யெரிக்க வீழ்த்தப் படலுள விறகாய் எரிக்க வெட்டிப் பிளப்புள மூன்று முறைகள் மொழியுமிக் கோடையில் இந்தக் கோடை இயைகா லத்தில் என்கீழ் வருவார் இருப்பர் மனிதர் கோடரி எடுப்பர் கூர்மைப் படுத்துவர் ஏழைஎன் தலையை வீழத் தறிக்க வலிமை குறைந்தஎன் வாழ்வினை முடிக்க.
கோடை காலக் குதூகலம் அதுவாம் சிறப்புறு கோடைத் தினக்களிப் பிதுவாம்; 140 அதிலும் சிறப்பாய் ஆகா குளிர்நாள் அதிலும் நன்றாய் ஆகா பனிநாள்.
அனேகமாய் முன்பெலாம் அமையு மிவ்வாறு துயரமே என்றன் தோற்றம் மாற்றிடும் தலையும் மாறிடும் தனிப்பெரும் பாரமாய் வெளுத்து முகமும் வெண்ணிற மாகிடும் நினைவிலே ஓடி நிதம்வரும் இருள்நாள் தீய காலமும் சிந்தையில் வருமே.
இன்னலைக் கொணரும் இதன்பின் காற்று கவலையீன் பனிப்புகார் கவனித் திடும்பின்: 150 என்பசும் மேலுடை எடுத்தே கிடும்கால் எழிற்பா வாடையை எடுக்கும் கவிழ்பனி அதனால் எனக்கோ அதிகம் பொருளில எளிய மிலாறுநான் இங்கொரு பாவி நிர்வ()ண மாக நிற்கிறேன் இவ்விடம் ஆடைகள் முற்றாய் அணியா நிற்கிறேன் உயர்கடும் குளிரால் உதற லெடுக்கிறேன் நனிப்பனிப் புகாரால் நடுங்கிக் கிடக்கிறேன்."
முதிய வைனா மொயினன் மொழிந்தான்: "அழகுபைம் மரமே, அழுதலும் வேண்டாம்! 160 பொற்பசுந் தழையே, புலம்பலும் வேண்டாம்! வெண்ணிற் பட்டியே, இன்னலும் வேண்டாம்! பெறுவாய் நீயும் பெரும்பாக் கியத்தை இனிய வாழ்வினை எழிற்புது வாழ்வினை; களிப்பின் கண்ணீர் காண்பாய் விரைவில் மகிழ்ச்சியைக் கண்டு மனங்களி கூர்வாய்."
முதிய வைனா மொயினன் அதன்பின் இசைநற் கருவியாய் இயற்றினன் மிலாறுவை; ஒருகோடை நாள்முழு துவந்தே செதுக்கினான் கந்தலே யாழாம் கருவியை இயற்றினான் 170 புகார்படி கடலதன் புணர்முனை நுனியில் செறிபனிப் புகாருள தீவதன் கரையில் கந்தலே கருவியின் கவினுருச் செதுக்கினன் புத்திசை இன்பப் பொலிவுட லமைப்பை வைர மிலாறுவில் வடிவம் வந்தது உறுசுருள் மிலாறுவில் உடலமைப் பானது.
முதிய வைனா மொயினன் மொழிந்தான் உரைத்தான் அவனே உரைத்தான் இவ்விதம்: "அதோஇருக் கிறது எழிற்கந் தலேயுரு அழியா இன்பத் தழகுட லமைப்பு 180 எனினும் முளைகளை எங்கே பெறலாம் எங்கே பெறலாம் இதன்முறுக் காணிகள்?"
தொழுவமுன் றிலில்சிந் தூரம் வளர்ந்தது முற்றத் தெல்லையில் முதிர்ந்ததோர் உயர்மரம் சிந்துர மரத்தில் சிறப்புறும் கொம்புகள் ஒவ்வொரு கிளையிலும் ஒவ்வொரு **பழமாம் ஒவ்வொரு பொற்பந் தொவ்வொரு பழத்திலும் ஒவ்வோர்(பொற்) பந்திலும் ஒவ்வொரு குயிலாம்.
குயிலொவ் வொன்றும் கூவிய நேரம் சுருதிகள் ஐந்து தொடர்ந்தொலி தருகையில் 190 பாய்ந்தது வாயிலே பசும்பொன் சுரந்து வாயிலே வெள்ளியும் வழிந்தே வீழ்ந்தது பொன்னா லாகிய பொன்மே டொன்றிலே வெள்ளியில் விளைந்த வெண்ணிறக் குன்றில் அங்குதான் கந்தலே யாழ்முளை ஆகின உறும்சுருள் மிலாறுவின் உரு(வு)க்கு முறுக்க()ணி.
முதிய வைனா மொயினன் மொழிந்தான் உரைத்தான் அவனே உரைத்தான் இவ்விதம்: "கந்தலே யாழ்க்குக் கவின்முளை கிடைத்தது உறும்சுருள் மிலாறுவின் உரு(வு)க்கு முறுக்க()ணி 200 எனினும் இன்னமும் எதுவோ குறையுள யாழ்க்குத் தேவை நல்நரம் பைந்து; எங்குநான் பெறுவேன் இந்த நரம்புகள் தொடர்ஒலி எழுப்பிச் சுருதிகள் சேர்த்திட?"
நரம்புகள் தேடி நனிபுறப் பட்டனன் அடிவைத் தேகினன் அடவியின் வெளியில் காட்டினில் இருந்தனள் கன்னி யொருத்தி ஈரத் தரையினில் இளம்பெண் ணொருத்தி அரிவையும் அங்கே அழுதனள் அல்ல ஆயினும் உவகையில் ஆழ்ந்தனள் அல்ல 210 தனக்குள் பாடித் தானே யிருந்தனள் அந்திப் பொழுதை அவள்கழித் திருந்தனள் நம்பி மணமகன் நாடியே வருமென காதலன் நினைவில் கலந்த நிலையிலே.
நிலைபெறும் முதிய வைனா மொயினன் மெதுவாய்க் காலணி **மிலையா நகர்ந்தனன் **விரல்துணி யின்றி விரைந்தனன் அங்கே; அவனும் வந்து அவ்விடம் சேர்ந்ததும் இறைஞ்சிக் கேட்டனன் இளம்பெண் கூந்தலை இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே: 220 "குமரியே, சிறிதுன் கூந்தலைத் தருவாய்! செழும்எழிற் பெண்ணே, சிறிதுஉன் கூந்தலை! கந்தலே யாழாம் கருவியின் நரம்பாய் உயர்நிலை இன்பத் தொலியாய்த் திகழ்ந்திட!"
குமரியும் சிறிதுதன் கூந்தலைத் தந்தனள் திகழ்எழிற் கூந்தலில் சிறிதவள் தந்தனள் ஐந்தாறு கூந்தலை அரிவையும் தந்தனள் அளவோ ரேழு அவள்குழல் தந்தனள் கந்தலே நரம்புகள் கடிததில் அமைந்தன கவின்இன் நித்தியக் கருவியின் நரம்புகள். 230
யாழிசைக் கருவி நனிதயா ரானது; முதிய வைனா மொயினன் அதன்பின் ஒருகற் பாறையில் உவந்தமர்ந் திருந்தனன் படிக்கட் டிருந்த பாறையொன் றினிலே.
கரங்களில் எடுத்தனன் கந்தலேக் கருவியை இசைஇன் கருவியை எடுத்தனன் அருகினில் வைத்தனன் தலைப்புறம் வான்நோக் கியேயதை அழுத்தினன் **முழங்கால் அதில்தோள் வைத்து ஒழுங்காய் நரம்பினில் ஓசையை அமைக்க சுருதியைச் சேர்த்து சுகஒலி எழுப்ப. 240
ஒழுங்காய் நரம்பினின் ஓசையை அமைத்தனன் சுருதி யாழிசைக் கருவியில் சேர்த்தனன் கரங்களின் கீழே கருவியைத் திருப்பினன் முழங்காற் குறுக்காய் முழுயாழ் வைத்தனன் பணித்தனன் விரல்களின் பத்து நகங்களை ஐந்து விரல்களை அதன்மேல் வைத்தனன் விளையா டிடவே நரம்புமேற் பறந்து துள்ளித் திரிந்திடத் தொனியெழு தந்தியில்.
முதிய வையினா மொயினனு மாங்கே கந்தலே என்னும் கவின்யாழ் மீட்டினன் 250 வியன்சிறு கரத்தால் மென்மை விரல்களால் பெருவிரல் அவைதாம் பின்புறம் வளைந்தன வலிசுருள் மிலாறு மரம்பே சியது இலையுள இளமரம் இனிதே யொலித்தது கொழும்பொன் குயில்கள் கூவி யழைத்தன கன்னியின் கூந்தல் களிப்பைத் தந்தது.
மீட்டினன் வைனா மொயினன் விரலால் கந்தலே நரம்புகள் கனிவா யொலித்தன பன்மலை முழங்கின பாறைகள் மோதின உயர்குன் றங்கள் ஒருங்கசைந் தாடின 260 கற்பா(றை) வீழ்ந்து கனதிரைத் தெறித்தன கூழாங் கற்கள் குளிர்புனல் நகர்ந்தன தேவ தாருகள் திளைத்தன மகிழ்ச்சியில் கவின்புற் றரைமரக் கட்டைகள் துள்ளின.
கலேவாப் பெண்கள் கவின்மைத் துனிமார் சித்திரத் தையலின் மத்தியி லிருந்தனர் நதியினைப் போலவே நங்கையர் விரைந்தனர் அருவியைப் போலவே அனைவரு மோடினர் நகைத்த வாயிள நங்கையிய ரோடினர் மகிழ்ந்த மனத்துடன் மனைவியர் கூடினர் 270 யாழினை மீட்பதை நலமாய்க் கேட்கவே இசையின் பத்தை இனிதே நுகர.
மருங்கினில் நின்ற மனிதர்கள் அனைவரின் கரங்களி லிருந்தன கவிழ்த்தவர் தொப்பிகள்; பக்கம் முதிய பாவையர் யாவரும் கன்னம் தாங்கிக் கைகளில் நின்றனர்; பூவையர் விழிகளில் புனலுடன் நின்றனர் நிலத்தூன்(றி) முழங்கால் நின்றனர் மைந்தர் கந்தலே இசையினைக் கவினுறக் கேட்க இசையின் பத்தை இனிதே நுகர 280 ஒரேகுர லெடுத்து உரைத்தன ரனைவரும் ஒரேநா வெடுத்தே உரைத்தனர் மீண்டும்: "இல்லையே முன்னர் இப்படி கேட்டது இன்னிசை நிகழ்ச்சி இதுபோல் ஒன்றினை வளருமிவ் வுலகின் வாழ்நாள் என்றும் பொன்னிலாத் திகழும் பொற்பொழு தெல்லாம்."
இனிமை நிறைந்த இசையும் கேட்டது ஆறு கிராமம் அனைத்தும் கேட்டது; எந்தப் பிராணியும் இலையாம் அங்கே மகிழ்ந்து கேட்க வராத பிராணிகள் 290 இனிய அந்தயாழ் இசையின் பெருக்கை கந்தலே தந்த கனிவுறும் ஒலியினை.
வாழும் அனைத்து வனவிலங் குகளும் தரையில் உகிருறத் தாழ்ந்தே இருந்தன கந்தலே இசையினைக் கனிவாய்க் கேட்க இசையின் பத்தை இனிதே நுகர; காற்றிற் பறந்து கடிதலை பறவைகள் மரங்களின் கிளைகளில் வந்தொன் றாயின நீரிலே வாழும் நீர்மீன் வகையெலாம் ஒன்றாய் நீர்க்கரை யோரம் சேர்ந்தன 300 மண்ணதன் கீழ்உறை மண்புழு யாவும் மண்ணின் மேற்புறம் வந்தன மெதுவாய் நகர்ந்தவை வந்தன நல்லிசை கேட்டன அந்த யாழின் அரும்மின் னிசையினை நிகழ்கந் தலேயாழ் நித்திய இசையினை வைனா மொயினனின் வண்ணநல் லிசையினை.
முதிய வையினா மொயினனு மாங்கே உண்மையில் சிறப்பாய் உயர்யாழ் மீட்டினன் எழிலார் ஒலியை எழுப்பி இசைத்தனன்; இசைத்தனன் ஒருநாள் இசைத்தனன் இருநாள் 310 தொடங்கி ஒரேமுறை தொடர்ந்தே இசைத்தனன் ஒரேயொரு காலை உணவுட னிசைத்தனன் இடுப்புப் பட்டியை இணைத்தே ஒருமுறை உடலில் சட்டையை ஒருமுறை அணிந்தே.
இல்லத் தவனும் இசைத்த போதினில் ஊசி யிலைமரத் துருவாம் அறையினில் எதிரொலி கூரையில் இருந்தே எழுந்தது தரையிலே பலகைகள் சத்தம் போட்டன உத்தரம் இசைத்தது உடன்கத வொலித்தது சாளரம் அனைத்தும் தனிக்களிப் புற்றன 320 அடுக்களைக் கற்கள் ஆடி யசைந்தன மிலாறுவின் தூண்கள் பதிலாய்ப் பாடின.
**தாருவின் பக்கம் தான்அவன் செல்கையில் **தேவதா ரிடை யே திரிந்தவே ளையிலே தாரு மரங்கள் தாழ்த்தின தலைகள் தேவதா ரவைமலைத் திரும்பியே நின்றன **கூம்புபுல் மேட்டில் புறம்வீழ்ந் துருண்டன **சுள்ளிகள் வேரிலே சொரிந்து பரவின பொழிலிடை அவனும் போய்நடக் கையிலே அல்லது வெளியாம் அடவியில் செல்கையில் 330 ஆடின சோலைகள் ஆனந் தித்தன காடுகள் என்றும் களிப்போ டிருந்தன மலர்ந்த மலர்கள் மகிழ்ச்சியில் திளைத்தன இளமரக் கன்றுகள் எழில்தலை தாழ்த்தின.
பாடல் 45 - கலேவா மாகாணத்தில் கொள்ளை நோய் *
அடிகள் 1-190 : வட நாட்டின் தலைவி கொடிய நோய்களைக் கலேவா மாகாணத்துக்கு அனுப்புகிறாள்.
அடிகள் 191-362 : மந்திர சக்தியாலும் மருத்துவத்தாலும் வைனாமொயினன் நோய்களைக் குணமாக்குகிறான்.
லொவ்ஹி என்பவள் வடநிலத் தலைவி செய்திகள் தனது செவிகளில் கேட்டனள் *வைனொலா நாட்டின் வளர்சிறப் பனைத்தும் கலேவலாப் பகுதியின் கவின்வளர்ச் சிகளை அவர்கள் பெற்றஅச் சம்போத் துண்டினால் ஒளிரும் மூடியின் ஒண்துணுக் குகளால்.
அதனால் அவளும் அழுக்கா றுற்றனள் அதனைச் சிந்தனை அவள்சதா செய்தனள் பொயதோர் அழிவைப் பெறச்செயல் எப்படி எவ்விதம் மரணம் ஏற்படுத் திடலாம் 10 வைனொலா நாட்டு மக்களுக் கங்கே கலேவலாப் பகுதியின் காண்இனத் தோர்க்கு.
மனுமுதல் வனையே மற்றவள் வணங்கினள் முழக்க முதல்வனை முறையீ டிட்டனள்: "ஓ, முது மனிதனே, உயர்மா தெய்வமே! கலேவா மக்களைக் கட்டொடு வீழ்த்து இரும்புக் குண்டு இகல்மழை பொழிந்து உருக்கு முனையுள ஊசிகள் சொந்து அல்லது நோயால் அவர்களை அழிப்பாய் அவ்வெளி(ய) இனத்தை அடியோ டொழிப்பாய் 20 மனிதரைப் பொய வனத்தோட் டவெளி பெண்களைத் தொழுவப் பெருமுற் றநிலம்!"
அவளோ துவோனலா அந்தகப் பெண்ணாம் *லொவியத்தார் என்று நுவல்முது மாதவள் துவோனியின் மக்களில் தொடர்தீ மையவள் மரணத்(து) உலகிலே வன்மிகுக் கொடியவள் முழுத் தீமைக்கும் முழுக்கா ரணமவள் ஆயிர மழிவுக் காதா ரமவள்; அவள்வடி வநிறம் அனைத்தும் கருமை அவளது தோலோ அதிலும் கடும்நிறம். 30
அந்தத் துவோனியின் அதிகரும் பெண்ணவள் *ஆழத் துலகில் அருநோக் கிழந்தவள் படுக்கையைப் போட்டனள் பாதை நடுவிலே தீமைப் பூமியில் சிறியதன் அமளியை; காற்றுக்கு முதுகைக் காட்டிப் படுத்தனள் தன்னொரு புறத்தை தகாக்கவி **நிலைக்கு கடுங்குளிர்ப் பக்கம் காட்டினள் பின்புறம் விடியலை நோக்கிமுன் புறமிகக் காட்டினள்.
பெருங்காற் றொன்று பீறிட் டெழுந்தது கிழக்கினி லிருந்து கிளர்ந்ததோர் பெரும் புயல் 40 கொடுத்தது கர்ப்பம் கொடும்பிற விக்கு நனைத்தது கர்ப்பம் நன்றாய் வளர்வரை மரஞ்செடி யற்ற வெறும்தரை யொன்றிலே புல்பூண் டில்லாப் பொன்றுபாழ் நிலத்திலே.
கடுமையாய்ச் சுமந்தனள் கனமுறு கர்ப்பம் கடிதே தாங்கினள் கனம்நிறை வயிற்றை மாதம் இரண்டு மூன்றும் சுமந்தனள் சுமந்தனள் நாலிலும் சுமந்தனள் ஐந்திலும் ஏழிலும் திங்கள் எட்டிலும் சுமந்தனள் ஒன்பதாம் மாதம் முற்றும் சுமந்தனள் 50 கன்னியர் பழைய கணக்கதன் படியே பத்தாம் மாதம் பாதியும் சுமந்தனள்
ஒன்பதாம் மாதம் ஊர்ந்து முடிந்து மாதம் பத்து வந்து தொடங் கையில் கர்ப்பம் மிகவும் கடினமா யிருந்தது சுமையின் அழுத்தலால் தோன்றிய துநோ; ஆயினும் பிறப்போ ஆகிய தொன்றிலை ஏதும் படைப்போ ஏற்பட்ட தொன்றிலை.
அப்போ இடத்தை அவள்தான் மாற்றினாள் தேர்ந்தின் னோடம் சென்றாள் அவளே 60 பிரசவத் துக்காய்ப் பரத்தைப் போந்தனள் சிசுவைப் பெறற்காய்ச் சென்றனள் பொதுமகள் இரண்டுசெங் குத்துப் பாறையின் இடைநடு ஐந்து மலைகளின் அதனிடைப் பிளவில்; ஆயினும் பிறப்போ ஆகிய தொன்றிலை ஏதும் படைப்போ ஏற்பட்ட தொன்றிலை.
ஈனுத லுக்காம் இடத்துக் கெழுந்தாள் வேறிடம் தேடி வெறிதாக் கிடவயி(று) அசைந்து நகரும் அழிசே றுறைவிடம் நீரோடி நிறையும் நீரூற் றுப்புறம்; 70 எனினும் அங்கே இடமெதும் கிடைத்தில வயிறு வெறிதுற வகையும் கிடைத்தில.
ஈனுதல் முயற்சியும் இயைந்தது மெதுவாய் உதரம் வெறிதுற ஒருங்கே முயன்றனள் ஓர்பயங் கரநீர் வீழ்ச்சியின் நுரையில் ஓர்வலு நீர்ச்சுழி உதிப்பின் சுழிப்பில் மூன்றுநீர் வீழ்ச்சியின் மோதுநீர் வீழ்வுகீழ் ஒன்பது நதிகளின் உறும்அணை களின்கீழ் ஆயினும் பிறப்போ ஆகிய தொன்றிலை கொடியவள் கர்ப்பம் எதுவும் புந்தில. 80
அப்போ(து) வெறுப்பொடு அழுதது பிராணி கொடிய விலங்கு தொடங்கிற் றலற போக்கிடம் எதுவும் புந்திலள் அவளே செல்லும் இடமும் தொந்திலள் அவளே தனது வயிற்றினைத் தான்வெறி தாக்கிட தனது மக்களைத் தானீன் றெடுத்திட.
முகில்மே லிருந்து மொழிந்தனர் கடவுள் விண்ணகத் திருந்து விளம்பினர் இறைவன்: "சேற்றில்முக் கோணச் சிறுகுடில் ஒன்றுள கடற் புறமாகக் கடற்கரை யோரம் 90 இருள்நிறை வடபால் இயைநிலத் தாங்கே செறிபு கார் நாடாம் சாயோ லாவில்; பெற்றிடப் புறப்படு பிள்ளைகள் அங்கே வயிற்றினை வெறுமையாய் மாற்றிடச் செல்வாய் உனக்கொரு தேவை உள்ளது அங்கே அங்கெதிர் பார்த்துளர் அவர்களுன் மக்களை."
பின்னர் துவோனியின் பெண்கரு நிறத்தாள் மரண உலகின் வன்கொடும் மங்கை வடபுலத் திருக்கும் வதிவிடம் வந்தாள் சாயொலா நாட்டின் சவுனாப் பகுதி 100 தனது மக்களைத் தான்பெற் றெடுத்திட தன்பிள் ளைகளைத் தானீன் றெடுத்திட.
லொவ்ஹி என்பவள் வடநிலத் தலைவி நீக்கல் எயிறுள நீள்வட முதுபெண் இரகசிய மாயவள் சவுனாச் சேர்த்தனள் அழைத்தனள் களவாய்க் குளிப்பறை யதற்குள் ஊரவர் எவரும் உணரா வண்ணம் கிராமத் தொருசொலும் கேளா வண்ணம்.
வெப்பமேற் றினள்சவு னாமிக ரகசியம் அவ்விடம் சென்று அடைந்தனள் விரைந்து 110 கபாடம் மீது`பீர்`ப் பானம் பூசினள் பிணையல்கள் நனைத்தனள் **பெய்தகப் `பீரை` கதவுகள் கறீச்சொலிக் காட்டா திருக்க ஓசையை எழுப்பா தொழியப் பிணையல்கள்.
பின்வரும் சொற்களில் பின்அவள் சொன்னாள் உரைத்தாள் அவளே உரைத்தாள் இவ்விதம்: "இயற்கையின் மகளே இருமுது பெண்ணே! அழகிய பாவாய் அம்பொன் அணங்கே! முழுமா தாலும் முதியவள் நீயே! மானுட இனத்தின் வருமுதல் தாய்நீ! 120 ஓடுக, கடலினுள் உன்முழங் கால்வரை, இடைப்பட்டி வரைக்கும் இருங்கடல் அலையினுள் நன்னீர் **மீனின் நளிர்உமிழ் நீர்எடு வேறொரு **மீனின் மிகுகழி வும்மெடு எலும்புக ளிடையே ஒழுங்காய்ப் பூசு பக்கங்க ளெல்லாம் பதமாய்த் தடவு பெண்ணவள் நோவைப் பொதும் அகற்ற மாதவள் வயிற்று வாதையைத் தீர்க்க இந்தக் கொடிய இன்னலி லிருந்து உதர வேதனைத் துயரத் திருந்து! 130
இதுவும் போதா தின்னமு மென்றால், ஓ, முது மனிதனே, உயர்மா தெய்வமே! தேவையாம் தருணம் தொந்திங் கெழுக கூவியழைக் கையில் குறைபோக் கிடவா இங்கே ஒருத்தி இருக்கிறாள் நோவுளாள் வனிதை வயிற்று வாதைப் படுகிறாள் சூழ்ந்தெழும் சவுனா சுடுபுகை மத்தியில் குறுங்கிரா மத்துறும் குளிக்கும் குடிலுள்.
பொன்னிலே யான பொற்கோல் எடுப்பீர் உம்வலக் கரத்தில் உவந்ததைக் கொள்வீர் 140 தடைச்சட் டமெலாம் தவிர்ப்பீர் பொடிபட கதவுத் தம்பங் களையுடைத் தெறிவீர் படைப்போன் பூட்டைத் திருப்பித் திறப்பீர் தாழ்ப்பாள் உட்புறம் தகர்த்துத் தறிப்பீர் பொயதும் சிறியதும் சாநுழைந் தேவர அவ்வாறு நுழைந்தே வரப்பல வீனரும்!"
அந்தக் கொடிதிலும் கொடியாள் அதன்பின் பார்வை யிழந்தவள் துவோனியின் பாவை ஆக்கினள் வெறுமை அவள்தன் வயிற்றை பிள்ளைகள் வெறுப்பாய்ப் பெற்றே எடுத்தனள் 150 செப்பிழை பொருந்தித் திகழ்மே லாடைகீழ் மென்மையாய் நெய்த விப்பதன் கீழே.
புத்திரர் ஒன்பதைப் பெற்றனள் பாவை கோடைகா லத்து குறித்தவோ ரவில் நீராவி யொருமுறை நிகழ்த்திய போதிலே சவுனா ஒருமுறை தான்சூ டாகையில் ஒற்றை வயிற்றின் உறுகரு விருந்து கனத்த ஒற்றைக் கர்ப்பத் திருந்து.
மைந்தர்க் கதன்பின் வைத்தனள் பெயர்கள் அடுத்து அவர்களை ஆயத்தம் செய்தனள் 160 அனைவரும் தத்தம் பிள்ளைக்கா ற்றல்போல் படைத்த தமது படைப்புக் காற்றல்போல்; ஆக்கினள் ஒன்றை அதிதுளை நோவாய் வயிற்று வலியாய் வைத்தனள் அடுத்ததை எலும்பு நோவா யின்னொன் றியற்றினள் இன்னொன் றியற்றினள் இடர்கணை நோயாய் மாற்றினள் மற்றதை வன்கட்டி நோயாய் குட்ட நோயாய்க் குறித்தனள் மற்றதை வேறொன்றைப் பண்ணினள் வெம்புற்று நோயாய் மற்றொன்றை மாற்றினள் வருதொற்று நோயாய். 170
இருந்தது பெயரெதும் இல்லா தொன்றுதான் ஒருமகன் வைக்கோல் உட்கூ ளத்தடி அவனையும் பின்னர் அங்கே அனுப்பினள் சூனியக் காரனாய்த் தொல்புனற் றள்ளினள் மந்தர வாதியாய் வரவே சேற்றினுள் தீய சக்தியாய்த் திகழ்ந்திட எங்கணும்.
லொவ்ஹி என்பவள் வடநிலத் தலைவி அப்பால் செல்ல அனுப்பினள் அனைவரும் புகார்படி கடலதன் புணர்முனை நுனிக்கு செறிபனிப் புகாருள தீவதன் கரைக்கு; 180 கொடும்பிறப் பவைக்குக் கோபமுண் டாக்கினள் ஏவினள் **வழக்கத் தில்லா நோய்களை வைனொலா நாட்டு மக்களின் மீது எழிற்கலே வாநாட் டினத்தரை அழிக்க!
வைனொலாப் பையல்கள் வருநோய் வீழ்ந்தனர் கலேவா மக்களும் கடும்நோ யுற்றனர் வழக்கத் தில்லா வன்நோய் வந்ததால் பெயர் தொயாத பிணிகள் பிடித்ததால்; உளுத்துப் போனது உற்றகீழ்ப் புற்றரை மேலே படுக்கை விப்புகள் மக்கின. 190
முதிய வைனா மொயினைப் போது நிலைபெறும் மாய நெறியறி முதல்வன் தலைகளை காக்கத் தலைப்பட் டேகினன் உயிர்களைக் காக்க உடன்பட் டேகினன் சாவுக் கெதிராய்ச் சமாடச் சென்றனன் புன்பிணிக் கெதிராய்ப் போடச் சென்றனன்.
சவுனா ஒன்றினில் தக்கசூ டேற்றினன் நீராவி கற்களில் நேர்ந்திடச் செய்தனன் சுத்தமாய் வெட்டிய துண்டு மரங்களால் விபுனல் வழிக்கொணர் விறகுக ளாலே; 200 ஒளித்துத் தண்ணீர் உடனே கொணர்ந்தனன் குளியல் தூகை மறைவாய்க் கொணர்ந்தனன் **கட்டிலைத் தூகை வெப்பமா யாக்கினன் **சதஇலைத் தூகை தனைமெது வாக்கினன்.
தேன்போல் ஆவியைச் செறிந்தெழச் செய்தனன் நறைநீ ராவியை நனியுயர் வாக்கினன் கடுஞ்சூ டேறிய கற்களி லிருந்து கனலை உமிழும் கற்களில் இருந்து இனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னான் இந்த மொழிகளில் இவ்விதம் மொழிந்தான்: 210 "இந்நீ ராவியுள் இறைவனே, வருக! வானகத் தந்தையே, வருகவெப் பத்துள்! நல்ல சுகத்தை நலமாய்த் தந்திட! அமைதியைக் கட்டி அழகா யெழுப்பிட! புனிதப் பொறிகளை நனிதுடைத் **தமர்த்துக! புனித நோய்களை நனித்தணித் தகற்றுக! கொடியநீ ராவியைப் படியடித் திறக்கு(க) விலக்குக துரத்தி வெய்ய நீராவியை அதுஉன் மைந்தரை எயா திருந்திட! தீங்கு செய்யா திருக்கவுன் படைப்புக்(கு)! 220
நானே **எறியும் நந்நீ ரனைத்துமே எகனற் கற்களில் எற்றுநீ ரனைத்துமே தேனாய் மாறித் திகழக் கடவது! பொழிநறை யாகப் பொலியக் கடவது! ஒருதே னாறு ஊற்றெடுத் தோடுக! நறைக்குள முதித்து நனிபெரு கட்டும்! அடுக்கிய இக்கல் லடுப்பத னூடாய்! தகுபாசி பூசுமிச் சவுனா வூடாய்! உண்ணப் படோ ம்நாம் **ஒருகா ரணமிலா(து) கொல்லப் படோ ம்நாம் கொடுநோ யின்றி 230 அரும்பெரும் காத்தான் அனுமதி யின்றி இறைவனின் செயல்தரு மரணம் தவிர! எமையெவ ரேனும் ஏதிலா துண்ணில் அவர்மந் திரச்சொல் அவர்வா யடையும் அவரது தீச்செயல் அவர்தலைக் கேகும் அவரது சிந்தனை அவரையே சேரும்!
மனிதனின் தகைமை வாய்ந்துநா னிலையெனில், மானுட முதல்வனின் மகனிலை நானெனில், கொடுஞ்செய லிருந்து கொண்டிட விடுதலை, தீச்செய லிருந்து சென்னியைத் தூக்கிட, 240 அவரே மானிட முதல்வர் இருக்கிறார்! முகிற்குலம் புரக்கும் முதுகா வலரவர்! வண்ண முகிலில் வசிப்பிடம் கொண்டவர்! நீராவி அனைத்தையும் நிதமாள் பவரவர்!
ஓ, முது மனிதனே, உயர்மா தெய்வமே! முகில்மே லுறையும் முதுமே லிறைவனே! தேவையாம் தருணம் தொந்திங் கெழுக! எங்கோ க்கை இரங்கிக் கேட்பீர், இந்தத் துயர்களை இனிதுணர்ந் தறிக, துன்பநா ளிவற்றைத் தூர அனுப்பிட, 250 கொடுஞ்செய லிருந்து கொணர்ந்திட விடுதலை, வஞ்செய லிருந்து வைக்க வெளிப்பட!
எடுத்து வருக எனக்கொரு கனல்வாள்! பொறிகனல் அலகுறும் புதுவாள் கொணர்க! அதனால் தீயவை அனைத்தும் அழிப்பேன் கொடியவர் எவரையும் அடியொடு முடிப்பேன் காற்று வழியிலே காண்துயர் ஒழிப்பேன் காட்டு வெளியினில் கடுநோ வைப்பேன்.
நோவினை அங்கே நானே அனுப்புவேன் அங்கே அனுப்பி அடக்குவேன் நோவை 260 கற்களால் கட்டிய கடுநில வறைக்குள் இரும்பினா லான இருப்பிடத் துள்ளே கற்களுக் கங்கே கடுந்துயர் கொடுக்க! பாறைக் கற்களைப் பாடாய்ப் படுத்த! கற்கள் நோவினால் கதறுவ தில்லை பாறைகள் நோவால் பலத்தழல் இல்லை அவற்றிலெவ் வளவை அழுத்திய போதிலும் அளவுக்கு மீறிச் சுமத்திய போதிலும்.
நோவதன் பெண்ணே, துவோனியின் மகளே! நோவெனும் கல்லில் நேரமர் பவளே, 270 மூன்று நதிகள் முனைந்தோ டிடத்தில் மூன்று அருவிகள் முன்பி விடத்தில் நோவெனும் கல்லை மேவிய ரைத்தே நோவெனும் மலையைத் தாவி முறுக்கியே சென்றுநீ நோவைச் சேர்ப்பாய் ஒன்றாய் நீலப் பாறையின் நெடுவாய் அலகினுள், அல்லது நீருள்நீ அடித்துருட் டிடுவாய் ஆழியின் ஆழத் தவற்றைநீ யெறிவாய் அவற்றைக் காற்று அறியா தாகுக ஆதவன் ஒளியும் ஒளிரா தாகுக. 280
இதுவும் போதா தின்னமு மென்றால் நோவின் **மகளே! நா,நல் லவளே! ஊனச் **சக்தியே! **ஓர்ந்துதேர்ந் தவளே! சேர்ந்துநீ வருவாய் சேர்ந்துநீ போவாய் நல்ல சுகத்தினை நலமாய்த் தருவாய் அமைதியைக் கட்டி அழகோ டெழுப்புவாய் நோவனைத் தினையும் நோவறச் செய்வாய் ஊனமா மவற்றை உபாதையற் றிடச்செய் நோயுளோ ரயர்ந்து நோவறத் துயில நலிந்தவர் சற்று நல்லா றுதல்பெற 290 நோவுளோர் ஓய்வு நேயமாய்ப் பெற்றிட காயம் பட்டோ ர் கள்நகர்ந் தசைய!
வாதையை அள்ளியோர் வாளியில் போடு சேர்நோ வெடுத்தொரு செப்புப் பெட்டியில் வாதையை அங்கே வாக் கொண்டேக ஊனத்தை யங்கே ஒருங்காழ்த் துதற்கு நோவெனும் குன்றின் நேர்நடுப் பகுதியில் நோவெனும் மலையில் ஆம்உச் சியிடம்; அங்கே கொதிக்க அந்நோ வைத்திடு சின்னஞ் சிறியதோர் செறிகல யத்தில் 300 ஒருவிரல் நுழைய உவந்தவக் கலயம் பெருவிர லளவே பொதாம் கலயம்.
அசலம் மத்தியில் அமைந்துள தொருகல் கல்லதன் மத்தியில் காணும் ஒருபுழை துளையூசி யாலது துளைக்கப் பட்டது துறப்பணத் தாலூ டுருவப் பட்டது; அங்கே திணித்து அமர்த்தலாம் நோவை கொடுமூ னத்தை யடைத்தும் வைக்கலாம் வலிய வாதையை வைக்கலாம் தள்ளி அழுத்தித் துன்ப நாட்களை யமர்த்தலாம் 310 செறிநிசி நேரம் செயற்படா திருக்க பகலிலே தப்பிப் படரா திருக்க."
முதிய வைனா மொயினன் அதன்பின் நிலைபெறும் மாய நெறியறி முதல்வன் பூசினன் பழுதுறும் புறமெலாம் தொடர்ந்து பூசினன் தடவிக் காயம் மீதெலாம் பூச்சு மருந்துகள் புணருமொன் பதுவகை மந்திர மருந்துகள் வகையொரு எட்டு இனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னான் இந்த மொழிகளில் இவ்விதம் மொழிந்தான்: 320 "ஓ, முது மனிதனே, உயர்மா தெய்வமே! விண்ணகத் துறையும் மேதகு முதியோய்! இயக்குவாய் கிழக்கி லிருந்தொரு முகிலை வடமேற் கொன்று வந்துதிக் கட்டும் மேற்கி லிருந்தொரு மேகத் திரள்விடு பொழிக தேன்மழை பொழிக புனல்மழை பூச்சு மருந்தாய்ப் புணர்நோ வுளவிடம் ஊனங்க ளுக்கொரு உற்ற மருந்தாய்.
என்னா லாவது எதுவுமே யில்லை ஆளமென் படைத்தோன் அருளிலா விட்டால்; 330 படைத்தவன் வரட்டும் பார்த்துத விக்கு இறைவன் உதவி எனக்குத் தரட்டும் நான்பார்த் தோர்க்கென் நயனங் களினால் நான்என் கைகளால் நன்குதொட் டவர்க்கு இனியஎன் வாயால் இயம்பியர்க் கேநான் என்சுவா சத்தால் இனிதூதி யோர்க்கு.
எனது கைகள் எட்டித் தொடாவிடில் ஆண்டவன் கைகள் அங்கே தொடட்டும்; எனது விரல்கள் எட்டிப் படாவிடில் ஆண்டவன் விரல்கள் அங்கே படட்டும்; 340 கடவுளின் விரல்கள் கவினா யமைந்தவை கடவுளின் கரங்கள் சுறுசுறுப் பானவை.
உச்சாடனம் செ(ய்)ய உடன்வா இறைவனே! வாய்மொழி பகர வருகநல் லிறையே! அனைத்தும் வல்லவா, எமைப்பார்த் தருள்க! நற்சுக மாக்கும், நளிர்நிசி எங்களை! பகலிலும் அவ்விதம் நலமா யாக்கும்! உணரா திருக்க உளஎவ் வாதையும் அறியா திருக்க அந்நோ வெதையும் இன்னல் சேரா திருக்க இதயம் 350 சிறிதும் கூட உணரா திருக்க அதும் துயரை அறியா திருக்க வளருமிவ் வுலகின் வாழ்நாளி லென்றும் பொன்னிலாத் திகழும் பொற்பொழு தெல்லாம்."
நிலைபெறம் முதிய வைனா மொயினன் நிலைபெறும் மாய நெறியறி முதல்வன் மந்திர நோய்களை மாற்றினன் இவ்விதம் வெஞ்செய லிருந்து வெளிப்பட வைத்தனன்; மந்திர நோய்க்கெலாம் மருத்துவம் பார்த்தனன் வெங்கொடும் செயற்கு விடுதலை தந்தனன் 360 மக்களை மீட்டான் மரணத் திருந்து கலேவா இனத்தைக் காத்தான் அழிவில்.
பாடல் 46 - வைனாமொயினனும் கரடியும் *
அடிகள் 1-20 : கலேவா மாகாணத்தின் கால்நடைகளை அழிக்கும்படி வடநாட்டுத் தலைவி ஒரு கரடியை ஏவி விடுகிறாள்.
அடிகள் 21-606 : வைனா மொயினன் கரடியைக் கொல்லுகிறான். அதற்காக கலேவா மாகாணத்தில் ஒரு பொய கொண்டாட்டம் நடைபெறுகிறது.
அடிகள் 607-644 : வைனாமொயினன் பாடுகிறான்; யாழ் இசைக்கிறான்; கலேவா மாகாணத்துக்கு சிறப்பானதும் மகிழ்ச்சியானதுமான ஓர் எதிர்காலம் வரும் என்று நம்புகிறான்.
செய்தி வடபுலம் சென்றிட லானது போனது குளிர்க் கிரா மத்தே புதினம் நாடு வைனோ நனிவிடு பட்டதாய் விடுதலை கலேவலா விரைந்துபெற் றதுவாய் மந்திரம் விளைத்த வன்துய ருந்து **வழக்கில் நோய்களின் வன்பிடி யிருந்து.
லொவ்ஹி என்பவள் வடநிலத் தலைவி நீக்கல் எயிறுள நீள்வட முதுபெண் அதனைக் கேட்டதும் அடைந்தனள் கடுஞ்சினம் உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்: 10 "இன்னொரு தந்திரம் இருக்கும்என் நினைவில் மற்றொரு பாதையின் வழிவகை யறிவேன் எழுப்புவேன் புற்புத ருந்தொரு கரடியை வளைந்த நகத்ததை வனத்தினி லிருந்து வைனோ நாட்டின் வளர்கால் நடைமேல் கலேவாப் பகுதியின் காண்நிரை களின்மேல்."
எழுப்பினள் புற்புத ருந்தொரு கரடியை கடும்நிலத் திருந்தொரு கரடியை எழுப்பினள் வைனோ நாட்டின் வளர்புல் வெளிமேல் கலேவாப் பகுதியின் காண்நிரை களின்மேல். 20
நிலைபெறும் முதிய வைனா மொயினன் இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே: "சகோதர, கொல்ல, தகைஇல் மான! புதிதாய் எனக்கொரு ஈட்டியைச் செய்வாய் எழும்முக் கூருறும் ஈட்டியைச் செய்வாய் செய்வாய் கைப்பிடி செப்பிலா னதுவாய் இங்கொரு கரடியை எதிர்கொளல் வேண்டும் மிகுபெறு மதியதை வீழ்த்திட வேண்டும் தாக்கா திருக்கத் தகும்என் பொலிப்பா அழிக்கா திருக்க ஆனஎன் பெண்பா 30 வீழ்த்தா திருக்க மிகுமென் கால்நடை நசுக்கா திருக்க நற்பசுக் கூட்டம்."
ஈட்டி ஒன்றினை இயற்றினன் கொல்லன் அதுகுறி தல்ல அதுநீண் டதல, செய்தனன் அளவில் திகழ்நடுத் தரமாய்; **ஓனாய் நின்றது உயர்அதன் நுனியில் நின்றது கரடி நெடுமுருக் கலகில் பொருத்திற்காட் டேறு சறுக்கிச் சென்றது சென்றது குட்டிமா திகழ்கைப் பிடிவழி கைப்பிடி முனையில் காட்டுக் கலைமான். 40
பெய்ததப்போது பெரும்புதுப் பனிமழை பொழிந்தது சிறந்த புதிய பனிமழை காண்இலை யுதிர்ருதுக் கம்பளி ஆடுபோல் முழுக்குளிர் கால முயலின் தன்மைபோல்; முதிய வைனா மொயினன் மொழிந்தான் உரைத்தான் அவனே உரைத்தான் இவ்விதம்: "இப்போ(து) நானும் எண்ணுவ திதுவே இருங்கா னுள்ளே ஏகிடல் வேண்டும் கானக மகளிரைக் கண்டிட வேண்டும் நீல நிறத்து நாயர் முன்றிலில். 50
மனிதரை விட்டு வனத்துக் கேகிறேன் வீரரை விட்டு வெளியிடத் தேகிறேன் ஒளிர்கான், என்னையுன் ஒருவனாய்ப் பெறுக! என்னையுன் வீரனாய் ஏற்க, தப்பியோ! அதிர்ஷ்டம் எனைத்தொட ஆற்றுக உதவிகள் அடர்கா னகத்துறும் **அழகினை வீழ்த்த!
கவின்மியெ லிக்கியே, காட்டின் தலைவியே! தகமைத் தெல்லர்வோ, தப்பியோ மனைவியே! கட்டிவை யுங்கள் கடியநும் நாய்களை பிணைத்து வையுங்கள் பெருநீச நாய்களை 60 ஒழுங்கையின் **கொடிபடர்ந் துள்ள பக்கமாய் சிந்துர மரத்தின் திகழடைப் பொன்றினுள்!
கவினார் கரடியே **கானகத் தப்பிளே! தடித்த **தேன்தோய் தகுநற் பாதமே! நீகேட்க நேர்ந்தால் நான்வரு வதனை வீரன்என் அடியொலி வீழில்நின் செவியில் உன்சடைக் குள்ளே ஒளிப்பாய் நின்நகம் வாய்முர சுக்குள் மறைப்பாய் பற்களை அவையெனைத் தீண்டா தவ்வா றிருக்க அவைநீ நகர்கையில் அசையா திருக்க! 70
என்றன் கரடியே, **இணையில் அன்பே! தேனார் பாதமே. திகழ்என் அழகே! உன்னைப் பசும்புல் உறுதரைத் தாழ்த்து எழிலாய் அமைந்த இருங்கற் பாறைமேல் **தேவதா ருயரே திகழ்ந் தாடுகையில் **தாருவும் உயரத் தாடிச் சுழல்கையில்; அங்கே வட்ட மடிப்பாய் கரடியே, சுற்றி அங்கே சுழல்கதேன் பாதமே, காட்டுக் கோழிதன் கூட்டில் இருப்பபோல் வாத்தடை காத்து வாகா யிருப்பபோல்." 80
முதிய வைனா மொயினனு மாங்கே நன்கு கேட்டனன் நாய்குரைப் பதனை குட்டிநாய் உரத்துக் குரைப்பதன் ஒலியை சிறுகண் படைத்தது ஒருமுற் றத்தே நீண்டமூக் குடையது நேர்த்தொழுப் பக்கம் உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்: "இருங்குயில் கூவுவ தென்றே நினைத்தேன் பாடுதல் செல்லப் பறவையென் றெண்ணினேன் ஆயினும் கூவுவ தல்லக் குயிலுமே பாடுதல் செல்லப் பறவையு மல்லவே; 90 எனது சிறந்தநாய் இங்கிருக் கிறது மிகவும் சிறப்பாம் மிருகமென் னுடையது கரடியின் வதிவிடக் கதவினின் வாயிலில் தொல்எழில் மனிதனின் தோட்ட வெளியினில்."
நிலைபெறும் முதிய வைனா மொயினன் அங்கே கொன்றனன் அந்தக் கரடியை புரட்டிப் போட்டனன் பட்டுப் படுக்கையை தங்கநேர் இடத்தைத் தலைக்கீ ழாக்கினன் இனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னான் இந்த மொழிகளில் இவ்விதம் மொழிந்தான்: 100 "நான்உமக் கிறைவனே, நன்றிகள் புகன்றேன்! ஏகனே, கர்த்தரே, ஏத்தினேன் நின்புகழ்! எனக்குப் பங்காய்க் கரடிஈந் தமைக்கு பொழில்வனப் பொன்என் பொருளா னமைக்கு!"
அவன்பின் பார்த்தனன் அயதன் **பொன்னை உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்: "என்றன் கரடியே, என்னுடை அன்பே! தேனார் பாதமே, திகழ்என் அழகே! காரண மின்றிக் கடுஞ்சினம் வேண்டாம் உன்னைவீழ்த் தியது உண்மைநா னல்ல 110 இழுவை வளையத் திருந்துருண் டதுநீ தேவதார்க் கிளையால் தீரவீழ்ந் ததுநீ உன்மரத் துடைகளை உறக்கிழித் திட்டாய் தாருமே லாடையைத் தான்பிய்த் திட்டாய்; இலையுதிர் காலம் இருப்பது வழுக்கல் முகிலுறும் நாட்கள் மூள்இருள் நிறைந்தவை.
கானக மதனின் **கனகக் குயிலே! உயர்எழில் சடைத்த உரோமப் பிராணியே! இப்போ(து) கைவிடு இருங்குளிர் வீட்டை விடுகநின் வசிப்பிடம் வெறுமைய தாக 120 மிலாறுக் கிளைகளால் விதித்தநின் வீட்டை பிணைத்துச் சுள்ளியால் பின்னிய குடிலை; புகழ்நிறைந் தனையே, புறப்பட் டேகுவாய்! அடவியின் சிறப்பே, அடிவைத் தகல்வாய்! கனமில்கா லணியே, கடிதகல் இப்போ! நீல்க்கா லுறையே, நின்வழி நடப்பாய்! தொடுமிச் சிறிய தோட்டத் திருந்து இக்குறும் நடைவழி இவற்றினை விட்டு வீரர்கள் நிறைந்த மிகுகணத் திருக்க, மக்களாம் குழுவின் மத்தியில் இருக்க. 130 அங்கே கொடுஞ்செயல் அமைந்தது மில்லை எவரையும் நடத்திய தில்லைக் கடுமையாய்: அங்கே உணவாய் அளிப்பது தேனாம் தருவார் பருகவும் தனிப்புது நறைதான் புதிதாய்ச் செல்லும் புதுவிருந் தினர்க்கு அழைக்கப்பட்ட அருமனி தர்க்கு!
இங்கிருந் தேநீ இப்போ புறப்படு இச்சிறு குகையாம் இதனுள் ளிருந்து உறும்எழிற் கூரை ஒன்றதன் கீழே அழகாம் கூரை அதுஒன் றதன்கீழ்; 140 பனித்துமி மீதுநீ பதமாய் நடந்துசெல் நீராம் பல்குளம் நிதமிதப் பதுபோல், பசுமரக் கொம்பால் பதனமாய் விரைந்திடு கொம்பால் தாவும் கொழுமணி லதைப்போல்."
முதிய வைனா மொயினன் அதன்பின் என்றுமே நிலைத்த இசைப்பா டகனவன் இசைத்துச் சென்றனன் இருங்கான் வெளியில் பசும்புற் றரைகளில் படைத்தனன் எதிரொலி மிகுசீர் மிக்கதன் விருந்தினர் தம்முடன் சடைத்த உரோமம் தானுடை அதனுடன்; 150 எங்கணும் வீடெலாம் இசையொலி கேட்டது வீட்டுக் கூரைக்கீழ் கேட்டொலி நிறைந்தது.
வீட்டில் இருந்தவர் விளம்பினர் இவ்விதம் எழிலார் இனத்தவர் இயம்பினர் இவ்விதம்: "கேட்பீர் இந்தக் கிளர்ஒலி ஓசையை அடவியில் இசைக்கும் அவனது சொற்களை **கிளர்வனக் குருவியின் கீதம் போன்றது கொழுவன மகளின் குழலிசைப் போன்றது."
நிலைபெறும் முதிய வைனா மொயினன் தோட்டத்து முன்றிலில் தொடர்ந்துதான் சென்றனன்; 160 வீட்டில் இருந்தவர் வெளிப்புறம் வந்தனர் ஒளிர்எழில் இனத்தவர் உரைத்திட லாயினர்: "இங்கே பயணித்து எழுவது தங்கமா வெள்ளியா உலாவி வெளியே வருவது அன்புச் செல்வமா அடிவைத் தெழுவது காசுநா ணயமா கவின்வழி வருவது? கானகம் தந்ததா தேன்உண் மனிதனை செறிவனத் தலைவன் சிவிங்கி ஒன்றினை ஏனெனில் நீங்கள் இசைத்தே வருகிறீர் இசைத்த வண்ணமே சறுக்கி வருகிறீர்?" 170
நிலைபெறும் முதிய வைனா மொயினன் இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே: "மந்திரச் சொற்களில் வாய்த்தது **கீ மந்திரக் கருவோ வானவன் செல்வம் பாடி அதனால் படர்கிறோம் நாங்கள் இசைத்த வண்ணமே சறுக்கி வருகிறோம்.
ஆயினும் என்றுமே அதுகீ யல்ல அல்ல கீயும் அல்லவே சிவிங்கியும் பயணித்து வருவது பார்புகழ் ஒன்றே அடிவைத் தெழுவது அடர்வனச் சிறப்பே 180 அசைந்துலா வருவது ஆதி மனிதனே ஆடி நடப்பது அகன்ற மேலாடையே விருந்தினர் வரவர வேற்பதே யாயின் அகலத் திறப்பீர் அகல்கடை வாயில்! விருந்தினர் வரவதை வெறுத்து ஒதுக்கிலோ அடித்தே மூடுக அகல்கடை வாயிலை!"
மக்களோ இவ்விதம் மறுமொழி கூறினர் எழிலார் இனத்தார் இயம்பினர் இவ்விதம்: "வாழ்க கரடியே, வாழ்த்துக் கூறினோம்! நின்வரு கைக்காய், நிகர்தேன் பாதமே! 190 சுத்தமா யிருக்குமிம் முற்றப் பரப்பினில் எழிலார் தோட்டத் திந்த வெளியினில்!
எதிர்பார்த் திருந்தேன் இதற்காய்ப் பலநாள் வழிபார்த் திருந்தேன் வளர்ந்த நாளெலாம் தப்பியோ எக்க()ளம் தருவதற் கோசை கானக் குழலிசைக் காதிலே விழற்கு கானகத் தங்கம் களிநடை பயில அடவியின் வெள்ளி அடையவே வந்து சிறியமுற் றத்துத் திகழுமிப் பரப்பில் இந்தத் தோட்டத் தெழிற்குறும் வெளியில். 200
ஒருநல் வருடம் எதிர்ப்பார்த் திருந்தேன் வருகையில் கோடை வருமென நினைத்தேன் சறுக்கணி யாய்ப்புதுப் பனிமழைக் குறுமென இதமாய்ச் சறுக்கிட இடச்சறுக் கணியாய் இளைய மணமகற் கியையிளம் பாவையாய் கன்னம் சிவந்துடைக் கன்னியாய்த் துணைக்கு.
மாலையாம் நேரம் சாரளத் திருந்தேன் காலைப் பொழுதில் கூடப் படிகளில் வாரக் கணக்காய் வாயிற் கதவினில் மாதக் கணக்காய் வழியின் முகப்பினில் 210 குளிர்ப்பொழு தெல்லாம் தொழுவின் வெளியினில்; பனிமழை கட்டியாய்ப் படும்வரை நின்றேன் பனிக்கட்டி யுருகி நனைதரை யாம்வரை குளிண ரத்தரை கூழாங் க(ல்)லாம் வரை நொருங்கிக்கூ ழாங்கல் நுண்மண லாம்வரை படிநுண் மணல்பின் பசுமையா யாம்வரை; இதனையோ சித்தேன் எல்லாக் காலையும் எல்லா நாளிலும் எண்ணியே இருந்தேன் காணும்இந் நாள்வரை கரடியெங் கேயென கானக அன்பின் கழிந்தநாள் எங்கென 220 எஸ்தோனி யாவுக் கேகி யிருந்ததோ பின்லாந்து நாட்டை பிந்ததோ விட்டு!"
முதிய வைனா மொயினன் அதன்பின் இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே: "என்விருந் தாளியை எங்கே அமர்த்தலாம் எனது அன்பை எவ்வழி நடத்தலாம் உயர்புகழ்க் கூரை உத்தரத் தின்கீழ் இவ்வில் லத்தின் எழிற்கூ ரையின்கீழ்?"
மக்களோ இவ்விதம் மறுமொழி கூறினர் எழிலார் இனத்தார் இயம்பினர் இவ்விதம்: 230 "அவ்விருந் தாளியை அங்கே அமர்த்தலாம் எமது அன்பினை இவ்வழி நடத்தலாம் உயர்புகழ்ப் கூரை உத்தரத் தின்கீழ் இவ்வில் லத்தின் எழிற்கூ ரையின்கீழ்; ஆகார மங்கே ஆயத்த மாயுள பானமும் தயாராய்ப் பருகிட உள்ளது தொடர்தரைப் பலகைகள் சுத்தமுற் றுள்ளன வளநிலம் பெருக்கி வைக்கப் பட்டது, அவையர் உடையணிந் தனைவரு முள்ளனர் உயர்சுத்த மான உடையணிந் துள்ளனர், 240 அவர்களின் தலைத்துணி அழகா யுள்ளது அமைந்தன உடைகள் அரு(ம்)வெண் ணிறத்தில்."
முதிய வைனா மொயினன் அதன்பின் உரைத்தான் அவனே உரைத்தான் இவ்விதம்: "என்றன் கரடியே, **இனியஎன் பறவையே! தேனார் பாதமே, திகழுமென்** பொதியே! நீநட மாடிட நிலமுள இன்னும் தவழ்ந்து திந்திட தகுபுல் வெளியுள.
பொன்னே, இப்போ புறப்படு போக! அன்பே, நிலத்தில் அடிவை சென்றிட! 250 கறுப்புக்கா லுறையே,காலெடு நடக்க! துணிக்காற் சட்டையே, தொடர்ந்துலாப் போக! **சிறுபுள் செல்லும் திசைவழி நடக்க! **சிட்டுக் குருவி திந்துலாம் பாதையில், காண்ஐங் கூரைக் கைமரங் களின்கீழ், உயர்அறு கூரை உத்திரங் களின்கீழ்.
இருங்கள்எச் சாக்கையாய் இழிந்தபெண் டிர்களே அஞ்சிடா திருக்கநும் அயகால் நடைகள் பயந்திடா திருக்கப் படர்சிறு நிரைகள் தலைவியர் பசுநிரை தாக்குறா திருக்க 260 வந்துசேர் கையில்இவ் வளர்விடம் கரடி இங்கே நுழைகையில் **எழிலுரோ மத்துவாய்.
பையன்காள், முன்கூடப் படியிருந் தேகுக! அவையீர், கதவத்து நிலையிருந் தகலுக! **நாயகன் வதிவிட நனியுள் வருகையில் அடிவைத்துச் சிறப்புறும் ஆடவன் வருகையில்!
காட்டினில் வாழும் கரடியே, அப்பிளே! செறிவனத் துறையும் திரட்சியா னவரே! அவையைக் கண்டும் அச்சம் கொளாதீர் பின்னிய குழலார்ப் பெரும்பயம் கொளாதீர் 270 தோகையர்ப் பார்த்துத் துணுக்குற் றிடாதீர் சுருங்கிய காலுறை அணிந்தோர்க் **கழிகலீர்! இல்லத் திருக்கும் எம்முது மாதரும் புகைபோக்கி மூலையில் போயமர்ந் திருப்பர் மனிதன் வதிவிடம் வருகையில் உட்புறம் அரும்பெரும் பையன் அடிவைத் தடைகையில்."
முதிய வைனா மொயினன் மொழிந்தான்: "இறைவனே வருவீர், இங்கும் வருவீர், உயர்புகழ்க் கூரையின் உத்திரத் தின்கீழ் இவ்வில் லத்தின் எழிற்கூ ரையின்கீழ்! 280 எனதன் பெடுத்துநான் ஏகுவ தெங்கே கொழுத்தஎன் பொதியை வழிப்படுத் துவதெங்(கே)?"
மக்களோ இவ்விதம் மறுமொழி கூறினர்: "வருகநின் வரவு நல்வர வாகுக பார்த்தவ் விடம்உம் பறவையைச் சேர்ப்பீர் அன்பை வழிப்படுத்(த) அங்கே செல்வீர் தாருவின்** வாங்கு நேர்பல கைநுனி இரும்பா சனத்தின் இயைந்தவம் முனைக்கு, உரோம ஆடையின் பாசோ தனைக்கு கம்பளி யதனைக் கவனமாய்ப் பார்க்க! 290
கரடியே, அதனால் கடுந்துயர் வேண்டாம்! வீணே மனநிலை பாழாக் கிடாதே உரோம மதனைப் பாசோ திக்கையில் கம்பளி யதனைக் கவனமாய்ப் பார்க்கையில் எவருமும் கம்பளி யுடைசேத மாக்கிடார் பார்க்கையில் மாறிப் படரவும் செய்திடார் தாத்திரம் பிடித்த தரத்தனர் உடைபோல் ஏழை எளியவர் ஆடைக ளைப்போல்!"
முதிய வைனா மொயினன் அதன்பின் எடுத்தான் கரடியின் உரோமத் தாடையை 300 கூடமேற் றளத்தில் கொண்டதை வைத்தனன் இறைச்சியைக் கலயம் ஒன்றிலே இட்டனன் பொன்னாய் மின்னுமோர் புதுக்கல யத்திலே செப்பினால் அடிப்புறம் சேர்கல யத்திலே.
அனலிலே யிருந்தன அடுத்ததாய்க் கலயம் செப்புக் கரைகள் சேர்கல யங்கள் நிறைந்து கிடந்தன நிறைந்து வழிந்தன சிறுசிறு இறைச்சி தொந்தன துண்டுகள் உப்புக் கட்டிகள் உள்ளே யிருந்தன தொலைதே சத்தால் நலமாய்க் கொணர்ந்தவை 310 ஜேர்மன் நாட்டால் நேர்பெறல் உப்பு *வெண்கடற் புறத்தால் வந்தநல் லுப்பு *உப்பு நீணை உளவழி வந்தவை இறக்கிக் கப்பலி லிருந்து கொணர்ந்தவை.
இரசம் கொதித்து இயல்தயா ரானதும் கலயத்தை நன்கே கனலிருந் தெடுத்ததும் **கொள்ளைச் செல்வம் கொணரப் பட்டது எடுத்தேகப் பட்டது **இன்சிறு குருவி நுவல்நீள் மேசையின் நுனிப்புற மாக பொன்னிலே யான கிண்ணங் களுக்கு 320 நறைப்பா னத்தை நனிசுவைத் தருந்த `பீர்`ப்பா னத்தைப் பீடுறக் குடிக்க.
தேவ தாருவில் செய்ததம் மேசை செப்பினா லியந்தவை திகழ்கிண் ணங்கள் வெள்ளியில் ஆனவை விளங்கும் கரண்டிகள் இனியபொன் தட்டி எடுத்தவை கத்திகள்; எல்லாக் கலயமும் இருந்தன நிறைந்து வயங்குகிண் ணமெலாம் வழிந்தன நிறைந்து காட்டினில் பெற்ற கவின்வெகு மதியால் பொன்னான வனத்தின் புதிய இரையினால். 330
முதிய வைனா மொயினனைப் போது இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே: "மொய்ம்பொன் மார்புடை முதுமா மனிதா! தப்பியோ வீட்டின் தலைவனே கேளாய்! நற்கா னகமுறை நறைநிகர் பெண்ணே! காட்டகம் வாழும் கவினார் தலைவி! தகுஎழில் மனிதா, தப்பியோ மகனே! திகழ்எழில் மனிதா, செந்தொப்பி யுடையோய்! தனித்தெல் லர்வோ, தப்பியோ மகளே! அனைத்துத் தப்பியோ இனத்தரும் சேர்ந்து 340 வருகநும் எருதின் மணத்தினுக் காக நும்சடைப் பிராணியின் கொண்டாட் டுக்கு! உண்டிட நிறைய உள்ளது இப்போ அயின்றிட நிறைய, அருந்திட நிறைய, நீங்கள்வைத் திருக்கவும் நிறையவே யுள்ளது ஊலே கொடுக்கவும் உள்ளது நிறையவே."
மக்களோ இவ்விதம் மறுமொழி கூறினர் எழிலார் இனத்தார் இயம்பினர் இவ்விதம்: "கரடி பிறந்ததெக் கவினார் இடத்திலே மதிப்புறும் குட்டி வளர்ந்ததும் எவ்விடம் 350 அமைந்ததா வைக்கோல் அமளியில் பிறப்பு வளர்ப்புச் சவுனா அடுப்பு மூலையில்?"
முதிய வைனா மொயினனைப் போது இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே: "வைக்கோ(லி)ல் கரடி வந்து பிறந்தில சூளையின் குப்பையில் தோன்றிய துவுமில நிகழ்ந்தது கரடியின் நேர்ப்பிறப் பங்கே தேன்பா தத்தின் திகழ்பிறப் பமைந்தது திங்களின் இடத்தில் தினகரன் கருவில் தாரகைக் குலத்தின் தகுதோள் மீது 360 காற்றின் கன்னியர் கலந்துவா ழிடத்தில் இயற்கையின் மகளார் இனிதுவா ழிடத்தில்.
வான விளிம்பிலோர் வனிதை நடந்தனள் சுவர்க்க மத்தியில் சுந்தா நடந்தனள் முகிலோ ரத்தில் மொய்குழல் தாத்தனள் வானின் எல்லையில் வனிதை இருந்தனள் கால்களில் நீலக் காலுறை யிருந்தன உயர்குதிக் காலணி ஒளிர்ந்தன மின்னி கரங்களில் கூடை கம்பளி நூலொடு உரோமக் கூடையும் உற்றது கக்கம்; 370 வீசினள் கம்பளி விபுனல் மேலே அதனை எறிந்தனள் அலைகளின் மேலே அதனைக் காற்று ஆராட் டியது குறும்புடை வாயு தாலாட் டியது அருநீர்ச் சக்தி அசைந்தாட் டிடவே அலையும் சென்றது அடித்துக் கரைக்கு நறைநிகர் கானக நன்கரை யதற்கு தேனிகர் கடலின் செறிமுனை நுனிக்கு.
மியெலிக்கி என்பாள் மிளிர்கான் தலைவி தப்பியோ லாவின் தரமுறு மனையாள் 380 கண்டனள் புனலில் கட்டினை எடுத்தனள் அலையினில் பெற்றனள் அயமென் கம்பளி.
அதனை விரைந்து அங்கே சேர்த்தனள் துணியால் ஒழுங்காய்ச் சுற்றியே வைத்தனள் **`மாப்பிள்` மரத்தொரு வன்கூ டையிலே அழகா யாடுமோர் அருந்தொட் டிலிலே; துணிப்பொதிக் கயிற்றை தூக்கினள் உயர பைம்பொன் இயைந்த பட்டியை உயர்த்தினள் சடைத்து வளர்ந்ததோர் தனிமரக் கிளைக்கு விந்து பரந்ததோர் வியன்இலைக் கிளைக்கு. 390
தானறிந் ததனை தான்தா லாட்டினள் அன்புறும் அதனை அவளா ராட்டினள் ஊசி(யி)லை மரத்தின் உயர்செழும் முடிக்குள் சடைத்தநற் றேவ தாருவின் கீழே; அங்கே கரடியை அவளும் வளர்த்தனள் அம்சடைப் பிராணியை அங்கே வளர்த்தனள் தேனை நிகர்த்ததோர் செறிபுதர் அருகில் நறையை நிகர்த்ததோர் நல்வனத் துள்ளே.
அந்தக் கரடியும் அழகாய் வளர்ந்தது தரமுறும் உருவம் தானும் பெற்றது 400 குறுகிய கால்கள் கூனிய ழுழங்கால் மென்மையும் தடிப்பும் மேவிய முன்வாய் தட்டையாம் மூக்கு தலையோ அகன்றது உரோமம் சடைத்து உறுசெழிப் பமைந்தது; ஆயினும் பற்கள் அதற்கி(ன்)னும் இல்லை உகிர்கள் வளரவும் ஒழுங்காய் இல்லை.
மியெலிக்கி என்பாள் மிளிர்கான் தலைவி இந்தச் சொற்களில் இயம்பினள் அவளே: 'நகங்களை இதற்கு நான்உரு வாக்குவேன் இதற்கு நானும் எயிறுகள் கொணர்வேன் 410 ஏதும் கொடுஞ்செயல் இழையா திருப்பின் தீச்செயல் ஏதும் செய்யா திருப்பின்.'
ஆனதால் சத்தியம் அளித்தது கரடி கானகத் தலைவியின் கவின்முழங் கால்மேல் ஒளிமய மான உயாறை வனின்முன் சர்வ வல்லவன் தன்வத னக்கீழ் எக்கொடும் செயலும் இழையேன் என்று தீச்செயல் ஏதும் செய்யேன் என்று.
மியெலிக்கி என்பாள் மிளிர்கான் தலைவி தப்பியோ லாவின் தரமுறு மனையாள் 420 தேடிப் பற்களைச் சென்றனள் எழுந்து விசாரணை செய்தனள் வியன்உகிர் கேட்டு பலமுற நின்ற **பசும்பே யிடம் உரமுற நின்ற **உயர்சூ ரையிடம் கணுக்கள் நிறைந்த கனமர வோடம் **பிசின்வடி அடிமரப் பெருங்குற் றியிடம்; அவ்விட மிருந்து அவள்நகம் பெற்றிலள் பற்களைத் தானும் பார்த்திலள் அவ்விடம்.
வளர்ந்ததோர் **ஊசி(யி)லை மரம்புல் வெளியில் திடானில் எழுந்தது திகழ்ஒரு **பசுமரம் 430 ஊசி(யி)லை மரத்தி லுறுவெள் ளிக்கிளை பசுமை மரத்தின் பைம்பொன் கிளையது; ஒடித்தனள் அவற்றை உவந்துதன் கைகளால் அவற்றிலே யிருந்து ஆக்கினள் நகங்களை இணைத்தனள் தாடை எலும்பினில் அவற்றை பற்களின் **முரசில் பாங்குறப் பொருத்தினள்.
பின்னர் சடைத்த பிராணியை அனுப்பினள் செல்லப் பிராணியை செல்வெளி விட்டனள் சேற்று நிலங்களில் திந்தே அலைந்திட புதர்பற் றைகளில் புகுந்தே புறப்பட 440 காட்டு வெளிகளில் கால்வைத் தேகிட புல்மே டுகளில் போய்த்தவழ் தேறிட; நன்றாய் நடக்க நவின்றனள் அதற்கு அழகாய் ஓடவும் அதற்கு உரைத்தனள் மகிழ்ச்சி மிக்கதாய் வாழ்வைக் கழிக்கவும் புகழாய் நாட்களைப் போக்கவும் கூறினள் திறந்த சதுப்பினில் திகழ்நிலப் பரப்பினில் மிகுதொலைப் புற்றரை விளையாட்டு வெளியினில் கோடையில் காலணி கொள்ளாது நடந்திட இலையுதிர் காலத் தின்றியும் காலுறை 450 கொடிதாம் நாட்கள்தாம் கூடினும் வாழவும் குளிர்கால மேற்படும் குளினைத் தாங்கவும் சிறுபழச் செடியதன் சேர்அகத் துள்ளிலும் கொழுந் தேவ தாருவின் கோட்டையின் பக்கமும் வளர்சிறப்பூ சி(யி)லை மரத்ததன் அடியிலும் சூரைச் சோலையின் மூலையின் புறத்திலும் ஐந்து கம்பளி அகல்விப் படியிலும் எட்டுப் போர்வைகள் இதக்கீழ் இருக்கவும். கொள்ளைச் செல்வக் குவையங் கடைந்தேன் அங்கிருந் திவ்வென அருஇரை கொணர்ந்தேன்." 450
இளைய மக்களோ இவ்விதம் கூறினர் முதிய மக்களோ மொழிந்தனர் இவ்விதம்: "நெடுவனம் களிப்புற நிகழ்ந்தது எதுவெது? கானகம் களிப்புற, கவின்வனம் மகிழ்வுற? கானகத் தலைவர் களித்ததும் எவ்விதம்? அன்புறும் தப்பியோ ஆனந்தம் கொண்டதும் அயஇப் பிராணியை அன்புடன் அளித்ததும் தேனாம் செல்வம் சென்றிட விட்டதும்? ஈட்டியொன் றதனால் இதுபெறப் பட்டதா அல்லது அம்பினால் அடைந்திடப் பட்டதா?" 470
நிலைபெறும் முதிய வைனா மொயினன் இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே: "கானகம் களிப்புற வைத்தனம் நாங்களே கானகம் களிப்புற கவின்வனம் மகிழ்வுற கானகத் தலைவர் களித்ததும் இவ்விதம் அன்புறும் தப்பியோ ஆனந்தம் கொண்டதும்.
மியெலிக்கி என்பாள் மிளிர்வனத் தலைவி தெல்லர்வோ என்னும் தப்பியோ திருமகள் வனமதன் வனிதை வடிவுறும் காகை கானகத் துறையும் ஒருகவின் சிறுபெண் 480 வழித்தடம் காட்ட வந்தனள் எழுந்து அடிச்சுவட் டுக்கு அயை()ளம் கூறினள் பாதையின் பக்கம் பதித்தாள் குறிகளை புறப்பட்ட பயணம் போம்வழி காட்டினள்; புகுமர வாசைப் புள்ளிகள் செதுக்கினள் அடைய()ளம் இட்டே அமைத்தனள் மலைகளில் கரடியின் வாயிற் கதவம் வரையிலும் மற்றது வாழ்ந்த வதிவிடம் வரையிலும்.
அந்த இடத்தைநான் அடைந்திட் டதுமே சேரும் இடத்தைச் சேர்ந்து முடிந்ததும் 490 அங்கி(ல்)லை ஈட்டியால் அடைந்திடும் அலுவலே அங்கி(ல்)லை எய்து அடைந்திடும் வேலையே: இளுவை வளையத் திருந்துதா னுருண்டது கிடந்துஊ சிமரக் கிளையால் வீழ்ந்தது வற்றிய கிளைகள் மார்பெலும் புடைத்தன கிழித்துச் சுள்ளிகள் வயிற்றைத் திறந்தன."
பின்வரும் சொற்களில் பின்அவன் சொன்னான் உரைத்தான் அவனே உரைத்தான் இவ்விதம்: "என்றன் கரடியே, இணையில் அன்பே! என்றன் பறவையே, என்றன் செல்லமே! 500 இவ்விதம் வைத்திடு இயைதலை யணிகளை உன்றன் பற்களை ஒன்றாய்ச் சேர்த்திடு கூய எயிற்றினைக் கொண்டுவா வெளியே அகன்ற தாடை அவைஒன் றாய்ச் சேர். எதையும் கொடிதாய் எண்ணிட வேண்டாம் எங்களுக் கெதுதான் இயைந்த போதிலும் உடைதல் எலும்புகள், உடன்தலை நொருங்குதல், பற்கள் நறுநறு படுஒலி எழுப்புதல்.
* * *
இப்போது நான் கரடி எழில்நாசி யைப்பெறுவேன் எப்போது மென்நாசிக் கிருக்கட்டும் மஃதுதவி 510 அப்படியே யாயிடினும் அதைமுற்றாய் நான் எடுக்கேன் செப்பமதை மட்டும்தான் தேர்ந்தெடுப்பே னென்பதில்லை.
இப்போது நான்கரடி இருசெவிக ளைப்பெறுவேன் எப்போது மென்செவிக்கு இருக்கட்டு மஃதுதவி அப்படியே யாயிடினும் அதைமுற்றாய் நான்எடுக்கேன் செப்பமதை மட்டும்தான் தேர்ந்தெடுப்பே னென்பதில்லை.
இப்போது நான்கரடி இருவிழிக ளைப்பெறுவேன் எப்போது மென்விழிக்கு இருக்கட்டு மஃதுதவி அப்படியே யாயிடினும் அதை முற்றாய் நான்எடுக்கேன் செப்பமதை மட்டும்தான் தேர்ந்தெடுப்பே னென்பதில்லை. 520
இப்போது நான்கரடி யின்நெற்றி யைப்பெறுவேன் எப்போது மென்நெற்றிக் கிருக்கட்டு மஃதுதவி அப்படியே யாயிடினும் அதைமுற்றாய் நான்எடுக்கேன் செப்பமதை மட்டும்தான் தேர்ந்தெடுப்பே னென்பதில்லை.
இப்போது நான்கரடி யின்வாயைய் பெறுகின்றேன் எப்போது மென்வாய்க்கு இருக்கட்டு மஃதுதவி அப்படியே யாயிடினும் அதைமுற்றாய் நான்எடுக்கேன் செப்பமதை மட்டும்தான் தேர்ந்தெடுப்பே னென்பதில்லை.
இப்போது நான்கரடி யின்நாக்கைப் பெறுகின்றேன் எப்போது மென்நாக்குக் கிருக்கட்டு மஃதுதவி 530 அப்படியே யாயிடினும் அதைமுற்றாய் நான்எடுக்கேன் செப்பமதை மட்டும்தான் தேர்ந்தெடுப்பே னென்பதில்லை.
* * *
அவனையோர் மனிதனென் றழைக்கிறேன் இப்போ மாபெரும் வீரனாய் மதிக்கிறேன் நானே இறுகிய பற்களை எவரும் கணக்கிடில் வாசையாய் அமைந்திடு வல்லெயி றிளக்கிடில் உருக்கில் இயைந்தவாய் ஒண்தா டையினால் கடுமிரும் பானதன் கைமுட் டியதால்."
வேறுஅப் போதுயாரு(ம்)முன் வந்திலர் அத்தகு வீரர் அங்கிலை யெவரும் 540 இறுகிய பற்களை எண்ணித் தானே வாசையாய் அமைந்த எயிறுகள் இளக்கிட தனது முழங்கால் தனியெலும் பதன்கீழ் கடுமிரும் பானதன் கைமுட்டி பற்றி.
கரடியின் பற்களைக் கையினா லெடுத்தனன் உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்: "காட்டுக் கரடியே, கவினார் அப்பிளே! கொழுவனத் தழகிய கொழுத்த பிராணியே! உனக்கொரு பயணம் உள்ளது இப்போ பிரய()ணம் ஒன்று பேணவந் துள்ளது 550 இந்தச் சிறிய எழிற்கூ டிருந்து தாழ்ந்த இந்தத் தனிக்குடி யிருந்து உயர்வாய் அமைந்த ஒருஇல் லுக்கு விசாலமாய் அமைந்த வீடொன் றுக்கு.
பொன்னே, இப்போ புறப்படு போக! அன்புச் செல்வமே, அடிவைத் தேக! பன்றிகள் செல்லும் பாதையின் பக்கம் பன்றிக் குட்டிகள் படரும் வழியாய் குறுங்கா டடர்ந்த குன்றுகள் மேலே உயர்ந்து ஓங்கிய ஒளிர்மலை மீது 560 சடைத்த தேவ தாருகள் நோக்கி நூறுகொப் பூசி(யி)லை நுவல்மரம் நோக்கி! அங்குநீ இருப்பது அமைந்திடும் நன்றாய் காலத்தை அங்கே கழிப்பது சிறப்பு பசுவின் மணியொலி படர்தொலைக் கேட்கும் மணிகள் கணீடும் மற்றவ் விடத்தில்."
நிலைபெறும் முதிய வைனா மொயினன் அவ்விட மிருந்து அகன்றில் வந்தனன் இளைய மக்களோ இவ்வித மியம்பினர் எழிலார் இனத்தவர் இவ்விதம் கூறினர்: 570 "கொள்ளைச் செல்வம் கொண்டெங் கேகினை? தேடிய இரையும் சென்றது எவ்வழி? கட்டிப் பனிமேல் விட்டே கினிரா? கூழப்பனி யுள்ளே மூழ்கவிட் டீரா? அகலசதுப் பூற்றில் அமிழவிட் டீரா? அம்புற் றரைவெளி அடக்கம் செய்திரா?"
நிலைபெறும் முதிய வைனா மொயினன் உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்: "கட்டிப் பனிமேல் விட்டிட வில்லை கூழ்ப்பனி யுள்ளே மூழ்கிட வில்லை 580 குரைநாய் அதனைக் குழப்பித் தியும் பறவைக் கொடியவை மறைந்திடச் செய்யும்; அகலசதுப் புநிலத் தமிழ்த்தவு மில்லை அம்புற் றரைவெளி அடக்கவு மில்லை புழுக்கள் அதனை அழித்தே போடும் கறுப்பு எறும்புகள் கடித்தே யுண்ணும்.
கொள்ளைச் செல்வம் கொண்டங் கேகினேன் தேடிய இரையும் சென்றது அவ்வழி தங்கத் தமைந்த தனிமலை முடிக்கு வெள்ளிக் குன்றின் வியன்தோள் மேலே; 590 அகல்துய் யமரத் ததைநான் வைத்தேன் நூறு கிளையுடை ஊசி(யி)லை மரத்தில் சடைத்துத் தழைத்த தகுமொரு கிளைமேல் இலைகள் நிறைந்த இதக்சுள் ளியின்மேல் மனிதருக் கெல்லாம் மகிழ்ச்சியுண் டாக வழிப்போக் கர்க்கு மதிப்புண் டாக.
கிழக்கே பார்த்திடக் கிடத்தினேன் முரசு வடமேற் பக்கமாய் வைத்தேன் விழிகளை இருப்பினும் சாயாய் இட்டிலன் உச்சியில்: உண்மையி லங்ஙனம் உச்சியில் வைத்தால் 600 செறிகால் வந்து சேதப் படுத்தும் குளிர்காற் றெழுந்து கொடுஞ்செயல் புயும்; ஆனால் நிலத்திலும் அதனைநான் வைத்திலன்; அங்ஙனம் நிலத்திலே அதனைவைத் திட்டால் சேர்ந்து பன்றிகள் தியும் தூக்கி புரட்டிக் கூர்வாய்ப் பிராணிகள் போடும்."
முதிய வைனா மொயினன் அதன்பின் வெடித்துப் பாடினான் வெடித்தன பாடல்கள் கவின்புகழ் அந்தியைக் கெளரவப் படுத்த நிறைவுறும் நாளை நேர்மகிழ் வூட்ட. 610
முதிய வைனா மொயினன் மொழிந்தான் உரைத்தான் அவனே உரைத்தான் இவ்விதம்: "சுடானை ஏந்தியே, சுடர்கொழுத் திடுவாய், பாடும் போதொளி பார்த்துநான் பாட, இதோவரு கின்றது இசைக்கு மென்நேரம் வாய்விழை கின்றது வழங்கிடப் பாட்டொலி."
பின்னர் பாடினன் பின்னர் இசைத்தனன் மாலைப் பொழுது மகிழ்ந்தனன் முழுவதும் பாடல்கள் பாடி முடிந்ததும் பகர்ந்தனன் இறுதியில் அவனே இவ்விதம் கூறினன்: 620 "இன்னொரு நேரம் இறைவனேத் தாரும்! எதிர்கா லத்தில் இறைநிரந் தரனே! இவ்விதம் மகிழ்ந்து இன்புற் றிருக்க இனியும் ஒருமுறை இவ்விதம் செயற்பட கொழுத்த கரடியின் கொண்டாட் டத்தில் பொதுநீள் உரோமப் பிராணியின் விழாவில்.
இறைவனே, எமக்கு என்றுமே யருளும்!
|