LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 290 - துறவறவியல்

Next Kural >

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்
தள்ளாது புத்தே ளுளகு.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
களவு செய்வார்க்கு உடலில் உயிர் வாழும் வாழ்வும் தவறிப் போகும், களவு செய்யாமல் வாழ்வோர்க்கு தேவருலகும் வாய்க்கத் தவறாது.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
கள்வார்க்கு உயிர் நிலை தள்ளும் - களவினைப் பயில்வார்க்குத் தம்மின் வேறல்லாத உடம்பும் தவறும், கள்ளார்க்குப் புத்தேள் உலகு தள்ளாது - அது செய்யாதார்க்கு நெடுஞ்சேணது ஆகிய புத்தேள் உலகும் தவறாது. (உயிர் நிற்றற்கு இடனாகலின், உயிர்நிலை எனப்பட்டது. சிறப்பு உம்மைகள் இரண்டும் விகாரத்தால் தொக்கன. இம்மையினும் அரசனால் ஒறுக்கப்படுதலின், 'உயிர் நிலையும் தள்ளும்' என்றும், மறுமையினும் தேவராதல் கூடுதலின் 'புத்தேள் உலகும் தள்ளாது' என்றும் கூறினார். 'மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து' (குறள்.566) என்புழியும் 'தள்ளுதல்' இப்பொருட்டாதல் அறிக. இதற்குப் பிறவாறு உரைப்பாரும் உளர். இதனான் இருவர் பயனும் ஒருங்கு கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
பிறர் பொருளைக் கள்வார்க்கு உயிர்நிலையாகிய வீடு பெறுதல் தப்பும். கள்ளா தார்க்குத் தேவருலகம் பெறுதல் தப்பாது. இது கள்வார் முத்தி பெறுதலுமிலர், கள்ளாதார் சுவர்க்கம் பெறாமையுமிலரென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
கள்வார்க்கு உயிர்நிலை தள்ளும்-களவு செய்வார்க்குத் தம்முடனேயே யுள்ள தம் சொந்த வுடம்பும் தவறும்; கள்ளார்க்குப் புத்தேள் உலகு தள்ளாது-அது செய்யாதார்க்கு நெடுந் தொலைவிலுள்ள தேவருலகந் தவறாது கிட்டும். உயிர்நிற்பது உயிர்நிலை. தாம் குடியிருக்கும் வீடு போல்வது என்பதை யுணர்த்த 'உயிர்நிலை' யென்றார். உயிர்நிலை தள்ளுதலாவது அரசனால் தண்டிக்கப்படுதல். " கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனொடு நேர்."(குறள்.550.) " கள்வனைக் கோறல் கடுங்கோ லன்று வெள்வேற் கொற்றங் காண்"(சிலப். 20 . 654.)
கலைஞர் உரை:
களவாடுபவர்க்கு உயிர் வாழ்வதேகூடத் தவறிப்போகும்; களவை நினைத்தும் பார்க்காதவர்க்கோ, புகழுலக வாழ்க்கை தவறவே தவறாது.
சாலமன் பாப்பையா உரை:
திருடுபவரை அவரது உயிரும் வெறுக்கும்; திருடாதவரையோ தேவர் உலகமும் வெறுக்காது.
Translation
The fraudful forfeit life and being here below; Who fraud eschew the bliss of heavenly beings know.
Explanation
Even their body will fail the fraudulent; but even the world of the gods will not fail those who are free from fraud.
Transliteration
Kalvaarkkuth Thallum Uyirnilai Kalvaarkkuth Thallaadhu Puththe Lulaku

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >