உலக நாயகன் கமல்ஹாசனுக்கு இந்த வருடம் ஒரு மிகச்சிறப்பான வருடமாக இருக்கும், ஏனென்றால், அவரது நடிப்பில் உருவாக்கி உள்ள, உத்தமவில்லன், விஸ்வரூபம்–2, பாபநாசம் ஆகிய படங்கள் வரிசையாக வெளிவர உள்ளன.
அனைத்து படங்களிலும் கமல்ஹாசன் நடித்து முடித்து படத்தின் இறுதிகட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இவை ஒன்றன் பின் ஒன்றாக வெளிவர இருக்கின்றன.
இந்த நிலையில் ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில் ஆமீர்கான் - அனுஷ்கா சர்மா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் பிகே எதிர்ப்புகளுக்கு இடையிலும் பலத்த வரவேற்பை பெற்று நன்றாக உலகம் முழுவதும் ஓடி வருகிறது. இதன் ரீமேக்கில் நடிப்பதற்கு கமல் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக நம்பத தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியானது.
இது குறித்து கூறிய கமல்ஹாசன் "இந்த படம் தொடர்பாக தயாரிப்பாளர்களோடு முதற்கட்ட பேச்சு வார்த்தை மட்டுமே நடத்தப்பட்டுள்ளது. என்னுடைய அடுத்தப் படம் எனது சொந்த தயாரிப்பில்தான் இருக்கும்.
அதற்காகதான் இப்போது மொரிஷியஸில் தங்கி திட்டமிடும் வேலைகளை செய்துவருகிறேன். யாரோ முடிவாக 'பீகே' ரீமேக் குறித்து கொளுத்திப் போட்டுள்ளனர்.
எனது நிபந்தனைகளுக்கு ஒத்துவந்தால் மட்டுமே அந்தப் படத்தின் ரீமேக்கில் நடிப்பது குறித்து யோசிக்க முடியும். இல்லையென்றால் வேறு யாரேனும் அதில் நடிப்பார்கள். ஆனால் நிச்சயமாக 'பீகே' மிகவும் நல்ல சுவாரசியமான படம்.
யார் நடித்தாலும் வெற்றி நிச்சயம். அந்தப் படத்தில் நடிக்க நிறைய நடிகர் போட்டிபோட்டு முன்வருவார்கள்" என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.
|