காந்தி ஜெயந்தி தினமான நேற்று, தூய்மையான இந்தியாவை உருவாக்கும் பொருட்டு, கிளீன் இந்தியா எனும் திட்டத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இதில் இந்திய பிரபலங்கள், நடிகர்கள் கமல்ஹாசன், சல்மான் கான், ப்ரியங்கா சோப்ரா, கிரிக்கெட் வீரர் சச்சின் உட்பட ஒன்பது பேரை பங்கேற்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார். மோடியின் அழைப்பை ஒவ்வொருவராக ஏற்று வருகின்றனர். ப்ரியங்கா சோப்ரா, சச்சின் ஆகியோர் நேற்றே இதற்கு சம்மதம் சொல்லிவிட்டனர். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனும் இதில் தன்னை இணைத்துக்கொள்வதாக கூறியுள்ளார். மேலும் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மதிப்பிற்குரிய பிரதம மந்திரி அவர்கள் குறிப்பிட்டுள்ள ஒன்பது பேர்களில் என் பெயரும் இடம் பெற்றிருப்பது பெரும் ஒரு பாக்கியமாக நான் கருதுகிறேன். கட்சிகளுக்கு அப்பாற்பட்ட, சித்தாந்தங்களுக்கு அப்பாற்பட்ட மனித சேவை என்பதில் என்றுமே நம்பிக்கை உள்ளவன் நான்.
இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் அரிய ஒன்பது பேர்களில் நாங்கள் அனைவருமே வெவ்வேறு கருத்துக்கள் உடையவர்கள். நான் மனித நேயத்தை ஆத்திகம் மூலமாகவோ, வேறு சித்தாந்தங்கள் மூலமாகவோ அனுகாமல் மனிதம் மூலமாக, பகுத்தறிவு மூலமாக அணுகி வாழ்க்கையைய் வாழ்ந்து கொண்டிருப்பவன்.
எனக்கு இது கொடுக்கப்பட்டிருக்கும் புதிய ஒரு கடமையாக நான் நினைக்காமல் செய்த கடமைக்கான ஒரு பாராட்டாக நினைத்து தொடர்ந்து செயல்படுவேன் என்பதை மாண்புமிகு பிரதமருக்கு சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். கடந்த முப்பது ஆண்டுகளாக எனது சினிமா ரசிகர்களாக இருந்தவர்களை சமுதாய ஆர்வலர்களாக, சேவையாளர்களாக மாற்றிய ஒரு சிறிய ஊக்கியாக நான் இருந்திருக்கிறேன். அந்த பணி தொடரும்.
சுற்றமான சூழல் என்பதை நான் உணர ஆரம்பித்து, பேச ஆரம்பித்து பல மாமாங்கங்கள் கடந்து விட்டன, பணி தொடரும்.பிரதமர் தேர்ந்தெடுத்த இந்த ஒன்பது பேர் இன்னும் ஒன்பது பேரை தேர்ந்தெடுக்க அவர் பணித்திருக்கிறார், பரிந்துரைத்திருக்கிறார். முடிந்தால் இன்னும் தொன்னூறு லட்சம் பேரை சேர்க்க வேண்டியது என்னுடைய இயலும் கடமையாக நான் நினைக்கிறேன். ஒரு பில்லியன் ஜனத்தொகை உள்ள இந்த நாட்டில் என் தொழில் சிறு துளியாக இருந்தாலும், பெரு வெள்ளத்தின் முதல் துளியாக இது இருக்கும் என்று நம்புகிறேன். இந்த முயற்ச்சியில் அரசியல், மத, இன, மொழி கடந்த மனிதம் பரவும் என்று நான் நம்புகிறேன் என கமல் ஹாசன் கூறியுள்ளார்.
|