LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- நிர்மலா ராகவன்

கண்ணாடி முன் - நிர்மலா ராகவன்

`மொதல்ல ஒங்களைக் கண்ணாடியில பாத்துக்கோங்க!’

குரலில் சற்றும் கோபமில்லாமல்தான் மனைவி அந்த வார்த்தைகளைச் சொல்லியிருந்தாள்.  ஆனால் அதில் பொதிந்து கிடந்த ஏளனம்!

வேண்டும். நன்றாக வேண்டும். சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தமாதிரி, ஏற்கெனவே குண்டாக இருந்த மனைவியிடம் அவளுடைய உடலைப்பற்றிக் கிண்டல் செய்வானேன், இப்படி வாங்கிக் கட்டிக்கொள்வானேன்!

அவருக்கு எல்லார்மேலேயும் கோபம் வந்தது.

`பிறந்த நாள்’ என்று அவரைத் தூக்கிப்போகாத குறையாக வெளியே அழைத்துப்போன அந்த ஐந்து நண்பர்கள்மேல், அவர்களுடன் பார்த்த படத்தின் கதாநாயகிமேல். இன்னும்.., தன்மேலேயே.

இந்த சிம்ரன் ஒருத்தி! எதற்காக உடலை இவ்வளவு கச்சிதமாக வைத்திருக்க வேண்டும்? அட, அழகான, ஒல்லியான உடல் இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டுமே! அதை இப்படியா வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும், இடுப்பு, தொப்புள் என்று அணு அணுவாக!

இவரைப்போன்ற இளிச்சவாயர்கள், `ஆகா! இன்னும்கூட நமக்கு இளமையின் உத்வேகம் இருக்கிறதே!’ என்ற பூரிப்புடன் மீண்டும் மீண்டும் அந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்று தயாரிப்பாளரும், இயக்குனரும் சேர்ந்து செய்த சதி! இல்லாவிட்டால், முக்காலே முவ்வீசம் கிழவனாகிவிட்ட தனக்கு அந்த இளம்பெண்ணைப் பார்த்து எதற்காக இத்தனை கிறக்கம் ஏற்பட வேண்டும்?

பார்த்ததுதான் பார்த்தோமே, அப்போது உண்டான மயக்கத்தை மனசுக்குள்ளேயே வைத்துக் கொண்டிருக்கலாம் இல்லையா?

படத்தின் பாதிப்பு குறையாமலேயே வீட்டுக்கு வந்தவருக்கு, காலைப் பரத்திக்கொண்டு, குறட்டை விட்டபடி தூங்கிக்கொண்டிருந்த மனைவியைப் பார்த்ததும் எரிச்சல் பொங்கியதில் என்ன ஆச்சரியம்?

`சனியன்! எனக்குப்போய் இப்படி ஒண்ணு வாய்ச்சிருக்கே!’ என்று அவளை மனசுக்குள்ளேயே திட்டி, தன்மேல் பரிதாபப்பட்டுக்கொண்டார்.

அப்போது கண்விழித்தவள், “வந்துட்டீங்களா?” என்று தூக்கக் கலக்கத்தில் கட்டைக்குரலில்கேட்டது அவரது ஆத்திரத்தை அதிகப்படுத்தியது.

“வராம? தியேட்டரிலேயே படுத்துடுவாங்களா?  இல்ல, இது ஒன் புருஷனோட ஆவின்னு நினைச்சுக்கிட்டியா?” என்று எரிந்து விழுந்தார்.

அவள் எழுந்து உட்கார்ந்துகொண்டாள். “ரொம்பப் போட்டுட்டீங்களா? பேசாம படுங்க!” என்றாள், மனைவிகளுக்கே உரிய விவேகத்துடன்.

“யாரு, யாரைடீ போட்டாங்க? புருஷனை மயக்கறமாதிரி ஒடம்பை வெச்சுக்கத் தெரியல, பெரிசா பேச வந்துட்டா!” என்று பொரிந்தவர், “சே! ஏண்டா வீட்டுக்கு வர்றோம்னு இருக்கு. வந்தா, பூரியாட்டம் ஒப்பிப்போன ஒன் மூஞ்சியைப் பாத்துத் தொலைக்க வேண்டியிருக்கு. ஹூம்! சிம்ரனைக் கட்டிக்கப்போறவன் குடுத்து வெச்சவன்!” என்று ஏகமாக உளறினார்.

அவளுக்கு ஏதோ புரிந்தாற்போலிருந்தது. முகத்தில் மெல்லிய புன்னகை.

அப்போதுதான் சொன்னாள், “மொதல்ல ஒங்களைக் கண்ணாடியில பாத்துக்கோங்க!”

அசரீரிபோல், வேளைகெட்ட வேளையில் அவள் குரல் கேட்டவண்ணம் இருந்தது.

காலையில் பல் துலக்கிய கையோடு பாத்ரூமில் சவரம் செய்துகொள்ளும்போது, குளித்துவிட்டுத் தலை வாரிக்கொள்ளும்போது, ஏன், காரை ஓட்டிப்போகும் வழியில் ஏதாவதொரு சிவப்பு விளக்கில் நிற்கும்போது முகத்திற்குமேல் இருந்த கண்ணாடியைத் திருப்பி ... இப்படி பல கோணங்களிலும் கண்ணாடியில் தெரிந்த தன் முகத்தைப் பார்த்துக் கொண்டவருக்கு ஒன்று புரிந்தது.

மனைவி சிம்ரன்மாதிரி இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால், தானும் சினிமா கதாநாயகன்போல் இருக்கவேண்டாமோ?

`ரஜினி எவ்வளவு இளமையா இருக்காரு, பாருங்க! அவருக்கும் ஒங்க வயசுதானாம்!’ அண்மையில், `சந்திரமுகி’ பார்த்துக்கொண்டிருந்தபோது மனைவி காதருகே குனிந்து முணுமுணுத்தது நினைவில் எழுந்தது.

அவருக்குப் படத்தின் ஆரம்பத்திலேயே சுவாரசியம் போய்விட்டது. `இதையெல்லாம் ஒரு படம்னு பாக்கறாங்களே, அறிவு கெட்டவங்க!’ என்று தமிழ்ப்பட ரசிகர்களை ஒட்டுமொத்தமாக வைதார்.

மனைவியை மயக்கிய அந்தக் கதாநாயகனை பொறாமையுடன் வெறித்தார்.ஒரு படத்துக்கு ஐம்பது கோடிக்குமேல் சம்பளம் வாங்குபவருக்கு ஆயிரக்கணக்கில் செலவழித்து, வழுக்கைத்தலையை மறைக்க கரிய நிறத்தில் `விக்’ வாங்க முடியும்தான். இத்தாலி நாட்டுக்குப் போய், முகத்திலும், உடம்பிலும் தொங்கும் வேண்டாத சதையை எல்லாம் அறுவைச் சிகிச்சையால் அகற்றிக்கொள்ளவும் முடியும்.

தனக்கு அதெல்லாம் முடியுமா? கேவலம், மாதச் சம்பளக்காரன்! இந்த லட்சணத்தில், வெளிநாட்டில் படிக்கும் மகனுக்கு வேறு அவ்வப்போது தண்டம் அழ வேண்டியிருக்கிறது.

இதெல்லாம் நண்பர்களுக்குத் தெரிகிறதா?

“ஒனக்கென்னப்பா! ஒரே மகன்! மகா புத்திசாலி! நீங்க புருஷன், பெண்டாட்டி ரெண்டே பேர் வீட்டிலே! எப்பவும் ஹனிமூன்தான்!” என்று விகாரமாகக் கண்ணைச் சிமிட்டி வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்வார்கள்.

ஹனிமூனாவது!

அந்த வார்த்தை காதில் விழுந்தாலே, அவருக்குத் தன் கல்யாணம்தான் நினைவுக்கு வந்து பயமுறுத்தும்.

குப்பன்.

அதுதான் அவருடைய பெயர்.

அவரைக் கேட்காமல், அவருக்குப் பிடிக்காத பெயராக வைத்துவிட்டார்கள். ஷ், ஹ் போன்ற வடமொழி எழுத்துக்கள் ஒன்றிரண்டு கலந்து நாகரிகமாக இல்லை தன் பெயர் என்ற பெரிய குறை அவருக்கு.

போதாத குறைக்கு, பள்ளியில் ஷாம் என்ற மாணவன் `ஷாம்பு’ ஆக, சம்சூரி என்ற மலாய் மாணவன் `சம்சு’வாக (மட்ட ரக கள்ளைக் குறிக்கும் வார்த்தை), இவரைக் `குப்ப’ என்று அழைத்தார்கள் சகமாணவர்கள்.

வாத்தியார்களுக்கும் புனைப்பெயர் வைத்துச் சிரித்த காலம் அது. ஆனால், தன் பெயரைச் சுருக்கி அழைத்து, பிறர் சிரிக்கும்போது, அதை அவ்வளவு எளிதாக எடுத்துக்கொண்டு சிரிக்க முடியவில்லை அவரால். அழுகைதான் வந்தது.

வயதாக ஆக, தனக்கு வரும் மனைவிக்காவது பெயர் மிக அழகாக இருக்கவேண்டும் என்ற தீர்மானம் அவருக்குள் எழுந்தது.

அதனால்தானே, “பொண்ணு பேரு ஜலஜாவாம்,” என்றபடி, மேலே ஏதோ சொல்லவந்த அம்மாவை இடைமறித்து, “இதையே முடிச்சுடுங்க!” என்றார் அவசரமாக?

“நீ பாக்க வேணாம்?” என்று அம்மா அதிசயப்பட்டுக் கேட்டபோது, “பரவாயில்லே,” என்று மட்டும்தான் அவரால் சொல்ல முடிந்தது.

ஜலஜா!

ஆகா! எவ்வளவு அழகான பெயர்! பெயரே இவ்வளவு அழகாக இருந்தால், உருவம் எப்படி இருக்கும்! அடுத்த சில மாதங்கள் இனிமையான கற்பனையில் கழிந்தன.

மனைவியின் பெயரிலிருந்த அழகிற்கும், உருவத்திற்கும் கிஞ்சித்தும் சம்பந்தம் இல்லை என்று உணர்ந்து அவர் அதிர்ந்தபோது, அவள் கழுத்தில் தாலி ஏறியிருந்தது.

“இவ இவ்வளவு குண்டுன்னு ஏம்மா மொதல்லேயே சொல்லலே?” அம்மாவைத் தனியாகப் பார்த்தபோது அழமாட்டாக்குறையாகக் கேட்டார்.

“நீ எங்கே சொல்லவிட்டே?” என்று பழியை அவன்மேலேயே திருப்பினாள் தாய். “இப்ப அதனால என்ன மோசம்? நளபாகமா சமைக்கிறா. நீயும் குண்டாயிட்டாப் போவுது!” என்று சமாதானப்படுத்தினாள்.

அப்படியும் அவர் முகம் வாடியிருந்ததைப் பொறுக்காது, “எல்லாப் பொண்ணுங்களும் ஒரு பிள்ளை பெத்ததுக்கு அப்புறம் குண்டாத்தானே போயிடுவாங்க! நான் எப்படி இருந்தேன், தெரியுமா?” என்று ஆரம்பித்தாள்.

நல்லவேளை, மனைவியின் பிரசவம் கடினமாக இருந்தது. சற்றே இளைத்தாள்.

இருந்தாலும், ஏமாந்துவிட்ட உணர்ச்சி அவரை அலைக்கழைத்துக்கொண்டே இருந்தது. எதற்காகவாவது அவளை விரட்டுவார். அவரது போக்கால் பாதிக்கப்படாது, எருமை மாட்டின்மேல் பெய்த மழைபோல் அவள் சும்மா இருந்தது அவரை மேலும் ஆத்திரப்படுத்தியது.

இன்றோ, பயம் சுத்தமாக விட்டுப்போய், அவரையே பழிக்கிறாள்!

எதையோ இழந்துவிட்டது போலிருந்தது. யாருடனும் பேசப் பிடிக்காமல், பத்திரிகைகளில் வரும் தத்துவ போதனைகளைப் படிக்க ஆரம்பித்தார். அப்படியாவது நிம்மதி கிடைக்காது?

காவி கட்டிய ஒருவர் இந்த அரிய யோசனையை அளித்திருந்தார்: மனம் உற்சாகமாக இருந்தால், உடலில் இளமை துள்ளி விளையாடும்.

சிறிது தயக்கத்திற்குப்பின், ஹைபர் மார்க்கெட்டுக்குப் போய், மருக்கொழுந்து வாசனை அடித்த செண்ட் ஒரு குப்பி வாங்கிக்கொண்டார். கல்யாணமான புதிதில் உபயோகித்தது. அதற்குப் பிறகுதான் உல்லாசமே போய்விட்டதே!

கணவர் அடிக்கடி கண்ணாடியில் அழகு பார்த்துக்கொள்வதையும், இப்போது செண்ட் உபயோகிப்பதையும் கண்டும் காணாததுபோல் இருந்த ஜலஜா குழம்பினாள். `நாற்பது வயதில் நாய்க்குணம்’ என்பார்களே!

அவர் எதிர்பார்த்த அளவுக்கு அந்த செண்ட் வாசனை புத்துணர்ச்சி அளிக்கவில்லை.

அடுத்த முறை கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக்கொண்டபோது, உப்பும் மிளகும் கலந்தது போன்றிருந்த தலைமயிர் அவர் கண்ணை உறுத்தியது.

`என் முடி ரஜினியுடையதைவிட எவ்வளவு அடர்த்தி!’ என்ற பெருமையும் எழாமலில்லை.

தனக்கு எதற்கு `விக்’கும், மண்ணாங்கட்டியும்! முடி மட்டும் கொஞ்சம் கறுப்பாக இருந்ததால், இன்னும் பத்து வயது குறைவாகக் காட்டுமே!

குளிக்கப்போனவர் ஒரு மணி நேரத்துக்குமேல் ஆகியும் வெளியே வரவில்லையே என்று பயந்த மனைவி தன் பலத்தையெல்லாம் பயன்படுத்தி கதவை உடைக்காத குறையாகத் தட்ட, அசட்டுச் சிரிப்புடன் வெளிப்பட்டார்.

“இதென்னங்க கண்ராவி!”  சிரிப்பை அடக்க முயற்சித்து, தோற்றவளாகக் கேட்டாள்.

“அமில மழையிலே நனைச்சுட்டேன்!” என்று -- வெகுவாகக் கறுத்த -- தன் முடிக்கு ஒரு காரணத்தைக் கற்பித்தார்.

தான் எதிர்பார்த்தபடி, மனைவி தன் புதிய முக அழகில் அப்படி ஒன்றும் மயங்கவில்லையே என்ற வருத்தம் அவருக்குள் எழுந்தது.

வேறு எங்காவது கோளாறோ?

உடல் பூராவையும் பார்த்துக்கொள்ள முழுநீளக் கண்ணாடி ஒன்றை வாங்கி மாட்டினார். அப்போதுதான் புரிந்தது மனைவியின் எகத்தாளம்.

நம் வயிறு எப்போது, எப்படி, இப்படி -- எட்டு மாதக் கர்ப்பிணிபோல் -- பருத்தது?

முடிச்சாயம் வாங்கிய அதே கடைக்குப் போய் சில மணி நேரங்களைச் செலவிட்டார். வெளியே வரும்போது அவர் கையில் இருந்த பொட்டலத்தில் ஒரு வித இடுப்புப்பட்டி இருந்தது. ஏதோ மருந்து சேர்க்கப்பட்டதாம். வயிற்றைச் சுற்றிச் சுற்றிக் கட்ட வேண்டும். எந்நேரமும் அணிய வேண்டும். சில வாரங்களுக்குள்ளேயே வித்தியாசம் புலப்படும் என்று அங்கிருந்த சீன மாது அடித்துச்சொல்ல, `இந்தப் பானை வயிற்றைக் குறைக்க நூற்றுப் பத்து ரிங்கிட் செலவழிப்பதில் தப்பொன்றும் இல்லை! என்று துணிந்து வாங்கிவிட்டார்.

இப்போது நிமிர்ந்துதான் உட்காரவோ, நடக்கவோ முடிந்தது. நாற்காலியில் அமர்ந்து சாப்பிட்டாலும், எந்நேரமும் வயிறு வெடிப்பதுபோல் இருந்ததால் சாப்பிடும் அளவு கணிசமா்கக் குறைந்து போயிற்று.

`வயிறு சரியா இல்லியா?’ `சாப்பாடு நல்ல இல்லே?’ என்றெல்லாம் மனைவி ஆதுரத்துடன் கேட்டபோது, மனதுக்குள் கொக்கரித்துக்கொண்டார்: `என்னை மட்டம் தட்டினியே! இன்னும் கொஞ்ச நாளிலே பாரு!’

கொஞ்ச நாளில் தலைசுற்றல்தான் வந்தது.

பொறுக்க முடியாது போக, மருத்துவரிடம் போனார்.”எடையை ஒரேயடியாக் குறைக்க ஏதோ செய்யறீங்களா? அதான் ரத்த அழுத்தம் குறைஞ்சுபோய், தலை சுத்துது. சாதாரணமா, லேடீஸ்தான் இப்படிச் செய்வாங்க!” என்று அந்த மனிதர் பிட்டுப் பிட்டு வைத்து, ஒரு மாதிரியாகப் பார்க்க, மானம் போயிற்று குப்பனுக்கு.

வீடு திரும்பியதும் முதல் வேலையாக, பெல்டைச் சுற்றி, பழைய துணிகளுக்கடியில் ஒளித்து வைத்தார். அவ்வளவு விலை கொடுத்து வாங்கியதை தூர எறியவும் மனம் இடம் கொடுக்கவில்லை.

அன்று அவர் வேலை முடிந்து வந்தபோது, வழக்கத்துக்கு விரோதமாக மனைவி யாரிடமோ பேசிசுக்கொண்டிருந்தது கேட்க, மறைந்திருந்து கேட்டார்.

“அவர் முந்திமாதிரி என்னைச் சீண்டறது கிடையாது. எப்பவும் ஏக்கமா, எதையோ நினைச்சுக்கிட்டு, சரியா சாப்பிடறதில்ல. வீடெல்லாம் கண்ணாடி வாங்கி மாட்டி அழகு பாத்துக்கிடறது இருக்கே! விடலைப் பசங்க தோத்தானுங்க, போ! ஏதானும் சின்ன வீடு சமாசாரமோன்னு மனசு கிடந்து அடிச்சுக்குது. இவரைவிட்டா, இத்தனை வயசுக்குமேல நான் என்னடி பண்ணுவேன்!”

மெய்சிலிர்க்க, வந்த வழியே மீண்டும் நடந்தார் குப்பன். மனைவிக்குத் தன்மேல் அன்பு இல்லாமல் இல்லை!

ஆணழகராக இருக்கும் ஒருவரைத் திரையில் பார்த்து ரசிக்கலாம். ஆனால், எல்லாரும் வாழ்க்கைத்துணையாக முடியுமா?

ஏதோ உறைத்தது.

சிம்ரனோடு மனைவியைத் தான் ஒப்பிட்டுப் பேசியது மட்டும் என்ன நியாயம்?

அந்த பஞ்சாபி நடிகையால் அப்பள வற்றல் குழம்பும், கத்தரிக்காய் பொரியலும் ஜலஜாவின் கைமணத்தோடு ஆக்கிப்போட முடியுமா?

வீட்டுக்குத் திரும்பியவர் கையில் பழைய தினசரியில் சுற்றப்பட்ட மல்லிகைப்பூ. ஒரு பிளாஸ்டிக் பை பிதுங்க ரசமலாய், சூர்யகலா, பால்கோவா, பாதம் ஹல்வா என்று வித விதமான இனிப்பு வகைகள்.

“இவ்வளவு இனிப்பு சாப்பிட்டா, நான் இன்னும் குண்டாயிடுவேன்!” என்று செல்லமாய் சிணுங்கிய மனைவியை ஆசையுடன் பார்த்தார்.

“நீ இப்படி இருந்தாத்தான் நல்லா இருக்கு. இறுகக் கட்டிக்கிட்டா, எங்கே எலும்பு நொறுங்கிடுமோன்னு பயப்பட வேண்டாம், பாரு!” என்றபடி அவளை நெருங்கினார்.

(தமிழ் நேசன், 2005)

 

- நிர்மலா ராகவன்

by Swathi   on 20 Mar 2015  0 Comments
Tags: கண்ணாடி முன்   Nirmala Raghavan   நிர்மலா ராகவன்   Kannadi Mun           
 தொடர்புடையவை-Related Articles
கண்ணாடி முன் - நிர்மலா ராகவன் கண்ணாடி முன் - நிர்மலா ராகவன்
மானசீகக் காதல் - நிர்மலா ராகவன் மானசீகக் காதல் - நிர்மலா ராகவன்
மோகம் - நிர்மலா ராகவன் மோகம் - நிர்மலா ராகவன்
தனக்கு வரும்போது - நிர்மலா ராகவன் தனக்கு வரும்போது - நிர்மலா ராகவன்
அழகான மண்குதிரை - நிர்மலா ராகவன் அழகான மண்குதிரை - நிர்மலா ராகவன்
காந்தித்தாத்தாவும், பொன்னுசாமி கங்காணியும் - நிர்மலா ராகவன் காந்தித்தாத்தாவும், பொன்னுசாமி கங்காணியும் - நிர்மலா ராகவன்
பெரிய வாத்தியார் - நிர்மலா ராகவன் பெரிய வாத்தியார் - நிர்மலா ராகவன்
மாற்ற முடியாதவை - நிர்மலா ராகவன் மாற்ற முடியாதவை - நிர்மலா ராகவன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.