கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார் உண்மை நிலக்குப் பொறை.
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
கண்ணோட்டத்தினால் உலகியல் நடைபெறுகின்றது, கண்ணோட்டம் இல்லாதவர் உயிரோடு இருத்தல் நிலத்திற்குச் சுமையே தவிர வேறு பயனில்லை.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
உலகியல் கண்ணோட்டத்து உள்ளது - உலகநடை கண்ணோட்டத்தின் கண்ணே நிகழ்வது; அஃது இலார் உண்மை நிலக்குப் பொறை - ஆகலான், அக்கண்ணோட்டம் இல்லாதார் உளராதல் இந்நிலத்திற்குப் பாரமாதற்கே, பிறிதொன்றற்கு அன்று. (உலகநடையாவது: ஒப்புரவு செய்தல், புறந்தருதல், பிழைத்தன பொறுத்தல் என்ற இவை முதலாயின. அவை நிகழாமையால் தமக்கும் பிறர்க்கும் பயன்படார் என்பதுபற்றி, 'நிலக்குப்பொறை' என்றார். 'அதற்கு' என்பது சொல்லெச்சம். இவை இரண்டு பாட்டானும் கண்ணோட்டத்தது சிறப்புக் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
உலகநடை கண்ணோட்டத்தின்கண்ணது: ஆதலால், அஃதில்லாதார் உளராயிருத்தல் நிலத்துக்குப் பாரமாம்.
இது கண்ணோட்டமில்லாதாரை நிலம் பொறாதென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
உலகியல் கண்ணோட்டத்து உள்ளது -உலக நடை கண்ணோட்டத்தினால் நடைபெற்று வருகின்றது; அஃது இலார் உண்மை நிலக்குப் பொறை-ஆதலால் , அக்கண்ணோட்டம் இல்லாதார் இவ்வுலகத்திலிருப்பது மாநிலத்திற்கு வீண்சுமையேயன்றி ஒரு பயனுமில்லாததாம்.
உலகியல் என்பது ஒப்புர வொழுகல். அது செய்யாதவன் மக்கட்பிறப்படைந்தும் அதனாற் பயன்பெறாதவனாதலின், 'நிலக்குப் பொறை' என்றார். நிலக்கு என்பதில் அத்துச்சாரியை தொக்கது. இம்மையிற்பிறக்கும் மறுமையில் தமக்கும் பயன் படுமாறு நடந்து கொள்ளாதவர் , இவ்வுலகில் இருப்பதினும் தாம் நுகர்வனவற்றைப் பிறர்க்குப் பயன்படும்படி நுகரவிட்டு விட்டு இறப்பதேமேல் என்பது கருத்து.
கலைஞர் உரை:
அன்புடன் அரவணைத்து இரக்கம் காட்டும் கண்ணோட்டம் எனப்படும்
உலகியலுக்கு, மாறாக இருப்பவர்கள் இந்தப் பூமிக்குச் சுமையாவார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
மக்கள் வாழ்க்கை கண்ணோட்டத்தால்தான் இயங்குகின்றது அக்கண்ணோட்டம் இல்லாதவர் வாழ்வது இப்பூமிக்கு பாரமே.
Translation
The world goes on its wonted way, since grace benign is there;
All other men are burthen for the earth to bear.
Explanation
The prosperity of the world springs from the kindliness, the existence of those who have no (kindliness) is a burden to the earth.