கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும் இரவாமை கோடி உறும்.
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
உள்ளதை மறைக்காமல் உள்ளம் மகிழ்ந்து கொடுக்கும் கண்போல் சிறந்தவரிடத்திலும் சென்று இரவாமலிருப்பதே கோடி மடங்கு நல்லதாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
கரவாது உவந்து ஈயும் கண் அன்னார் கண்ணும் இரவாமை - தமக்கு உள்ளது கரவாது இவர் வரப்பெற்றேம் என்று உள்மகிழ்ந்து கொடுக்கும் கண்போலச் சிறந்தார் மாட்டும், இரவாதே ஒருவன் வறுமை கூர்தல்; கோடி உறும் - இரந்து செல்வம் எய்தலின் கோடி மடங்கு நன்று. (நலகுரவு மறைக்கப்படாத நட்டார் மாட்டும் ஆகாது என்பதுபட நின்றமையின் உம்மை உயர்வுச் சிறப்பின்கண் வந்தது. அவ்விரவான் மானம் தீராது என்னும் துணையல்லது அதற்கு மிகுதி கூடாமையின், வல்லதோர் முயற்சியான் உயிரோம்பலே நல்லது என்பது கருத்து.)
மணக்குடவர் உரை:
தமக் குள்ளது கரவாது இவர் வரப்பெற்றேமென்று உண் மகிழ்ந்துகொடுக்குங் கண்போலச் சிறந்தார்மாட்டும் இரவாதே ஒருவன் வறுமை கூர்தல் செல்வமெய்தலிற் கோடிமடங்கு நன்று.
தேவநேயப் பாவாணர் உரை:
கரவாது உவந்து ஈயும்கண் அன்னார் கண்ணும் இரவாமை-தம்மிட முள்ளதை ஒளிக்காது, அரும்பெறலுறவினர் வந்தாரேயென்று அகமகிழ்ந்து கொடுக்குங் கண்போலச் சிறந்தாரிடத்தும் இரவாது வறுமை கூர்ந்திறத்தல்; கோடி உறும்-அவரிடம் இரந்து நுகர்ச்சிப் பொருளும் செல்வமும் பெறுவதினும் கோடி மடங்கு நன்றாம். மானங் கெட இரந்துண்பதினும், அது கெடாது இயன்றவரை யுழைத்து வறுமையிற் செம்மையாய் வாழ்தலும் அது இயலாவிடத்து உயிர் துறத்தலும், மேல் என்பதாம். உம்மை உயர்வு சிறப்பு. ’கோடி’ ஆகுபொருளது. இக்குறளால் இரத்தலின் இழிவு கூறப்பட்டது.
கலைஞர் உரை:
இருப்பதை ஒளிக்காமல் வழங்கிடும் இரக்கச் சிந்தையுடைவரிடம் கூட, இரவாமல் இருப்பது கோடி மடங்கு உயர்வுடையதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒளிவு மறைவு இல்லாமல், மனம் மகிழ்ந்து பிறர்க்குக் கொடுக்கும் இயல்பு உள்ளவரிடத்திலும் ஒன்றைக் கேட்கா திருப்பது கோடி நன்மையாகும்.
Translation
Ten million-fold 'tis greater gain, asking no alms to live,
Even from those, like eyes in worth, who nought concealing gladly give.
Explanation
Not to beg (at all) even from those excellent persons who cheerfully give without refusing, will do immense good.