LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள்

காதல் நினைவுகள் - பகுதி 2

                               காதல் நினைவுகள் - பகுதி 2

 

13. தும்பியும் மலரும்
மகரந்தப் பொடியைத் தென்றல் - வாரிக்கொண் டோடி
அகம் நொந்த தும்பி எதிர் - அணியாகச் சிந்தும்!
வகை கண்ட தும்பி தன் - வயிடூரியக்கண்
மிகவே களிக்கும் அவள் - விஷயந் தெரிந்தே!
'பூப்பெய்தி விட்டாள்என் - பொற்றாமரைப் பெண்
மாப்பிள்ளை என்னை அங்கு - வர வேண்டுகின்றாள்
நீர்ப்பொய்கை செல்வேன்' என - நெஞ்சில் நினைக்கும்;
ஆர்க்கின்ற தீம்பண் ஒன்றை - அவளுக் கனுப்பும்!
அழகான பொய்கை மணி - அலைமீது கமலம்
பொழியாத தேனைத் தன் - புதுநாதன் உண்ண
வழிபார்த் திருந்தாள் உடல் - மயலாற் சிவந்தாள்!
தழையும்பண் ணொன்று வரத் - தன்மெய் சிலிர்த்தாள்.
கமழ் தாமரைப் பெண் இதழ்க் - கலைசோரக் கைகள்
அமையாது தாழ ஆ! - ஆ!! என்றிருந்தாள்.
இமைப்போதில் தும்பி காதல் - இசை பாடி வந்தான்
கமழ் தாமரைப் பெண் இதழ்க் - கையால் அணைத்தாள்.



14. தமிழ் வாழ்வு


 

மாலையில் ஒருநாள் மாடியின் சன்னல்
திறக்கப் பட்டது; சேயிழை ஒருத்தி,
முத்தொளி நெய்து முடித்த ஆடையும்,
பத்தரை மாற்றுப் பசும்பொன் மேனியும்
உடையவ ளாக உலவு கின்றதை
'மருது' தனது மாடியி னின்று
கண்டான்; உவப்பிற் கலந்து நின்றான்!

----------

இரண்டு மாடியும் எட்டி இருந்ததால்
மருது, பெண்ணழகை அருகி லிருந்து
காணும் பேறு காணாது வருந்தினான்!
தூயாள் முகத்தொளி தோன்றும்; அம்முகச்
சாயலின்பம் தன்னைக் காண்கிலான்!
உதடு மாணிக்கம் உதிர்ப்பது தெரியும்;
எனினும் அவளின் இதழின் கடையில்
சிந்தும் அழகின் சிறுகோடு காணான்!
அவள்நடை, களிமயில் ஆடும் ஆட்டம்!
எடுத்தடி வைப்பாள்,எழிலிடை துவளும்;
துடித்துப் போவான் தூய மருது!
பொழுது மங்கிப் போவதை எண்ணி
அழுதான் மறையுமே அவள் எழில்என்று!
கண்கள் இருண்டன! கதிரவன் மறைந்தான்!
பெண்ணழகே எனப் பிதற்றிக் கிடந்தான்.
மறுநாட் காலையில் மருதும் சீனுவும்
பெரிதும் மகிழ்ச்சியடு பேசி யிருந்தனர்.
இடையில் சீனு இயம்பு கின்றான்:
'அவளோ அழகின் அரங்கு! நீயோ
இந்நாள் உற்ற இன்னொரு சேரன்;
ஒத்த வயதும், ஒத்த அன்பும்,
உள்ள இருவரின் உயர்ந்த காதலை
ஓராயிரம் ஆண்டுக் கொருமுறை யாக
இவ்வுலகு இன்றுகண்டு இன்பம் பெறட்டுமே!
இதற்குமுன் உனக்கென ஏற்பாடு செய்த
'கன்னல்' என்னும் கசக்கும் வேப்பிலையை
என்ன வந்தாலும் இகழ்ந்து தள்ளிவிடு!
மாடியில், நேற்று மாலைநீ கண்ட
ஆடுமயி லின்பெயர் அகல்யா என்பதாம்,
அவள் உனக்கேதான் இவண்பிறந் துள்ளாள்;
பச்சை மயிலுக்குப் பாரில்நீ பிறந்தாய்;
அவள்மேல் நீஉன் அன்பைச் சாய்த்ததைச்
சொன்னேன்; உன்னைத்தொட அவள் துடித்தாள்.
மங்கை அழகுக்கு மன்னன் ஒருவன் 
அங்காந் திருப்பதை அவளும் அறிவாள்;
அவனைத் துரும்பென அகற்றி, நெஞ்சில்
உவகை பாய்ச்சிஉன் உருவை நட்டாள்!
அன்னை தந்தையர்க் கவளோ ஒருபெண்,
என்ன செய்வார்? ஏந்திழை சொற்படி
உன்னை மருகனாய் ஒப்பி விட்டனர்.

----------

முதலில் உன்றன் முழுச்சொத் தினையும்
இதுநாள் அவள்மேல் எழுதி வைத்துவிடு!
நகைகளைக் கொடுத்தால் நான்கொண்டு கொடுப்பேன்.
பிறகுதான் அவளிடம் பேச லாகும்நீ!
பார்ப்பதும் பிறகுதான்! பழகலும் பிறகுதான்!
குலதரு மத்தைக் குலைக்க லாகுமா?
என்று சீனு இயம்புதல் கேட்ட
இளையோன் 'நண்பனே இன்னொரு முறைஅக்
கிளியை மாடியில் விளையாட விடு;
மீண்டும் நான்காண விரும்பு கின்றேன்.'
என்று கெஞ்சினான்! ஏகினான் சீனு!
மாடியின் சன்னலை மங்கையின் கைகள்
ஓடித் திறந்தன. ஒளிவிழி இரண்டும்,
எதிர்த்த மாடியில் இருந்த மருதுமேல்
குதித்தன. மங்கைமேல் குளிர்ந்தன அவன் விழி.
அவன் விழி அவள்விழி அன்பிற் கலந்தன
அகல்யா சிரித்தாள், அவனும் சிரித்தான்
கைகள் காட்டிக் கருத்து ரைத்தார்கள்.
'என் சொத்துக்களை உன் பேருக்கே 
எழுதி வைக்கவா?' என்றான் மருது!
'வேண்டாம்! உன்றன் விருப்பம் வேண்டும்'
என்றுகை காட்டினாள் எழிலுறும் அகல்யா.
'அழகிய நகையெல்லாம் அனுப்பவா?' என்றான்.
வேண்டாம் என்று மென்னகை அசைந்தாள்.
'இன்று மாலை இவ்வூர்ப் புறத்தில்
கொன்றையும் ஆலும் கொடும்பாழ் கிணறும்
கூடிய தனியிடம் நாடிவா' என்று
மங்கை உரைத்து மலருடல் மறைந்தாள்.

----------

'சொத்துவேண் டாம்உன் தூய்மை வேண்டும்.
நகைவேண் டாம்உன் நலமே வேண்டும் என்
றுரைத்தாள் அகல்யா; ஊர்ப்புறக் கொன்றை
மரத்தின் அருகில் வா என்று சொன்னாள்.'
என்று சீனுவிடம் இயம்பினான் மருது.
'நன்று நன்று நான் போகின்றேன்'
என்று சீனன் எரிச்சலாய்ச் சென்றான்.
மாலையில் கதிரவன் மறையும் போதில்
ஆலின் அடியில் அகல்யா அமர்ந்துதன்
இன்பன் வரவை எதிர்சென் றழைக்க
அன்பைத் தன்மொழி யதனில் குழைத்துப்
பண்ணொன்று யாழொடு பாடி யிருந்தாள்.
கொன்றை யடியில் குந்திக் கன்னலும்
வன்னெஞ் சுடையான் வரவு நோக்கிச்
சினத்தைத் தமிழொடு சேர்த்துப் பாடினாள்.
மருது விரைவில் வந்து கொண்டிருந்தான்.
ஒருகுரல்! தெளிந்த 'ஏசல்' ஒன்றும்,
பொருளில்லாத புதுக் குரல் ஒன்றும்,
செவியில் வீழ்ந்தன.திடுக்கிட் டவனாய்க்
கன்னல் வந்த காரணம் யாதென
உன்னினான்; சீனன் உளவென உணர்ந்தான்.
மேலும், 'என்வாழ்வை வீணாக் கியநீ
ஞாலமேல் வாழுதி நன்றே' என்ற
வசைமொழி கன்னல் வழங்குதல் கேட்டான்.
மருதுதான் அகல்யா வாழும் ஆலிடை
விரைவிற் சென்றான். மெல்லியின் பாட்டில்
தமிழிசை இருந்தது. தமிழ் மொழி இல்லை!
செழுமலர் இருந்தது திகழ்மண மில்லை!
வள்ள மிருந்தது வார்ந்த தேனில்லை!
தணலால் அவனுளம் தாக்கப் பட்டது!
கௌவிய தவனைக் கரிய இருட்டு!
வாழும் நெறியை மருது தேடினான்!
மேலும் 'என் வாழ்வை வீணாக்கிய நீ
ஞாலமேல் வாழுதி நன்றே' என்ற
கடுமொழி தன்னைக் கன்னல் கூறினாள்!
அகல்யா காதலால் ஆயிரம் சொன்னாள்!
சொன்னவை தெலுங்கர்க்குச் சுவைதரத் தக்கவை!
'பொருள் விளங்காமொழி புகலும் ஒருத்தி
இருளில் இட்ட இன்ப ஓவியம்.
அழகும் பண்பும் தழையக் கிடப்பினும்
பழகுதமிழ் அறியாப் பாவை தமிழருக்கு
உயிரில் லாத உடலே அன்றோ!
கடுமொழி யேனும் கன்னலின் தமிழ்த்தேன்
வடிவிலா வாழ்வுக் கடிப்படை யன்றோ?'
என்றான்; விலகினான்; கன்னலை நோக்கி!
அகல்யா மருதினை அகலாது தொடர்ந்தாள்.
மருது, கன்னலை மன்னிப்பு வேண்டினான்!
அத்தான் வருகஎன் றழைத்த கன்னலில்
மொய்த்தான்; மலரின் மூசு வண்டுபோல்!
'கன்னல்' 'மருது' தம் கண்ணும் நெஞ்சும்
இன்னல் உலகில் இல்லவே இல்லை;
பாழுங் கிணற்றில் அகல்யா
வீழ்ந்ததும் காணார்; மேவினர் இன்பமே!



15. உணர்வெனும் பெரும்பதம்


 

கதிரவனை வழியனுப்பிக்
கனிந்த அந்திப் போதில்
கடற்கரையின் வெண் மணலில்
தனியிருந்தேன். கண்ணைச் 
சதிபுரிந்து நெஞ்சினுள்ளே
ஒருமங்கை தோன்றிச்
சதிராடி நின்றாள். அப்
புதுமை என்ன் சொல்வேன்!
மதிபோலும் முகமுடையாள்
மலர்போலும் வாயாள்
மந்தநகை காட்டிஎனை
'வா' என்று சொன்னாள்.
புதையல் வந்து கூவுங்கால்
'போ' என்றா சொல்வேன்?
'பூங்காவனக் குயிலே
யாரடி நீ?' என்றேன்.

'உணர்வு' என்றாள்.பின்னென்ன,
அமுதாகப் பெருகும்
ஓடையிலே வீழ்ந்தேன்.'என்
ஈடில்லாச் சுவையே,
துணை என்ன தமிழர்க்குச்
சொல்லேடி' என்றேன்.
'தூய்தான ஒற்றுமைதான்
துணை' என்றாள் மங்கை.
இணையற்ற அந்நிலைதான்
எற்படுங்கால் அந்த
எற்பாட்டுக் கிடையூறும்
எற்படுமோ?' என்றேன்.
'தணல் குளிரும்; இருள் ஒளியாம்
தமிழர் ஒன்று சேர்ந்தால்!
தம்மில் ஒருவனின் உயர்வு
தமக்கு வந்ததாக

எண்ணாத தமிழர்களால்
இடையூறும் நேரும்,
இனத்திலுறும் பொறாமைதான்,
வெடிமருந்துச் சாலை
மண்ணாகும்படி எதிரி
வைத்த கொடும் தீயாம்
வையத்தில் ஒழுக்கமில்லார்
ஏதிருந்தும் இல்லார்
நண்ணுகின்ற அன்புதான்
ஒற்றுமைக்கு வித்து,
நல்ல அந்த வித்தினிலே
தன்னலத்தைச் சிறிதும்
எண்ணாமை செழித்து வரும்
நடுவுநிலை பூக்கும்;
ஏற்றமுறு செயல் காய்க்கும்;
பயன்கனியும்' என்றாள்.

'முன்னேறும் தமிழ் மக்கள்
மதத்துறையை நாடி
மூழ்குதலும் வேண்டுமோ
மொழியேடி' என்றேன்.
'முன்னேற்றம் மதஞ்சொன்னோர்
இதயம் பூஞ்சோலை!
மொழிகின்ற இம்மதமோ
அச்சோலை தன்னைத்
தின்னவந்த காட்டுத்தீ'
என்றுரைத்தாள். இன்பத்
தேனென்று சொல்லுவதோ
அன்னவளின் வார்த்தை?
கன்னல்மொழி உயிர்தழுவ
வீட்டுக்குச் சென்றேன்.
கதிகாட்டும் விழியாளின்
காதல் மறத்தல் உண்டோ!



16. ஒரே குறை


 

அழகிருக்கும் அவளிடத்தில் அன்பி ருக்கும்
அறிவிருக்கும்! செயலிலுயர் நெறியி ருக்கும்
விழியிருக்கும் சேலைப்போல்! கவிதை யின்பம்
வீற்றிருக்கும் அவளரிய தோற்றந் தன்னில்
மொழியிருக்கும் செந்தமிழில் தேனைப் போலே
முகமிருக்கும் நிலவுபோல்! என்னைக் காணும்
வழியிருக்கும்; வரமாட்டாள்; வந்தெ னக்கு
வாழ்வளிக்கும் எண்ணந்தான் அவள்பா லில்லை!

திருவிருக்கும் அவளிடத்தில்! திறமி ருக்கும்!
செங்காந்தள் விரல்நுனியின் நகத்த்¢ லெல்லாம்
மெருகிருக்கும்! இதழோரப் புன்சி ரிப்பில்
விளக்கிருக்கும்! நீள்சடையில் மலரி ருக்கும்!
புருவத்தில் ஒளியிருக்கும்; வளைவி ருக்கும்!
போய்ப்போய்நான் காத்திருக்கும் இடமும் மிக்க
அருகிருக்கும்! வரமாட்டாள்; உடையும் நெஞ்சுக்
கணைகோலும் எண்ணந்தான் அவளுக் கில்லை.

பண்பிருக்கும் அவளிடத்தில்! ஆடு கின்ற 
பச்சைமயில் போல்நடையில் அசைவி ருக்கும்!
மண்ணிருக்கும் கல்தச்சுச் சுதைநூல், நல்ல
வார்ப்படநூல் ஓவியநூல் வல்லார் எல்லாம்
பெண்ணிருக்கும் அமைப்பறியும் ஒழுங்கி ருக்கும்! 
பிறர்துயின்றபின், என்போல் இரவில் மூடாக்
கண்ணிருக்கும் வரமாட்டாள்; என்றன் காதற்
கனல்மாற்றும் எண்ணந்தான் அவளுக் கில்லை.

கனிவிருக்கும் அவளிடத்தில்! சங்கைப் போலும்
கழுத்திருக்கும்! உயர்பசுமை மூங்கிலைப் போல்
தனித்துயர்ந்த தோளிருக்கும்! கன்னம், ஈரச்
சந்தனத்துப் பலகைபோல் குளிர்ந் திருக்கும்!
இனித்திருக்கும் பொன்னாடை! அவள் சிலம்பில்
எழும்ஒலியில் செவியனுப்பி நிற்பேன். அந்த
நினைவிருக்கும்; வரமாட்டாள்; சாவி னின்று
நீக்குமோர் எண்ணந்தான் அவளுக் கில்லை.

வளமிருக்கும் அவளிடத்தில்! இருக்கும் தூய்மை!
மயிலிறகின் அடியைப்போல் பல்லி லெல்லாம்
ஒளியிருக்கும்! உவப்பிருக்கும் காணுந் தோறும்!
உயர்மூக்கோ எள்ளுப்பூப் போலி ருக்கும்!
தெளிவிருக்கும் பேச்சிலெல்லாம் சிரிப்பி ருக்கும்!
செழும்ஊரார் அறியாமல் வரவும் கொல்லை
வெளியிருக்கும்! வரமாட்டாள்; என் விழிக்கு
விருந்தளிக்கும் எண்ணந்தான் அவளுக் கில்லை.

பொறையிருக்கும் அவளிடத்தில்! கொல்லை தன்னில்
பூம்பாகற் கொடிதனது சுருட்கை யூன்றி
உறைகூறை மேற்படர்ந்து சென்றிட் டாலும்
ஒருதொடர்பும் கூறையிடம் கொள்ளாமை போல்
பிறரிருக்கும் உலகத்தில் என்னையே தன்
பெறற்கரிய பேறென்று நெஞ்சிற் கொள்ளும்
முறையிருக்கும்! வாமாட்டாள்; வந்தே இன்ப
முகங்காட்டும் எண்ணந்தான் அவளுக் கில்லை.

அறமிருக்கும் அவளிடத்தில்! இருக்கும் வாய்மை!
அண்டையிலே பெற்றோர்கள் இருக்கும் போதும்
புறமிருக்கும் என்மீதில் உயிர் இருக்கும்!
'பூத்திருக்கும் நான்காத்த முல்லை' யென்றும்
'நிறம்காண வேண்டும்'என்றும் சாக்குச் சொல்லி
நிழல்போல என்னிடத்தில் வரவும் நல்ல
திறமிருக்கும்! வரமாட்டாள்; வந்தென் நோயைத்
தீர்க்குமோர் எண்ணந்தான் அவளுக் கில்லை.

உயர்விருக்கும் அவளிடத்தில்! இருக்கும் நேர்மை!
உடலாவி பொருளிவற்றில் நானும்,தானும்
அயலில்லை என்னுமோர் உளம் இருக்கும்!
அசைகின்ற இதழிலெல்லாம் அத்தான் என்ற
பெயரிருக்கும்! எவற்றிலுமே எனை யழைக்கும்
பித்திருக்கும்! மாடியினின் றிறங்க எணிக்
கயிறிருக்கும்! வரமாட்டாள்; என்செய்வேன்! நான்
கடைத்தேறும் எண்ணந்தான் அவளுக் கில்லை.

சீரிருக்கும் அவளிடத்தில்! உலகம் போற்றும்
செந்தமிழ்மங் கைக்கிருக்கும் சிறப் பிருக்கும்!
தார்இருக்கும் நெடுந்தோளான் பாண்டி நாட்டான்
தானேநான் எனும்கொள்கை தனக் கிருக்கும்.
ஊரிருக்கும் தூக்கத்தில் கொல்லைப் பக்கத்
துயர்கதவின் தாழ்திறந்து வரவோ பாதை
நேரிருக்கும் வரமாட்டாள்; என்றன் காதல்
நெருப்பவிக்கும் எண்ணந்தான் அவளுக் கில்லை.

அருளிருக்கும் அவளிடத்தில்! இசையி ருக்கும்!
ஆடவனும், ஓர்மகளும் ஒப்ப நோக்கி
இருள்கிழித்து வெளிப்படுமோர் நிலவு போல
இரண்டுளத்தும் திரண்டெழுந்த காத லுக்குத்
திரைஎன்ன மறைவென்ன? அவள்என் தோள்மேல்
தேன்சிட்டைப் போற்பறந்து வருவ தற்கும்
கருத்திருக்கும் வரமாட்டாள்;வந்தெ னக்குக்
காட்சிதரும் எண்ணந்தான் அவள் பாலில்லை.



பிற்சேர்க்கை



17. காதலனுக்குத் தேறுதல்


 

 


காதற் பசியினிலே கைக்குவந்த மாம்பழத்தின்
மீதில் இதழ்குவித்து மென்சுவையை நீஉரிஞ்சி
நாவார உண்ணுங்கால் நண்ணுமந்தத் தீங்கனியைச்
சாவான ஓர்குரங்கு தான்பிடுங்கிற் றேயோ!

----------

விழிநோக வையமெல்லாம் தேடி, மிகுக்க
மொழிநோகக் கூவி,நீ முன்பெற்ற கிள்ளையிடம்
காதல்மொழி பழகக் கண்ட பெரும்பூனைச்
சாதல்வந்து கிள்ளைதனைத் தட்டிப் போயிற்றோ!

----------

அறஞ்செய்ய, ஆர்ந்த புகழ்கொள்ளப் பொன்னாற்
புறஞ்செய்தே உள்ளே புதுமாணிக்கம் சொரிந்த
பேழைதனைப் பெற்றும், பெற்றதற்கு நீமகிழ்ந்தும்
வாழத்தொடங்கையிலே மற்றந்தப் பெட்டகத்தை
நோக்கிப்பறிக்க நுழைந்தானா அத்தீய
சாக்காடெனுந் திருடன்! சற்றுந் தனித்ததின்றி
நெஞ்சம் ஒருமித்து, நீரும் குளிரும்போல்
மிஞ்சுகின்ற காதல் விளையாட்டுக் காணுங்கால்
அந்த மயிலை அழகின் களஞ்சியத்தை
சந்தத் தமிழ்ச்சொல் சகுந்தலா தேவியினை
நீ இழந்தாய்! உன்காதல் நெஞ்சு பொறுக்குமோ!

----------

தூயோனே மீனாட்சிசுந்தரனே, என்தோழா!
ஆண்டுநூ றாகநல் லன்பு நுகர்ந்திடினும்
ஈண்டுத் தெவிட்டாத இன்பச் சகுந்தலைதான்
இங்குன்னைத் துன்பம் இறுகத் தழுவ விட்டுத்
திங்கள் இருபதுக்குள் சென்று மறைந்துவிட்டாள்.
அந்தோ உனக்கார்ஓர் ஆறுதலைச்செய்திடுவார்?
சிந்து கண்ணீருக்குத் தேறுதலைச் செய்வார்யார்? 

----------

தோழனே மீனாட்சி சுந்தரனே, ஒன்று கேள்;
யாழின் மொழியும், இசைவண்டு நேர்விழியும்
கோத்த முத்துப்பற்கள் குலுங்கும் சிரிப்பழகும்
வாய்த்த நல்வஞ்சி, மற்றொருத்தி இங்குள்ளாள்,
தேடுகின்றாள் உன்னை! நீதேடந்தப் பொன்னை,ஏன்
வாடுகின்றாய்? ஏன்உன் மலர்விழியை வாட்டுகின்றாய்?

----------

அன்னவளால் உன்றன் அருங்குறைகள் தீர்ந்துவிடும்!
முன்னர் எழுந்திருநீ முழுநிலவு காண்பதுபோல்!
அன்னவளைக் கண்டு நிலைமை அறிவிப்பாய்!
இந்நாட்டின் முன்னேற்றம் எண்ணி உழைக்கின்ற
நன்னோக்கம் நண்ணும் சுயமரியா தைக்காரர்
காட்டும் நெறியே கடிமணத்தைநீ முடிப்பாய்!
மீட்டும் சகுந்தலையை எண்ணியுளம் வாடாதே!
அவ்வழகே இவ்வழகும்! அம்மயில்தான் இம்மயிலும்!
செவ்வையுற இன்பத் திருவிழாவைத் தொடங்கு!
நீயும் புதுமனையும் நீடூழி வாழியவே!
வாயார வாழ்த்து கின்றேன் நான்!




முற்றும்.


by Swathi   on 28 Feb 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.