பிரபலக்கவிஞரும், தமிழ்ப்பேராசிரியருமான கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் இன்று(ஜூன் 2) அதிகாலை காலமானார். அவருக்கு வயது 80.
'கவிக்கோ' என்று போற்றப்படும் தமிழ்க் கவிஞர் அப்துல் ரகுமான், மதுரையில் 1937ம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தையும், தாத்தாவும் சிறந்த உருது கவிஞர்கள். கல்லூரியில் தமிழை சிறப்புப் பாடமாக எடுத்துப் பயின்று, இலக்கண, இலக்கியங்களை கற்று, கவிதை எழுதத் துவங்கினார். தமிழ், ஆங்கிலம், அரபி, உருது, பாரசீகம், இந்தி ஆகிய பல மொழிகளிலும் புலமை பெற்றிருந்த இவர், சமஸ்கிருதமும் பயின்றவர். அவர் 'பால்வீதி' என்ற கவிதைத் தொகுதி மூலம் தம்மை ஒரு சோதனைப் படைப்பாளியாக இனங்காட்டிக் கொண்டார். அத்தொகுதி வெளிவந்த போது கவிதையை நேரடியாகத் தராமல் உவமைகள், உருவகங்கள், படிமங்கள், குறியீடுகள் ஆகியவற்றின் வழி வெளியீட்டு முறையை அமைத்துக் கொண்டார்.
தமிழில் கவிதைக் குறியீடுகள் குறிந்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர். தமிழில் ஹைக்கூ, கஜல் ஆகிய பிறமொழி இலக்கியங்களை முனைந்ததிலும் பரப்பியதிலும் இவர் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.1960 க்குப் பின் கவிதை உலகுக்கு வந்த இவர் கவியரங்கக் கவிதைகளாலும் சிறப்படைந்துள்ளார். 'சிலேடை' வார்த்தைகளால் கேட்போரைக் கவர்வது இவரது பாணி.
வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் 20 ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியராகப் பணி புரிந்தவர். கவிஞர் அறிவுமதி உள்ளிட்ட இளந்தலைமுறை கவிஞர்களுக்கு ஆசானாக விளங்கினார். 'ஆலாபனை' கவிதைத் தொகுப்பிற்காக சாகித்திய அகாடமி விருதைப்பெற்றவர்.கவியரசர் பாரிவிழா விருது, தமிழன்னை விருது, பாரதிதாசன் விருது, கலைமாமணி, கம்பர் விருது, உமறுப்புலவர் விருது உள்ளிட்ட பல விருதுகளையும் வென்றுள்ளார்
சமீபத்தில் 'இசைஞானி' இளையராஜா அவர்களுடன் பங்கேற்று நகைச்சுவையுடன் சுவைப்பட சிறப்புரையாற்றியது இறுதி விழாவாகும்.
2015 ஆம் ஆண்டு நடந்த கவிக்கோவின் பவளவிழாவில் 'கவிப்பேரரசு' வைரமுத்து அவர்கள் பாராட்டிப்பேசும் காணொளிக் காட்சியைக் காணலாம்.
|