சபரிமலை ஐயப்பன் கோயிலில் இளம்பெண்கள் தரிசனம் செய்ய சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்ததை தொடர்ந்து நெரிசலை கட்டுப்படுத்த அனைத்து நாட்களிலும் நடைதிறக்கலாமா என கேரள அரசு ஆலோசித்து வருகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் சென்று தரிசனம் செய்ய சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்தது. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் இருந்து வருகின்றது. இந்த நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பு அப்படியே அமல்படுத்தப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.
சபரிமலை கோயிலில் மற்ற கோயில்களைப் போல் எல்லா நாட்களும் நடை திறக்கப்படாது. இந்த நிலையில் பெண்களும் வந்தால் பக்தர்களை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும். எனவே சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன் முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் தேவசம்போர்டு அதிகாரிகள், போலீஸ் உயர் அதிகாரிகள், அரசு துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.
ஐப்பசி மாதம் நடைதிறக்கும் நாளில் பெண்களும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். எனவே நெரிசலைக் கட்டுப்படுத்த முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து குறிப்பிட்ட நாளில் ஏராளமான பக்தர்கள் வருவதால் ஏற்படும் நெரிசலை சமாளிக்க அனைத்து நாட்களிலும் நடை திறந்து வைப்பது குறித்து ஆலோசிக்க வேண்டும் என முதல்வர் பினராய் விஜயன் கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பாக தந்திரி குடும்பத்தினருடன் ஆலோசித்த பின்னர் உரிய நடவடிக்கை எடுப்பது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதன்படி இன்னும் ஓரிரு தினங்களில் அனைத்து நாட்களும் நடை திறப்பது தொடர்பாக தந்திரி குடும்பத்தினரிடம் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்த ஆலோசனையின் போது மாதத்தில் எல்லா நாட்களிலும் நடைதிறக்க முடியாது என்ற நிலை உருவானால் மாத பூஜைகளின் போது கூடுதல் நாட்கள் நடை திறக்கலாமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய பல்வேறு இந்து அமைப்புகள் தீர்மானித்துள்ளன. அதேபோல் பந்தளம் மன்னர் குடும்பம் மற்றும் தந்திரி குடும்பத்தினர் இணைந்து மனுதாக்கல் செய்ய உள்ளனர்
|