LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 1313 - கற்பியல்

Next Kural >

கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
கிளைகளில் மலர்ந்த மலர்களைச் சூடினாலும், நீர் இந்த அழகை யாரோ ஒருத்திக்கு காட்டுவதற்காகச் சூடினீர் என்று சினம் கொள்வாள்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(தலைமகள் புலவிக் குறிப்பினைக் கண்டு, நீவிர் கூடியொழுகா நிற்கவும் இது நிகழ்தற்குக் காரணம் யாது? என்ற தோழிக்குத் தலைமகன் சொல்லியது.) கோட்டுப்பூச் சூடினும் - யான் கோடுதலைச்செய்யும் மாலையைச் சூடினேனாயினும்; ஒருத்தியைக் காட்டிய சூடினீர் என்று காயும் - நும்மாற்காதலிக்கப்பட்டாள் ஒருத்திக்கு இப்பூவணி காட்டல் வேண்டிச் சூடினீர் என்று வெகுளாநிற்கும்; இத்தன்மையாட்கு ஒரு காரணம் வேண்டுமோ? ('கோடு' என்பது முதனிலைத் தொழிற்பெயர். பூ - ஆகுபெயர், வளையமாகச் சூடினும் என்பதாம்;'கோட்டம் கண்ணியும் கொடுந்திரையாடையும்' (புறநா.275)என்றார் பிறரும். இனி, 'அம்மருதநிலத்துப் பூவன்றி வேற்றுநிலத்துக் கோட்டுப்பூவைச் சூடினேனாயினும், ஈண்டையாள், பிறளொருத்திக்கு அவ்வேற்றுப் பூவணிகாட்டல் வேண்டிச் சூடினீர் என்று வெகுளும்', எனினும்அமையும்.)
மணக்குடவர் உரை:
பக்கப்பூச் சூடினும் ஒருத்திக்குக் காட்டுதற்காகச் சூடினீரென்று சொல்லிக் காயும். பக்கப்பூ- ஒப்பனைப்பூ. கோட்டுப்பூ சூடினீர் என்பதற்கு வளைப்பூச்சூடினீரெனினுமாம். இது கோலஞ்செய்யினும் குற்றமென்று கூறியது.
தேவநேயப் பாவாணர் உரை:
(தலைமகள் புலவிக் குறிப்பைக் கண்டு நீவிர் கூடியொழுகிவரவும், இது நிகழ்தற்குக் கரணகம் யாதென்ற தோழிக்குத் தலைமகன் சொல்லியது.) கோட்டுப்பூச் சூடினும் - இம்மருத நிலத்து நீர்ப் பூவும் கொடிப்பூவு மன்றி வேற்று நிலத்துக் கோட்டுபூவைச் சூடினேனாயினும்; ஒருத்தியைக் காட்டிய சூடினீர் என்று காயும் - நும்மாற் காதலிக்கப்பட்ட வேறொருத்திக்கு இப்பூவணியைக் காட்டல் வேண்டிச் சூடினீரென்று சீற்றங் கொள்வாள் என் காதலி இத்தகையாளுக்கு ஒரு கரணகமும் வேண்டுமோ? கோட்டுப்பூ மரக்கிளைகளில் மலர்வது. கோடு - கிளை. வேற்று நிலம் முல்லை குறிஞ்சி நெய்தல். கோட்டுப் பூவைக் கோடுதலைச் செய்யும் மாலை என்றார் பரிமேலழகர். ஆசிரியர் மாலையென்னாது பூவென்றமையாலும், "கோடுதலைச் செய்யும்" என்னுங் கருத்தில் ஒருசிறப்பு மின்மையானும், அது உரையன்மை அறிக.
கலைஞர் உரை:
கிளையில் மலர்ந்த பூக்களைக் கட்டி நான் அணிந்து கொண்டிருந்தாலும், வேறொருத்திக்குக் காட்டுவதற்காகவே அணிந்திருக்கிறீர் எனக்கூறி சினம் கொள்வாள்.
சாலமன் பாப்பையா உரை:
ஒரு மாற்றம் கருதி, ஒருமுறை, மரத்திலே மலர்ந்த பூவை மாலையாக்கிச் சூடினேன். அதற்கு அவள், நீர் விரும்பும் எவளுக்கோ அடையாளம் காட்டிச் சூடினீர் என்று சினந்து நின்றாள்.
Translation
I wreathed with flowers one day my brow, The angry tempest lowers; She cries, 'Pray, for what woman now Do you put on your flowers?'.
Explanation
Even if I were adorned with a garland of branch-flowers, she would say I did so to show it to another woman.
Transliteration
Kottup Pooch Chootinum Kaayum Oruththiyaik Kaattiya Sootineer Endru

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >