இலண்டன் தமிழர் முன்னேற்றக் கழகமும், இலண்டன் திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளியும் இணைந்து இந்த ஆண்டு, சனவரித் திங்கள் 31ஆம் நாள், தமிழர் திருநாளாகிய பொங்கல் திருநாளைத் தலைவர் பூ.நாகதேவன் தலைமையில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடின.
செயலாளர் இர. அன்பழகன் விழாவிற்கு வந்திருந்தோரை வரவேற்று உரையாற்றினார்.
பொங்கல் விழாவை ஆடல், பாடல், கவிதை, திருக்குறள் சொற்பொழிவு போன்ற கலை நிகழ்ச்சிகளோடு மகிழ்ச்சியாகக் கொண்டாடினர். கலை நிகழ்ச்சிகளைத் திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மிகச் சிறப்பாக வழங்கினார்கள்.
இவ்விழாவில், முனைவர் மு.இளங்கோவன் எழுதி இயக்கிய 'பண்ணாராய்ச்சி வித்தகர்' குடந்தை ப.சுந்தரேசனார் பற்றிய ஆவணப்பட முன்னோட்டக் காட்சிகள் திரையிடப்பட்டன. பின்னர், இந்த ஆவணப்படத்தைத் தமிழர் முன்னேற்றக் கழகத் தலைவர் திரு பூ.நாகதேவன் வெளியிட, திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியை திருவாட்டி தவமணி மனோகரன் அவர்கள் முதல் படியைப் பெற்றுக்கொண்டார்.
இவ்விழாவில் அறுநூறுக்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்து கொண்டனர். செயற்குழு உறுப்பினர் பூபதி ராஜ் நன்றி உரை நிகழ்த்த, நிகழ்ச்சி இனிதே முடிந்தது.
|