LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 868 - நட்பியல்

Next Kural >

குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு
இனனிலனாம் ஏமாப் புடைத்து.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
ஒருவன் குணம் இல்லாதவனாய், குற்றம் பல உடையவனானால் அவன் துணை இல்லாதவன் ஆவான், அந்நிலைமையே அவனுடைய பகைவர்க்கு நன்மையாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
குணன் இலனாய்க் குற்றம் பலவாயின் இனன் இலனாம் - ஒருவன் குணம் ஒன்றும் இலனாய், உடைய குற்றம் பலவாய வழி அவன் துணையிலனாம்; மாற்றார்க்கு ஏமாப்பு உடைத்து - அவ்விலனாதல் தானே அவன் பகைவர்க்குத் துணையாதலையுடைத்து. (குணம் - இறைமாட்சியுட் சொல்லியன, குற்றம் - இவ்வதிகாரத்துச் சொல்லியனவும் மற்றும் அத்தன்மையனவும், துணை - சுற்றம், நட்பு, பொருள், படை முதலாயின. பகைவர்க்கு இவற்றான் உளதாம் பயன் தானே உளதாமாகலின் 'ஏமாப்புடைத்து' என்றார். 'இலனாய்' என்னும் செய்தெனெச்சம் 'உடைய' என வந்த பெயரெச்சக் குறிப்புக் கொண்டது.)
மணக்குடவர் உரை:
குணங்களுள் யாதும் இலனாய்க் குற்றங்கள் பல உடையனாயின் அவன் துணையிலனாம்; அது மாற்றார்க்கு ஏமமாதலை உடைத்தாம்.
தேவநேயப் பாவாணர் உரை:
குணன் இலனாய்க் குற்றம் பல ஆயின் இனன் இலன் ஆம் - ஒருவன் குணமொன்று மில்லாதவனாய் அவனிடத்துள்ள குற்றங்கள் மட்டும் பலவாயிருப்பின் அவன் துணையில்லாதவனாவன்; மாற்றார்க்கு ஏமாப்பு உடைத்து - அந்நிலைமை அவன் பகைவர்க்கு அரணாதலையுடைத்து. இனி, 'ஆம்' என்பதனை முற்றாக்காது எச்சமாக்கி, இனனிலனாம் ஏமாப்பு என்று இயைப்பினும் ஏற்கும். 'குணம்' இறைமாட்சியுட் சொல்லப்பட்டன. 'குற்றம் இவ்வதிகாரத்துள்ளும் பிறவற்றுள்ளுஞ்' சொல்லப்பட்டன. குணம் என்னும் பொதுப்பெயர் ஆட்சியும் வழக்கும் பற்றி நற்குணத்தைக் குறித்தது. துணை சுற்றமும் நட்பும் படையுங் குடியும். ஒருவனது எளிமையும் துணையின்மையும் அவன் பகைவனுக்கு வலிமையாதலின் 'ஏமாப்புடைத்து' என்றார். 'ஆய் என்னும் வினையெச்சம் தொக்குநின்ற உள்ள என்னும் குறிப்புப் பெயரெச்சங்கொண்டு முடிந்தது.
கலைஞர் உரை:
குணக்கேடராகவும், குற்றங்கள் மலிந்தவராகவும் ஒருவர் இருந்தால், அவர் பக்கத் துணைகளை இழந்து பகைவரால் எளிதாக வீழ்த்தப்படுவார்.
சாலமன் பாப்பையா உரை:
நல்ல குணங்கள் இல்லாமல் குற்றங்கள் பலவும் உடைய அரசிற்குத் துணை இல்லாது போகும். துணை இல்லாது இருப்பதே அந்த அரசின் பகைவர்க்கு பலம்.
Translation
No gracious gifts he owns, faults many cloud his fame; His foes rejoice, for none with kindred claim.
Explanation
He will become friendless who is without (any good) qualities. and whose faults are many; (such a character) is a help to (his) foes.
Transliteration
Kunanilanaaik Kutram Palavaayin Maatraarkku Inanilanaam Emaap Putaiththu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >